ப்ரத்யேகம்!


திருமணம் என்னும் நிக்கா படத்தில், "என் தாரா என் தாரா நீயே என் தாரா" பாடலை கேட்டிருக்கின்றீர்களா? இந்தப்பாடலின் ஒரு வரியை கார்த்திக் நேத்தா, "ப்ரத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் என் வாா்த்தை ஆனதே!" என்று எழுதி இருப்பார்.. யார் யாரிடமோ ஆயிரம் ஆயிரம் சொற்கள் கேட்டாலும் ஒருவரின் மௌனம் மனதை முழுதாய் நிறையுமெனில் அதுதான் ப்ரத்யேகம்..! நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 

காதல் மொழிகளிலேயே மிக உயர்ந்த மொழி மௌனம் தான்.. மற்றவர்களுக்கு அது வெறும் சப்தமின்மை..ஆனால், நேசிக்கும் இருவருக்குள் அந்த மௌனத்தில் ஓராயிரம் வார்த்தைகள், நூறு கவிதைகள், பல சிறு ஊடல்கள் பரிமாறப்படும். அந்த ப்ரத்யேக மௌனத்தை வாசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே ஒருவரின் வாழ்நாள் காதலையும் வாசிக்க முடியும்.. ஆதலால் தான், "காதல் என்பது ப்ரத்யேக தேடல்" ஆகிறது.. தன் மௌனத்தைப் புரிந்துகொள்ளும் அந்த ஒருவரைத் தேடும் முடிவற்ற, இனிமையான பயணமே காதல் என நான் எப்போதும் நினைப்பதுண்டு
 
"உங்களுக்கென்று பிரத்யேகமாக ஒளிர்கிற வெளிச்சத்தில் நீங்கள் யாரை நிறுத்திப் பார்க்கத் துடிக்கிறீர்களோ, அவரே உங்கள் முதல் கனவும் நேசமும் ஆகிறார்.." என்ற இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதிய சொற்களாக அந்த வெளிச்சம், சூரியனோ நிலவோ தரும் வெளிச்சம் அல்ல. அது நம் உள்ளங்கைக்குள், நம் கற்பனையில் நாம் பொத்தி வைத்திருக்கும் உயிரின் வெளிச்சம்! அந்தப் ப்ரத்யேகமான ஒளியில் எல்லாரையும் நாம் நிறுத்திப் பார்த்துவிட முடியாது. யாரை நிறுத்தும் போது அந்த வெளிச்சம் இன்னும் பிரகாசமாகிறதோ, யாரை நிறுத்தும் போது மனம் "இவர்தான் என் உலகம்" எனச் சரணடைகிறதோ... அவரே வாழ்வின் முதல் கனவாகவும், தீராத நேசமாகவும் உருமாறுகிறார்..

இந்த உலகத்தில் நமக்கென்று ஒரு தனித்துவமான கைரேகை இருப்பதைப் போல, நமக்கென்று ஒரு ப்ரத்யேகமான வானம் இருக்கிறது.. அந்த வானத்தில் நமக்கென மட்டுமே ஒரு நட்சத்திரம் பூத்திருக்கும். அந்த பேரன்பை இன்னொருவரிடம் கடனாகவும் பெற முடியாது, திருடவும் முடியாது. அது நமக்காக பிறந்து வாழ்நாள் முழுதும் நம்மோடு மட்டுமே பயணிக்கக் கூடிய, உலகத்தில் ஒன்றே ஒன்றான பொக்கிஷம்.......அதுவே ப்ரத்யேகம்!

உதாரணமாக நாம் எப்போதும் தூறல் மழை என்று நனைந்திருப்போம் எல்லோரும் நனையும் மழை தான்! ஒருவரோடு நடக்கும்போது மட்டும் கவிதையாவது ப்ரத்யேகம்! எத்தனை குரல்கள் ஒலித்தாலும்  ஒரு குரல் மட்டும் இதயத்தின் கதவை நேரடியாகத் தட்டுவது ப்ரத்யேகம்..! கடப்பவர்கள் எல்லோருக்கும் நின்று பதிலளிக்க முடியாது தானே.... ஏதோவொரு இடத்தில் மனம் தேங்கிப்போகும்... மண்டியிட்டு நிற்கும்.... இறுகப்பற்றிக்கொள்ளும். எல்லாவிடத்திலும் தேங்குதென்றால் அது குட்டை. ஒருவிடத்தில் தேங்கினால் ப்ரத்யேகம் !
 
"ப்ரத்யேகம்" என்ற சொல்லுக்கு "தனித்துவம்", "சிறப்பு", அல்லது "தனிப்பட்ட" என்று பொருள் 

இறுகப்பற்றிக்கொள்!


நான் உன்னை மறுத்த 
நிமிடத்தின் 
நினைவில் அழும் போது 
அழுகையை நிறுத்த என்ன செய்வாய் அன்பே? 
என்று கேட்டேன்

முதலில் புன்னகைத்தான்
பின் அலட்சியமாக - தன்
தலைமுடியை கோதிக்கொண்டான்.
தலையை சற்றே சாய்த்து
திரும்பிக் கேட்டான்
காற்றில்லா இடத்தில் எப்படி சுவாசிப்பாய் நீ?

தடுமாறி நான் 
வார்த்தைகளை கோர்க்கும் முன்பே
அவனே பதிலளித்தான்
காற்றில்லாவிடத்தின் சுவாசம் நின்று விடும்
நீ இல்லாவிடத்தில் நான் 
அசையாமல் நின்று விடுவேன்.... -என் 
கைகளை இறுகப்பற்றிக்கொள்.....என்னருகில்  

மௌனமாக அமர்ந்துவிடு...- அல்லது 
நான் நினைவுகளின் அரூபமாகவேனும் இருந்துவிடு 
என்றான்....
 

அவன் மட்டுமா தொலைந்து போனான்.... - அவன் 
கைளை இறுகப்பற்றிக்கொண்டே நானும்...
வா அன்பே நாம் தொலைந்து போய்விடலாம் -  நீ

என்னை - இறுகப்பற்றிக்கொள் 

 

சிங்கம்!

கடந்த சில நாட்களாக எனது சட்டத்தரணி நண்பனும் நானும் உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகளை வலுப்படுத்தல் நிகழ்வில் வளவாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பல மாவட்டங்களிலும் இந்நிகழ்வுகள் இடம்பெறுவதாலும் நாமிருவரும் துணை வளவாளர்களாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாலும் வாரத்தில் மூன்று நாட்களாவது சந்தித்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. நாமிருவரும் சேர்ந்து வளவாளர்களாக பல வருடங்களாவே செயற்படுகின்றோம். எப்படியும் ஆறேழு வருடங்களுக்கு மேற்பட்ட நட்பு. பல்கலைக்கழகக்காலத்தில் இருவரும் பால்- பாலின விடயங்கள் குறித்த ஐ.நாவின் தன்னார்வதொண்டர்களாக தான் பயணிக்க ஆரம்பித்திருந்தோம். நீண்டகால பயணம் என்பதாலோ என்னவோ இருவரும் இணைந்து பயிற்சிகளை அல்லது கொள்ளளவு விருத்தி நிகழ்வுகளை முன்னெடுத்தால் நிகழ்வு முடிவில் நிறைவுத்தன்மை எமக்கும் பங்குபற்றுநர்களுக்கும் ஏற்படுவதுண்டு. நிகழ்வுகளின் போது சிறு சறுக்கல் வந்தாலும் இருவரும் ஆளாளுக்கு முட்டுக்கொடுத்துக்கொள்வோம். எமது நண்பர்கள் கூட இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி என்று பகிடி பண்ணுவதுண்டு. நமக்குள்ளான இரசாயம் இதில் மட்டுமல்ல ஏதாவது சட்டம் சார் விடயங்கள், புலமைபரிசில் நிகழ்வுகள் வந்தால் நானும் ஊடகத்துறை அல்லது பொறியியல்சார் விடயங்கள் தொடர்பில் அவரும் பரிமாறிக்கொள்வோம்.  
 
நிகழ்வுகளின் போது இந்தாள் கடும் கொதியன். தான் பேசும் போது யாராவது பேசினாலோ அல்லது பராக்கு பார்த்தாலோ பயங்கர கோபம் வந்துவிடும். நான் இதற்கு நேர் எதிர்மாறு. இந்த குணவியல்பும் நம்மிருவருக்குள்ளும் இரசாயனம் இருப்பதற்கு இன்னுமொரு காரணம் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் அடுத்தவர்களிடம் தான் இந்த பாய்ச்சலும் கொதித்தனமும் என்னிடம் இதுவரை ஒரு தடவை தான் கோபப்பட்டுள்ளார். இதுவும் நண்பர்கள் எம்மை இணைத்து பேச இன்னுமொரு காரணம். நாமிருவரும் சில வெளிநாட்டுப்பயணங்களையும் ஒன்றாக மேற்கொண்டுள்ளோம். பொது நிகழ்வுகளில் நான் ஒருவருக்காக காத்திருந்து உணவு உட்கொண்டதென்றால் அது இருவருக்காகத்தான். அதில் ஒருவர் இவர். அவரும் அப்படியே நானிருக்கும் நிகழ்வுகளில் என்னைவிட்டுவிட்டு சாப்பிடவே மாட்டார். அது ஒழுங்குபடுத்துனர்களே கூப்பிட்டாலும் அவர்களிடம் முகத்திலடித்த மாதிரி சொல்லிவிட்டு காத்திருப்பார். அநேகமாக எனக்கும் பரிமாறி எடுத்து தன்னருகில் வைத்திருப்பார். அந்தளவு எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது கூட அவருக்கு தெரியும். சில நேரங்களில் சாப்பிடும் போது நான் இது நல்லாயிருக்கின்றது என்று சொன்னால் தன்னுடையதை எனக்கும் வைத்துவிடுவதுண்டு. அதேபோன்று ஏதாவது பிடித்திருந்தால் சடாரென்று என்னுடைய தட்டில் கைவைப்பதுண்டு. சில நேரங்களில் இது எனக்கு அந்தரமானதாகவும் இருப்பதுண்டு. அடுத்தது பார்ப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று நான் பதற்றமாவதுமுண்டு. இவை ஒரு பக்கமிருக்க!

கடந்த சில வாரங்களாக ஒன்றாக பயணிக்கின்றோம் என்று சொன்னேனில்லையா? நான் சில நாட்களாக நல்ல மனநிலையில் இல்லை. இதை என்னுடைய முகத்தையோ என்னத்தையோ வைத்து இந்தாள் கண்டு பிடிச்சுட்டுது. நூறு தரம் குறுஞ்செய்தி, அழைப்பு என்றும் கேட்டுப்பார்த்தார். எனக்கு அந்தவிடயத்தினை பகிர மனமில்லை. நான் வெள்ளைச்சட்டையுடன் வீதியில் போகின்றேன். சேறு சட்டையில் பட்டுவிட்டது. இதனை நீரில் கழுவிப்பார்த்தாகிட்டு, சவக்காரம் போட்டும் பார்த்தாகிட்டு கறை போகவில்லை. இனி சலவைக்குத்தான் போடவேண்டும். இந்த மனநிலையில் நானிருக்கும் போது ஏன் சேறுபட்ட இடத்தை மறைக்கின்றாய் என்று இவர் கேட்டால் நான் என்ன பதிலளிப்பது? இப்படிப்பட்ட மனநிலையை நாமிருவரும் கடந்துகொண்டிருக்கின்றோம். சில நாட்களுக்கு முன்னரான பயிற்சியின் போது எனக்கு மாதவிடாயும் வந்துவிட்டது. ஏன் இன்று சரியில்லை என்று பயிற்சி நாளன்று காலையில் கேட்ட போது நானும் சொல்லிவிட்டேன். எனவே தான் அன்றைய பயிற்சியை முழுமையாக பொறுப்பேற்பதாகவும் அமாந்திருந்து பார்க்கும் படியும் ஏதாவதென்றால் தான் கேட்பதாகவும் வற்புறுத்தி கூறிவிட்டார். எனக்கும் சொல்லிக்கொள்ளா விட்டாலும் இந்தாளுக்கு கொஞ்சம் பயம். இதனாலேயேயும், அந்த கண்டிப்பில் இருந்த அன்பிலும் அருகில் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

அழகான அர்த்தமானதொரு கதை! 

அவர்: ஒருவன் காட்டில் இருக்க வேண்டுமென்றால் என்ன தேவை?

பங்குபற்றுநர்கள்: அறிவு இருக்க வேண்டும், உடல் வலிமையாக இருக்க வேண்டும், விரைவாக ஓட வேண்டும், எதிரிகளை தாக்கும் திறன் வேண்டும், தந்திரமாக இருக்க வேண்டும்.

அவர்: நமக்குத் தெரிந்து காட்டுக்கு யார் ராஜா? 

பங்குபற்றுநர்கள்: சிங்கம்

அவர்: சிங்கத்திற்கு இருக்கும் அறிவை விட, பலத்தை விட யானைக்கு அறிவும் பலமும் உண்டு. சிறுத்தை சிங்கத்தை விட விரைவாக ஓடும். ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை விட உயரம், மான் சிங்கத்தை விட அழகானது. இப்படி எல்லாமே சிங்கத்தை விட ஏனைய விலங்குகளுக்கு அதிகமுண்டு. பின்னர் எப்படி சிங்கம் அரசனாகவிருக்கின்றது? 

பங்குபற்றுநர்கள்: ………..

அவர்: கர்ச்சிப்பதால் தான் சிங்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்கின்றது. கர்ஜனை என்பது குரல் உயர்வு, உரத்துக்கத்துதல், கத்துவதன் மூலம் அடுத்தவரை அடக்கியாள்கின்றது. 

நான்: ஆக இவ்வளவு நாளும் அடுத்தவர்களை நோக்கி கத்தியது, முறைத்தப்பார்த்தது, கோபப்பட்டது எல்லாம் இதற்கு தானா…. அடப்பாவி (எல்லாம் மை மைன்ட் வொயிஸ் தான் நண்பர்களே… முகத்திற்கு நேரே சொல்லவில்லை. சொல்லி சிங்கம் எல்லோர் முன்னிலையிலும் என்னை நோக்கி கர்ஜிக்கவா…? ) ஆனால் ஒன்று ஆண் சிங்கம் அழகு தான். முடியெல்லாம் சடையாக இருக்கின்றது தான். ஆனால் பெண் சிங்கம் தான் வேட்டையாடுகின்றது என் இனிய நண்பனே!

சரி கதையிருக்கட்டும் முன்னுக்கு சொன்ன   Intro எல்லாம் என்னத்திற்கு என்று நீங்கள் புருவம் உயர்த்துவது எனக்கு விளங்குகின்றது. அதனை விரைவில் நாம் உத்தியோகபூர்வமாக சொல்கின்றோம். இன்னுமொரு கொசுறு தகவல். கடந்த வருடம் இருவரும் பாரீஸ் போய் வந்தோம். மீண்டும் நண்பனும் நானும் விரைவில் வெளிநாடொன்றிற்கு பயிற்சிக்காக பயணிக்கின்றோம். அதுவும் வளவாளர்களுக்கான பயிற்சி தான். எப்போதும் எதிலும் நம்முடன் பயணிப்பவர்களுக்கும் நமக்குமிடையில் இரசாயனம் வேண்டுமல்லவா..? 

கொழு கொழு கன்னங்கள்

நேற்று ஒரு முகநூல் நண்பி மிகவும் மனவழுத்தில் தான் இருப்பதாகவும், தன்னுடைய உடற்பருமனைக்காட்டி ஒருவர் தன்னை நிராகரித்துவிட்டதாகவும் பதிவினை எழுதியிருந்தார். அண்மைக்காலமாக பலரும் இவ்வாறான பதிவுகளின் பின்னர் தம்மை மாய்த்துக்கொள்வதால் சற்று உள்பெட்டியில் போய் உரையாட ஆரம்பித்தேன். தான் ஒருவரை விரும்பியதாகவும் அவரும் தன்னை விரும்புவதாக தான் செய்கைளை மேற்கொண்டதாகவும் ஆனால் தான் நேரடியாக இவ்விடயத்தினை அணுகும் போது அந்தப்பெண்ணின் உடல் பருமனைக்காட்டி மறுத்துவிட்டதாகவும் இது தன்னுள் மிகவும் உளரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் பகிர்ந்துகொண்டார். உடனடியாக தொலைபேசி இலக்கத்தினை வாங்கி உரையாடத்தொடங்கினேன். இது உடனடியாக மனவழுத்தத்தில் உள்ள ஒருவருக்கு நாம் செய்ய வேண்டியது. உன்னுடன் நானிருக்கின்றேன் என்று முதலில் கொடுக்கின்ற நம்பிக்கை தான் மிகப்பெரியது. இப்படி ஆரம்பித்து இரவும் கதைத்து இன்று ஓரளவு தெளிவாகிவிட்டார். இப்பதிவு இவர்களைப் போன்றவர்களுக்கானது!

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எம்முடைய கட்டடடப்பொறியியல் பிரிவில் நாம் இரு பெணகள் தான் இருந்தோம். அடுத்த மாதத்திலிருந்து மற்ற பெண் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக படிப்பினை இடைநிறுத்திவிட்டார். ஆக ஆண்கள் குழுவில் தனித்த பெண் நான் தான். எனவே எங்கு போனாலும் என்ன செய்தாலும் கைகோர்த்து திரிய பெண் துணை இருந்திருக்கவில்லை. விரிவுரையுள்ள நாட்களில் கன்டீனில் சாப்பிடுவது, நூலகம் போவது எல்லாமே இந்த தடியன்களுடன் தான். அப்படி ஒன்றாக இருக்கும் நேரங்களில் யாராவது பெண் பிள்ளைகள் போனால் , அல்லது நம்மைக் கடந்தால் சில பிள்ளைகளைப் பார்த்து “முள்ளுக்குத்தும் வேண்டாம்” என்பான்கள். ஏன்டா அப்படி சொல்றீங்க என்று கேட்டால் நீ வளரல இன்னுமு; என்று பகிடி பண்ணுவதுண்டு. இதுவொரு வயது வந்தோருக்கான 18+ கதை, உடலுறவை வைத்து சொல்லப்படுகின்றதொன்று என நான் அறிந்துகொள்ள சில நாட்களாகியிருந்தது. அதாவது மெல்லிய பெண்களது எலும்பு குத்தும் என்ற நோக்கிலேயே இந்த கதையாடல் அமைந்திருந்திருக்கின்றது. 

ஒரு வகையில் இந்த மனநிலை இலங்கையை தாண்டி பயணிக்கும் போது என்னாலும் அவதானிக்க முடிந்திருக்கின்றது. “மெலிந்த” பெண்களை தேடுவது நம்முடைய சமூகத்தில் தான். திருமணத்திற்கு பெண்தேடும் விளம்பரங்களையும் பாருங்களேன். ஆனால் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் Chubby யான பெண்களையே விரும்புவதை அவதானித்திருக்கின்றேன். அவ்வாறு அணுகப்பட்டுமிருக்கின்றேன். 


இதுவொரு கற்பிதம் தான். பெரும்பாலும் காதல், திருமணம் என்றவுடன் நமக்குள் முதலில் கட்டில் தான் நினைவுக்கு வந்து நிற்கின்றது. இதன் நீட்சி தான் மெலிந்த பெண் தேடும் படலம். இன்னும் மேலே பாய்வதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் பலர். ஆனால் பல பொசிஷன்கள் வந்துட்டு. இன்னுமொரு கற்பிதம் இருக்கின்றது சாப்பாடு தான் உடலளவினை தீர்மானிக்கும் என்று . ஆனால் அப்படியல்ல மகிழ்ச்சியும் உள ஆரோக்கியமும் தான் உடல் பருமனை திர்மானிக்கின்றது. சிலர் பானை கணக்கில் சாப்பிட்டாலும் வெண்டைக்காய் போல் தான் எப்போதும் இருப்பார்கள். 

அதே போல் தான் என்னுடைய நண்பிகள் சிலர் “மொட்டையான” ஆண்களை நிராகரிப்பதுமுண்டு. ஆனால் பாருங்கள் மெலிந்த பெண் திருமணத்தின் பின் குண்டானால் என்ன செய்வது? அல்லது நிறைந்த தலைமுடியுடன் இருப்பவருக்கு திருமணத்தின் பின் முடியுதிர்ந்தால் என்ன செய்வது?  என்னைப்பொறுத்தளவில் மெலிவாகவோ குண்டாகவோ இருப்பது என்று பேசிக்கொள்வதை விட BMI சரியாக இருக்கின்றதா என்று கணக்கிட்டுக்கொள்வது தான் முக்கியம். குளுகுளுவென்று இருந்தாலும் நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும் பெண்கள் இருக்கின்றார்கள். Zero சைசில் உள்ள சோம்பேறிகளும் இருக்கின்றார்கள் (இது எல்லா விடயத்திலும் தான்…. செக்ஸ் டூ)

முக்கிய விடயம் குளுகுளுவென்றிருக்கும் பெண்களை துணையாக கொள்ளும் ஆண்கள் மிகவும் சந்தோசமான மனநிலையில் இருப்பதாகவும் இவ்வாறான இணையங்கள் விவாகரத்தினை பெருமளவில் நாடுவதில்லை எனவும் ஆய்வுகளும் சொல்கின்றன. எங்கள் வீட்டில் வயதானதொரு பெண்மணி இருந்தார். அவர் மெலிந்த பெண்களைக்கண்டால் வஞ்சம் பிடித்தவர்கள் என்பார். இப்போது நினைக்கும் போது இரண்டுக்கும் தொடர்புள்ளதாக படுகின்றது). ஆண்களிலும் பாருங்கள் குண்டான பெடியன்கள் தன்னுடைய பெரும்பாலும் இணையர்களுடன் பாசமாக  இருப்பார்கள். 

எனவே பெண்களே யாராவது உங்களைப்பார்த்து சொல்வதற்கு முன்னர் நீங்களும் வாடலான, சப்பென்றிருக்கின்ற, ஒல்லியான ஆண்களை நிராகரித்துவிடுங்கள். கேட்டால் முள்ளுக்குத்தும் என்று சொல்லிவிடுங்கள். குளுகுளுவென்றிருந்த இட்லி நடிகைக்குத்தானே கோவில் கட்டப்பட்டது. யாராவது அசினுக்கோ இலியானாவிற்கோ கட்டியிருக்கின்றார்களா என்ன? 

குளுகுளுவென்று இருந்தால் தான் நெஞ்சில் சாயலாம், கன்னத்தை கிள்ளலாம், வயிற்றில் செல்லமாக குத்தலாம். நானெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பேன். வாடலாயிருந்தால் நமக்கும் சோடிப்பொருத்தம் சரி வராது.. பிள்ளைகளும் எலும்பும் தோலுமாகவிருக்கும். நமக்கு எல்லாமே குளுகுளுவென்று இருக்க வேண்டும் . இல்லாட்டி நமக்கும் முள்ளுக்குத்தும் தானே. 

பாத்திரமறிந்து......

மீரா என்றாலும் அந்தப்பெண் அவரை Block செய்திருக்க கூடாது. இருவரும் பேசினாலே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட்டுவிடும். இருவருக்கும் நடுவில் பலரும் தலையிட்டு குழப்புவதாக படுகின்றது. பல உண்மைக்காதல்கள் பிரிவது இவ்வாறான பிரச்சினைகளால் தான். இது குறித்து சிந்தித்துப்பாருங்கள். 

வணக்கம் நண்பரே உங்களைப் போன்று நால்வர் https://veenaganam.blogspot.com/2026/04/blog-post_23.html இந்தப்பதிவிற்கு இவ்வாறான பதிலூட்டங்கள் அளித்துள்ளனர். நீங்கள் இச்சம்பவத்தினை படர்க்கையில் பேசியிருப்து ஒருவகையில் நல்லாதாகவும் பேசுவதற்கு இலகுவானதாகவுமிருப்பதாக எனக்குப்படுகின்றது. நிற்க

முதலாவது நீங்கள் கவலைப்படுமளவு அந்தப்பக்கத்தில் கவலையோ இல்லை தேடலோ இருக்கும் என அந்தப்பெண் நினைக்கவில்லை. அன்று Block பண்ணிய பின்பு ஒரு தடவை கூட அந்தப்பெண் திரும்பிப் பார்க்கவில்லை. உங்களுக்கு அடித்துச்சொல்கின்றேன் முடிந்தால் அவரது சமூக ஊடகங்களுக்கு போய் பாருங்கள் வழமை போன்று பதிவுகள், பகிடிகள், சிலவேளை தன்னுடைய படங்களை மாற்றுதல் என தான் கடந்திருப்பார். காரணம் பாதிப்பு இதனால் ஏற்படவில்லை என்பது தான். ஆனால் அந்தப்பெண்ணின் சகல சமூக ஊடகங்களும் அந்த நிமிடத்திலிருந்து இயக்கப்படவில்லை. நம் அன்புக்குறியவர்களை காணவில்லை என்றாலோ அல்லது நம்மை விட்டு தூரப்போய் விட்டார்கள் என்றாலோ நம்மில் பாதிப்பு எப்போது தெரியுமா வரும்? நாம் அவர்களை மனமாற நேசிக்கும் போது தான். 

இப்படி சிந்தித்து பாருங்களேன். ஒரு பெண் ஒரு நபரை விரும்புகின்றாள். அவருக்கு சொல்லவில்லை. அவர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்யவிருக்கின்றார் எனும் போது தானாக விலகிவிடுகின்றாள். அவளது குடும்பத்திற்கான அரசியல் அழுத்தத்தினாலும் மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு போய்விடுகின்றாள். இதற்கிடையில் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றது.  சில வருடங்களின் பின்னர் எதேச்சையாக மீண்டும் சந்திக்கின்றார்கள். சந்தத்தித்த பின் தான் அவரது திருமணவாழ்க்கை முறிந்துவிட்டது தெரிய வருகின்றது. அதேவேளை இங்கு அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட வாழ்வில் பெரிதான ஈர்ப்பு இல்லை. ஐந்து சகோதரன்களுக்கு ஒரே பெண்ணாக பிறந்து வளர்ந்த அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்டவரது அழுத்தமான போக்கு, மண் மீதான பற்றற்றதன்மை என வேறுபாடுகள் அதிகம். இப்படிப்பட்ட நிச்சயார்த்ததை நிறுத்த அந்தப்பெண் யோசித்துக்கொண்டிருக்கும் போது இவ்விடயம் தெரிய வருகின்றது. இப்போது என்ன முடிவினை அந்தப்பெண் எடுக்க வேண்டும்? பொதுவாழ்வில் இருக்கும் மூவரது தன்மானம், சுயகௌரவம், எதிர்காலம் குறித்த விடயம் இது. நிதானமாகத்தான் கையாள வேண்டும். 

அந்தப்பெண்ணிற்கு அந்த நபரின் முதல் வாழ்க்கை , முறிவு பற்றி தெரிந்திருந்தும் அவருடன் பழகிய நாட்களில் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. காரணம் காயப்படுத்திவிடக்கூடாது எனும் நோக்கம், பழைய வாழ்க்கை அல்லது முடிந்த விடயம் பற்றி பேசுவதால் இருபக்கமும் ஏற்படுகின்ற மனக்காயம் என தவிர்த்திருந்தாள். அந்த நபரின் அனுகுமுறைகள், பதிவுகளை வைத்தும் அவரும் தன்னை விரும்புவதாக தான் நினைத்து தாயிடம் பேசியிருந்தாள். அந்தப்பெண் தன் தாயிடம் இதனை குறித்து பேசும் போது தான் மேற்குறிப்பிட்ட நபர் தன்னுடைய அவசர புத்தியில் அரைவேட்காடு ஒன்றுடன் இதனை பகிர அது பொதுவெளியில் பேச அதனை அந்தப்பெண்ணின் குடும்பம் பிழையாக பார்க்க ஆரம்பித்துவிடுகின்றது. 

“அவர் விருப்பம் கேட்டார், நான் இல்லை என்று விட்டேன்” என்பதில் பல அர்த்தங்கள் உள. ஒன்று அந்த நபர் இவ்வளவு நாட்களும் அந்தப்பெண்ணின் மன உணர்வுகளுடன் தான் விரும்புவது போன்று காட்டி விளையாடியிருக்கின்றார். அல்லது பல பெண்களுடன் பழகிய ஒருவரால் தான் இவ்வாறு ஏதுமறியாத ஒருவர் மேல் பழி போட்டு கரி பூசிவிட்டு பொதுவெளியில் சந்தோசமாகவிருக்க முடியும். அல்லது அவர் பகிர்ந்துகொண்ட பெண்ணுடன் அவருக்கு இருந்த நெருக்கதில் தன்னை நல்லவனாக காட்ட நடந்த நாடகம் இது.  எதுவாகிலும் அடுத்தவருக்கு செய்த களங்கம் குறித்த சிறிதளவு கூட வெட்கம் இன்றி, கவலையின்றி இந்த கூட்டணி நன்றாகத்தானிருக்கின்றது. 

இந்த விடயத்தினை முதலில் 43 க்கும் 30 வயதுக்குமான வயதிடைவெளி தான் காரணம், போகப்போக இந்த இடைவெளி குறையும் புரிதல் வரும் என்று என்று அந்தப்பெண் நினைத்திருந்தாள். அதேவேளை பொது வாழ்வில் இருக்கும் இருவர் தம் தனிப்பட்ட வாழ்க்கைக்காக சமூக அந்தஸ்த்தை இழக்க கூடாது என்று நினைத்து பொதுவாகவுள்ளவொரு பெண்ணை சில மாதங்களுக்கு முன் அணுகியிருந்தாள். கதைத்த போது தான் அந்தப்பெண்ணுக்கும் அந்த நபருக்கும் கூட இருந்த உறவு அவளுக்கு தெரிய வந்திருந்தது. இதற்குள் இந்த பெண்ணுக்கு வளர்ந்த இரு பிளளைகளும் உண்டு. எனினும் அதனை கூட அந்த பெண் நம்பவில்லை. எப்போதும் ஒருவரை நேசிக்கும் போது குறைகள் தெரிவதில்லை தானே. ஆனால் அந்த பெண் அனுகியிருந்த நபர் மூலம் பலருக்கும் இவ்விடயம் பரவி கடந்த மாதம் சில பெண்கள் அந்தப்பெண்ணுக்கு தங்களுக்கும் அந்த நபருக்கும் முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய அந்தரங்கமான விடயங்களின் … அனுப்பியிருந்தனர். இந்த வினையெல்லாம் யாரால்? 

வயது வேறுபாடு, அதுவும் வேற்று இனத்தவருடன் மணவாழ்க்கை முறிந்தவர் பற்றி அந்தப்பெண் அவள் குடும்பத்தில் பேசுவதே எவ்வளவு அபர்த்தமானது அதையும் தாண்டி போராட நினைக்கும் போது அதனை மதிக்க வேண்டும். குறைந்த பட்சம் மிதிக்க நினைக்க கூடாது. வாழ்க்கையென்பது வெறும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதல்ல. நிதானம் முக்கியம் .அதுவும் ஒருமுறை தோற்றவர்கள் இன்னும் நிதானமாக அனுகவெண்டும். அதைவிடவும் வயது வித்தியாசம் 13 வருடங்கள். அப்படியிருக்கும் போது முதிர்ச்சியாக நடந்துகொள்ளாமல் ஏட்டிக்கு போட்டியாக தற்போது கட்டுரை எழுதல் வேறு தொடங்கியிருக்கின்றது. 

நூறு நேர்காணல் கொடுத்தென்ன? ஆங்கிலம் பேசியயென்ன பயன்? ஒரு மனிதனுக்குள் தெளிவையும் முதிர்ச்சியையும் தராத அனுபவம் என்னத்திற்கு? கல்வி என்னத்திற்கு? கௌரவமாக வாழ்கின்ற எந்த குடும்பத்தினை சேர்ந்தவர்களும் இவ்வாறான விடயங்களை விரும்புவதில்லை. ஒருவரது முன்னைய வாழ்க்கை முறிவடைந்து மீண்டும் அவரை புரிந்துகொண்டு வாழ்வது என்பது வேறு அதேவேளை பல பெண்களுடன் பதினொரு மணிக்கு நெளிவு பற்றி பேசுகின்றவருடன் நம்பி ஏமாறுவது வேறு. இது மீதியிலைக்கும் எச்சியிலைக்குமான வேறுபாடு. இதில் மிக முக்கியமானது அனுப்பப்பட்டவற்றிலுள்ள திகதிகள். கடந்த ஆவணியில் ஆரம்பமாகிய இப்பிரச்சினையில் தான் அவரை ஏதோவொரு கோபத்தில் காயப்படுத்திவிட்டோம் என்று என்று அந்தப்பெண் கவிiயெழுதிக்கொண்டிருக்க இங்கே பலருடன் “பரந்த மனது” பற்றி பேசிக்கொண்டிருந்திருக்கின்றார். இனியும் அந்தப்பெண் சுணங்க வேண்டுமா? 

உங்களுக்கு தெரியுமா அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவரில் உள்ள ஒரேயொரு பிரச்சினை எந்நேரமும் இயந்திரத்தனமாக இருப்பது மட்டும் தான். அந்த ஆணை இந்த பெண்ணை தவிர எந்த பெண்ணாலும் அனுகமுடியாது. அந்தளவு பெண் விடயத்தில் நேர்மையுண்டு. எந்தபெண் தானாக போய் விழுந்தாலும் கூட தள்ளிப்போ என்று சொல்கின்ற பக்குவமுண்டு. ஆனால் இங்கு அடிப்படையே தவறு. வறட்டு கௌரவம், அடுத்தவரை காயப்படுத்தி பார்த்து மகிழ்கின்ற வக்கிரம், வழிஞ்சல் தனம்…. இவருடன் வாழ நினைக்கும் அந்தப்பெண் எதிர்காலத்தில் நிம்மதியாகவிருக்க முடியாது. முன்னைய நாட்களில் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் கூட ஒருவருடன் இருக்கும் போது மற்றவருடன் வழிவது என்னவொரு வழிஞ்சல் புத்தி. முதல் வாழ்க்கையிலும் இது தான் நிகழ்ந்திருக்கின்றது. இதுவரையான அறிந்த தெரிந்த விடயங்கள் இவை தான்.

அந்தப்பெண் தேடுவது தனியே துணை மட்டுமல்ல. எதிர்காலத்தில் அந்த குடும்பம் கட்டியெழுப்பவுள்ள விடயங்களுக்கான ஆளுமையுள்ள ஒருவரை. அவர் நிதானமும் ,முதிர்ச்சியுமுள்ளவராக இருத்தல் முக்கியம். அடுத்தது அந்தப்பெண்ணின் அண்ணா அண்ணி மரணத்தின் பின் அவர்களது மூன்று குழந்தைகளும் அந்தப்பெண்ணின் பொறுப்பிலுள்ளார்கள். அவர்களையும் அணைத்துக்கொள்கின்ற முதிர்ச்சியான தந்தையையும் தான் அவள் தேடுகின்றாள். அடுத்தது பிரத்யேகம் என்பது ஒரு உறவில் மிக முக்கியம். 

எல்லோரும் நனையும் மழை தான்!
ஒருவரோடு நடக்கும்போது மட்டும் கவிதையாவது ப்ரத்யேகம்!

எத்தனை குரல்கள் ஒலித்தாலும் 
ஒரு குரல் மட்டும் இதயத்தின் கதவை நேரடியாகத் தட்டுவது ப்ரத்யேகம்..!

நீங்கள் பெரிதாக கவலைப்படவே தேவையில்லை. அவர் அப்படியொன்றும் கவலைப்பட்டிருக்க மாட்டார். முடிந்தால் அந்தப்பெண்ணுக்கு மறைந்திருந்து சேறு பூச அல்லது ஏட்டிக்குபோட்டியாக கட்டுரை எழுதிக்கொண்டிருப்பார். அன்பு உணரப்படாதவிடத்து சுணங்கிடவே கூடாது. 

இன்னுமொன்று தெரியுமா அந்தப்பெண்ணிற்கு அந்த நபரின் வட்டத்திலுள்ள இன்னுமொரு வளர்ந்து வருகின்ற ஒருவரே காதலை சோல்லியிருக்கின்றார். எல்லாவற்றிலும் பொருத்தமாகவுள்ள அவரை அந்த பெண் தற்போது நிராகரித்துக்கொண்டிருப்பதே அந்த வட்டத்தில் இணைந்து வாழும் போது இவரை காயம் செய்யக்கூடாது என்பது தான். நினைத்திருந்தால் பார் நான் வாழ்ந்து காட்டுகின்றேன் என்று ஏட்டிக்கு போட்டியாக அந்தப்பெண்ணால் நடந்துகொள்ள முடியும். ஆனால் இது வாழ்க்கை. பல மனங்கள் சம்பந்தப்பட்டது. நிதானமாகத்தான் அனுகவேண்டும்.  

ஒரு பக்கம் நீ தான் வேண்டும் என்று நிற்கின்ற நிச்சயிக்கப்பட்டவர், இன்னொரு பக்கம் பிரச்சினைக்குறியதொரு மேற்கூறிய நிலை,  மற்றப்பக்கம் பதிலை எதிர்பார்த்திருக்கும் ஒருவர் என நாட்கள் சிக்கலாகிக்கிடக்கின்றது. முடிச்சுக்கள் அவிழவும் காயங்களை ஆற்றவும் காலம் தேவை. அநியாயம் நியாயம் அவனே அறிவான் அவனிடமே அந்தப்பெண் விட்டுச்செல்கின்றது.  

அடுத்தது அந்தப்பெண் கதைத்துப்பார்க்கலாமே என்று கேட்டிருந்தீர்கள். அவளாகப் போய் பேசினால் அவள் அவளது குடும்பம் பற்றி கட்டாயம் பேசியாக வேண்டும். அது தான் முறையும் கூட. ஆனால் அப்படி பேசி அவளது பின்னணி தெரிந்து தான் ஒரு ஆண் நேசிக்க வேண்டுமென்பதல்ல. உண்மையில் அவர்கள் நாட்கள் சமூகமாகச் சென்று இருவரும் அன்பை பரிமாறியிருந்தால் நிச்சயம் அந்தப்பெண் சில நாட்களிலேயே தன் குடும்பம் பற்றி சொல்லியிருப்பாள், ஏன் அறிமுகம் கூட செய்து வைத்திருப்பாள். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அணுகுவது? அந்தப்பெண்ணின் பக்கம் இருந்து நகர்த்திட இனி வழியில்லை. வலித்தாலும் உண்மையை உண்மையாகத்தானே சொல்ல வேண்டும்

அந்தப்பெண்ணின் குடும்பம் விரைவில் புலம்பெயரவுள்ளது. அந்தப்பெண்ணும் அடுத்த மாதம் படிப்பிற்காக செல்லவுள்ளாள். இதற்கு மேலும் நடந்தவை பொய்யாகவிருந்து இருவருக்குமிடையில் அன்பென்பது தூய்மையானதும் நேர்மையானதுமாயிருந்தால் சேருவார்கள். ஆனால் அது வரை அந்தப்பெண் இனி இது பற்றி பேசவிரும்பவில்லை. இத்துடன் இது குறித்து நாமும் பேசிட வேண்டாம். 

 பிச்சை மட்டுமல்ல அன்பையும் பாத்திரமறிந்து இடவேண்டும் !!! 

புரியாத பிரியங்கள் பிரியும் போது புரியும்!

நீங்கள் நமக்கு முந்தைய தலைமுறையினருடன் பேசும் போது அந்தக்காலத்தில் அவர்களது அன்பு பரிமாறல்கள் குறித்து கேட்டுப்பார்த்துள்ளீர்களா…. ? நான் என் தாயாரிடம் கேட்ட போது என் அம்மாவிற்கு அப்பா குறித்த நினைவுகளாக இருப்பதில் ஒன்று குறிப்பிட்டதொரு பாடல் என்றார். அடுத்தது சில கடிதங்கள் , வாழ்த்து அட்டைகள் சேர்த்து வைத்திருக்கின்றார். அப்பாவின் கைகுட்டையொன்றிருக்கின்றது.  அவர்கள் அந்தக்காலத்தில் கைத்தொலைபேசி, சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் ஒருவரையொருவர் நேசித்தவர்கள். அந்த நாட்களில் கண்கள் தான் செய்தியனுப்பும் ஊடகம். அதையும் தாண்டி பேசுவதென்றால் கடிதம். இதனால் தவறாது கண்களால் தகவல்களை பரிமாறிக்கொண்டேயிருப்போம் என அம்மா சொல்லிக்கொள்வார். இதை தாண்டி ஊரில் திருவிழாக்கள், விளையாட்டுப்போட்டிகள் நடந்தால் போதுமாம் நாள் முழுக்க கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம். இப்படியானதொரு நாளில் தான் பாடல் கேட்பது ஆரம்பித்திருக்கின்றது. அக்காலகட்டங்களில் இவ்வாறான நிகழ்வில் பாடல்களை ஒலிபரப்புவதற்கென்றே ஓரு குழு பாட்டுப்பெட்டி, மைக்செட்டுடன் வந்துவிடுவார்களாம். பெரும்பாலும் ஆண்கள் தான் அக்குழுவினரிடம் சென்று பணம்செலுத்தி தம்முடைய காதலிகளுக்கு பிடித்த அல்லது அந்நேரத்தில் பிரபல்யமாயிருக்கின்ற காதல் பாடல்களை ஒலிபரப்புசெய்வார்களாம். ஊரே பாடலை கேட்டாலும் அதன் பின்னுள்ள காதல் கதை பற்றி குறிப்பிட்ட பெண்ணுக்கு தெரிந்திருக்குமாம். இப்படியானதொரு நாளில் தான் அப்பாவும் அம்மாவிற்கு பாடல்களை ஒலிபரப்புச்செய்திருக்கின்றார். “காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்…” , “வான் நிலா ….” ஏன்கின்ற இரு பாடல்கள் தம் காதல் கதையின் பசுமையில் எப்பொதும் எஞ்சியிருப்பதாக அம்மா கூறிக்கொள்வதுண்டு.  பதிலுக்கு தான் எம்ரோயிட் செய்த கைக்குட்டை, வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதாக சொல்லுவார். இதனை எம்முடன் பகிரும் போது அம்மாவின் முகத்தில் தெரிகின்ற பெருமை படர்கின்ற செம்மை சொல்லிச்செல்லும் அவர்கள் அன்பை. என்னதான் சொல்லுங்கள் இன்று ஒருவரை தொடர்புகொள்ள ஆயிரம் வழியிருந்தும் இவ்வாறான சின்ன சின்ன பரிமாறல்கள், நினைவுகள் என்பவற்றை தொலைத்துவிட்ட தலைமுறை நாம் தான். 

பொதுவான திருமணம் பேசப்பட்டு அச்சடங்கு நடைபெறும் வரை இணையர்களுக்கு கொடுக்கப்படுகின்ற காலம் இருக்கின்றதே இது அலாதியானது. இருவர் நட்பிலிருந்து பின் காதல் செய்யும் போது ஓரளவாவது ஒரவரையொருவர் புரிந்திருப்பார்கள், அல்லது தெரிந்துவைத்திருப்பார்கள்.  ஆனால் குடும்பங்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் இதற்கான அவகாசம் இருப்பதில்லை. ஆனால் சிலருக்கு படிப்பு, குடும்ப நிலையை முன்னிருந்தி சிலநேரங்களில் இவ்வதிஷ்டம் வாய்ப்பதுண்டு. அப்படிப்பட்ட இருவரின் கதையிது. இனம், சாதி, குடும்ப நிலை, படிப்பு, பதவி என்று நீண்ட வரிசையான விடயங்கள் ஒப்பிட்டு பார்த்து இருவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஜாதகம் பார்த்த சோதிடர் கூட ஆபூர்;வ பொருத்தம் 10 இல் 9 பொருந்துகின்றது என்று சொல்லிவிட்டார். பங்குத்தந்தையும் தேவாலயத்தில் மோதிரம் மாற்றி விட்டு பின்னர் இந்து முறைப்படி தாலி கட்டுங்கள் பிரச்சினையில்லை என்று பச்சைகொடி காட்டிவிட்டார். ஆனால் இந்த 10 இலும் சரி முன்னர் ஆராயப்பட்ட வரிசையிலும் சரி “மனம்” இருந்திருந்ததா என்பது குறித்த கேள்வியை காலம் போக போக தான் ஆராயத்தொடங்கியது.  

சதாசர்வ காலமும் மருத்துவமனையின் (ஒருமையில்லை பன்மை)  சத்திரசிகிச்சை பிரிவில் நோயாளிகளின் மூளையை கிளறிக்கொண்டும், மிஞ்சிய நேரங்களில் பணத்தினை எண்ணிக்கொண்டும் புத்தாண்டில்லை, பொங்கலில்லை, முக்கிய நாட்களில்லை எல்லா நாட்களுமே சத்திரசிகிச்சை மிஞ்சினால் டிவிட்டர் , பிடித்த இடங்களிலிலெல்லாம் சொத்து  வாங்க வேண்டும் என்று வாழ்கின்ற ஆணுக்கும், இசை, வர்ணம், எழுத்து, ஊர் சுற்றல், புத்தகம், சின்ன சின்ன நினைவுகளை கூட சேர்த்து வைக்க நினைக்கின்ற பெண்ணும் பொருந்திப்போகும் என்றா நினைக்கின்றீர்கள்? தன் வருங்கால துணை உலகின் தலைசிறந்த சத்திரசிகிச்சை நிபுணர்கள் வரிசைக்குள் வந்த போது முதல் வாழ்த்தை அனுப்பி சிறு அரிசியில் பெயரை நுணுக்கமாக எழுதி அனுப்பி வைத்த பெண்ணுக்கும் தன் வருங்கால மனைவி முன்னிலை வடிவமைப்பாளராக தெரியப்பட்ட போது ஓரு மாதம் கழித்தும் வாழ்த்தாமல் பிளாட்டின மோதிரம், நூறு ரோஜாக்கள் இணைத்த பூங்கொத்தும் அனுப்பி வைத்த ஆணுக்கும் பௌதீகமான தென் ஈழத்திற்கும் - அமெரிக்காவிற்குமான தூரம் என்றாலும் மனம் அதனையும் தாண்டி பல மைல் தூரத்திலாளனது. 

சிறு குழந்தைகள் என்றாலும் அவர்களை தூக்குவதற்றும் வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுக்கும் நீரிலும் கூட சாதி, மேல்மட்டம் தேடி பிடிக்கும் ஆணுக்கும் பாரதியின் புதுமைப்பெண்ணிற்குமான சிந்தனையின் ஆழம் வேறுபட்டது. மொழியறிவு அற்றவர்கள் முன் கூட தன் பெருமையை காட்ட ஆங்கிலத்தில் பேசும் ஆணுக்கும் தமிழை மூச்சாக சுவாசிக்கும் அந்த பெண்ணுக்குமான பண்பின் நீளம் வேறானது. ஓன்றல்ல இரண்டல்ல 365 ஐ மூன்றால் பெருக்கி வருமளவு நாட்களை புரிதலுக்காக காலம் கொடுத்திருந்தும் தூரம் கடந்து பார்க்கும் போது வருங்கால மனைவி அனைத்;திலும் அந்தஸ்த்து பொருத்தமானவள் என மட்டும் தான் ஆணுக்கு புரிந்திருந்தது. எல்லாமிருந்தும் அன்பிற்கும் பகிர்தலுக்கும் இவ் உறவில் இடமில்லை என்பதும் மட்டும் அந்த பெண்ணுக்கு புரிந்துபோனதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் பாருங்கள் எதுவும் நம் அருகில் இருக்கும் போது நமக்கும் அதன் அருமை புரிவதில்லை தானே! ஒன்றை மட்டும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அன்பை காட்ட ஒருவர் அருகில் இருக்கும் போது, பதிலன்பை காட்டமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் போது நாம் காட்டுகின்ற அலட்சியங்கள் அவர் நம்மை பிரிந்த பின் தான் நடுமண்டையில் குட்டிச்சொல்லும். இது எப்போதும் நேர்மையான நேசித்தலுக்கு உண்டு. 

நிழலின் அருமை வெயிலில் தானே தெரிவதுண்டு! இவ்வளவு காலமும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இன்று அந்த பெண்ணின் முகநூலில் பழைய படங்களை எல்லாம் இரசித்து “சிவப்பு இதயம்” ஐ தட்டிவிடுகின்றார், தன்னுடன் இருந்த நாட்களில் “படம் வரைவதை விட வேறு உருப்படியானதை பாரும், எனக்கு இந்த ஓவியங்கள் புரிவதில்லை" என தூக்கியெறிந்து பேசிய அதே ஆண் தான் அந்த பெண் நடாத்துகின்ற ஓவிய கண்காட்சிகளின் போது பூங்கொத்துக்களை அனுப்பி வைக்கின்றார். ஆங்கிலத்தில் பேசு, எழுது .. தமிழ் சோறு போடாது என்று சொன்னவர் தமிழில் கவிதையாக அந்தப்பெண்ணுக்காக எழுதித்தள்ளுகின்றார். இதுவென்ன சத்தம், பாம்புக்கு மகுடி போல என்று தூக்கிவீசிய அந்த பெண் இசைத்த வீணை பாடல்களை இன்று தேடி தன்னுடைய அழைப்போசையாக வைத்திருக்கின்றார். இன்னும் ஒருபடி மேலே போய் டிவிட்டரில் “கண்ணம்மா” என்று பதிலளிக்கின்றார். அந்தப்பெண் தேடியலைந்து வாங்கி கழுத்துப்பகுதில் எம்ரோயிட் செய்தனுப்பிய உடைகளை பிறகு போடுகின்றேன் என்று அலட்சியப்படுத்தியவர் இன்று தினமும் போட்டு இன்ஸ்ராவில் பதிவிடுகின்றார்.எத்தனை நாள் அந்தப்பெண் ஒன்றாக சாப்பிடுவதற்கும், தான் சமைத்த உணவை பற்றி பேசமாட்டாரா என்றும் தவித்திருந்தது, அழுதிருந்தது. இப்போது பல முறை ஒன்றாக போவோமா என்று கெஞ்சிக்கொண்டிருக்கின்றார். பூரணை நாளுக்கு கூட 12 மணிக்கு அந்தப்பெண்ணுக்கு குறுஞ்செய்தியனுப்புகின்றார். புரியாத பிரியங்கள் பிரியும் போது புரியும் என்பார்கள் அவருக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.

முன்னரெல்லாம் நூறு குறுஞ்செய்திகள் அனுப்பி பதிலுக்கு காத்திருந்து அந்தப்பெண் அழுதிருக்கின்றாள். முதலாக வாழ்த்திவிட்டு கைத்தொலைபேசி சத்தமிடும் போதெல்லாம் ஓடிப்போய் பார்த்துமிருக்கின்றாள். ஒரு நாளில் இருக்கின்ற 1440 நிமிடத்தில் ஒரு நிமிடம் பேசலாமே என்று கெஞ்சியிருக்கின்றாள். இன்று இதெல்லாம் கடந்துவிட்டது. நேசிப்பென்பது மண் மீதும் இருக்கலாம் தான். 

நீங்கள் உங்கள் இணையரோடு அல்லது வருங்கால துணையோடு நடக்கும் போது சற்று வந்த பாதையை திரும்பி பாருங்கள். ஆங்காங்கே சில பூக்கள், முட்கள், சின்ன சந்தோசங்கள், நினைவுகள் இருந்தால் நீங்கள் வாழ்ந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதுவே கார்ப்பேட் வீதியும், சொகுசு வீடுகளும், பிராடோவும் மட்டும் தான் தெரிகின்றது என்றால் கடந்திருக்கின்றீர்கள் என்றே அர்த்தம். வாழ்தலுக்கும் கடத்தலுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. வாழக்கற்றுக்கொள்ளுங்கள்!

அல்பா ஆண்களுக்குத்தான் வாழ்க்கையமைக்க அசாதாரண பெண் மனைவியாக வேண்டும்! அசாதாரண பெண்களுக்கு சாதாரணமானவனின் குட்டி இதயம் போதும் வாழ்வதற்கு. கைகோர்த்து நடப்பதில் உள்ள சுகம் விரலில் அணிகின்ற வைரமோதிரத்தினை விட அலாதியானது. ஸ்கோப்பியனிலும் பிராடோவிலும் ஓரடி தள்ளியிருந்து பயணிப்பதை விட மோட்டார்பைக்கிள் அருகருகே இதயத்துடிப்பு உணர பயணிப்பது கனதியானது!

இருக்கும் போது பிடித்தவற்றினை கொடுக்காது இறந்த பின் மாலயம் செய்வதில் என்ன பயன்? நம்மவர்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்காத நாம் இன்று LinkedIn இல் வந்து அடிக்கடி பார்த்து என்ன பயன்? பிரியங்களை பிரியங்களால் நிரப்ப பாருங்கள். சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கின்றது! 

பிற்குறிப்பு 01: ஏற்கனவே பல கவிஞர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இம்சையே போதுமானது. இன்னுமொரு கவிஞர் வேறு இப்போது தான் உருவாகிக்கொண்டிருக்கின்றார். பரவாயில்லை கவிதைத்தொகுப்பை வெளியிட்டால் புதிய நூலகத்தில் வைத்திட முடியும்! 

 பிற்குறிப்பு 02: இந்த AI காலத்திலிருந்தாவது இனி வரும் சோதிடர்கள் 11ஆவது பொருத்தமாக "மனதை"வைக்க யோசிக்கலாம். காலம் மாறிவிட்டது தானே 

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்மை பார்த்து கேட்கின்ற மூத்த தலைமுறைக்கும் எமக்கு போராட்டம் பற்றி முகநூலில் தான் தெரியும் என்று சொல்லுகின்ற இளைய தலைமுறைக்கும் இடைப்பட்டவர்கள் நாம். சிறு வயதில் நாம் சாப்பிட மறுக்கும் போது அல்லது ஏதாவது குழப்படி செய்யும் போது வீட்டின் பெரியவர்கள் “அந்தா பூச்சாண்டி” அல்லது “பொக்கான்” என்று சொல்லி பயமுறுத்தும் போது வாயைப்பிளந்து கண்ணை உருட்டி வாய்க்குள் வைத்தது எதுவாகினும் விழுங்கிய கடைசி தலைமுறை நாம் தான். இப்போதெல்லாம் தொலைபேசியில் காட்டூன் இருந்தாலே போதும் இளையவர்கள் சாப்பிட்டு விடுகின்றார்கள். தவறு செய்தால் சாமி  தண்டிப்பார் என்பதற்கும் கோயில் வாசல் , தேவாலய வாசலில் நின்று செல்பி எடுக்கும் தலைமுறைக்கும் இடையானவர்கள் நாம். இவைகளைத்தான் நானறிந்த போராட்டத்துடன் இணைத்து பார்க்க தலைப்படுகின்றேன்.  

போராட்டம் என்பது ஏறத்தாழ இன்று 47 வருடங்களை கடக்கின்றது. நான் சொல்வது ஆயுதப்போராட்டத்தையும் உள்ளடக்கிய உரிமைப்போராட்டம். வீட்டிலேயே அரசியல் இருந்ததால் போராட்டங்களின் வடிவங்களும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களும் ஓரளவு தெரியும்

கடவுள் இருக்கின்றாரா இல்லையா? இந்தக்கேள்வியை நீங்கள் எப்போதாவது உங்களுள் கேட்டுப்பார்த்ததுண்டா? நான் பல முறை கேட்டுப்பார்த்திருக்கின்றேன். திறமையிருந்தும் தமிழ் என்பதால் மட்டும் ஒதுக்கப்படும் போது…… என்னருகில் இருந்த பெண் குழந்தை பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட போது…… திடீரென கேட்ட சத்தத்திற்கு எட்டிப்பார்த்த நண்பன் இன்று வரை விசாரணையின்றி இருக்கும் போது….. ஊரிலுள்ள காவாளிகள் பெண்களுடன் சேட்டைவிட்டும் அவன் சமூகத்தில் கொண்டாடப்படும் போது….. காசினால் தான் செய்ய அநீதிகளை ஒருவன் மறைக்கும் போது அதற்கு ஏனையவர்களும் ஒத்தூதும் போது… இன்னும் இன்னும் நான் கையறு நிலையில் இருந்த போது என்னுள் கேட்டுப்பார்த்திருக்கின்றேன். 

ஏன் கடவுள் இருக்கின்றாரா என கேட்டுப்பார்த்திருக்கின்றேன்?  என்னால் என் சக மனிதர்களையே திருத்த முடிந்திருக்கவில்லை, என்னால் எவ்வளவு போராடியும் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. என்னால் போராட்டத்தின் போது என் குடும்பத்தை காக்க முடியவில்லை. என்னால் வெளிப்படையாக கத்த முடியவில்லை. 

கடவுள் ஏன் வேறுபடுகின்றான்? கடவுளைக்கண்டால் மனிதனுக்கு பயமிருந்திருக்கின்றது… கடவுளிடம் மனிதனை தண்டிக்கும் ஆயுதம் இருந்திருக்கின்றது. கடவுளிடம் மனிதனின் கசவாரப்புத்தியை கேள்வி கேட்டு தீர்ப்புகொடுக்கும் சக்தி இருந்திருக்கின்றது.

.கடவுள் எப்படி தண்டித்தார்? உலகிற்கு வந்திருக்கின்றாரா? நானறிந்த நூல்கள் கடவுள் மனிதருடன் வாழ்ந்த காலத்தை பற்றி சொல்லியிருக்கின்றன. 
பிறகு? .....பிறகு தன் சார்பாக சிலரை அனுப்பி வைத்திருக்கின்றார். அவர்கள் தட்டிக்கேட்டார்கள். அவர்கள் தண்டித்தார்கள், அவர்கள் போரிட்டார்கள், அவர்கள் தரம்கெட்டவர்களை அழிக்கவும் அந்த விளிம்புநிலையினரது உரிமைகளை மீட்கவும் ஆயுதமேந்தினார்கள். மனசாட்சிக்கும் மனிதர்களின் கண்ணீருக்கும் பயப்படாதவர்கள் கையிலிருந்த ஆயுதங்களுக்கு அடிபணிந்தார்கள்!

2010 இல் வெளிவந்ததொரு படம் “மந்திரப்புன்னகை” இந்தப்பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் அறிவுமதி. நீண்ட காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கியிருந்த அறிவுமதி மீண்டும் பிறப்பெடுத்தது இப்படப் பாடலின் மூலமாகத்தான். இது கண்ணன் பாட்டு வகையென்றாலும் முன்னெழுத்தை மட்டும் “அ” என்ற உயிரெழுத்தாக மாற்றிப்பாருங்கள். அது கண்ணன் அல்ல “அண்ணன்” பாடல்! இதனை பாடகி சுதா ரகுநாதன் பாடியிருக்கின்றார். வித்யாசாகர் இசையமைப்பில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தின் இந்த பாடலில் “க” என்பது உயிர் “அ” ஆக மாறும் போது கருத்தே மாறிப்போயிருக்கும். 

கண்ணா….! கண்ணா….!

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

(என்ன குறையோ..)

நன்றும் வரலாம் தீதும் வரலாம்

நண்பன் போலே கண்ணன் வருவான்

வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான்

கண்ணில் மழைத் துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்த கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே!

(என்ன குறையோ…)

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் வரலாம்
உறவைப் போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழிகேட்டு பறவை வாடலாம்
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையால் உலகினை அணைப்பான்

அந்த கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா மனமே!

பாடலிணைப்பு - https://www.youtube.com/watch?v=gPXdcBlVSeE&list=OLAK5uy_nk0Uinm6Yj9I20VGOlmtrR8YcYDhE3lOE&index=3 

 

 

கோடு

இன்று தொழில்முயற்சியாமை குறித்து என்னை நேர்காணல் செய்த ஊடகவியலாளர் ஒளி-ஒலி பதிவின் பின் கருவிகளை அணைத்துவிட்டு நட்பு முறையில் என்னிடம் இரு கேள்விகளை முன்வைத்திருந்தார். 

முதலாவது வினா:  ஓர் ஊடகவியலாளராக இருக்கும் நீங்கள் தொழில்முயற்சி என்று வரும் போது யாரையாவது சாரவேண்டியிருக்காதா அல்லது உங்கள் குடும்ப அரசியல் அதில் பக்கசார்பினை தோற்றுவிப்பதில்லையா? 

பதில் : உலகத்தில் நூலளவாவது தனிப்பட்ட பக்கசார்பின்றி யாரும் இருந்திட முடியாது என்பது என் உறுதியான வாதம். ஆனால் இந்த பக்கசார்பு மனித தன்மையற்றதானதாக அல்லது பணம் சார்ந்து இருக்கும் போது அல்லது ஏதாவதொன்றினை பெறுவதற்காக அறத்தினை அடகுவைக்கும் போது தான் குற்றமாகின்றது. நன்மைக்கு சொல்லிடும் பொய்கள் போன்று ஒரு மனிதனை வாழ வைக்க, நீதியை நிலைநாட்ட. உரிமைகளை வென்றெடுக்க பக்கசார்பாகின்றோம் என்றால் அதில் தப்பேயில்லை. ஆனால் பிழையென்று வரும் போது அது என் பிள்ளையாகவேயிருந்தாலும் தீர்ப்பளிக்கும் உறுதி இருந்தால் போதுமானது தானே…. 

இரண்டாவது வினா: உங்கள் துணைவருக்கு அரசியல் புலம் இருக்குமா? அது உங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா?  

பதில் 02: எந்த உறவிலும் நடுவில் ஒரு கோடு போட்டு இருப்பது மிகவும் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஏதோ கணிதத்துறையில் இருப்பதால் கோடு பற்றி பேசுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. ஆனால் நான் இப்படி யோசிக்கின்றேன். 

நெருங்கிய உறவுநிலையில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட விடயங்கள் , விருப்பங்கள், இலக்குகள் உண்டு. இந்த விடயங்கள் மதிக்கப்படும் போது அல்லது காயப்படுத்தப்படாமல் இருக்கும் வரை மட்டும் தான் உறவுநிலை நிலைக்கும். அல்லது முரண்களை தோற்றுவிக்கும், திருமணம் என்றால் விவாகரத்தில் முடியும், அல்லது மிக முக்கியமானதொன்று என்னவென்றால் உறவுநிலையில் உள்ளவர்கள் நடிக்கவோ, பொய் சொல்லவோ ஆரம்பிப்பார்கள். இவ்வாறான பொய்யானதொரு கானல் நீர் போன்றதொரு உறவில் பொய் வாழ்க்கை வாழ்வதை விடவும் நடுவில் கோடு போட்டு அந்தப்பக்கம் நீ இந்தப்பக்கம் நான். எமது எல்லைகள் இது என்று வாழ்வது எவ்வளவோ நிம்மதியானது. இது நட்புக்கும் பொருந்தும், காதலுக்கும் பொருந்தும் தம்பதிகளுக்கும் பொருந்தும் குடும்பத்தின் எந்த நிலைகளுக்கும் பொருந்தும். ஆனால் நடுவில் கோடு இருப்பதால் யாருக்கும் தெரியாமல் பல்வேறு உறவு நிலைகளில் இருக்கலாம் என எண்ணுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஒருவரை பிடிக்கவில்லையா அவரது முகத்திற்கு நேரே உன்னை பிடிக்கவில்லை என்று சொல்வது மிக நல்லதொரு விடயம். முடிந்தால் இதையே பக்குவமாக அவரவர் மனநிலையை உடைக்காத முறையில் நீங்கள் செய்வீர்கள் என்றால் நீங்கள் தான் குறைந்த பட்சமாவது மனிததன்மை உடையவர்கள். நமக்கென ஒருவர் இருக்கும் போது இரகசியமான பல்வேறு தொடர்புகளை பேணுவது அல்லது யாருக்கும் தெரியாது தானே என்று முரணான உறவுகளில் சிக்கிக்கொள்வது போன்ற இழிவுநிலையை விட நடுவில் கோடு போட்டு வாழ்வது மேல். இது உறவுகளுக்கிடையானதை பற்றியது. 

இதுவே அரசியல் விருப்பு அல்லது பக்கசார்பிற்கும் பொருந்தும். நாம் ஒருவரை நேசிக்கும் போது அல்லது துணையாக தேர்வுசெய்யும் போது அவரது குடும்பம், பண்பு, படிப்பு, பண்பு என ஆராயலாம் ஆனால் அரசியல் என்பது மாறுபாடடையும் ஒரு விடயம். ஆனால் அந்த அரசியல் , அவர் சாரும் கட்சி அறம் சார் போராட்ட வழி சமைக்கின்றது என்றால் நல்லது தானே!. என் துணை அப்படியிருப்பது எனக்கும் பெருமையே. 

எதிர்காலத்தில் நாம் இணைந்து கட்டவுள்ள எம் இல்லத்திற்கான வரைபடத்தில் அலுவலகத்திற்கான வாசல் எம் இல்லத்தின் வாசலுக்கு மறுபக்கத்தில் தான் வரையப்பட்டுள்ளது. எப்படி வீட்டு வாசலில் செருப்பை கழட்டிவிட்டு உள்நுழைகின்றோமோ அவ்வாறே அரசியலையும் எம் இல்ல வாசலில் கழட்டிவிட்டு வந்தால் நல்லது. எமக்கான குடும்ப வாழ்க்கைக்கும் அரசியலுக்குமான கோடு எம் இல்ல வாசல் தான். 

மற்றும்படி என் துணை அரசியலின்றி இருப்பதும் அல்லது ஈடுபாடின்றி இருப்பதற்கும் சாத்தியமில்லை. அவரவர் விருப்பு அவரவருக்கு. சமூக ஊடகத்திலேயே என் நண்பர்கள் பட்டியலில் அல்லது நான் பின்தொடரும் பட்டியலில் என் துணையை வைத்திருக்க நான் விரும்புவதில்லை. அன்பில் மட்டுமே ஓர் ஆணிடம் சரணடைய முடியும். அரசியலில் அல்ல. காதலையும் அரசியலையும் கலந்திட விருப்பமில்லை. நடுவில் கோடு போட்டுவிட்டால் சரி தானே!

ஆண் குழந்தையா பெண் குழந்தையா?

 

நேற்று என்னுடைய தமையனாருடன் பேசும் போது தன்னிடம் பரிசோதனைக்கு வந்த தம்பதியினர் தன்னுடன் உரையாடியதை பகிர்ந்துகொண்டார். இது அவர்களுடைய முதல் பிரசவம் என்றும் இருவருமே இது ஆண் குழந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றோம் என்று கூறியதாகவும் குறிப்பிட்டார். எனினும் இன்னும் பாலினம் குறித்து அறியுமளவு கரு வளராமையால் தற்போது தான் உறுதியாக கூறமுடியாது என அவர்களிடம் தான் சொல்லிவிட்டதாகவும் எம்மிடம் பகிர்ந்தார். எனக்கென்றால் இந்தக்காலத்திலும் இப்படியா என்றுதானிருக்கின்றது..... 

இன்று ஆண் குழந்தை வேண்டும் என, அல்லது பெண் குழந்தை தமக்கு வேண்டும் என காத்திருக்கும் பல தம்பதிகளினரின் பெருவிருப்பை மருத்துவர்கள் ஆய்வுகூட கருக்கட்டல் (IVF)   முறை மூலம் தீர்த்து வைக்கிறார்கள். குழந்தை ஆணாக இருக்க வேண்டுமா பெண்ணாக இருக்க வேண்டுமா என்ற பாலினத் தேர்வை இச் சிகிச்சை மூலம் கோரக் கூடாது, செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தவறு’ என  தெளிவாகச் சொல்லியிருக்கின்ற போதும் மூடிய மருத்துவமனைகளின் கதவுகளுக்கு பின்னால் இது நடை பெறுகிறது என்பது ரகசியமல்ல.

பெறப் போகும் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது சட்டரீதியாக மட்டும் குற்றம் என்பது மட்டுமல்ல அது சமூக ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஏனெனில் இது வெறுமனே பாலினத்தேர்வு என்பதுடன் நின்றுவிடவில்லை. அதற்குள் ஒரு அழிப்பு நடவடிக்கையும் மறைந்து இருக்கிறது. இனஅழிப்பு (Genocide) பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். பாலினத் தேர்வு எனப்படுவது உண்மையில் பாலின அழிப்பு (Gendercide) என்றே பலரும் கருதுகிறார்கள். பெரும்பாலும் பெண் கரு முளைகள் களையப்படுகின்றன. ஆண் கருமுளைகள் ஓம்பப்படுகின்றன. இதனால்தான் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது ஆகாது எனப் பலரும் கூக்குரலிடுகிறார்கள். மாறாக அவ்வாறு செய்வதைத் தடுப்பதால் பெற்றோர்களது மன உணர்வுகள் பாதிக்கப்படும். அது அவர்களது சுதந்திரத்தில் கை வைப்பதாகும் என மாற்றுக் கருத்துகள் சொல்வோரும் உளர். 

குழந்தையில் பாலியல் தேர்வு

ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் என இரு குழந்தைகளும் வேண்டும் என்று பொதுவாகச் சொன்னாலும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தமக்கு எந்தக் குழந்தை வேண்டும் என்பது பற்றிய தனிப்பட்ட உள்ளார்ந்த விருப்புகள் இருக்கவே செய்யும். இருந்தபோதும் ஆசிய நாடுகளை  பொறுத்த வரையில் ஆண் குழந்தைகளே பெரிதும் விரும்பப்படுகின்றன. ‘எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்..’ எனக் கவிஞர் பாடுவது வெறுமனே அக் கவிஞனின் வார்த்தைகள் அல்ல. அது அந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பு என்றே சொல்ல வேண்டும். ஆனால் இவற்றிற்கு பின்னுள்ள நம் சமூகத்தின் கேவலமான சிந்தனை இருக்கின்றதே அதனை தான் முதலில் சாடவேண்டும்

பிறப்பில்  ஆண்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஆர்மேனியா, ஆர்ஜன்ரைனா, சீனா, இந்தியா, ஜோர்ஜியா போன்றவை முன்னணியில் நிற்கின்றன. தங்கள் முதல் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பு ஜேர்மனி உட்பட்டதான சில ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதாக உலக சுகாதார அறிக்கை ஒன்று கூறுகிறது. பெண் குழந்தைகள் விரும்பப்படாமைக்கு பெண்கள் மீதான அடக்கு முறைகளும், பாலியல் பலாத்காரங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம். சீதனம் கொடுக்க வேண்டிய பிரச்சனையும் மறைமுகக் காரணம்தான். இது பொதுவாக கீழை நாடுகளின் நிலை. குடும்பத்தில் ஆண் பெண் சமநிலை வேண்டும் என்பதற்காக பாலினத் தேர்வு மேலைநாடுகளில் விரும்பப்படுவதாகச் சொல்லப்படுகிறது. பாலினத் தேர்வானது இன்று நவீன அறிவியல் ரீதியான ஒன்றாக இருக்கிறது. ஆயினும் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வது பற்றிய ஆர்வமும் அதற்கான முயற்சிகளும் நீண்ட காலமாக இருந்திருக்கின்றன. சீனர்களின் பாலினத் தேர்வு கலண்டர் (Chinese Gender Calendar), பாலினத் தேர்விற்கான உணவு முறை எனப் பல முயலப்பட்டுள்ளன. இவை யாவும் இயற்கையானவை. 

Chinese Gender Predictor

ஓரளவு விஞ்ஞான அறிவையும் கலந்து Shettles Method என்பதை உருவாக்கினார்கள். விந்துத் தேர்வு (Sperm selection) முறை ஒன்றும் இருக்கிறது. ஆனால் இவை எதுவுமே பூரணமான பலன் தரும் முறைகள் அல்ல. விரும்பிய தேர்வை நிச்சயம் தரும் என நம்ப முடியாது. 

Methods of Gender Selection எவ்வாறு செய்யப்படுகிறது?
 
Test Tube  முறையில் குழந்தை பெறும் போது பெற்றோர்களால் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வு செய்ய முடியும். ஆய்வு கூட கருக்கட்டலின் போது கருமுட்டையையும் விந்துவையும் இணைப்பார்கள். அது கருவாக வளர்வதற்கான ஆரம்ப நிகழ்வாகும். ஒரு கலமான அது அங்கே பல கலங்களாகப் பிரிந்து வளரும். எட்டுக் கலங்களேயான பிளாஸ்டோசைட் (Blastocyst) ஆகி மேலும் வளரும். இதன் பின்னரே அதை பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். பொதுவாக 3 முதல் 5 நாட்களில் வைப்பார்கள். அவ்வாறு வைப்பதற்கு முன்னர் நுணுக்கமான ஒரு மரபணுப் பரிசோதனை செய்வதுண்டு. நுண்ணிய ஊசி மூலம் அதிலிருந்து ஒரே ஒரு கலத்தை மட்டும் எடுத்து மரபணுப் பரிசோதனை Preimplantation genetic diagnosis (PGD) செய்வார்கள். ஏதாவது கடுமையான பரம்பரை நோய்கள் இருக்கிறதா என்பதை அறிவதற்கான பரிசோதனை இது. அவ்வாறு தேர்ந்தெடுத்து நோய்கள் அற்ற கருமுளையைத்தான் பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள்.

Preimplantation Genetic Diagnosis 

இது மருத்துவக் காரணங்களுக்கான தேவைகளுக்காகச் செய்யப்படும் பரிசோதனை. இதே பரிசோதனை மூலம் அந்தக் கருமுளையானது ஆணா பெண்ணா என்பதையும் கண்டறிய முடியும். மருத்துவக் காரணங்களுக்கானது அல்ல என்பதால் வழமையாகச் செய்யப்படுவதில்லை. பெற்றோரின் விருப்பத்திற்காக மட்டுமே மிகுந்த செலவில் செய்யப்படுகிறது. பாலினத் தேர்வுடன் ரெஸ்ட் ரியூப் பேபிக்கான மிகக் குறைந்த செலவானது  பல மில்லியன்கள் வரை இருக்கும் எனத் தெரிகிறது. விந்து, முட்டை ஆகியன தேவைப்பட்டால் இது மேலும் அதிகரிக்கலாம். செலவு அதிகமானாலும் இம் முறையானது 99 சதவிகிதம் வெற்றியளிக்கும் என்கிறார்கள்.

கருவில் வளரும் குழந்தையானது ஆணா பெண்ணா என்பதை சாதாரண ஸ்கான் பரிசோதனைகள் (Ultra Sound Scan) மூலமும் கண்டறிய முடியும். ஆனால் அதற்கு சற்று காலதாமதம் ஆகும். கருமுளையானது தாயின் கருப்பையில் 12 முதல் 20 வாரங்கள் வளர்ந்த பின்னர் ஏற்படும் அங்க வேறுபாடுகள் மூலமே தெளிவாகக் கண்டறிய முடியும்.

பால்வழித் தேர்வும் அழிப்பும்

அவ்வாறு கண்டறியும்போது அது வேண்டாத பாலினக் கருவெனில் சிலர் அதைக் கலைக்க முனைவார்கள். கருக் கலைப்பு சட்டவிரோதமானது என்ற காரணத்தால் அவ்வாறு குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் ஸ்கான் பரிசோதனை செய்வதை இலங்கை உட்பட பல நாடுகளில் தடை செய்துள்ளார்கள். இதே காரணங்களுக்காகத்தான் ஆய்வுகூட கருக்கட்டலின் பின்னரான பாலினம் அறியும் பரிசோதனை நிறுத்தப்பட வேண்டும் என்பது ‘பால்வழி அழிப்பு’ என்பவர்களின் வாதமாகும்.

ஆனால் இது பால்வழி அழிப்பு அல்ல, தேர்வு மட்டுமே என ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு சொல்வதன் காரணம் என்ன? ரெஸ்ட் ரியூப் முறை என்படும் இத்தகைய ஆய்வுகூட கருக்கட்டலின் போது ஒரு பெண்ணுக்காக பல முட்டைகள் கருக்கட்டப்படுகின்றன. தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை உறை குளிரில் வைத்துப் பாதுகாப்பார்கள். தானாகவே கருச் சிதைந்துவிட்டால் மீண்டும் வைப்பதற்கு அது உதவும். அல்லது அடுத்த மகப்பேற்றை நாடும் போது உதவலாம் என்பதற்காகவே ஆகும். மாறாக குழந்தை இல்லாத வேறொரு பெற்றோருக்கு சேமிப்பிலிருந்து தானமாகவும் வழங்கவும் முடியும்.

ஆனால் அதை அழிக்கவும் முடியும். பெரும்பாலும் அதுவே நடக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் பாலியல் தேர்வு 1994ம் ஆண்டு முதல் தடைசெய்யப்ட்டுள்ளது. இருந்தபோதும் கடுமையாக அமுல்படுத்தப்படாததால் சனத்தொகையில் பெண்களின் வீதாசாரம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. அண்மையில் டெல்லியில் ஒரு கும்பல் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்யதற்கு சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே மறைமுகக் காரணம் என்கிறார்கள். ஏனெனில் மொத்த சனத்தொகையில்  50 சதவிகிதத்திற்கு அதிகமாக இருப்பது 25 வயதிற்கு உட்பட்ட வயதினரே ஆகும்.  இயல்பான பாலியல் தேவைகளுக்கு ஏற்றளவு அவர்கள் வயதொத்த பெண்களின் எண்ணிக்கை போதாமலிருக்கிறது. இதுவே வன்புணர்வுகளுக்கு காரணம் என்கிறார்கள். 

இப்பொழுது பிரித்தானியாவிலும் பாலியல் தேர்வுகளுக்கு தடையிருக்கிறது. ஆயினும் அங்குள்ள மருத்துவ அறிவியல் (medical ethicists)    குழுவானது அத் தடைக்கான தேவை எதுவும் இல்லை என்கிறது. ஆனால் அது சரியான கருத்தா? பெற்றோர்களின் உளவியல் தாக்கங்கள் மற்றும் குடும்ப சமநிலைக்காக பாலியல் தேர்விற்கு தடை விதிக்கக் கூடாது என்பது அவர்களது வாதம். அது ஓரளவு உண்மை என்ற போதும், தடையை நீக்குவதால் சமூக ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை மனம் கொள்ள வேண்டும்.

பிரச்சனைகள்
குழந்தை ஆணாகவா பெண்ணாகவா இருக்க வேண்டும் என்ற தேர்வு இதுவரை இயற்கையிடமே இருந்திருக்கிறது. இந் நிகழ்வை பெற்றோர்கள் தீர்மானிக்க வழிவிட்டால் அது மருத்துவ ரீதியான வணிகமயப்படுத்தலுக்கு வழிவகுக்கும். அந்நிலையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது போய்விடும். மருத்துவரும் பெற்றோரும் தனிப்பட்ட ரீதியில் எடுக்கும் முடிவுகள்  பாலினத் தேர்வுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. Origins of Love, என்ற தனது நாவலில் Kishwar Desai அவர்கள் இது பாலினத் தேர்வுக்கு அப்பாலும் மருத்துவ வணிக மயமாதலுக்கு சென்றுவிடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

குழந்தையின் சரும நிறம் எதுவாக இருக்க வேண்டும், அதனுடைய அறிவாற்றல் எவ்வளவு இருக்க வேண்டும், குழந்தையின் தலைமுடி எவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் பெற்றோர்கள் கோரக் கூடும். அதற்கான ஆதரவாக மருத்துவர்கள் குரல் எழுப்புவார்கள் என்கிறார். ஆயினும் இவற்றிற்கு ‘ஆம்’ சொன்னாலும் அவர்களுக்கு பூரண திருப்தி ஏற்படப்போவதில்லை. மனித மனம் என்றுமே பூரண திருப்தி அடைவதில்லை. ஒன்று கிடைத்தால் கிடைக்காத வேறு ஒன்றைப் பற்றி ஏங்கிக்கொண்டே இருக்கும். ஆண் குழந்தை அதுவும் எலுமிச்சை நிறக் குழந்தை வேண்டும் எனக் கேட்பார்கள். அது கிடைத்துவிட்டால் அத்தோடு ஆசை அடங்கிவிடாது. அதன் கண்ணின் நிறம் கருமை போதாது என மனம் குற்றம் காணக் கூடும். தனக்கு விருப்பிற்கு ஏற்றவிதத்தில் மற்றொரு ஆய்வுகூட குழந்தையைப் பெறவும் அவர்கள் முனையக் கூடும்.

விரும்பியபடியே குழந்தை கிடைத்துவிட்டால் புதிய வடிவில் பிரச்சனைகள் தலை தூக்கும். ஏற்கனவே உள்ள குழந்தைகளுக்கும் இப் புதிய குழந்தைக்கும் இடையே பெற்றோர்கள் சிறிது பாரபட்சம் காட்டுவார்கள் என்பது நிச்சயம். அறிவுள்ள பெற்றோர் அவ்வாறு பாரபட்சம் காட்டக் கூடாது என மனதார எண்ணினாலும் கூட அவர்கள் அறியாமலே அது நுணுக்கமாக செயற்பாடுகள் ஊடாக வெளிப்படும். பாதிக்கப்பட்ட குழந்தையானது தான் வேண்டாத பிள்ளை என உணர நேரும்போது உறவுகளில் சிக்கல்கள் உருவாகும்.
 
சமூக சிந்தனைகள் 
 
நம்முடைய ஊர்களில் சிலதுகள் உலாவுகின்றன. இவர்களை ஏன் அறிணை விகுதியில் குறிப்பிடுகின்றேன் என்றால் இவர்கள் சமூக ஜந்துக்கள். அறிவிலிகள். எப்போது பார்த்தாலும் "ஆம்பிளப்பிள்ளை என்றால் தான் நல்லம்:" "ஆம்பிளப்பிள்ளை தான் தகப்பன்ற தொழிலை முன்னேற்றும்" "எத்தனை பொடியன் என்டாலும் ஒரு பொம்பிள பிள்ள இருந்தாத்தான் வயசுபோன காலத்தில பார்க்கும்" "மூத்தது பொடியன் என்டா தான் பிறகு குடும்பத்தை பார்ப்பான்" "எல்லாம் பெட்டையென்டால் பிறகு கல்யாணம் கட்டி வைக்க பாடுபடனுமே"  "ஐயோ எல்லாம் பொடியன் என்டா வீட்டுவேலையை தனிய தாய் தான் செய்யனும் " "மூன்டாங்கால் பெட்டை வீட்டுக்கு தரித்திரம்" "ஐந்தாவதா பொடியன் பிறந்தா சனி பிடிக்கும் "  என்று பெரிய விஞ்ஞானிகள் மாதிரி கம்புசுற்றிக்கொண்டிருப்பவர்கள். 
 
இன்று பால் , பாலினம், பாலியல் விருப்பு என்று சமூகசிந்தனைகள் எங்கோ முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போது இந்த பகுத்தறிவற்றதுகள் இப்படி சொல்வதை என்னவென்று சொல்வது. முதலில் ஆண் குறி, பெண்ணுறுப்புடன் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது தம்மை ஆணாகவா பெண்ணாகவா உணரப்போகின்றார்கள் என்பதே நமக்குத் தெரியாத போது பிறக்கும் முன்னர் குறிகளை தீர்மானிக்கும் முட்டாள்தனத்தினை என்னவென்பது.
 
என்னைக் கேட்டால் நானும் துணைவரும் முன்னரே எம் குழந்தைகளின் குறியை அறிவதை விட பிறக்கும் போது அறியப்போகும் அந்த திரிலிங் தருணத்திற்காக காத்திருப்போம். கொழுகொழுவென்ற கன்னங்களுடன் சுருள் முடியுடன் சிவப்பாக (என்னைப்போல்.... அவ்..) குட்டியாக மென்மையாக இருக்கப்போகும் அந்த பஞ்சுப்பொதியை தூக்கி கொஞ்சக்காத்திருப்போமே தவிர துணியை விலக்கி குறியை நிச்சயம் பார்த்திடாத மனநிலையை தான் வளர்த்திருப்போம். கதைகளிலும் திரைப்படங்களிலும் நாம் எதிர்பாராத திருப்பங்களை விரும்புகிறோம். ஏன் நிஜ வாழ்வில் மட்டும் அதற்கு இடமில்லை. ஆணா பெண்ணா எனக் காத்திருப்பதில் ஒரு திரில் இருக்கிறது. சுகமும் இருக்கிறது..... 
 
பிறந்த குழந்தைக்கு நல்ல தமிழ்ப்பெயர் வைத்து ஒழுக்கத்துடன் பண்புடன் அறிவுடன் (கணக்கு பாடம் நான் தான் படிப்பிப்பேன்) வளர்க்கத்தான் முற்படவேண்டுமே தவிர "நீ வீடு கூட்ட வேண்டும்" "நீ கராத்தே படிக்காமல் பரதம் படிக்கவேண்டும்" "பிங்கலர் சட்டை தான் உனக்கு பொருந்தும்" என்கின்ற சேட்டையெல்லாம் எம் வீட்டில் இருக்காது என உறுதியாக நம்புகின்றேன். (சிங்களப்பொடியன் என்றாலோ வெளிநாட்டுப்பொடியன் என்றாலோ எப்படி தமிழ்ப்பெயர்... என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது. அந்த இடத்தில் கலப்பு பெயர் ) 
 
இப்பவே ஒரு ஊசி போடுவதென்றால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் நான் எப்படி பிரசவங்களை கடக்கப்போகின்றேன் என்றே யோசித்துக்கொண்டிருக்கின்றேன்... (அதாவது எந்தப்பெண்ணும் யோசிப்பாள் என நினைக்கின்றேன்.)  அப்படியிருக்கும் போது எந்த சமூக ஜந்துவாவது மேற்குறிப்பிட்ட மொக்குக்கேள்விகளை கேட்டால் பனமட்டை அடிதான் சரி 
 
வாரிசு வேண்டும் என்று திருமணம் செய்வது, உடலுறவிற்காக திருமணம் செய்வது, அடுத்த பத்து மாதத்திலேயே டான் என்று குழந்தை பெறுவது எல்லாம் கூட மூடத்தனம் தான். இருவரின் புரிதலின் வெளிப்பாடாக , நிறைந்த தாம்பத்தியத்தின் வெளிப்பாடாக தான் ஒரு கரு என்னுள் வளரவேண்டும் என்று நினைப்பள் நான். என் துணைவரும் அவ்வாறே நினைப்பவராயிருக்க வேண்டும் என்று நினைப்பவள் .  புதிய வரவு எதுவாக இருப்பினும் அது எங்களது, எங்களுக்கே ஆனது, எங்கள் வாரிசு என்பதில் மனம் நிறையவே செய்யும். இதில் ஆண் என்ன பெண் என்ன எங்களது அன்பின் பரிணாமம் அல்லவா குழந்தை....? 
 
இயற்கையுடன் முரண்படாது அதன் தேர்விற்காகக் காத்திருப்பது நல்லதா அல்லது  விஞ்ஞானத்தின் நவீன முன்னகர்வுகளுடன் இணைந்து கொள்வதா?  குழந்தையின் பாலினத் தேர்வில் நீதியின் தராசு எந்தப் பக்கம் சரிய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? “ஆண் குழந்தையா பெண் குழந்தையா?"
 
பிற்குறிப்பு இரண்டாவது படத்தினை போன்று என் கற்பனையில் சுருள்முடி குண்டுக்கன்னங்களுடன் வரைந்த ஓவியத்தினை ஒரு வருடத்திற்கு முன்னர் என் Instagram இல் பதிவேற்றியிருக்கின்றேன். விரும்பினால் எங்கள் வருங்கால குழந்தையின் கற்பனை ஓவியத்தினை பாருங்கள்.  


பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை