வியாபாரியா? தொழில்முயற்சியாளரா?

இன்றிலிருந்து என்னுடைய சுயவிபரத்தில்  “தொழில்முனைவர்” எனும் புதியதொரு பதத்தினை இணைத்துள்ளேன். 41  தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தியுள்ள நான் அதற்குள் உள்ளடங்குவேன் என நினைக்கின்றேன். இன்று முதன் முதல் பதிவில் இது குறித்து பேச ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன். நான் ஈடுபடுகின்ற உற்பத்தி மற்றும் சேவை வழங்குதல் சார் தொழில் முயற்சிகளுக்கு என தனித்தனியே பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள். எனக்கும் Metering ஐ விடவும் Coaching  முறையில் விருப்பமும் ஈடுபாடும் அதிகம். எனக்கு அந்த வகையில் மூன்று Coaches இருக்கின்றார்கள். மாதமொரு தடவை இவர்கள் மூவருடனும் வழிகாட்டல் நிகழ்வு கட்டாயம் இடம்பெறும். இவர்களில் இருவர் நம் நாட்டவர் மூன்றாமவர் வெளிநாட்டவர். நாட்டில் இருக்கும் போது நேரடியாகவும் பயணங்களில் இருக்கும் போது இணையவழியிலும் இடம்பெறுவதுண்டு. இலங்கையில் இந்த தொழில் வழிகாட்டலுக்காக நாளொன்றிற்கு 20 இலட்சம் வாங்கும் ….. இருக்கின்றார்கள். இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் வழிகாட்டலில் முக்கியத்துவம் தொழில்துறைகளில் தேவை என்பதை மேற்கோள் காட்டவே. தற்போது உலக அரங்கில் முன்னிற்கின்ற பல தொழிலதிபர்களின் பின் நிற்பவர்கள் இவ்வாறான வழிகாட்டிகளே. 

பொதுவாக இவ்வாறான வழிகாட்டல்களின் போது பொய் பேசுவதும் மூடி மறைப்பதும் ஆரோக்கியமற்றதொன்றே. இது எமக்கு முதல் அமர்விலேயே சொல்லப்பட்டுவிடும். தொழிலை பொறுத்தளவில் தொழில் என்பது வேறு நாம் என்பது வேறு. ஆனால் நமக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பெரும்பாலும் நம்முடைய தொழிலிலும் பாதிப்பினை உருவாக்கும். எவ்வளவு பெரிய தொழில் அதிபராகவிருந்தாலும் அவரவருக்கென சில வெற்றிடப்பகுதிகள், மகிழ்வான தருணங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இவையும் எமக்கு முன்னரே சொல்லப்பட்டுவிட்டதொன்று. 

சில மாதங்களின் பின்னர் எனக்கான நேரடிப்பயிற்சி இடம்பெற்றது. தொழில்சார் அடுத்த நகர்வு குறித்து வினாக்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கான நியாயப்படுத்தல்கள், காரணங்கள் ஆராயப்பட்டன. முடிவில் இரு விடயங்களை என்னுடைய Coach எனக்கு சொல்லியிருந்தார். அதேவேளை இந்த அமர்வில் என்னால் 03 விடயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு குறித்துக்கொள்ளப்பட்டன.

01.வாழ்வாதாரமா? வணிகமா? – வியாபாரியா? தொழில்முயற்சியாளரா?: இந்த இரு வினாக்களும் மேம்போக்காக பார்க்கும் போது இலகுவானதாக இருந்தாலும் அதற்கு பின்னாலுள்ள தாற்பரியம் கனமானது. என்னுடைய … கேட்ட போது இதற்கான பதில்களை சொல்ல பல நிமிடங்கள் எனக்கு தேவைப்பட்டது. நாம் உழைப்பது நம் அன்றாட தேவைகளுக்கானதாகவிருந்தால் அது வாழ்வாதாரம். எம்முடைய சமூக அந்தஸ்து அல்லது தேவைக்கதிகமான பண சேமிப்பிற்கானது அல்லது குறிப்பிட்டளவு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் எனும் கனவிருந்தால் அது வணிகமாகும். அதேபோன்று பொருட்களை வாங்கி விற்றால் வியாபாரி. தேவை கருதி பொருட்களை அல்லது சேவையை உருவாக்குபவர் தொழில்முயற்சியாளர்.  

02.Civilization : இதற்கான நேரடி மொழிமாற்றமாக நாகரீகமான, முறையான சமூக வாழ்க்கை கொண்ட| என்று மெல்லியதான கருத்து பிறழ்வுடன் மொழிபெயர்க்கலாம். இம்முறை எனக்கு வலியுறுத்தப்பட்ட மிகமுக்கியமானதொரு விடயம் இது. எது நாகரீகம் அல்லது “முறையான” வாழ்க்கை என்று கேட்டால் அதற்கான பதில் அந்தந்த காலத்துடன் இணைந்தது என்பதே என் கருத்து. ஒரு காலத்தில் நிர்வாணம் என்பது பொதுவானது. பின்னர் வந்த காலத்தில் அதுவே அடிமைத்தனத்தின் அடையாளமாக்கப்பட்டு சமூகத்தில் அடிமட்டத்தினர் நிர்வாணமாக இருப்பதும் உயர் மட்டத்தினர் உடைகளுடன் உலாவுவதும் உருவாக்கப்பட்டது. அதற்கும் பின்னர் நிர்வாணம் கேவலமாக பார்க்கப்பட்டது. குறிப்பாக பெண்களது நிர்வாணம் சமூக குற்றமாகியது. சில காலத்திற்கு பின்னர் நிர்வாணம் பால்நிலை உடைப்பின் முக்கிய அடையாளமாகியது. இன்று நிர்வாணம் அலங்காரமாக பார்க்கப்படுகின்றது. இப்படி “நாகரீகம்” அல்லது “முறையானது” மாறிக்கொண்டேயிருக்கின்றது. அப்படியாயின் எதை பின்பற்றுவது? எப்படி நாம் “நாகரீகம்” அல்லது “முறையானது” ஆன வாழ்வியலை வாழ்வது? இதற்கும் என்னுடைய வழிகாட்டி நல்லதொரு மேற்கோளை காட்டியிருந்தார். முன்னர் சமூகத்தால் கொலைசெய்யப்பட்ட இரு தத்துவியலாளர்களது கருத்துக்கள் அவை. அவர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னர் சொன்ன கருத்துக்கள் இன்று கொண்டாடப்படுகின்றன. ஆனால் ஏன் அன்று கொல்லப்பட்டார்கள் என்று தேடினால் அவர்கள் அன்று வாழ்ந்துகொண்டிருந்த சமூகத்தில் முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள கூடிய பக்குவமோ அல்லது பண்போ அற்ற மனிதர்கள் முன் அவர்கள் உண்மையை நிரூபிக்க முயன்றமை தான். தத்துவங்களை கண்டறிந்தவர்களால் தான் வாழ்ந்த சமூகத்தின் இயல்பை உணரமுடியவில்லை. அல்லது அவர்கள் புரட்சிசெய்ய முயன்றமை தான். எனவே தொழில்முயற்சியாளர்கள் இந்த விடயத்தினை வியாபார நோக்குடன் அணுகவேண்டும். சில வேளைகளில் நாம் அறிந்த உண்மைகளை வெளியிடும் போது நாம் நிராகரிக்கப்படுவோம். அதற்கு நாம் பிழையென்பதல்ல அர்த்தம். சில நேரங்களில் எதிரில் இருக்கும் முட்டாள்களது கூட்டமும் காரணமாகலாம்.

03. Pain Point : ஒரு தொழில் முயற்சியாளர் கவனிக்க வேண்டியதொரு முக்கியமான விடயம் இது. அதாவது ஒரு வாடிக்கையாளர் சந்திக்கின்ற பிரச்சினை அல்லது சரி செய்ய நினைக்கின்ற விடயத்தினை இது குறிக்கும். உதாரணமாக ஒரு உணவு விடுதியில் குறிப்பிட்ட உணவு முடிந்துவிடுகின்றது. ஆனால் வாடிக்கையாளர் அன்றைய தினம் குறிப்பிட்ட உணவினை விரும்பி கேட்கின்றார் எனில் இது தான் அந்த புள்ளி. இவ்விடத்தில் மாற்றீடாக உணவுகளை சிபார்சு செய்தல், இனி வரும் காலத்தில் இவ்வாறின்றி உணவினை உடனடியாக தயாரித்து வழங்க ஆயத்தப்படுத்தல்களை மேற்கொள்ளல் என்பது தீர்வுப்புள்ளி எனப்படும். தொழில் முயற்சியாண்மையில் இந்தப்புள்ளியை அடையாளப்படுத்திக்கொள்ளுதல் மிக முக்கியமானது. அவ்வாறு இதனை அடையாளப்படுத்தும் போது தான் பொருட்களுக்கான கேள்வி, தரம் குறித்து நாம் புரிந்துகொண்டு செயற்பட முடியும். 

என்னுடைய வழிகாட்டி எனக்குச்சொன்ன இருவிடயங்கள் வருமாறு:
01.    எப்போதும் நாம் வேறு எம்முடைய உற்பத்தி, சேவை வேறு என்கின்ற தெளிவு எமக்கிருக்க வேண்டும். ஆனால் நாம் தான் எம்முடைய பொருட்களுக்கான தூதுவர்கள் என்பதை மறக்க கூடாது. எமது உடை, நடை, பாவனை, பொதுத்தளத்தில் இயங்கும் போதான சபை நாகரீகம் என அனைத்தும் எம்முடைய தொழிலில் தாக்கம் செலுத்தும்.
02.    எவ்வளவு தான் உழைத்தாலும் எமக்கான Pleasure point இருக்க வேண்டும். இதற்கான நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் எனக்கு அழுத்தமான வழிகாட்டல் வழங்கப்பட்டது. தொடர்ந்தும் ஓடிக்கொண்டேயிருக்கும் என்னைப் போன்றவர்களது சுயம் தொலைந்து நாம் இயந்திரங்களாக மாற ஆரம்பிக்க முன்னர் இது குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

நான் நன்றாக வாசிப்பதுண்டு, நேரம் கிடைக்கும் போது திரைப்படங்கள் பார்ப்பதுண்டு. கடற்கரை போவதுண்டு. இது பற்றியெல்லாம் சொல்லிப்பார்த்துவிட்டேன். ஆனால் இதுவல்ல உன்னுடைய என்கிறார் வழிகாட்டி. நானும் நான்கு நாட்களாக சதாசர்வ காலமும் யோசித்துக்கொண்டுதானிருக்கின்றேன். எது எனது Pleasure point என்று மரமண்டைக்கு புரியுதேயில்லை.


No comments:

Post a Comment

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை