Showing posts with label சுவைத்த இராகங்கள். Show all posts
Showing posts with label சுவைத்த இராகங்கள். Show all posts

பிளேட்டோவின் மூவகை அரசாங்கம்

அண்மையில் அரசறிவியல் துறை பேராசிரியர் அம்பலவாணர் சிவராசாவின் “ஒப்பீட்டு அரசியல்" (Comparative Politics) எனும் நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆதில் குறிப்பிட்டிருந்த பிளேட்டோவின் கருத்தொன்று என் சிந்தையினை தூண்டியிருந்தது. பிளேட்டோவின் “குடியரசு”(Republic) “அரசியல் சான்றோன்” (The Statesmen) போன்ற நூல்களில் இருந்தான ஒரு விடயத்தினை ஆசிரியர் மேற்கோள் காட்டியிருந்தார்.

அரசாங்கத்துறைகளை பிளேட்டோ வகைப்படுத்தியிருந்ததான அக் கருத்துக்களை ஆராயும் போது என் நாடு “இலங்கை எவ்வகையில் சேர்த்தியாகின்றது?” என்ற மாபெரும் வினா தோன்றியுள்ளது. என் சிந்தை தூண்டிய அக்கருத்துக்கள் பற்றியும் அதற்கு முன் சிறிதாக பிளேட்டோ பற்றி அறிமுகத்தினையும் பதிகின்றேன்.

பிளேட்டோ

ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார்.

பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன.

கி.மு. 387 ஆம் ஆண்டில் "கலைக்கழகம்" (Academy) என்று அழைக்கப்படுகின்ற புகழ் பெற்ற பள்ளியை நிறுவினார். இந்தப் பள்ளி 900 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்தது. பிளேட்டோ தமது வாழ்நாளில் கடைசி 40 ஆண்டுகளை ஏதென்சில் கழித்தார். அப்போது அவர் கல்வி கற்பித்தார். தத்துவம் பற்றி நூல்கள் எழுதினார். இவருடைய மாணவர்களில் மிக்க புகழ் பெற்றவர் அரிஸ்டாட்டில் ஆவார். பிளேட்டோ 60 வயதை எய்திருந்த போது அரிஸ்டாட்டில் தமது 17 ஆம் வயதில் பிளேட்டோவிடம் கல்வி பயில்வதற்காக வந்தார். பிளேட்டோ கி.மு. 347 ஆம் ஆண்டில் தமது 80 ஆம் வயதில் காலமானார்.பிளேட்டோ 36 நூல்கள் எழுதினார். அவை பெரும்பாலும் அரசியல், அறவியல் பற்றியவை.

பிளேட்டோ வகைப்படுத்தியுள்ள அரசாங்கத்துறைகள்
  1.  பூரண அறிவு மிகுந்த அரசு
  2.  பூரண அறிவற்ற அரசு
  3. அறிவற்ற அரசு
பூரண அறிவு மிகுந்த அரசு (The State of Perfect Knowledge)

இவ்வாறான அரசின் இறைமையை இவ்வரசு பாதுகாத்துக்கொள்ளும். முpகச் சிறந்த இலட்சிய நோக்கம் கொண்ட அரசாக செயற்படும். இதனால் இவ்வாறான அரசுடன் ஒப்பிட்டுத் தான் ஏனைய அரச முறைமைகளை மதிப்பீடு செய்ய முடியும்

பூரண அறிவற்ற அரசு  (State where there is Unprotected Knowledge)

இவ்வாறான அரசுகளால் மனிதன் தன் பூரண சுதந்திரத்தினை இழந்தவனாயிருப்பான். இவ்வரசின் சட்டங்கள் மிக அழுத்தம் கொடுப்பனவாகவிருக்கும். இருந்த போதிலும் இவ்வரசின் சட்டமுறைகளுக்கு மனிதன் அடிபணிந்து நடப்பான்.

அறிவற்ற அரசு (State of Ignorance)
இவ்வகையரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட மக்கள் மறுப்பர்.

.......மேற்கூறிய பாகுபடுத்தல் தான் பாரியதொரு வினாவை சிந்தையில்  புகுத்திப் போயுள்ளது. பதில் தேடவேண்டியது மிக முக்கியம்....

பிற்குறிப்பு - வினாக்கள் தோன்றும் போது தான் விடைகள் பல கிடைக்கும் தீர்வுகள் பிறக்கும்

உன் மடி மீது நான் உறங்க......

நல் உறக்கம் தரும் என் பஞ்சு மெத்தை மீது காதல்.
நித்திரையில் வரும் நல்ல கனவுகளின் மீது காதல்.

கண்ணில் படும் அத்தனையும் காதலிக்கிறேன்.
கட்டுக்குள் அடங்காத என் கற்பனை கொண்டு கவி வடிக்கிறேன்.

காதலிக்கிறாயா என்று என் கவி கண்டு கேட்டால்
எதை நான் சொல்வேன். எதை நான் மறைப்பேன்.

சுற்றி உள்ள அத்தனையும் என் மனமார காதலிக்கிறேன்.

சுற்றும் பூமி முதல் சூரியன் நிலவு வரை அத்தனையும் காதலிக்கிறேன் ஆத்தமார்த்தமாக..

உயிர் வாழும் கடைசி நொடி வரை உலகில் உள்ள ஒவ்வொன்றையும் காதலிப்பேன் உண்மையாக.
 ....................................................................................................................
 நிதமும் சேகரிக்கிறேன்
என் இரவுகளை
என்றேனும் ஓர் நாள்
உன் மடி மீது நான் உறங்க......

இமைகளிலே வலி
கண்ட போதும்
உறங்கவில்லை எனது நினைவுகள்...

என் நினைவுகள் அனைத்தும்
உன்னை எதிர்நோகியிருந்த காரணத்தினால்....

என் விழிகளோ
இமை மூட மறுக்கின்றது... - அந்த
இமை மூடும் நொடி பொழுதிலாவது
உன் முகம் காண்பேனா என்று....

விடியும் இரவு போல..
விழி மூடா கனவு வேண்டும் - அக்
கனவிலும் உன் முகம் வேண்டும்.....
 எனக்காக (என் வேண்டுகோளிற்காக) என் நண்பன் எழுதிய கவிகள் இரசித்ததில் பிடித்தது....... நன்றி வாசு

பூவெல்லாம் உன் வாசம்.....

ஒவ்வொரு மனிதர்களுக்கும் தமக்கான நண்பர்களையும், துணையினையும் தேடிக்கொள்கின்ற உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் துணையினை தேடிக்கொள்ளும் போது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவதானமாகவும், பொருத்தமானவராகவும் தெரிய வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. ஏனெனில் வாழ்க்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர். எமக்கு துணையாக வருபவர் நமது முன்னேற்றங்களுக்கு படிகள் அமைத்துத் தருபவராக இருப்பதோடு நம்மைக் கண்கலங்காமல் வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். அது மட்டுமல்ல நம்மவர்களின் “குடும்பம்” கூட நல்லதாக அமையும் போது தான் நம்மவர்களின் குணம், பண்பும் நல்லதாக இருக்கும். தமது குடும்பத்தில் பற்று, பாசம், பயம் உள்ள ஒருவன் அல்லது ஒருத்தி நிச்சயம் அமைக்கும் குடும்பத்தினையும் சிறப்பாக அமைப்பார்கள்.

அண்மையில் என் ஆருயிர் நண்பன் (சிடு மூஞ்சி – நான் வைத்துள்ள பெயர்) என்னிடம் ஒரு திரைப்படத்தினை பார்க்கும் படி கூறியிருந்தார். சினிமாவில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இல்லாவிடினும் அன்பு நண்பனின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து அத்திரைப்படத்தினை பார்த்தேன்

திரைப்படம் - “பூவெல்லாம் உன் வாசம்”
2011 இல் ஆஸ்கார் பிலிம் தயாரிப்பில் எழில் கதையமைத்திருந்ததார். அஜித்குமார், ஜோதிகா, சிவக்குமார், நாகேஷ், கோவை சரளா, விவேக் . வையாபுரி நடிப்பில் வெளிவந்திருந்தது. வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

மூன்று தலைமுறையாக நட்புறவுடன் இருக்கும் இரு குடும்பங்கள் பற்றிய அருமையான குடும்பப்படம். மூன்றாவது தலைமுறையான ஜோவும் அஜித்தும் சிறுவயது முதல் நண்பர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பிய போதும் சொல்லிக்கொள்வதற்கு தயங்குவதும் (இப்போ தான் புரிகிறது ஏன் பார்க்க சொன்னார் என்று) இடையில் புகும் வில்லன் கபட நாடகம் ஆடுவதும் (நிஜத்திலும் வில்லன்கள் உண்டு) பின் உண்மை அறிந்து ஈகோவை விட்டு இருவரும் சேர்வதும் தான் கதை. சில விடயங்கள் இதில் மனதை தொட்டிருந்தது
  • கண்களால் இருவரும் பேசிக்கொள்வது
  • ஒருவருக்கொருவர் செல்லச் சண்டைகள் பிடிப்பதும் அடுத்த நிமிடம் மறந்து விடுவதும்
  •  தன் நண்பனின் முன்னேற்றத்திற்கு ஜோ கஷ்டப்படுவதும். முதலில் மறுத்தாலும் பின் ஜோவிற்காக அந்த கட்டடத்தினை வடிவமைப்பதும்
  • ஒருவருக்கொருவர் அடுத்தவர்களிடம் விட்டுக்கொடுக்காமை
  • ஒருவருக்கொருவர் விரும்புகின்றார்கள் என்று தெரிந்தும் அவர்களிடையான ஊடல்கள் 
  • வில்லன் கூட ஓரிடத்தில் “இவனை கட் பண்ணினால் தான் இவளை நான் அடையலாம்” என எண்ணுவது கூட இருவருக்குமான அன்னியோன்யத்தினை காட்டுகிறது.

ஆக மொத்தத்தில் அருமையான நட்பு ஆழமான காதலுக்கு வித்திடுவதை அழகாக கூறுகிறது பூவெல்லாம் உன் வாசம்….

அதிலும் கீழ்வரும் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பெண் தன் பிறந்த வீடே புகுந்த வீடாகும் போது உண்டாகும் மகிழ்வுடன் பாடுவதாக அமைந்திருந்தது இப்பாடல். உண்மை தாங்க பெண்களைப் பொறுத்தளவில் புகுந்த வீட்டுப்பயம் என்பது மறுக்க முடியாததொன்று. அந்த பயம் இல்லாமல் கல்யாண சந்தோஷத்துடன் பாடுவதாக அமையும் இப்பாடலில் என்னைத் தொட்ட சில வரிகள்….

திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்து பூச்செடியே…
தினமொரு கனியை தருவாயா வீட்டிற்குள் நான் வைத்த மாதுளையே…
மலர்வாய் மலர்வாய் கொடியே கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கதிரும் அருகே நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறுயில்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரமில்லை…

தாலி கொள்ளும் பெண்கள்
தாயை நீங்கும் பெண்கள் போது
கண்ளோடு குற்றாலம் காண்பதுண்டு……

அந்த நிலை இங்கேயில்லை… அனுப்பி வைக்க வழியேயில்லை
அழுவதற்கு வாய்ப்பேயில்லை அது தான் தொல்லை…

கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா இது போல் சொந்தம் பார்த்ததுண்டா?

பாவாடை அவிளும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்…

தெய்வங்களும்; எங்களை நேசிக்குமே….
தேவதைகள் வாழ்த்துமடல் வாசிக்குமே….


இதன் ஒலிவடிவம் - http://isaithooval.com/flies/2001/Poovellam%20Un%20Vaasam/Thirumana%20Malargal.mp3

பிற்குறிப்பு – கையில் நெய்யை வைத்துக்கொண்டு வெண்நெய்க்கு அலைவானேன்…. ஆருயிர் நண்பன், அவனது அருமையான குடும்பம் நமக்காக காத்திருக்கும் போது மூன்று முடிச்சு போடுவதற்கு தலைகுனிய ஏன் தயங்க வேண்டும்….

"பாவாடை அவிளும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்…
" (Super)


“வன்முறையில்லாத உலகம்”


மகாத்மா காந்தியின் 125 ஆவது பிறந்த தினத்தினை நினைவுகூறும் வகையில் “வன்முறையில்லாத உலகம்” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டிற்கு பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டவர் மகாத்மா காந்தியின் பேரனான அருண்காந்தி.

இவர் இளைஞனாக இருந்த பொழுது தனது பாட்டனாரின் ஆச்சிரமத்திற்கு மேற்கொண்ட விஜயம் தன் வாழ்க்கையை மாற்றியமைத்ததாகவும் அதுவே இந்தத் தொகுப்பு நூலை வெளியிடுவதற்கு தூண்டியிருந்தது என்றும் கட்டுரையாளர்களிடம் கூறியிருந்தார். அத்துடன் எளிமையான உதாரணங்கள் ஊடாக தன்னுடன் சில அடிப்படைக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் இவர் குறிப்பிடுகின்றார். சமூகத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைக்கான காரணங்கள் சிக்கலானவை அல்ல என்றும் ஆயினும் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பரியவை என்றும் மகாத்மா அருண்காந்தியிடம் தெரிவித்திருந்தார். அவர் சுட்டிக்காட்டுகின்ற “எட்டுத் தவறுகள்” வருமாறு

1.    வேலை செய்யாமல் கிடைக்கும் செல்வம்
2.    மனச்சாட்சி இல்லாமல் அனுபவிக்கும் இன்பம்
3.    ஒழுக்கமற்ற அறிவு
4.    நேர்மையற்ற வியாபாரம்
5.    மனிதநேயமற்ற விஞ்ஞானம்
6.    தியாகமற்ற வணக்கம்
7.    கொள்கையில்லாத அரசியல்
8.    பொறுப்புகளற்ற உரிமைகள்



அருண்காந்தி இவ் விடயங்களின் விரிவாக்கத்தின் தொகுப்பாக “வன்முறையில்லா உலகம்” என்ற ஞாபகார்த்த தொகுப்பினை நெறிப்படுத்த கருதுகோளாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஜோன் றிச்சட்ஸன் இனால் எழுதப்பட்ட “போரின் படிப்பினைகள்” என்ற நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதைப்படித்ததில் பிடித்தது……

சுஜாதாவின் “பிரிவோம்… சந்திப்போம்” பற்றிய அலசல்....





இந்தியாவில் திருநெல்வேலியில் வேலையற்ற பொறியியல் பட்டதாரியான இளைஞன் ரகுபதியின் கனவுகளை அடுக்குவதுடன் ஆரம்பமாகின்றது “பிரிவோம்… சந்திப்போம்….”. ஓர் கிராமத்து இளைஞன் அவனது எல்லையற்ற சிறு சிறு கனவுகள்… தான் வேலையற்று இருப்பதால் தனது அப்பாவின் செலவில் புகைப்பிடிப்பதை கூட 100 பரிசீலித்து கடையில் வாங்குவது என பக்குவமான ,கம்பீரமான ரகுபதி முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமாகின்றான். அடுத்தடுத்து மனைவியை இழந்து ஒரே மகனுடன் தனித்துவிடப்பட்ட நிலையில் தன்னைப் போலவே தன் மகனையும் பொறியியலாளருக்கு படிக்க வைத்து, அவனையும் வேலையிலமர்த்திப் பார்க்கும் இலட்சியத்துடன் ரகுபதியின் அப்பா கோவிந்தராஜன். பத்தொன்பது வயதிலும் குழந்தைத்தனம் மாறாது தம்பியுடன் செல்லச் சண்டைகள் போட்டுக்கொண்டு செல்வச் செழிப்புடன் வலம் வருகின்ற மதுமிதா என்கின்ற அழகுப் பெண். கணவன் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் கைக்குழந்தையுடன் வீடுகளுக்குச் சென்று வேலை செய்து வயிற்றைக் கழுவி, தன் குழந்தையின் கொஞ்சல்களில் கூட தன் கணவனைக் காண்பதாக சொல்வது முதல் மாறி மாறி கஷ்டங்களை கூறி பொருட்களை யாசிப்பது வரை சராசரி கீழ்மட்ட குடும்பப் பெண் ஜெயந்தி என முக்கியமான நான்கு பாத்திரங்களையும் அடுத்தடுத்து வசிப்பவர்களின் மனதில் குறைந்த இடைவெளி எனினும் இலகுவில் உட்புகுத்தி விடுகின்றார் சுஜாதா.

பார்த்தவுடனேயே மதுமிதாவுடன் காதல் கொள்கின்ற ரகுபதி அதை சொல்லமுடியாமல் திண்டாடுவதும் பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று மதுமிதாவின் வீட்டாரே ரகுபதியுடன் நிச்சயார்த்தம் செய்து வைப்பதும் ஏதோ வழமையானது போன்று போய்க் கொண்டிருந்தாலும் ரகுகுபதி திடீரென வேலை கிடைத்து நகரம் சென்று திரும்புகின்ற போது மாறிக்கிடக்கின்ற காட்சிக்கோலங்கள் நாவலிலிருந்து கண்னை எடுக்க விடாமல் செய்துவிட்டது.
அடுத்தடுத்து நடக்கின்ற திடீர் நிச்சயார்த்தத்தில் பட்டும்படாமலும் இருக்கின்ற கோவிந்தராஜன் மகனிடம் “காதல் என்கின்றது Nature’s way of ensuring a pregnancy! என்று சொல்லி கூடவே சற்றுப் பொறுத்து முடிவுகளை எடுக்கும்படி அறிவுரை கூறுவது அப்பா என்பதையும் தாண்டி ஒரு நிமிடம் நல்லதொரு நண்பனாகவும் அவரை பரிணமிக்கச் செய்கின்றது.

மதுமிதா – ரகுபதி நிச்சயார்த்த முடிவும், ரகுபதி அப்பாவித்தனமாக தேம்பி தேம்பி அழுவதும், மதுமிதா பெரும் பணக்காரன் ராதாகிஷனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விடுவதும், ரகுபதி தற்கொலைக்கு முயன்று பலத்த அடியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடனும் முதல் அத்தியாயம் முடிவுறுகின்றது.

"அந்த அமெரிக்க ராதாகிஷனை விட நான் எந்த வiகையில் குறைந்துவிட்டேன்"  என்ற வைராக்கியத்துடன் ரகுபதி அமெரிக்கா சென்று படிப்பதும் ஏதோ வழமையாக நமது சினிமா ஹீரோக்கள் போல தானோ அல்லது ரமணிச்சந்திரனின் கதாநாயகனை போலவோ என்று அலுக்கின்ற போது மதுமிதாவே ரகுபதியை தொடர்புகொண்டு நட்பு பாராட்டுவதும் மதுமிதா-ராதாகிஷனின் குடும்ப வாழ்வின் அன்னியோன்யத்தையும் அவர்களது புரிந்துணர்வையும் பார்த்து ரகுபதியே திகைப்பதும் சுஜாதாவிற்கான பாணியை காட்டிவிடுகின்றது. தொடர்ந்து ராதாகிஷனின் முறையற்ற தொடர்புகளும் வழமையான நமது கதாநாயகனைப் போன்றே முன்னாள் காதலிக்காக ரகுபதி போராடுவதும் இந்திய எழுத்தாளர்களின் படைப்பாளிகளின் பாணி மாறுவதில்லையோ என சிந்திக்க வைக்கின்றது.
மதுமிதாவே தன்னை ரகுபதி மறக்க வேண்டும் என்று ரத்னா என்கின்ற இந்திய அமெரிக்க பெண்ணை அறிமுகம் செய்வதும் அதே “முன்னாள் காதலன்” என்கின்ற இந்திய பாணியாகவே அமைகின்றது. பின்னரான பல திருப்பங்களுடன் பயணித்து இறுதியில் மதுமிதாவின் இறப்புடன் நாவல் முற்றுப் பெறுகின்றது.

தன் மனைவிக்கு துரோகம் செய்கின்ற ராதாகிஷனுக்கு இறுதிவரை தண்டனை கிடைக்காமை சற்று ஏமாற்றமடைய வைத்திருந்தாலும் என்றோ ஒரு நாள் செய்தவை நம்மை நோக்கித் திரும்பும் என்ற யதார்த்தமான உண்மையை ஆங்காங்கே சுஜாதா முன் வைக்கத் தவறவில்லை. பணத்திற்காக ஆசைப்பட்டு தன் மகளிற்கு முடிவைத் தேடிக்கொடுத்த பெற்றோர்கள் ரகுபதியிடம் மன்னிப்பு கேட்பது நெகிழவைக்கின்றது.
இக்கதையில் பெயருக்கேற்ப மதுமிதா “மது” போதையாகவே ரகுபதியை ஆட்டிவைக்கின்றதால் பெயர் நன்றாகவே பொருந்துகின்றது.

என்னளவில் என்னை இந்த நாவலின் இரு விடயங்கள் கவர்ந்திருந்தது. ஒன்று ரகுபதியின் அப்பா. மிகவும் நிதானமான கதாப்பாத்திரமாக வள்ளுவர், பாரதி என பலரை தன்னுள் கொண்டவராக இறுதியில் வேலைக்கார பெண்ணிற்கு சமூக அங்கிகாரம் கிடைக்க வேண்டி மறுமணம் செய்து கொள்வதும், “உடம்பிற்காகவா அப்பா?” என ரகு கேட்கின்ற போது அதுவென்றால் வேறு பெண்களிடம் போயிருப்பேன் 25 வருடம் உனக்காகவே தனியே தூங்கினவன். ஆனாலும் அதுக்காக இல்லாமலும் இல்லை என கூறுவது உண்மையான ஒரு வெளிப்படையான மனிதனை காட்டுகிறது. இன்று சமூகத்தின் உயர் பதவிக்குள் ஒளிந்து இருமுகம் காட்டிக்கொண்டு பலருடைய வாழ்வில் விளையாடுகின்ற எத்தனையோ பேரை விட இவர் கருத்து என்னளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்று.

அடுத்த பாத்திரம் ரத்னா. தன் மண்ணை அதன் பெருமையை நேசித்துக் கொண்டு அதே வேளை அமெரிக்க சூழலுக்கு ஏற்பவும் வாழ்கின்ற ரத்னா மனதில் படுவதை வெளிப்படையாக கூறுவதும் நிதானமாக ஒவ்வொரு விடயத்தினையும் ஆராய்ந்த முடிவெடுப்பதும் தன்னுடைய குடும்பத்தினரை ரகுபதிக்கு அறிமுகம் செய்து வைப்பதும் மிகமிக பாராட்டத்தக்கதொன்றும் கூட. இன்றைய காலகட்டத்தில் ஒரே சமயத்தில் பலருக்கு தண்ணீர் காட்டுபவர்கள் மத்தியில் பொறுமையாக தன்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்ற ரத்னா இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ரத்னா ரகுபதியிடம் “நீங்கள் மதுமிதாவை நேசித்த காதலின் புனிதம் தான் என்னை உங்களையும் நேசிக்க வைக்கிறது” என்று சொல்வது மிகவும் அழகிய வரிகள்….

சுஜாதாவின் எழுத்து நடை வழமை போன்று முன்னுக்கு ஒரு சம்பவம் நடப்பதாகவும் அதில் பார்வையாளராக நாம் இருப்பது போன்றும் செல்கிறது. ஆரம்ப அத்தியாயங்களில் பாத்திரங்களின் அறிமுகம் முதல் இறுதியில் ராதாகிஷனுக்கான தண்டணையை வாசகரின் கற்பனைக்கே கொடுத்து விடுவது வரை சுஜாதாவின் பாணி மாறவில்லை. ஆனாலும் தான் மிகவும் நேசித்த ,அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்த கணவன் பல பெண்களுடனும் தொடர்பு வைத்துள்ளான் என தெரிந்தவுடன் மதுமிதா தன் முன்னாள் காதலனிடம் தன்னை மறுமணம் செய்யும் படி கெஞ்சுவது சுஜாதா முன் அத்தியாயங்களில் தோற்றுவித்திருந்த மதுமிதாவிற்கும் இறுதியில் முடிக்கின்ற மதுமிதாவிற்கும் இடையில் பல முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது. ஒரு சராசரி கிராமத்துத் தமிழ்ப் பெண்ணால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது அமெரிக்க நாகரீகத்திற்கமைய விவாகரத்து பெற்றிருக்க கூடும் அல்லது அழுது கொண்டு “கல்லானாலும் கணவன்” செண்டிமென்டுடன் வாழ்ந்திருக்கக் கூடும். அல்லது புரட்சிப்பெண்ணாக திருத்தியிருக்க கூடும்.

ஒரு வேளை மதுமிதா பத்திரத்தினை சாகடிக்காது ரகுபதியுடன் முறைப்படி இணைத்து வைத்திருந்தால் சபல புத்தியுள்ள ஆண்களுக்கு சுஜாதாவின் நாவல் சுட்டிருக்கும். பெண் நினைத்தால் அவளாலும் சபலப்பட முடியும் இன்னொரு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் என்று உணர்த்தியிருக்கலாம். எப்படியோ தன் பிரிவோம் சந்திப்போம் நாவல் மூலம் சிறந்ததை தேடி ஓடுகின்ற பெண்ணுக்கான முடிவுரை எழுதியிருக்கின்ற சுஜாதா அதே சிந்தனையுடன் ஓடுகின்ற ஆணுக்கான இறுதி வரிகளையும் படைத்திருக்கின்றாரா? அல்லது அவரும் பால்நிலை பேணுகின்ற சராசரி எழுத்தாளர் தானா? என்ற கேள்வியையும் தோற்றுவித்திருந்தது. அதிலும் ஒரு திருப்தி என்னவென்றால் தன்னுடைய சபலத்தினை நியாயப்படுத்த தன் மனைவியை முன்னாள் காதலனுடன் இணைத்துப் பேசி அவளை நோகடிக்கின்ற ராதாகிஷன் மூலம் சராசரி ஆண் ஆதிக்கத்தினை காட்டிவிடுகிறார். ( இப்போதெல்லாம் தன்னுடைய காதலுக்கு சம்மதிக்காத பெண்களை ,தன் விருப்புகளுக்கு இணங்காத பெண்களை பற்றி அவதூறு பேசுகின்றதும் இன்னொருவருடன் இணைத்துப் பேசி தம் குற்றங்களை மறைப்பதுவும் சமூகத்தில் இன்று நிறையவே உண்டு)

முதல் பாகம் மது – ரகு காதலில் தொடங்கி மது- ராதாகிஷன் திருமணத்தில் முடிய இரண்டாம் பாகம் ரகு – மது சந்திப்பில் தொடங்கி மது மரணத்தில் நிற்கிறது பிரிவோம் சந்திப்போம் ஆக மொத்தத்தில் எதையும் தீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி , அலட்சியமான நடத்தை கொண்ட அமெரிக்க இளைஞன் ராதாகிஷன் , மனதில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா , தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப் பெண் ரத்னா , நட்புடனும் யதார்த்தத்துடன் இணைந்ததாகவும் விடயத்தினை அணுகுகின்ற ரகுபதியின் அப்பா கோவிந்தராஜா என முக்கிய ஐந்து கதாபாத்திரங்களுடன் திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது சுஜாத்தாவின் பிரிவோம் சந்திப்போம்…

(“பிரிவோம் சந்திப்போம்…” வாசித்த போது நேரம் போனதும் தெரியவில்லை கூடவே சந்தர்ப்பங்கள் கிடைத்தும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்ட நேர்மையான ,நிதானமான , இறுதிவரை எந்த கட்டத்திலும் குழந்தை மனதை நேசிக்கின்ற ஒருவன் எனக்கும் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஒட்டிக்கொண்டது மறுக்க முடியாத உண்மை )



I love u sometimes foolishly and at those moments I do not understand that I could not, would not and should not be so absorbing a thought for u as u are for me….  
 படித்தில் மிகப் பிடித்தது

திரைக்கதைகளில் பெண்கள்

பொதுவாக அன்றைய சினிமா முதல் இன்றைய சினிமா வரை நோக்கினால் அவற்றில் “பெண்கள்” கையாளப்படுகின்றமை தொடர்பிலான ஒரு கண்ணோட்டமே இக்கட்டுரையின் நோக்கம். அன்று தொட்டே சினிமா தயாரிப்பில் பெண்களின் பங்கு ஒப்பிட்டளவில் ஆண்களை விட குறைவாகவிருந்தாலும் சினிமா நடிப்புத்துறையிலும் திரைக்கதைகளில் பெண்கள் பற்றிய கதைக்கருக்களும் தாராளமாகவே காணப்பட்டன. அதிலும் தமிழ் இலக்கியங்களைப் போன்றே தமிழ் சினிமாவில் “பெண்கள்” என்பதன் போக்கு விசித்திரமானதாகவே இருக்கின்றது. வேற்றுமொழி திரைப்படங்களில் பெண்கள் நிலை பற்றியும் தமிழ் சினிமாவில் பெண்களின் நிலை பற்றியும் ஒப்பிட்டு நோக்கும் போது பெண்கள் பற்றிய தமிழ் சினிமாவின் போக்கு இன்றும் மாறாமல் இருப்பதும் உலகின் தரம்வாய்ந்த படைப்புக்களில் தமிழ் சினிமா ஏனையவற்றுடன் ஒப்பிட்டளவில் பின்தங்கியிருப்பதற்கு ஒரு காரணமாக இருப்பதாக தோன்றுகின்றது.
ஒன்றில் தமிழ் சினிமாவில் பெண்கள் மட்டந்தட்டப்படுகின்றனர். முன்னர் திரைப்படங்கள் “கற்பு பெண்களுக்கு மட்டுந்தான்” என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தன. பின்னரான திரைக்கதைகளில் சமூகத்தில் இழிசெயல் செய்வது பெண்கள் தான் பிரதானம் என்பது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இன்றைய சினிமாக்களில் பெண்களது உடைகள் பற்றியும் அல்லது அவர்களது கவர்ச்சியில் மட்டுமே தங்கியிருக்கக் கூடியதான சினிமாக்கள் மலிந்து விட்டன. ஆக மொத்தத்தில் “பெண்கள்” என்பதற்கான நாகரீக மாற்றங்கள் தமிழ் சினிமாக்களில் காலாகாலத்திற்கு மாற்றமடைகின்ற போதும் கரு என்பது மட்டும் மாறுபடாமலேயே தொடர்கின்றதாகவே தோன்றுகின்றது.
ஆண்களை பெண்கள் ஏமாற்றிவிட்டால் அவ் ஆண் வாழ்வில் முன்னேறி வாழ்ந்து காட்டுவதாகவும் ஏமாற்றிய பெண் மீண்டும் மனந்திருந்தி அல்லது வேறொருவரால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் கதையமைக்கின்றவர்கள் அதுவே பெண் ஏமாந்துவிட்டாள் தற்கொலை செய்து கொள்வதாக காட்டுகின்றார்கள்….? அதற்கு பரிகாரமாக அவளுடன் தொடர்புடைய ஒருவர் பழிவாங்குவதாகவோ அல்லது அவள் ஆவியாகித்தான் பழிவாங்குவதாகவும் காட்டுவது ஏன்? அதே போன்றே ஆண்கள் கட்டிய மனைவி இருக்கும் போதே சின்ன வீடு வைத்தால் அல்லது இன்னொருத்தியுடன் தகாத உறவு கொண்டால் மனைவி மன்னித்து ஏற்றுக்கொள்வதாகவும் (இதில் சின்னவீடு இறந்துவிடும் அல்லது ஓடிவிடும் அல்லது வில்லன் கொன்று விடுவான்) குழந்தையை முதல் மனைவியே தத்தெடுத்து வளர்ப்பதாகவும் பெரும்பாலான படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஏன் ஒரு பெண் இன்னொரு சின்னவீடு வைத்தால் கணவன் ஏற்றுக்கொள்வானா? அல்லது அவளின் சின்னவீட்டினால் பிறந்த குழந்தைக்கு முதலெழுத்தாக தன் பெயரை இடுவாரா? திரைக்கதைகளில் பெண்கள்

ரகசியத்தை சொல் கிளியே – அநுராதாரமணன்

அன்றாடம் நாம் பலவித விடயங்களை கடந்து செல்கின்றோம். என்றாலும் சில விடயங்கள் நம் உள்ளங்களில் ஏதோவொரு புள்ளியை தொட்டு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வாறான ஒரு தாக்கத்தினை என் மனதில் ஏற்படுத்திய ஒரு படைப்பு தான்  அண்மையில் நான் வாசித்த ஒரு புத்தகம். “ரகசியத்தை சொல் கிளியே” என்ற பிரபல இந்திய எழுத்தாளர் அநுராதாரமணன் எழுதிய இந்நூல் கங்கை புத்தக நிலையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நூலில் “ரகசியத்தை சொல் கிளியே” “உனக்காக உமா” என்கின்ற இரு நாவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இரண்டுமே வரதட்சனை எவ்வாறு திருமண சந்தையிலும் காதலிலும் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை வௌ;வேறு கோணங்களில் விளக்கியிருந்தது.

ரகசியத்தை சொல் கிளியே

இம் முதல் கதையில் தன் தங்கை குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து அவளது மகளை தனது மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைக்கின்றார் ஒரு தாராள மனப்பான்மை உடைய தந்தை. ஆனால் ஒரு காலகட்டத்தில் பொருளாதார அழுத்தங்கள் தாளாமல் மற்றதொரு பணக்கார தங்கையின் மகளுக்கு மகனை மணமுடித்து கொடுத்து விடுகிறார்.
இக்கதையின் நாயகி “கிளி” சிறு வயது முதல் அத்தானுக்காக வாழ்ந்து வரும் ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்படுகிறாhள். கிராமத்து வெகுளித்தனமும் குழந்தை மனமும் முகத்திலடித்தால் போன்று பேசும் குணமும் சேர்ந்த கலவை. தன் அத்தான் இன்னொருத்திக்கு கணவனாக போவது தெரிந்து “ இன்றிலிருந்து ஒரு வருடத்தினுள் உன் கையால் மறு தாலி வாங்குவேன்” என சபதமிடுவதும் “நீ அவளை தொடக் கூடாது “ என அத்தானிடம் சத்தியம் வாங்குவதும் யதார்த்தத்திற்கு பொருந்தாவிட்டாலும் கிராமத்து பெண்ணின் வைராக்கியத்தினை மனதில் வரித்துவிட்டவனை அடைய வேண்டுமென்ற பிடிவாதத்தினை காட்டுவதாக அமைந்திருந்தது.

நகரத்து பணக்கார பெண்ணாக வரும் நளினா வாசலில் நைட்டியுடன் நின்று கோலம் போடுவது நிச்சயம் இன்றைய நாகரீக பெண்களை கண்முன் நிறுத்துகிறது. தனது கணவனுக்கு தினமும் பாடம் சொல்லிக் கொடுப்பதும் பணக்கார திமிறின்றி ஏழையான கிளியுடன் சகஜமாக பழகுவதும் நளினாவின் குணாம்சங்களாக கூறப்படுகின்றது. இது நடைமுறைக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறி....

நளினா மற்றும் கிளியின் பாட்டி காவேரி முதலில் கிளியுடன் பாசமக இருப்பதும் பின் புதுப் பணக்கார பேத்தியை கண்டதும் அவள் கட்சிக்கு தாவி கிளியை உதாசீனம் செய்வதும் “பணத்தைக் கண்டவுடன் நிறம் மாறும் பச்சோந்தி மனிதர்கள்” இன்றும் எம்முடன் வாழ்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றார்.

கிளியின் அத்தானாக வரும் முத்து பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும் போது “மூட்டை தூக்கியாவது கிளியை காப்பாற்றுவேன்” என்றும் திருமணத்திற்கு முதல் நாள் கிளியை சந்திக்கும் போது “அப்பா ரொம்பக் கஷ்டத்தில இருக்கார் கிளி... இல்லையினா அவரும் இப்படிப் பேசக் கூடியவர் இல்லே....” என்று நழுவியதும் தான் ரொம்ப நல்லவன் என்று புது மனைவியிடம் காட்டுவதற்கு “என்னைக் கூடுமானவரைக்கும் கூப்பிடாம இருக்கிறதே நல்லது....” என எரிந்து விழுவதும் அதே மனைவியிடமே சில நாட்களில் “ மச்சமா இது … நான் ஏதோ மை ஒட்டிருக்கோ என பார்த்தேன்...” என வழிவதும் இன்றைய யதார்த்தம்.

முத்துவை விடவும் படித்த பணக்கார மாப்பிளைகளை பெற்றோர் பார்கும் போது இப்போது எனக்கு திருமணம் வேண்டாம் என்பதும் எனக்கு திருமணம் தேவைப்படும் போது உங்களுக்கு சொல்கின்றேன் என முகத்திலடித்தால் போல சொல்வதும் கிளியின் காதலின் அளவை அவளோடு ஒப்பிடும் போது முத்துவின் கயமையை காட்டுகிறது.

நளினாவிற்கு ஏற்படும் சிறு சிறு விபத்துக்களுக்கு கிளியை சூழ்நிலைக் கைதியாக்கி அடித்துக் கொடுமைப்படுத்தும் போதும் வாசிப்பவர்களுக்கே நெஞ்சம் கணக்கின்றது. இறுதியாக முத்து – நளினாவின் குழந்தையை கையில் ஏந்தியபடி “ அட நான் தானே உனக்கு இப்ப பொண்டாட்டியையே திருப்பிக் கொடுத்திருக்கிறேன்? இதைவிட வேற என்ன தரமுடியும்.....?” என்பதும் “ஒரு தாங்க்ஸ் கூட சொல்ல முடியாத பயந்தாங்கொள்ளி அப்பனுக்கு பொண்ணாh பொறந்து....” என கிளியின் கடைசி உரையாடலாக கதையின் இறுதி வரிகளாகவும் அமைகின்ற இவ்வாத்தைகள் நிச்சயம் இன்று சமூகத்தில் உள்ள முதுகெலும்பில்லாத ஒவ்வொரு சூழ்நிலையை காரணங்காட்டி தப்பித்துக்கொள்ளும் “முத்து” கதாபாத்திரங்களை நிச்சயம் ஒரு தடவை சுட்டியுமிருக்கும் சுட்டுமிருக்கும் வசனங்கள்.

இந்நூல் என்னைக் கவர்ந்திருந்தது என்பதனை விட என் உணர்வுகளை மிகவும் பாதித்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் இத் தாக்கத்தின் பிரதிபலிப்பு எனக்கு இருந்தது என கூறலாம். “ஏன்?” என்ற வினாவினை என்னுள்ளே எழுப்பிய போது “கிளி” பாத்திரத்தின் வெகுளித்தனம், பிடிவாதங்கள் என்னிலும் அடக்காமாகியிருந்ததினை உணர முடிந்தது. ஆனால் இதன் முடிவினை வாசித்த போது என் மனதின் ஒரு புள்ளியில் வலித்ததையும் உணர்ந்தேன்.

உங்களுக்கும் இப்புத்தகத்தினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள் நிச்சயம் நீங்களும் ஒரு கிளி, முத்து , காவேரி என நீளும் இக்கதையின் பாத்திரங்களுள் யாராவது ஒருவரை கடந்திருப்பீர்கள்.

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்(01) – தெருத்தூசியோன்

எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது. ஒரு வரம்புக்குள் இருந்து எழுதவேண்டும். யாரையும் பாதிக்காது, சமூதாயத்தை பாதிக்காது ஒரு படைப்பாளனின் படைப்பு காணப்படவேண்டும். வரம்பு என்பது எதுவரை என்பதை ஒரு படைப்பாளனே தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளனின் படைப்பானது வாசகனை நல்ல வழியில் சிந்திக்க செய்யக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும்'  என்கிறார் எழுத்தாளர் ஆர்.சி.ராஜ்குமார்.

'தெருத்தூசியோன்' என பலராலும் அறியப்பட்ட இவர், பிறவியிலே பார்வைப்புலனற்ற நிலையில் இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் பல்வேறு தடைகளையும் தாண்டி இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளார்.

கவிதை, கட்டுரை என தனது எழுத்தாற்றலை விரிவுபடுத்திக்கொண்ட இவர்,

'நாம் ஒளி இழந்த போது', 'ஆசைகளின் ஓசைகள்', 'சித்திர பூ வெளி', 'நினைவுகளின் நிழல்', 'நான் காணும் உலகம்', 'குமுறும்; குரல்கள்', 'என்னுடைய ஏக்கங்கள்', 'அனுமதிக்கப்பட்ட அனுபவங்கள்', 'உயிர்த்தெழுந்தவருடன் உறவுகொள்வோம்', 'உங்களை நோக்கி' (மாற்றுத்திரண் கொண்டவர்கள்), 'சிந்தனை செய்' (மாணவர்களை பற்றிய புத்தகங்கள்), 'கடகத்துக்குள் கிடுகுகள்' (இறையியல்), 'முழுதாய் முழுகுவோம்' (வெளியிடப்படவுள்ள புத்தகம்) என இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், கிழக்குப் பல்கலைக்கழத்தில் கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்த பின், சமூக சேவைகள் திணைக்களத்தில் அபிவிருத்தி அலுவலராக பணியாற்றி வருகின்றார்.

ஐம்புலனும் சிறப்பாக அமையப்பெற்றவர்களாலும் சாதித்துவிட முடியாத இவரது சாதனையானது பார்வைப் புலனற்றவர்களுக்கேயான எழுத்து வடிவமாக காணப்படும் பிரெய்ல் எழுத்தின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டது எனலாம்.

தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்காக இவரை நேர்கண்ட போது அவர் பகிர்ந்துக்கொண்டவை...

கேள்வி:- பார்வைபுலனற்ற நிலையில் எவ்வாறு உங்களால் இத்தகையதொரு வளர்ச்சிப் படிநிலையை அடைய முடிந்தது..?

பதில்:- தன்னம்பிக்கை, விசுவாசம், விடாமுயற்சி இவ்வாறான எண்ணங்களினினூடாகவே இந்த ஒரு நிலையை எட்ட முடிந்தது. எதனையும் சாத்தியப்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கும் ஒரு மன உறுதிப்பாடு என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளது என்று சொல்லலாம். சாத்தியமில்லை என்ற சிந்தனை இல்லாமல் அனைத்தையும் சாத்தியப்படுத்தலாம் என்று சிந்திக்கும் மன உறுதிப்பாடு எம்மிடத்தில் இருக்கும்போது வரும் தடைகள் பெரியதொரு விடயமாக தெரியாது. இந்த சிந்தகைளினூடாகவே இவ்வாறு வளர்ச்சியடைய முடிந்தது.

கேள்வி:- இவ்வாறான வளர்ச்சி படிநிலைகளை அடைவதற்காக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கூறமுடியுமா?

பதில்:- நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அதிகமான நூல்களை வாசிக்க முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. முக்கியமாக எனக்கு பார்வைப்புலன் இல்லாத காரணத்தினால் அதிகமான புத்தகங்கள் பிரெய்ல் என்ற எழுத்தில் இருக்கவில்லை. (பிரெய்ல் என்பது பார்வை புலன் அற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள எழுத்து முறைகள்) இவ்வாறு அதிகமான புத்தகங்கள் பிரெய்ல் என்ற எழுத்தில் இல்லாத காரணத்தினால் எப்போதும் ஒருவரில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

பிரெய்ல் எழுத்துக்களால் வடிவமைக்கப்படாத புத்தகங்களை ஒருவரை கொண்டு வாசித்து அறிந்துக்கொள்ள வேண்டிய தேவை எப்போதும் இருந்தது. அதிகமாக மற்றவர்களது உதவிகள் எனக்கு தேவைப்பட்டது. நான் எதிர்பார்த்த அளவில் பாரியளவிலான உதவிகள் கிடைக்கவில்லை. ஆனபோதும் கிடைத்த உதவிகளை வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வளர்ச்சியடைய முடிந்தது. ஆனால் அதிகமான நூல்களை வாசிக்க முடியாமல் போனதற்கு காரணம் பிரெய்ல் என்ற எழுத்தில் புத்தகங்கள் அச்சடிக்காமல் போனதுதான். இருந்தாலும் இருந்த சிறிய புத்தகங்களை கொண்டு வாசித்தறிந்து இந்த நிலைமைக்கு வளர்ச்சியடைந்தோம்.

இப்போதும் கூட அந்த தடை இருந்துகொண்டுதான் இருக்கின்றது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தளத்தில் பல சொப்ட்வெயார்களை பதிவிறக்கம் செய்து அதனது உதவியை கொண்டு பலதேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம்.

கேள்வி:- தொழில்நுட்ப வளர்ச்சியில் உங்களது எதிர்பார்ப்புகளை ஓரளவிலேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கான வசதிவாய்ப்புகள் இருக்கின்றனவா?

பதில்:- தொழில்நுட்ப வளர்ச்சி எனும்போது பொருளாதார பிரச்சினை எல்லோருக்கும் உள்ளது. நாங்கள் கடந்த ஆறுவருடங்களாக விஜயா பிரெய்ல் வாங்கியதை போன்று பிரெய்ல் பிரின்டர் இயந்திரத்தை வாங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றோம். இந்த இயந்திரத்தை வாங்குவதற்காக பண வசூலிப்பு ஒன்றை செய்துக்கொண்டு வருகின்றோம். எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இந்த இயந்திரத்தை வாங்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

கேள்வி:- இந்த பிரெய்ல் இயந்திரத்தின் கொள்வனவினூடாக நீங்கள் மேற்கொள்ளப்போகும் செயற்றிட்டங்கள் குறித்து கூறமுடியுமா?

பதில்:- இதனூடாக தமிழ் பண்பாடு, காலசாரத்தை பின்பற்றும் பார்வை புலனற்ற சமூகத்தினருக்கு அறிவியல் தொடர்பான, சமூகவியல் தொடர்பான பல விடயங்களை பிரெய்ல் மூலமாக வழங்கமுடியும். ஏனென்றால் இலங்கையில் பார்வை புலனற்ற நிலையில் வாழும் தமிழ் மொழி பேசுபவர்கள் வாசிக்கக் கூடிய வகையில் பிரெய்ல் புத்தகங்கள் இதுவரை அச்சிடப்படவில்லை.

சிங்கள மொழியில் 'பீச் த பிரெய்ல்' செய்வது போன்றதொரு சாதனையை தமிழில் இதுவரை யாரும் செய்யவில்லை. உண்மையில் விஜய நிறுவனம் சிங்களமொழி பேசுபவர்களுக்காக வெளியிடும் பிரெய்ல் சஞ்சிகையானது ஒரு சாதனை என்றே கூறவேண்டும். ஏனெனில் இலங்கையில் எத்தனையோ பெரிய நிறுவனங்கள் உள்ளன. ஆனபோதும் பார்வை புலனற்றவர்களுக்கு ஒரு தேவை இருக்கின்றது என்பதை இந்த விஜய நிறுவனமே உணர்ந்துகொண்டுள்ளது.
கேள்வி:- உங்களது எழுத்துக்கு துணை நிற்பவர்கள் குறித்து கூறுங்கள்?

பதில்- ஆரம்ப காலத்தில் எனது நண்பர்கள். குடும்ப வாழ்வென்று வந்த பின் எனது மனைவி மற்றும் பிள்ளைகள். பல்வேறுபட்ட காலத்தில் பல்வேறுபட்டவர்கள் உதவிய வண்ணமே உள்ளனர். எங்களது தேவைகளை உணர்ந்து செயற்படுகின்றனர். ஆனால் எப்போதும் ஈடுசெய்ய முடியாத பிரச்சினையாக இருப்பது வாசிப்பு மட்டும்தான். எப்போதும் ஒருவரில் தங்கி இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆரம்ப வகுப்பில் கல்வி கற்பதற்கு ஆரம்பித்த நாள் முதல் பல்கலைக்கழக வாழ்க்கை வரை எனது நண்பர்கள் உதவியாக இருந்தார்கள். வாசிப்பு பிரச்சினை இன்றும் இருக்கவே செய்கிறது. ஆனாலும் வாசிக்க வேண்டும். அதற்காகத்தான் பிரெய்ல் இயந்திரத்தினை கொள்வனவு செய்யும் முயற்சியில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றோம். இதனை கொள்வனவு செய்தால் நூறு வீதம் இல்லாவிட்டாலும் எழுபத்தைந்து வீதமாவது இந்த வாசிப்பு பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: எழுத்துக்களை நீங்கள் பார்க்கும் விதம் குறித்து கூறுங்கள்?

பதில்:- ஓர் எழுத்தாளன் என்று வரும்போது அவனுக்கு பார்வை என்பது அவசியமில்லை. இவ்வாறு பார்வை புலன் அற்றவர்களும் எழுத்து துறையில் சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஜோன் பில்டெர், ஹெலன் கெலர், இதேபோல் இன்னுமொரு பெண்ணொருவர் இருந்துள்ளார். அவர் 13,000 இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். எனவே எழுத்துக்கு பார்வையென்பது அவசியமானது இல்லை.

அதிகமானவர்கள் தமது மன உணர்வுகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டே கண்ணீர்விட்டவண்ணமுள்ளனர்.

என்னுடைய வேதனைகளை, பிரச்சினைகளை சொல்லக்கூடிய ஓர் ஊடகமாக இந்த எழுத்தை நான் பார்க்கிறேன். இந்த எழுத்தானது தனிமனித புலம்பலாகவும் இருக்கலாம். இல்லாவிட்டால் சமூகம் சார்ந்த புலம்பலாகவும் இருக்கலாம். பிரச்சினைகளை கூறுவதற்கு தொடர்பாடல் என்ற ஒன்று உள்ளது. எழுத்தாளன் என்ற ரீதியில் எல்லோருடைய பிரச்சினைகளையும் எடுத்து அதற்கு வடிவம் கொடுத்து அதனை ஒரு படைப்பாக கொடுக்கின்றோம்.

கேள்வி:- இயற்கை சூழலை உணரமுடியாத நிலை காணப்பட்டாலும் எவ்வாறு இயற்கையை உள்வாங்கிக்கொண்டு எழுதுகின்றீர்கள்?

பதில்:- வெளியில் இருக்கும் விடயங்கள் அனைத்தையும் பார்க்க முடியாது. ஐந்து புலன்களில் ஒன்று இழக்கப்பட்டுள்ளது. இதில் மீதம் இருக்கும் நான்கு புலன் உணர்வுகளைகொண்டு கேட்டல், தொட்டுணர்தல் போன்ற செயற்பாடுகளினூடாக இயற்கை சூழலை உள்வாங்கிக் கொண்டு - பின் அதனை உணர்ந்து ஒரு படைப்பாக வெளிப்படுத்துகிறேன்.

வெளிச்சூழல் பற்றி ஒருவர் எனக்கு தெளிவுபடுத்தி கூறவேண்டும். அதன்பின்புதான் ஒரு விடயத்தை பற்றி நான் தெளிவாக உணர்ந்து எழுத ஆரம்பிப்பேன். நேரடியாக முகத்துக்கு முகம் பார்க்கும் ஒரு புலன் இங்கு இழக்கப்பட்டுள்ளது. அதனால் சோர்ந்து இருந்துவிடவில்லை. அது ஓர் இழப்பாக இருந்தாலும் என்னுடைய முயற்சியால் நான் இந்த நிலைக்கு வளர்ந்துள்ளேன். மற்றவர்களைப் போல் இயங்குவது எனக்கு அவ்வளவு இலகுவானதல்ல. என்னைப்பொறுத்தவரை ஒருவிடயத்தை கேட்டு, அறிந்து அதனை உள்வாங்கிக்கொண்டு எழுத வேண்டும். இலங்கை சூழலில் இத்தகையதொரு நிலையிலிருந்து கொண்டு 14 புத்தகங்களை வெளியிட்டது பெரியவிடயம். நீங்கள் செய்வதைப் போன்று இல்லாமல் நாங்கள் பல மடங்கு முயற்சி எடுக்க வேண்டும்.
கேள்வி:- தற்போது வெளிவரும் படைப்புகள் குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்:- ஓர் எழுத்தாளன் எழுத்தாளனாக பிறக்கின்றான். களிமண்ணை பிடித்து உருவாக்குவது போன்று ஓர் எழுத்தாளனை உருவாக்க முடியாது. எழுத்தாற்றல் என்பது அவனது உணர்வில், இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். இல்லாவிட்டல் எல்லோரும் எழுதலாமே? சிறிது காலம் எழுதவிட்டு செல்பவர்களும் இருக்கின்றனர். பாரதிக்குப் பின் ஒரு பாரதி இன்னும் தோன்றவில்லை. கண்ணதாசனுக்குப் பின் ஒரு கண்ணதாசன் இன்னும் தோன்றவில்லை.

ஓர் எழுத்தாளன் எழுத்தாளனாக பிறப்பானானால் அவன் எழுதிக்கொண்டே இருப்பான். எந்த சூழ்நிலையையும் பார்க்க மாட்டான். இருள், வெளிச்சம் என்பவற்றுக்கு அப்பாற்பட்டதுதான் எழுத்து. ஒரு காலக்கட்டத்தில் வெளிச்சம் என்பதே இருக்கவில்லை. ஆனால் அந்த சூழலிலும் எழுதியிருக்கின்றார்கள். உணர்வுகளை தடைசெய்ய முடியாது. ஆனாலும் எழுதும் போது சமூகத்தை சற்று உணர்ந்து எழுத வேண்டும். ஒரு படைப்பை பத்துமுறை வாசிக்க வேண்டும். படைப்பென்று வரும்போது அதை வாசகர்களுக்கு வழங்கும் விதம் என்பது மிக முக்கியமானது. எல்லாவற்றையும் எழுதி, அதை படைப்பாக வழங்க முடியாது.

ஓர் எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது. ஒரு வரம்புக்குள் இருந்து எழுதவேண்டு;ம். யாரையும் பாதிக்காது சமூதாயத்தை பாதிக்காது ஒரு படைப்பாளனின் படைப்பு காணப்படவேண்டும். வரம்பு என்பது எதுவரை என்பதை ஒரு படைப்பாளனே தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளனின் படைப்பானது வாசகனை நல்ல வழியில் சிந்திக்க செய்யக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும். ஒழுக்கத்துக்குள் எழுத வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணமாக உப்பு, விளக்கு, கோதுமையை கூறலாம். உப்பு காரமானது. அதிகமானாலும் பிரச்சினை, குறைந்தாலும் பிரச்சினை. எனவே உப்பை போன்று உபயோகமுள்ளதாக படைப்புகள் காணப்படவேண்டும். ஒளி என்பது எமக்கு இன்றியமைதாது. எனவே படைப்புகள் வழிகாட்ட கூடியதாக இருக்க வேண்டும். இதேவேளை கோதுமையை எடுத்துக்கொண்டால், கோதுமையின் விதைகள் மடிந்தால்தான் எமக்கு உணவாகின்றது.

எனவே ஓர் எழுத்தாளன் சமூதாயத்துக்கு உப்பாகவும் விளக்காகவும் கோதுமையைப் போன்றும் காணப்படவேண்டும். உப்புக்கு ஒப்பாய் படைப்புகள் காணப்படவேண்டும்.

கேள்வி:- உங்களது எழுத்துக்களுக்கூடாக நீங்கள் எவ்வாறான செய்திகளை கொடுக்க முனைந்தீர்கள்?

பதில்:- எனது எழுத்துக்களை வாசிக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தானது அவனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டுமென்றே நினைக்கின்றேன். ஒரு மனிதனின் காயங்களுக்கு கட்டுப்போடும் வகையிலான சிகிச்சை முறையாக எனது எழுத்துக்கள் அமையவேண்டும் என நினைக்கின்றேன். மருத்துவர் ஒருவர் ஒரு நோயாளனின் நோய்களை இனங்கண்டு அந்நோய்க்கு எவ்வாறு சிகிச்சை வழங்குகின்றாரோ அதேபோல் ஒரு வாசகன் படைப்பை வாசிக்கும் போது சிந்தனை செய்ய வேண்டும். அந்த எழுத்துக்கள் வாசகனின் வாழ்வில் திருப்பு முனையாக அமையவேண்டும்.
கேள்வி:- இன்றைய இளம் சமூகம் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்:- இன்றை இளம் சந்ததியினருக்கு சரியான வழிகாட்டல் இல்லையென்றே கூறவேண்டும். நல்ல வழிகாட்டல்  இருக்குமாயின் சிறந்த எதிர்கால சந்ததியினரை நாம் காணலாம். நல்லதொரு வழிகாட்டல் தற்போதைய இளம் சந்ததியினருக்கு தேவைப்படுகிறது.

ஆலயங்கள், ஒழுக்க நிலையங்கள் இந்த வழிகாட்டல்களை இன்றைய இளம் சந்ததியினருக்கு வழங்க முன்வரலாம்.

கேள்வி:- நீங்கள் இன்னும் சாதிக்க நினைக்கும் விடயம் எது?

பதில்:- என்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு அதிகமான புத்தகங்களை பிரெய்ல் மூலமாக அச்சடித்துக் கொடுப்பதற்கு நினைக்கின்றேன். நான் இருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இவ்வாறு உப்பாய், விளக்காய் அதிகமான விடயங்களை பார்வை புலன் அற்றவர்களுக்கு வழங்க நினைக்கின்றேன்.

கேள்வி:- தெருத்தூசியோன் என்ற பெயர் எவ்வாறு வந்தது..?

பதில்:- சிறுவயதில் 'சுவிப்பர்' என்றதொரு கவிதையை வாசித்தேன். அந்தக் கவிதையில் தெருவை கூட்டும் நிகழ்வு தொடர்பில் பலவாறு கவிஞன் எழுதியிருப்பார். இந்த கவிதையை வாசித்த பின் தெருத்தூசியோன் என எனக்கு நானே இந்த பெயரை இட்டுக்கொண்டேன்.

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை