நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்மை பார்த்து கேட்கின்ற மூத்த தலைமுறைக்கும் எமக்கு போராட்டம் பற்றி முகநூலில் தான் தெரியும் என்று சொல்லுகின்ற இளைய தலைமுறைக்கும் இடைப்பட்டவர்கள் நாம். சிறு வயதில் நாம் சாப்பிட மறுக்கும் போது அல்லது ஏதாவது குழப்படி செய்யும் போது வீட்டின் பெரியவர்கள் “அந்தா பூச்சாண்டி” அல்லது “பொக்கான்” என்று சொல்லி பயமுறுத்தும் போது வாயைப்பிளந்து கண்ணை உருட்டி வாய்க்குள் வைத்தது எதுவாகினும் விழுங்கிய கடைசி தலைமுறை நாம் தான். இப்போதெல்லாம் தொலைபேசியில் காட்டூன் இருந்தாலே போதும் இளையவர்கள் சாப்பிட்டு விடுகின்றார்கள். தவறு செய்தால் சாமி  தண்டிப்பார் என்பதற்கும் கோயில் வாசல் , தேவாலய வாசலில் நின்று செல்பி எடுக்கும் தலைமுறைக்கும் இடையானவர்கள் நாம். இவைகளைத்தான் நானறிந்த போராட்டத்துடன் இணைத்து பார்க்க தலைப்படுகின்றேன்.  

போராட்டம் என்பது ஏறத்தாழ இன்று 47 வருடங்களை கடக்கின்றது. நான் சொல்வது ஆயுதப்போராட்டத்தையும் உள்ளடக்கிய உரிமைப்போராட்டம். வீட்டிலேயே அரசியல் இருந்ததால் போராட்டங்களின் வடிவங்களும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களும் ஓரளவு தெரியும்

கடவுள் இருக்கின்றாரா இல்லையா? இந்தக்கேள்வியை நீங்கள் எப்போதாவது உங்களுள் கேட்டுப்பார்த்ததுண்டா? நான் பல முறை கேட்டுப்பார்த்திருக்கின்றேன். திறமையிருந்தும் தமிழ் என்பதால் மட்டும் ஒதுக்கப்படும் போது…… என்னருகில் இருந்த பெண் குழந்தை பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட போது…… திடீரென கேட்ட சத்தத்திற்கு எட்டிப்பார்த்த நண்பன் இன்று வரை விசாரணையின்றி இருக்கும் போது….. ஊரிலுள்ள காவாளிகள் பெண்களுடன் சேட்டைவிட்டும் அவன் சமூகத்தில் கொண்டாடப்படும் போது….. காசினால் தான் செய்ய அநீதிகளை ஒருவன் மறைக்கும் போது அதற்கு ஏனையவர்களும் ஒத்தூதும் போது… இன்னும் இன்னும் நான் கையறு நிலையில் இருந்த போது என்னுள் கேட்டுப்பார்த்திருக்கின்றேன். 

ஏன் கடவுள் இருக்கின்றாரா என கேட்டுப்பார்த்திருக்கின்றேன்?  என்னால் என் சக மனிதர்களையே திருத்த முடிந்திருக்கவில்லை, என்னால் எவ்வளவு போராடியும் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. என்னால் போராட்டத்தின் போது என் குடும்பத்தை காக்க முடியவில்லை. என்னால் வெளிப்படையாக கத்த முடியவில்லை. 

கடவுள் ஏன் வேறுபடுகின்றான்? கடவுளைக்கண்டால் மனிதனுக்கு பயமிருந்திருக்கின்றது… கடவுளிடம் மனிதனை தண்டிக்கும் ஆயுதம் இருந்திருக்கின்றது. கடவுளிடம் மனிதனின் கசவாரப்புத்தியை கேள்வி கேட்டு தீர்ப்புகொடுக்கும் சக்தி இருந்திருக்கின்றது.

.கடவுள் எப்படி தண்டித்தார்? உலகிற்கு வந்திருக்கின்றாரா? நானறிந்த நூல்கள் கடவுள் மனிதருடன் வாழ்ந்த காலத்தை பற்றி சொல்லியிருக்கின்றன. 
பிறகு? .....பிறகு தன் சார்பாக சிலரை அனுப்பி வைத்திருக்கின்றார். அவர்கள் தட்டிக்கேட்டார்கள். அவர்கள் தண்டித்தார்கள், அவர்கள் போரிட்டார்கள், அவர்கள் தரம்கெட்டவர்களை அழிக்கவும் அந்த விளிம்புநிலையினரது உரிமைகளை மீட்கவும் ஆயுதமேந்தினார்கள். மனசாட்சிக்கும் மனிதர்களின் கண்ணீருக்கும் பயப்படாதவர்கள் கையிலிருந்த ஆயுதங்களுக்கு அடிபணிந்தார்கள்!

2010 இல் வெளிவந்ததொரு படம் “மந்திரப்புன்னகை” இந்தப்பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் அறிவுமதி. நீண்ட காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கியிருந்த அறிவுமதி மீண்டும் பிறப்பெடுத்தது இப்படப் பாடலின் மூலமாகத்தான். இது கண்ணன் பாட்டு வகையென்றாலும் முன்னெழுத்தை மட்டும் “அ” என்ற உயிரெழுத்தாக மாற்றிப்பாருங்கள். அது கண்ணன் அல்ல “அண்ணன்” பாடல்! இதனை பாடகி சுதா ரகுநாதன் பாடியிருக்கின்றார். வித்யாசாகர் இசையமைப்பில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தின் இந்த பாடலில் “க” என்பது உயிர் “அ” ஆக மாறும் போது கருத்தே மாறிப்போயிருக்கும். 

கண்ணா….! கண்ணா….!

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

(என்ன குறையோ..)

நன்றும் வரலாம் தீதும் வரலாம்

நண்பன் போலே கண்ணன் வருவான்

வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான்

கண்ணில் மழைத் துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்த கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே!

(என்ன குறையோ…)

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் வரலாம்
உறவைப் போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழிகேட்டு பறவை வாடலாம்
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையால் உலகினை அணைப்பான்

அந்த கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா மனமே!

பாடலிணைப்பு - https://www.youtube.com/watch?v=gPXdcBlVSeE&list=OLAK5uy_nk0Uinm6Yj9I20VGOlmtrR8YcYDhE3lOE&index=3 

 

 

கோடு

இன்று தொழில்முயற்சியாமை குறித்து என்னை நேர்காணல் செய்த ஊடகவியலாளர் ஒளி-ஒலி பதிவின் பின் கருவிகளை அணைத்துவிட்டு நட்பு முறையில் என்னிடம் இரு கேள்விகளை முன்வைத்திருந்தார். 

முதலாவது வினா:  ஓர் ஊடகவியலாளராக இருக்கும் நீங்கள் தொழில்முயற்சி என்று வரும் போது யாரையாவது சாரவேண்டியிருக்காதா அல்லது உங்கள் குடும்ப அரசியல் அதில் பக்கசார்பினை தோற்றுவிப்பதில்லையா? 

பதில் : உலகத்தில் நூலளவாவது தனிப்பட்ட பக்கசார்பின்றி யாரும் இருந்திட முடியாது என்பது என் உறுதியான வாதம். ஆனால் இந்த பக்கசார்பு மனித தன்மையற்றதானதாக அல்லது பணம் சார்ந்து இருக்கும் போது அல்லது ஏதாவதொன்றினை பெறுவதற்காக அறத்தினை அடகுவைக்கும் போது தான் குற்றமாகின்றது. நன்மைக்கு சொல்லிடும் பொய்கள் போன்று ஒரு மனிதனை வாழ வைக்க, நீதியை நிலைநாட்ட. உரிமைகளை வென்றெடுக்க பக்கசார்பாகின்றோம் என்றால் அதில் தப்பேயில்லை. ஆனால் பிழையென்று வரும் போது அது என் பிள்ளையாகவேயிருந்தாலும் தீர்ப்பளிக்கும் உறுதி இருந்தால் போதுமானது தானே…. 

இரண்டாவது வினா: உங்கள் துணைவருக்கு அரசியல் புலம் இருக்குமா? அது உங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா?  

பதில் 02: எந்த உறவிலும் நடுவில் ஒரு கோடு போட்டு இருப்பது மிகவும் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஏதோ கணிதத்துறையில் இருப்பதால் கோடு பற்றி பேசுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. ஆனால் நான் இப்படி யோசிக்கின்றேன். 

நெருங்கிய உறவுநிலையில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட விடயங்கள் , விருப்பங்கள், இலக்குகள் உண்டு. இந்த விடயங்கள் மதிக்கப்படும் போது அல்லது காயப்படுத்தப்படாமல் இருக்கும் வரை மட்டும் தான் உறவுநிலை நிலைக்கும். அல்லது முரண்களை தோற்றுவிக்கும், திருமணம் என்றால் விவாகரத்தில் முடியும், அல்லது மிக முக்கியமானதொன்று என்னவென்றால் உறவுநிலையில் உள்ளவர்கள் நடிக்கவோ, பொய் சொல்லவோ ஆரம்பிப்பார்கள். இவ்வாறான பொய்யானதொரு கானல் நீர் போன்றதொரு உறவில் பொய் வாழ்க்கை வாழ்வதை விடவும் நடுவில் கோடு போட்டு அந்தப்பக்கம் நீ இந்தப்பக்கம் நான். எமது எல்லைகள் இது என்று வாழ்வது எவ்வளவோ நிம்மதியானது. இது நட்புக்கும் பொருந்தும், காதலுக்கும் பொருந்தும் தம்பதிகளுக்கும் பொருந்தும் குடும்பத்தின் எந்த நிலைகளுக்கும் பொருந்தும். ஆனால் நடுவில் கோடு இருப்பதால் யாருக்கும் தெரியாமல் பல்வேறு உறவு நிலைகளில் இருக்கலாம் என எண்ணுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஒருவரை பிடிக்கவில்லையா அவரது முகத்திற்கு நேரே உன்னை பிடிக்கவில்லை என்று சொல்வது மிக நல்லதொரு விடயம். முடிந்தால் இதையே பக்குவமாக அவரவர் மனநிலையை உடைக்காத முறையில் நீங்கள் செய்வீர்கள் என்றால் நீங்கள் தான் குறைந்த பட்சமாவது மனிததன்மை உடையவர்கள். நமக்கென ஒருவர் இருக்கும் போது இரகசியமான பல்வேறு தொடர்புகளை பேணுவது அல்லது யாருக்கும் தெரியாது தானே என்று முரணான உறவுகளில் சிக்கிக்கொள்வது போன்ற இழிவுநிலையை விட நடுவில் கோடு போட்டு வாழ்வது மேல். இது உறவுகளுக்கிடையானதை பற்றியது. 

இதுவே அரசியல் விருப்பு அல்லது பக்கசார்பிற்கும் பொருந்தும். நாம் ஒருவரை நேசிக்கும் போது அல்லது துணையாக தேர்வுசெய்யும் போது அவரது குடும்பம், பண்பு, படிப்பு, பண்பு என ஆராயலாம் ஆனால் அரசியல் என்பது மாறுபாடடையும் ஒரு விடயம். ஆனால் அந்த அரசியல் , அவர் சாரும் கட்சி அறம் சார் போராட்ட வழி சமைக்கின்றது என்றால் நல்லது தானே!. என் துணை அப்படியிருப்பது எனக்கும் பெருமையே. 

எதிர்காலத்தில் நாம் இணைந்து கட்டவுள்ள எம் இல்லத்திற்கான வரைபடத்தில் அலுவலகத்திற்கான வாசல் எம் இல்லத்தின் வாசலுக்கு மறுபக்கத்தில் தான் வரையப்பட்டுள்ளது. எப்படி வீட்டு வாசலில் செருப்பை கழட்டிவிட்டு உள்நுழைகின்றோமோ அவ்வாறே அரசியலையும் எம் இல்ல வாசலில் கழட்டிவிட்டு வந்தால் நல்லது. எமக்கான குடும்ப வாழ்க்கைக்கும் அரசியலுக்குமான கோடு எம் இல்ல வாசல் தான். 

மற்றும்படி என் துணை அரசியலின்றி இருப்பதும் அல்லது ஈடுபாடின்றி இருப்பதற்கும் சாத்தியமில்லை. அவரவர் விருப்பு அவரவருக்கு. சமூக ஊடகத்திலேயே என் நண்பர்கள் பட்டியலில் அல்லது நான் பின்தொடரும் பட்டியலில் என் துணையை வைத்திருக்க நான் விரும்புவதில்லை. அன்பில் மட்டுமே ஓர் ஆணிடம் சரணடைய முடியும். அரசியலில் அல்ல. காதலையும் அரசியலையும் கலந்திட விருப்பமில்லை. நடுவில் கோடு போட்டுவிட்டால் சரி தானே!

ஆண் குழந்தையா பெண் குழந்தையா?

 

நேற்று என்னுடைய தமையனாருடன் பேசும் போது தன்னிடம் பரிசோதனைக்கு வந்த தம்பதியினர் தன்னுடன் உரையாடியதை பகிர்ந்துகொண்டார். இது அவர்களுடைய முதல் பிரசவம் என்றும் இருவருமே இது ஆண் குழந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றோம் என்று கூறியதாகவும் குறிப்பிட்டார். எனினும் இன்னும் பாலினம் குறித்து அறியுமளவு கரு வளராமையால் தற்போது தான் உறுதியாக கூறமுடியாது என அவர்களிடம் தான் சொல்லிவிட்டதாகவும் எம்மிடம் பகிர்ந்தார். எனக்கென்றால் இந்தக்காலத்திலும் இப்படியா என்றுதானிருக்கின்றது..... 

இன்று ஆண் குழந்தை வேண்டும் என, அல்லது பெண் குழந்தை தமக்கு வேண்டும் என காத்திருக்கும் பல தம்பதிகளினரின் பெருவிருப்பை மருத்துவர்கள் ஆய்வுகூட கருக்கட்டல் (IVF)   முறை மூலம் தீர்த்து வைக்கிறார்கள். குழந்தை ஆணாக இருக்க வேண்டுமா பெண்ணாக இருக்க வேண்டுமா என்ற பாலினத் தேர்வை இச் சிகிச்சை மூலம் கோரக் கூடாது, செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தவறு’ என  தெளிவாகச் சொல்லியிருக்கின்ற போதும் மூடிய மருத்துவமனைகளின் கதவுகளுக்கு பின்னால் இது நடை பெறுகிறது என்பது ரகசியமல்ல.

பெறப் போகும் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது சட்டரீதியாக மட்டும் குற்றம் என்பது மட்டுமல்ல அது சமூக ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஏனெனில் இது வெறுமனே பாலினத்தேர்வு என்பதுடன் நின்றுவிடவில்லை. அதற்குள் ஒரு அழிப்பு நடவடிக்கையும் மறைந்து இருக்கிறது. இனஅழிப்பு (Genocide) பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். பாலினத் தேர்வு எனப்படுவது உண்மையில் பாலின அழிப்பு (Gendercide) என்றே பலரும் கருதுகிறார்கள். பெரும்பாலும் பெண் கரு முளைகள் களையப்படுகின்றன. ஆண் கருமுளைகள் ஓம்பப்படுகின்றன. இதனால்தான் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது ஆகாது எனப் பலரும் கூக்குரலிடுகிறார்கள். மாறாக அவ்வாறு செய்வதைத் தடுப்பதால் பெற்றோர்களது மன உணர்வுகள் பாதிக்கப்படும். அது அவர்களது சுதந்திரத்தில் கை வைப்பதாகும் என மாற்றுக் கருத்துகள் சொல்வோரும் உளர். 

குழந்தையில் பாலியல் தேர்வு

ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் என இரு குழந்தைகளும் வேண்டும் என்று பொதுவாகச் சொன்னாலும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தமக்கு எந்தக் குழந்தை வேண்டும் என்பது பற்றிய தனிப்பட்ட உள்ளார்ந்த விருப்புகள் இருக்கவே செய்யும். இருந்தபோதும் ஆசிய நாடுகளை  பொறுத்த வரையில் ஆண் குழந்தைகளே பெரிதும் விரும்பப்படுகின்றன. ‘எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்..’ எனக் கவிஞர் பாடுவது வெறுமனே அக் கவிஞனின் வார்த்தைகள் அல்ல. அது அந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பு என்றே சொல்ல வேண்டும். ஆனால் இவற்றிற்கு பின்னுள்ள நம் சமூகத்தின் கேவலமான சிந்தனை இருக்கின்றதே அதனை தான் முதலில் சாடவேண்டும்

பிறப்பில்  ஆண்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஆர்மேனியா, ஆர்ஜன்ரைனா, சீனா, இந்தியா, ஜோர்ஜியா போன்றவை முன்னணியில் நிற்கின்றன. தங்கள் முதல் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பு ஜேர்மனி உட்பட்டதான சில ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதாக உலக சுகாதார அறிக்கை ஒன்று கூறுகிறது. பெண் குழந்தைகள் விரும்பப்படாமைக்கு பெண்கள் மீதான அடக்கு முறைகளும், பாலியல் பலாத்காரங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம். சீதனம் கொடுக்க வேண்டிய பிரச்சனையும் மறைமுகக் காரணம்தான். இது பொதுவாக கீழை நாடுகளின் நிலை. குடும்பத்தில் ஆண் பெண் சமநிலை வேண்டும் என்பதற்காக பாலினத் தேர்வு மேலைநாடுகளில் விரும்பப்படுவதாகச் சொல்லப்படுகிறது. பாலினத் தேர்வானது இன்று நவீன அறிவியல் ரீதியான ஒன்றாக இருக்கிறது. ஆயினும் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வது பற்றிய ஆர்வமும் அதற்கான முயற்சிகளும் நீண்ட காலமாக இருந்திருக்கின்றன. சீனர்களின் பாலினத் தேர்வு கலண்டர் (Chinese Gender Calendar), பாலினத் தேர்விற்கான உணவு முறை எனப் பல முயலப்பட்டுள்ளன. இவை யாவும் இயற்கையானவை. 

Chinese Gender Predictor

ஓரளவு விஞ்ஞான அறிவையும் கலந்து Shettles Method என்பதை உருவாக்கினார்கள். விந்துத் தேர்வு (Sperm selection) முறை ஒன்றும் இருக்கிறது. ஆனால் இவை எதுவுமே பூரணமான பலன் தரும் முறைகள் அல்ல. விரும்பிய தேர்வை நிச்சயம் தரும் என நம்ப முடியாது. 

Methods of Gender Selection எவ்வாறு செய்யப்படுகிறது?
 
Test Tube  முறையில் குழந்தை பெறும் போது பெற்றோர்களால் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வு செய்ய முடியும். ஆய்வு கூட கருக்கட்டலின் போது கருமுட்டையையும் விந்துவையும் இணைப்பார்கள். அது கருவாக வளர்வதற்கான ஆரம்ப நிகழ்வாகும். ஒரு கலமான அது அங்கே பல கலங்களாகப் பிரிந்து வளரும். எட்டுக் கலங்களேயான பிளாஸ்டோசைட் (Blastocyst) ஆகி மேலும் வளரும். இதன் பின்னரே அதை பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். பொதுவாக 3 முதல் 5 நாட்களில் வைப்பார்கள். அவ்வாறு வைப்பதற்கு முன்னர் நுணுக்கமான ஒரு மரபணுப் பரிசோதனை செய்வதுண்டு. நுண்ணிய ஊசி மூலம் அதிலிருந்து ஒரே ஒரு கலத்தை மட்டும் எடுத்து மரபணுப் பரிசோதனை Preimplantation genetic diagnosis (PGD) செய்வார்கள். ஏதாவது கடுமையான பரம்பரை நோய்கள் இருக்கிறதா என்பதை அறிவதற்கான பரிசோதனை இது. அவ்வாறு தேர்ந்தெடுத்து நோய்கள் அற்ற கருமுளையைத்தான் பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள்.

Preimplantation Genetic Diagnosis 

இது மருத்துவக் காரணங்களுக்கான தேவைகளுக்காகச் செய்யப்படும் பரிசோதனை. இதே பரிசோதனை மூலம் அந்தக் கருமுளையானது ஆணா பெண்ணா என்பதையும் கண்டறிய முடியும். மருத்துவக் காரணங்களுக்கானது அல்ல என்பதால் வழமையாகச் செய்யப்படுவதில்லை. பெற்றோரின் விருப்பத்திற்காக மட்டுமே மிகுந்த செலவில் செய்யப்படுகிறது. பாலினத் தேர்வுடன் ரெஸ்ட் ரியூப் பேபிக்கான மிகக் குறைந்த செலவானது  பல மில்லியன்கள் வரை இருக்கும் எனத் தெரிகிறது. விந்து, முட்டை ஆகியன தேவைப்பட்டால் இது மேலும் அதிகரிக்கலாம். செலவு அதிகமானாலும் இம் முறையானது 99 சதவிகிதம் வெற்றியளிக்கும் என்கிறார்கள்.

கருவில் வளரும் குழந்தையானது ஆணா பெண்ணா என்பதை சாதாரண ஸ்கான் பரிசோதனைகள் (Ultra Sound Scan) மூலமும் கண்டறிய முடியும். ஆனால் அதற்கு சற்று காலதாமதம் ஆகும். கருமுளையானது தாயின் கருப்பையில் 12 முதல் 20 வாரங்கள் வளர்ந்த பின்னர் ஏற்படும் அங்க வேறுபாடுகள் மூலமே தெளிவாகக் கண்டறிய முடியும்.

பால்வழித் தேர்வும் அழிப்பும்

அவ்வாறு கண்டறியும்போது அது வேண்டாத பாலினக் கருவெனில் சிலர் அதைக் கலைக்க முனைவார்கள். கருக் கலைப்பு சட்டவிரோதமானது என்ற காரணத்தால் அவ்வாறு குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் ஸ்கான் பரிசோதனை செய்வதை இலங்கை உட்பட பல நாடுகளில் தடை செய்துள்ளார்கள். இதே காரணங்களுக்காகத்தான் ஆய்வுகூட கருக்கட்டலின் பின்னரான பாலினம் அறியும் பரிசோதனை நிறுத்தப்பட வேண்டும் என்பது ‘பால்வழி அழிப்பு’ என்பவர்களின் வாதமாகும்.

ஆனால் இது பால்வழி அழிப்பு அல்ல, தேர்வு மட்டுமே என ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு சொல்வதன் காரணம் என்ன? ரெஸ்ட் ரியூப் முறை என்படும் இத்தகைய ஆய்வுகூட கருக்கட்டலின் போது ஒரு பெண்ணுக்காக பல முட்டைகள் கருக்கட்டப்படுகின்றன. தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை உறை குளிரில் வைத்துப் பாதுகாப்பார்கள். தானாகவே கருச் சிதைந்துவிட்டால் மீண்டும் வைப்பதற்கு அது உதவும். அல்லது அடுத்த மகப்பேற்றை நாடும் போது உதவலாம் என்பதற்காகவே ஆகும். மாறாக குழந்தை இல்லாத வேறொரு பெற்றோருக்கு சேமிப்பிலிருந்து தானமாகவும் வழங்கவும் முடியும்.

ஆனால் அதை அழிக்கவும் முடியும். பெரும்பாலும் அதுவே நடக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் பாலியல் தேர்வு 1994ம் ஆண்டு முதல் தடைசெய்யப்ட்டுள்ளது. இருந்தபோதும் கடுமையாக அமுல்படுத்தப்படாததால் சனத்தொகையில் பெண்களின் வீதாசாரம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. அண்மையில் டெல்லியில் ஒரு கும்பல் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்யதற்கு சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே மறைமுகக் காரணம் என்கிறார்கள். ஏனெனில் மொத்த சனத்தொகையில்  50 சதவிகிதத்திற்கு அதிகமாக இருப்பது 25 வயதிற்கு உட்பட்ட வயதினரே ஆகும்.  இயல்பான பாலியல் தேவைகளுக்கு ஏற்றளவு அவர்கள் வயதொத்த பெண்களின் எண்ணிக்கை போதாமலிருக்கிறது. இதுவே வன்புணர்வுகளுக்கு காரணம் என்கிறார்கள். 

இப்பொழுது பிரித்தானியாவிலும் பாலியல் தேர்வுகளுக்கு தடையிருக்கிறது. ஆயினும் அங்குள்ள மருத்துவ அறிவியல் (medical ethicists)    குழுவானது அத் தடைக்கான தேவை எதுவும் இல்லை என்கிறது. ஆனால் அது சரியான கருத்தா? பெற்றோர்களின் உளவியல் தாக்கங்கள் மற்றும் குடும்ப சமநிலைக்காக பாலியல் தேர்விற்கு தடை விதிக்கக் கூடாது என்பது அவர்களது வாதம். அது ஓரளவு உண்மை என்ற போதும், தடையை நீக்குவதால் சமூக ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை மனம் கொள்ள வேண்டும்.

பிரச்சனைகள்
குழந்தை ஆணாகவா பெண்ணாகவா இருக்க வேண்டும் என்ற தேர்வு இதுவரை இயற்கையிடமே இருந்திருக்கிறது. இந் நிகழ்வை பெற்றோர்கள் தீர்மானிக்க வழிவிட்டால் அது மருத்துவ ரீதியான வணிகமயப்படுத்தலுக்கு வழிவகுக்கும். அந்நிலையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது போய்விடும். மருத்துவரும் பெற்றோரும் தனிப்பட்ட ரீதியில் எடுக்கும் முடிவுகள்  பாலினத் தேர்வுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. Origins of Love, என்ற தனது நாவலில் Kishwar Desai அவர்கள் இது பாலினத் தேர்வுக்கு அப்பாலும் மருத்துவ வணிக மயமாதலுக்கு சென்றுவிடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

குழந்தையின் சரும நிறம் எதுவாக இருக்க வேண்டும், அதனுடைய அறிவாற்றல் எவ்வளவு இருக்க வேண்டும், குழந்தையின் தலைமுடி எவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் பெற்றோர்கள் கோரக் கூடும். அதற்கான ஆதரவாக மருத்துவர்கள் குரல் எழுப்புவார்கள் என்கிறார். ஆயினும் இவற்றிற்கு ‘ஆம்’ சொன்னாலும் அவர்களுக்கு பூரண திருப்தி ஏற்படப்போவதில்லை. மனித மனம் என்றுமே பூரண திருப்தி அடைவதில்லை. ஒன்று கிடைத்தால் கிடைக்காத வேறு ஒன்றைப் பற்றி ஏங்கிக்கொண்டே இருக்கும். ஆண் குழந்தை அதுவும் எலுமிச்சை நிறக் குழந்தை வேண்டும் எனக் கேட்பார்கள். அது கிடைத்துவிட்டால் அத்தோடு ஆசை அடங்கிவிடாது. அதன் கண்ணின் நிறம் கருமை போதாது என மனம் குற்றம் காணக் கூடும். தனக்கு விருப்பிற்கு ஏற்றவிதத்தில் மற்றொரு ஆய்வுகூட குழந்தையைப் பெறவும் அவர்கள் முனையக் கூடும்.

விரும்பியபடியே குழந்தை கிடைத்துவிட்டால் புதிய வடிவில் பிரச்சனைகள் தலை தூக்கும். ஏற்கனவே உள்ள குழந்தைகளுக்கும் இப் புதிய குழந்தைக்கும் இடையே பெற்றோர்கள் சிறிது பாரபட்சம் காட்டுவார்கள் என்பது நிச்சயம். அறிவுள்ள பெற்றோர் அவ்வாறு பாரபட்சம் காட்டக் கூடாது என மனதார எண்ணினாலும் கூட அவர்கள் அறியாமலே அது நுணுக்கமாக செயற்பாடுகள் ஊடாக வெளிப்படும். பாதிக்கப்பட்ட குழந்தையானது தான் வேண்டாத பிள்ளை என உணர நேரும்போது உறவுகளில் சிக்கல்கள் உருவாகும்.
 
சமூக சிந்தனைகள் 
 
நம்முடைய ஊர்களில் சிலதுகள் உலாவுகின்றன. இவர்களை ஏன் அறிணை விகுதியில் குறிப்பிடுகின்றேன் என்றால் இவர்கள் சமூக ஜந்துக்கள். அறிவிலிகள். எப்போது பார்த்தாலும் "ஆம்பிளப்பிள்ளை என்றால் தான் நல்லம்:" "ஆம்பிளப்பிள்ளை தான் தகப்பன்ற தொழிலை முன்னேற்றும்" "எத்தனை பொடியன் என்டாலும் ஒரு பொம்பிள பிள்ள இருந்தாத்தான் வயசுபோன காலத்தில பார்க்கும்" "மூத்தது பொடியன் என்டா தான் பிறகு குடும்பத்தை பார்ப்பான்" "எல்லாம் பெட்டையென்டால் பிறகு கல்யாணம் கட்டி வைக்க பாடுபடனுமே"  "ஐயோ எல்லாம் பொடியன் என்டா வீட்டுவேலையை தனிய தாய் தான் செய்யனும் " "மூன்டாங்கால் பெட்டை வீட்டுக்கு தரித்திரம்" "ஐந்தாவதா பொடியன் பிறந்தா சனி பிடிக்கும் "  என்று பெரிய விஞ்ஞானிகள் மாதிரி கம்புசுற்றிக்கொண்டிருப்பவர்கள். 
 
இன்று பால் , பாலினம், பாலியல் விருப்பு என்று சமூகசிந்தனைகள் எங்கோ முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போது இந்த பகுத்தறிவற்றதுகள் இப்படி சொல்வதை என்னவென்று சொல்வது. முதலில் ஆண் குறி, பெண்ணுறுப்புடன் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது தம்மை ஆணாகவா பெண்ணாகவா உணரப்போகின்றார்கள் என்பதே நமக்குத் தெரியாத போது பிறக்கும் முன்னர் குறிகளை தீர்மானிக்கும் முட்டாள்தனத்தினை என்னவென்பது.
 
என்னைக் கேட்டால் நானும் துணைவரும் முன்னரே எம் குழந்தைகளின் குறியை அறிவதை விட பிறக்கும் போது அறியப்போகும் அந்த திரிலிங் தருணத்திற்காக காத்திருப்போம். கொழுகொழுவென்ற கன்னங்களுடன் சுருள் முடியுடன் சிவப்பாக (என்னைப்போல்.... அவ்..) குட்டியாக மென்மையாக இருக்கப்போகும் அந்த பஞ்சுப்பொதியை தூக்கி கொஞ்சக்காத்திருப்போமே தவிர துணியை விலக்கி குறியை நிச்சயம் பார்த்திடாத மனநிலையை தான் வளர்த்திருப்போம். கதைகளிலும் திரைப்படங்களிலும் நாம் எதிர்பாராத திருப்பங்களை விரும்புகிறோம். ஏன் நிஜ வாழ்வில் மட்டும் அதற்கு இடமில்லை. ஆணா பெண்ணா எனக் காத்திருப்பதில் ஒரு திரில் இருக்கிறது. சுகமும் இருக்கிறது..... 
 
பிறந்த குழந்தைக்கு நல்ல தமிழ்ப்பெயர் வைத்து ஒழுக்கத்துடன் பண்புடன் அறிவுடன் (கணக்கு பாடம் நான் தான் படிப்பிப்பேன்) வளர்க்கத்தான் முற்படவேண்டுமே தவிர "நீ வீடு கூட்ட வேண்டும்" "நீ கராத்தே படிக்காமல் பரதம் படிக்கவேண்டும்" "பிங்கலர் சட்டை தான் உனக்கு பொருந்தும்" என்கின்ற சேட்டையெல்லாம் எம் வீட்டில் இருக்காது என உறுதியாக நம்புகின்றேன். (சிங்களப்பொடியன் என்றாலோ வெளிநாட்டுப்பொடியன் என்றாலோ எப்படி தமிழ்ப்பெயர்... என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது. அந்த இடத்தில் கலப்பு பெயர் ) 
 
இப்பவே ஒரு ஊசி போடுவதென்றால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் நான் எப்படி பிரசவங்களை கடக்கப்போகின்றேன் என்றே யோசித்துக்கொண்டிருக்கின்றேன்... (அதாவது எந்தப்பெண்ணும் யோசிப்பாள் என நினைக்கின்றேன்.)  அப்படியிருக்கும் போது எந்த சமூக ஜந்துவாவது மேற்குறிப்பிட்ட மொக்குக்கேள்விகளை கேட்டால் பனமட்டை அடிதான் சரி 
 
வாரிசு வேண்டும் என்று திருமணம் செய்வது, உடலுறவிற்காக திருமணம் செய்வது, அடுத்த பத்து மாதத்திலேயே டான் என்று குழந்தை பெறுவது எல்லாம் கூட மூடத்தனம் தான். இருவரின் புரிதலின் வெளிப்பாடாக , நிறைந்த தாம்பத்தியத்தின் வெளிப்பாடாக தான் ஒரு கரு என்னுள் வளரவேண்டும் என்று நினைப்பள் நான். என் துணைவரும் அவ்வாறே நினைப்பவராயிருக்க வேண்டும் என்று நினைப்பவள் .  புதிய வரவு எதுவாக இருப்பினும் அது எங்களது, எங்களுக்கே ஆனது, எங்கள் வாரிசு என்பதில் மனம் நிறையவே செய்யும். இதில் ஆண் என்ன பெண் என்ன எங்களது அன்பின் பரிணாமம் அல்லவா குழந்தை....? 
 
இயற்கையுடன் முரண்படாது அதன் தேர்விற்காகக் காத்திருப்பது நல்லதா அல்லது  விஞ்ஞானத்தின் நவீன முன்னகர்வுகளுடன் இணைந்து கொள்வதா?  குழந்தையின் பாலினத் தேர்வில் நீதியின் தராசு எந்தப் பக்கம் சரிய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? “ஆண் குழந்தையா பெண் குழந்தையா?"
 
பிற்குறிப்பு இரண்டாவது படத்தினை போன்று என் கற்பனையில் சுருள்முடி குண்டுக்கன்னங்களுடன் வரைந்த ஓவியத்தினை ஒரு வருடத்திற்கு முன்னர் என் Instagram இல் பதிவேற்றியிருக்கின்றேன். விரும்பினால் எங்கள் வருங்கால குழந்தையின் கற்பனை ஓவியத்தினை பாருங்கள்.  


இல்லாதிருக்கின்றாய் ( = இல்லை + இருக்கின்றாய்) - 02

இருக்கின்றாய் என்பதற்கும் - நீ
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……
அருகில் இருக்கும் போது
உன் வாசனை நுகர்கின்றேன்
இல்லாத போது
காற்றில் உணர்கின்றேன்

காணும் போது
கண்களுள் நிறைக்கின்றேன்
காத்திருக்கையில்
கனவுகளில் சுமக்கின்றேன்

பேசும் போது  வார்த்தைகளால்
காயப்படுத்துகின்றாய்  - நீ
பேசாத போது
மௌனங்களால் தொலைகின்றேன் நான் 

நீ உடன் இருப்பதும் சுகம்
அருகில் இல்லாதிருப்பதும் ஒரு சுகம்….
உள்ள போது சேமித்தவை
இல்லாத போது கனவுகளாக…. ஆக
நீ இருக்கின்றாய் என்பதற்கும் - என் 
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……

20.04.2026 



எள்ளுருண்டை

எள்ளென்றால் எண்ணெய்யாக.....
எள்ளு காயுதென்று எலிப்பிழுக்கையும் காயுது.....
எள்ளவு சந்தேகம்.... 
எள்ளவும் குறையாது..
எள்ளுக்குள் எண்ணெய்
எள்ளென்றாலும் ஏழாய் பிரித்து.... 

என எள் குறித்து தமிழ் சொற்றொடர்கள் பலவுள்ளன  எள் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய எண்ணெய் விதை. இது தமிழர்களின் உணவிலும், மருந்திலும் முக்கிய இடம் பெறுகிறது. குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறையான  சித்த மருத்துவம் முறையில் எள் முக்கிய மருந்துப் பொருளாக கருதப்படுகிறது. அத்துடன் எம்முடைய சமய சடங்கு முறைகளிலும் எள் எரித்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படுவதில் இருந்து எள்ளுக்கான புனிதத்தன்மையும் கவனிக்கப்படத்தக்கது. 

எள்ளுருண்டை
என்பது தமிழர்களின் பாரம்பரியமான, ஆரோக்கியமான இனிப்பு உணவாகும். இது எளிய ஆனால் சத்தான சிற்றுண்டி. எள்ளுருண்டை செய்வது அப்டியொன்றும் கடினமான விடயமுமல்ல எள்ளை வறுத்து, அதன் நறுமணம் வரும் வரை சூடாக்க வேண்டும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து, பாகு பதமாகக் காய்ச்ச வேண்டும். அந்த பாகில் வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கைகளில் சிறிது எண்ணெய் தடவி, கலவையை உருண்டையாக உருட்ட வேண்டும். இது மட்டும் தான் என்றில்லை எள்ளுடன் நிலக்கடலை கலந்தும் உருண்டை பிடிக்கலாம், கார எள்ளுருண்டை செய்யலாம், தேங்காய்பூவும் வறுத்து சேர்த்து உருண்டை பிடிக்கலாம். 

எள்ளில் உள்ள சத்துக்கள் (Nutritional Value)

  • கால்சியம் 🦴 → எலும்பு வலிமைக்கு
  • இரும்புச் சத்து 🩸 → இரத்த சோகை தவிர்க்க
  • மெக்னீசியம் & பாஸ்பரஸ் → நரம்பு மற்றும் தசை செயல்பாடு
  • நார்ச்சத்து (Fiber) → செரிமானம் மேம்பாடு
  • சத்தான கொழுப்பு (Healthy fats) → இதய ஆரோக்கியம்
  • புரதம் (Protein) → உடல் வளர்ச்சி

எள் குறித்து இலக்கியங்களில் இருந்து சில மேற்கோள்கள் வருமாறு 

“எள் நிறைந்த நெய் ஒத்து நின்றானை
நீல மிடற்றானை என் கை ஒத்து நேர் கூப்புக”
 

-  புறப்பொருள் வெண்பாமாலை 

“எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே”

“எள் உண் உயிர் வளரும்” 

 சித்தர் தத்துவ உவமை இலிருந்து 

“எள் உண்டால் எலும்பு வளரும்,
உடம்புக்கு ஊக்கம் தரும்”

“எள் எண்ணெய் தலையில் தேய்த்தால்
வாதம் தணியும், சூடு குறையும்”

“எள்ளும் வெல்லமும் சேர்ந்தால்
இரத்தம் பெருகும், பலம் பெருகும்”

“எள்ளினுள் எண்ணெய் போல்
உள்ளினுள் உயிர் ஒளி” 

எனக்கு மிகவும் பிடித்ததொரு உணவு எள்ளுருண்டை. அதுவும் கருப்பெள் உருண்டை. இதில் எனக்கு மோகம் ஏற்பட காரணம் என்னுடைய மாமியார் தான். எனது பெற்றோரின் திருமணத்தால் பிரிந்திருந்த யாழ்- மட்டு உறவு மீளுயிர் பெற்றது நான் சாமர்த்தியப்பட்ட நேரம் தான். எப்படியோ விசயம் அறிந்து என்னுடைய யாழ்ப்பாண மாமியார் எம் வீட்டை தேடிக்கண்டுபிடித்து வந்துவிட்டார்கள். வாசலில் வந்து நிற்கும் ஒருவரை வரவேற்பது தானே முறை. கோபதாபங்கள் மனதில் இருந்தாலும் இரு கட்சிக்காரர்களும் மேம்போக்காக சரி வரவேற்க அறையினுள் இருத்தி வைக்கப்பட்டிருந்த என்னை மாமி வந்து பார்த்தது நல்லெண்ணெய் போத்தல், எள்ளுருண்டை சகிதம் தான்.  அன்றிலிருந்து நல்லெண்ணெய்யில் வதக்கிய கத்தரிக்காய், நல்லெண்ணெய்யில் பொரித்த ஊர்முட்டை, நல்லெண்ணெய் புட்டு, எள்ளுருண்டை என என்னை பாடாய்படுத்திவிட்டார்கள். இப்படி உறவுக்குள் பாலம் போட எள்ளும் இருந்திருந்தது

அதன் பின்னர் பல்கலைக்கழக காலத்தில் மட்டக்களப்பில் இருந்து மீன் பொரியல், பலகாரங்கள், வாழைப்பழம் என அம்மா அனுப்பி வைக்க யாழ்பாணத்தில் இருந்து மாமி எள்ளுருண்டை, வடகம், பருத்தித்துறை வடை என அனுப்பி வைப்பார்கள் (இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் லட்டு மாதிரி இருக்கின்றேன் என்று) போதாதற்கு யாழ்ப்பாணம் போகும் போது தலையில் நல்லெண்ணெய் வைத்து ஊறவைத்து தலைக்கு குளிக்க வைப்பதுண்டு. இதனால் உடல் சூடு தணிக்கப்படும். அத்துடன் மாதவிடாய் நாட்களில் மாமியின் கைகளில் சிக்கினால் அவ்வளவு தான். எள்ளுருண்டையை போகவர சாப்பிடத்தருவார்கள். கருப்பைக்கும் இரத்த சுத்திகரிப்பிற்கும் நல்லது என்பார்கள். நல்ல காலம் நான் அலுவலகத்தில் அடிக்கடி கொதிநிலையில் இருப்பது தெரியாது தெரிந்தால் போத்தல் கணக்கில் தான் எனக்கு அபிசேகம் செய்திருக்க வேண்டும். அதாவது சூடு தணிவதற்கு! 

தலையில் எண்ணெய் தேய்த்து உலாத்தும் போது அது வழிந்து  கண்ணில்பட்டு எரிச்சல் மூட்டுவதுமுண்டு. அடுத்தது அவ்வாறு எண்ணெய்யில் விழுந்த எலி மாதிரி இருக்கும் போது "ஒராள் கருப்பாகப்போறா... கருப்பி " என்று என் சகோதரன்கள் என்னை சீண்டுவதுண்டு. உடனே மாமி "பரவாயில்லை நல்லெண்ணெய் கருப்பன் என்ட பிள்ளைக்கு கிடைப்பான்..." என்று பதிலளிப்பா... எங்கடா இருக்கிற  (என்) நல்லலெண்ண  கருப்பா.....

 

 

மாறும் நிறம்


இந்தப்பதிவினை யாழ் - பண்ணை கடற்கரையில் அமர்ந்திருந்து அலைகளை இரசித்தபடி நானும், என் சுருள் முடியை கடற்கரை காற்று கலைத்தபடி இருக்கின்ற இந்த காலைப்பொழுதில் எழுதிக்கொண்டிருக்கின்றேன். இன்று மதியம் வரை என் பொழுதினை இங்கு தான் நான் கழிக்க திட்டமிட்டுள்ளேன். கடற்கரையில் அமர்ந்து திட்டமிடுவது என்பது மிகவும் அலாதியானது. பல நாடுகள் பல இடங்களது கடற்கரைகளில் அமர்ந்திருந்தாலும் இங்கு பண்ணை கடற்கரைக்கு வரும் போதெல்லாம் இனந்தெரியாத உணர்வலைகள் என்னை ஆட்கொள்வதை ஒவ்வொரு தடவையும் உணர்ந்திருக்கின்றேன். தற்போதும் உணர்கின்றேன். எங்கேயோ… யாருடனோ… நடந்த மாதிரி அல்லது கதைத்துக்கொண்டிருந்தமாதிரி ஒவ்வொரு தடவையும் உணர்வதுண்டு. போன ஜென்ம தொடர்பேதும் உள்ளதோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் இவ்வாறானதொரு நெருங்கிய உறவுடனான நினைவு இந்த பண்ணை கடலுடன் எனக்கில்லை. குடும்பத்துடன் வந்து போயிருக்கின்றோம் அவ்வளவே! நிற்க

இன்று இங்கு வந்திருப்பதும் அமர்ந்திருப்பதும் “ மருதம்” திட்டத்திற்கான முன்னெடுப்புகளுக்காகவே. நேற்று இங்கு மாமியின் வீடு வந்து சேரும் போது இரவு ஒன்பதாகிவிட்டது. குளித்து, கதைத்து, சாப்பிட்டு, மாமி தலையுனாவ அப்பயே நித்திரையாகும் போது பன்னிரெண்டை தாண்டிவிட்டது. அதிகாலையில் கோப்பி போட்டுக்கொண்டிருந்த மாமியை பின்னால் நின்று அணைத்து செல்லம் பொழியும் போது “ ஏன் பிள்ள இப்ப எழும்பினனீர்? கொஞ்சம் படுமனப்பா… அப்படியென்ன அவசரம்…” என்று தான் அன்பாக கடிந்துகொண்டார். நான் கடற்கரைக்கு போகனும் என்றவுடன் மாமாவும் கூட்டிப்போக தயாராகிட்டார். “இல்லை நான் தனியே போகப்போறன். கொஞ்சம் எழுத்து வேலை இருக்கு…” என்று சொல்லி அவரையும் நிறுத்தியாச்சு. “தனியே போய் ஏதாவதென்டால் உம்மட வீட்டாக்கள் எங்கள கேள்வி கேட்பாங்க…” என்று சொல்லி இரு தலைதெறிச்ச பதின்ம வயது மச்சான்களை வரவழைத்து என்னுடன் அனுப்பியிருக்கின்றார்கள். இவர்கள் என்னை பாதுகாக்க வந்தார்களா அல்லது இன்று பாடசாலைக்கு கட் அடிக்க சாட்டுக்கு நான் கிடைத்தேனா என்று எனக்கு புரியவில்லை. மாமி வேறு எனக்கு பிடிக்கும் என்று செய்து வைத்திருந்து முறுக்கு, கறுப்பு எள்ளுருண்டை, காலையில் அவித்த புட்டும் நேற்றைய இரவு நாட்டுக்கோழி குழம்பும் முட்டைப்பொரியலும் பார்சல், பனங்கிழங்கு ஒடியல் என ஒரு மூடையை என்னுடைய சாரதியிடம் எனக்கும் தெரியாமல் கொடுத்து வேறு விட்டிருக்கின்றார். அதனையும் தங்களது பெற்றோர் கொடுத்தனுப்பிய கள்ளத்தீன்களையும் மெல்ல ஆரம்பத்தித்திலிருந்து இந்த பாதுகாவலர்களின் இலட்சணம் எனக்கும் புரிகின்றது. சாப்பாட்டு ராமன்கள் என் மச்சான்கள். எதுவாகினும் அர்ச்சுணனின் இலக்கு மரத்திலிருக்கும் கிளி தானே…! எனவே தனியே தள்ளி வந்து கிறுக்கிக்கொண்டிருக்கின்றேன் நான்.

இன்று மாலை எமது வயல்வெளியில் குறித்த விடுதியமைப்பதற்கான இடம் பார்க்க போவதாக ஏற்பாடு. அதற்காக தான் இந்த முன்னாயர்த்தங்கள். பச்சைப்பசேல் என்ற வயலுக்கு நடுவிலும் கதிரறுக்கும் காலங்களில் கபிலமும் சூழவுள்ள நிலப்பரப்பில் அமைக்கும் கட்டடத்திற்கு என்ன நிறம் கொடுக்கலாம் என்பது முதல் அங்கிருக்கின்ற உயிர்ப்பல்வகைமையை குழப்பாத வகையில் எப்படி எம்முடைய திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்பது குறித்து மூளையை கசக்கிக்கொண்டிருக்கின்றேன். வரைபடங்கள் ஓரளவு எம் குழுவினர் இணைந்து தயாரித்துவிட்டோம். ஏனைய தீர்மானங்கள் குறித்து தான் தற்போதைய யோசனை. 

இருந்த இடத்திலிருந்து சற்றுத்தள்ளி நண்டுக்குஞ்சுகள் மறைவதும் மேலேருவதுமாக இருந்தன. இவற்றின் விளையாட்டில் சற்று கவனம் திரும்ப பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பூச்சியும் ஓடி வந்தது. திடீரென நண்டுக்குஞ்சுகளை காணவில்லை. எப்படி மறைந்திருக்கும் என யோசிக்கும் போது வந்த பூச்சினை கவ்விவிட்டது ஒரு நண்டு குஞ்சு! அட இவ்வளவு நேரமும் அதேவிடயத்தில் தான் இருந்திருந்திருக்கின்றது. அப்படியென்றால் நிறம் மாறியிருக்குமா? பச்சோந்தி போன்றவை தானே அவ்வாறு நிறம் மாறும் என்றறிந்திருந்தேன். உடனே இணையத்தினை தட்டினால் இரையை தேடவும் இனப்பெருக்கத்தின் போதும் சிலவகை மாறும் என்கின்றது இணையத்தின் விஞ்ஞானம். 

இறந்த பூச்சிக்காக மனம் பரிதாபப்பட்டாலும் இது எனக்காகத்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகின்றது. எமது திட்டத்திற்கான நிறம் இதிலிருந்து தான் கிடைத்திருக்கின்றது. இயற்கை தான் எத்துணை நுட்பங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கின்றது. சிறிது நேரத்தில் என் மச்சினன்கள் கைநிறைய சிப்பிகளுடன் வந்தார்கள். “மச்சாள் நீங்க மேசையில் வைக்க சிற்பம் செய்றனீங்க தானே, உங்களுக்கு இதுகளை எடுத்து வந்தோம்” என்று என்னருகில் குவித்தார்கள். அடுத்த “நெய்தல்” இற்கான தொனிப்பொருள், வடிவம், நிறம் எல்லாம் என் கண்முன் விரிய ஆரம்பித்துவிட்டது.

 இங்கு தங்குவதற்காக திட்டமிட்டுள்ள நாட்களில் தினமும் இங்கு வந்து வேலை செய்யலாம் என நினைத்திருக்கின்றேன். இதுவரை வாழ்வில் பல தீர்மானங்களில் கடல் பங்கெடுத்திருக்கின்றது.



எடை போடல்

வீட்டில் ஏதாவது பொருட்களை வாங்கிவந்தால் சும்மா கைகளால் தூக்கி பார்த்து அண்ணளவாக இத்தனை கிலோ இருக்கும் என்று எடை போட்டு பார்த்துள்ளீர்களா? அப்படித்தான் மனிதர்களை கூட அவர்களது சிறு சிறு செயல்கள் வைத்து நம்மால் எடை போட முடியும் அல்லவா?

நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் பொறளை புனித அந்தோனியார் விடுதியில் தான் தங்கியிருந்தேன். நான் கத்தோலிக்க மதத்தவள் என்பதாலும் கொழும்பில் படிக்கும் பெண்களுக்கு இந்த விடுதி மிகவும் பாதுகாப்பான விடுதி என்பதாலும் அம்மா எம்முடைய பங்குத்தந்தை மூலம் அனுமதி பெற்றிருந்தார். உண்மையில் பாதுகாப்புடன் இங்கு ஒழுக்கமும் நேர அட்டவணையும் ஒழுங்காக பின்பற்றப்பட்டு வந்தமையும் இவ்விடுதியினை பெண்களது குடும்பத்தினர் விரும்பியமைக்கு இன்னொரு காரணம் என நினைக்கின்றேன். எமது விடுதி வளாகத்திலேயே சிறு தேவாலயமும் பாலர் பாடசாலையும் அருட்சகோதரிகளுக்கான மடமும் என பெரியதொரு வளாகம் அது. ஆனால் இப்போது வேண்டுமானாலும் உள்ளே எட்டிப்பாருங்கள் ஓரு குப்பை, வாடிய மரம் எதையும் காணமாட்டீர்கள் அந்தளவு சுத்தம். இதன் பின்னுள்ளது அங்கு தங்கியிருக்கின்ற மாணவிகள், அருட்சகோதரிகள் கடைப்பிடிக்கின்ற தூய்மைப்படுத்தலுக்கான நேர ஒழுங்கு. 

என்னை சேர்ப்பதற்காக வந்த போதே அம்மாவிற்கு இந்த தூய்மை பிடித்துப்போய்விட்டது. என்னை விட்டுவிட்டு வரும் போதும் சொன்னதொருவிடயம் இங்கு உங்களுக்கு படிப்பதற்கு மட்டுமல்ல உங்கள் பண்பை வளர்க்கவும் தளம் கிடைக்கும் என்பது தான். எனக்கென்னால் சட்டியிலிருந்து எம்பிக்குதிக்க அடுப்பில் விழுந்த கதை தான். எற்கனவே எங்கள் வீடு இராணுவ முகாம் போல தான் இயங்கும். லெப்டினன் கேர்ணல் நளினி கடிகார முள் சுணங்கினாலும் நேரவிடயத்தில் சுணங்க மாட்டார். நாலு மணிக்கே நம்மையும் எழுப்பி படிக்க வைத்து தானும் எஸ்.எல்.ஏ.எஸ் எல்லாம் படித்தவர் அவர். குசினியிலும் சமையல் நடக்கும் அதேவேளை அவர் ஐம்புலனில் இரண்டு தசம் ஐந்து அதாவது சரி பாதி எம்முடைய படிப்பில் இருக்கும். இப்படிப்பட்ட ஆளிட்ட வளர்ந்து இனியாவது பல்கலைக்கழகம் போய் தனியறை எடுத்து தனியாகவிருந்து நல்லா விளையாடுவம் என்டு நினைக்க இங்கே இஸ்ரேல் இராணுவம் போன்ற பொறளை புனித அந்தோனியார் விடுதியில் என்னை சேர்த்துவிட்டார் லெப்டினன் கேர்ணல் நளினி. (இதற்கு பரிந்துரை செய்த பங்குத்தந்தையும் வாழ்க) 

காலையில் 4.30 மணிக்கு தேவாலய மணி ஒலிக்கும் 5 மணிக்கு திருப்பலி ஆரம்பமாகிவிடும். அதுவும் ஆங்கில திருப்பலி. முன்னுக்கு போய் பைபிள் வாசிப்பதற்கும் ஒழுங்குண்டு. இந்த நாளில் இவர்கள் வாசிக்க வேண்டும் என்கின்ற நேரசூசி பொறுப்பாகவிருந்து அருட்சகோதரியில் வாசலில் தொங்கும். அதன் அடிப்படையில் நாளை நாம் வாசிக்க வேண்டியிருப்பின் முதன் நாளே இரவு அவருக்கு வாசித்துக்காட்ட வேண்டும். திருத்தங்கள் இருந்தால் சொல்லித்தருவார். திருப்பலி முடிய விடுதிக்கு வந்தால் கோப்பி பில்டரில் இருக்கும். 7 மணிக்கு காலையுணவு என்று இரவு படுக்கும் வரை கூட நேர அட்டவணை தான். ஆனால் இதில் எனக்கொன்றும் இவ்வளவு கடினம் இருக்கவில்லை. எல்லாம் லெப்டினன் கேர்ணல் நளினியின் வளர்ப்பு. சோம்பல் பிடிக்கும் நாட்களில் மட்டும் இவர்கள் எல்லாரையும் திட்டிதீர்ப்பதுண்டு. (மனதுக்குள்….. )

விடுதி அருட்சகோதரி திடீரென எமது அறைகளுக்கு விஜயம் செய்வார். வந்தவரத்தில் படுக்கை விரிப்புக்கள் ஒழுங்காகவுள்ளதா என பார்ப்பார். இல்லாட்டி கூப்பிட்டு திட்டி விரிக்க வைப்பார். மற்றது ஹங்கரில் உள்ள உடுப்புக்கள் ஒழுங்காக இல்லாமல் அல்லது நிறைந்திருந்தால் அனைத்தையும் அள்ளி கீழே போடுவார். அடுத்ததாக அலுமாரிகளை திறப்பார். சிலருடையது திறக்கும் போதே கொட்டும். இன்னும் சிலர் அலங்கோலமாக மடிக்காமல் சுருட்டி வைத்திருப்பார்கள். அவற்றினை ஒரே இழுவையில் கீழே இழுத்து போடுவார். என்னடா இது ஒரு அருட்சகோதரி இப்படியா செய்வது என்று எனக்குள் ஆச்சரியமாகவிருந்தது. தினசரி அதிகாலை திருப்பலிக்கு போய்க்கொண்டிருந்த நாலைந்து சிறகு முளைக்காத சம்மனசுகளில் நானும் ஒருத்தி. (இது அந்தகால கதை. இப்போது கொம்பு முளைக்காத சாத்தான்). போதாதற்கு எமது தோட்டத்தில் ஒக்கீட் செடிகளை வளர்த்து பூக்களை பீட அலங்காரங்களிலும் பயன்படுத்தி வந்தேன். எனவே அருட்சகோதரிக்கு என் மேல் தனி பாசம். இவ்வாறானதொரு பாசப்பொழுதில் ஒரு நாள் அவர் நன்றாக மனம்விட்டு கதைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஏன் இப்படி மாணவிகளின் உடைகளை இழுத்து போடுகின்றீர்கள் என்று கேட்டேன். “ அலுமாரி என்பது நம்முடைய உள் மனது போன்றது. மனம் குழப்பமென்றால் தான் அலுமாரியும் குழம்பும். அலுமாரியை சீராக வைத்திருப்பவர்களது மனமும் சுத்தமாகவிருக்கும்.” என்றார். இதை அம்மாவிடம் சொன்ன போது;. “நாம் பதற்றமாக , தெளிவில்லாமல் இருக்கும் போது உடை தெரிவுகளிலும் நிதானமின்றி இருப்போம். எனவே அலுமாரி குப்பையென்றால் மனமும் பதற்றத்தில் நிதானமிழந்து குப்பையாக இருக்கும்” என அம்மா இதனை உளவியல் ரீதியான எனக்கு விளங்கப்படுத்தினார்.

இதேபோன்று தான் வாசலில் செருப்புகளை அங்குமிங்குமாக போடுபவர்கள், காலையில் எழுந்தவுடன் படுக்கை விரிப்பை சீராக்காதவர்கள், மலசல கூடங்களை நேர்த்தியாக வைத்திருக்காதவர்கள் குறித்தும் உளவியல் இருப்பதாக சொன்னார். உண்மை தான் போல! இதனை இன்று சமூக ஊடகங்களும் எமக்கு காட்டுகின்றன. அல்லது ஒருவரை குறித்து எடைபோட வைக்க உதவுகின்றன. அண்மைய நிகழ்வான “சுடுவன் நாயே” உம் இதே வகை தான். 

ஒரு சகோதரி தனக்கு வந்த உள்பெட்டி உரையாடலை என்னுடன் பகிர்ந்திருந்தார். இன்று அநேகர் முகநூலை தம்முடைய துணையை தேர்வதற்கான தளமாக பாவிக்கின்றார்கள். அதிலொரு வகை தான் இதுவும். முதலில் முகநூல் பதிவுகளையும் அதற்கு கருத்தூட்டம் இடுபவர்களையும், விவாதிப்பவர்களையும் ஆராயுங்கள். இது குறித்த நபரின் சுற்றம் குறித்து உங்களுக்கு தெளிவுபடுத்தும். 

அடுத்தது உங்களை வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்க நினைப்பவர்கள் உங்களுடனான உறவை வெளிப்படையாக வெளிப்படுத்த முயல்வார்கள். உள்பெட்டியில் மட்டும் வந்து அலட்ட மாட்டார்கள். இன்னுமொன்று முக்கியமானது ஒருவர் சமூகத்தில் நேர்மையானவராகவிருந்தால் தன்னுடைய குடும்பத்தினை சமூகத்தில் அறிமுகம் செய்திருப்பார். அதற்காக அடிக்கடி படம் போட்டு, வாழ்த்து சொல்லி அலட்ட வேண்டும் என்பதுமில்லை. சிலர் தாம் பெரிய ஆள் என்றும் அதனால் குடும்பம் குறித்து பகிர்ந்தால் பிரச்சினை வருமென்றும் அலட்டிக்கொள்வார்கள். உண்மையில் அழுத்தம் இருந்தாலும் நாம் நேர்மையாகவிருந்தால் நம் குடும்ப படத்தினை வைத்து யார் என்ன செய்திட முடியும்? நேர்மைக்கு எப்போதும் தைரியம் இருக்கும். 

இது அனைத்தையும் தாண்டி நம்மை உண்மையில் நேசிப்பவர்களாயிருந்தால் நாம் அவர்களை விட்டு விலகும் போது நம்மை தேடி நெருங்க முயல்வார்கள். நீங்கள் நூற்றில் ஒன்று என்றால் உங்கள் இருப்பு அல்லது இழப்பு அவரை பாதிக்கப்போவதில்லை. கானல் நீரை நம்பி ஓடிப்போகாமல் நின்று நிதானமாக அவர்கள் செய்கைகள், சமூக ஊடக பகிர்வுகள் என்பனவற்றினை வைத்து ஒருவரை எடைபோடப் பழகுங்கள். நம்மை மனமாற நேசிப்பவர்கள், நம்முடன் வாழ விரும்புவர்கள் முக்கியமாக இருவருக்கிடையான அந்தரங்கங்களை மூன்றாம் நபருடன் பகிரமாட்டார்கள். அப்படியே பகிர்ந்தாலும் முதிர்ச்சியானவர்கள், நேர்மையானவர்கள் மூலம் நம்மை அணுகமுயற்சிப்பார்கள். நாம் எடைபோடுவது நூற்றுக்கு நூறு சரியாகவில்லாவிட்டாலும் நூறு வீதமுமே பிழையாகாது. 

எனக்கு ஒருவரை பிடித்துப்போனால் அன்பை புரியவைக்க முயற்சிப்பேன். அவர் குடும்பத்தை தெரிந்துகொள்ள முயல்வேன். பிடித்திருந்து அவரும் அன்பை எனக்கு உணர்த்திவிட்டால் முதலில் என் வீட்டில் அறிமுகஞ்செய்வேன். என் தெரிவு குடும்பத்திற்கும் பிடிக்கும் அல்லது போக போக பிடிக்க வைப்பேன். அடுத்த கட்டமாக நண்பர்களை அறிமுகஞ்செய்வேன். எனக்கான பொறுப்புங்கள், அல்லது எம்மிருவருக்கும் எதிர்காலம் குறித்து உள்ள பொறுப்புக்களை உணர்த்த முயல்வேன். எந்தளவு என் துணையிடம் நேர்மையை எதிர்பார்க்கின்றேனோ அதேயளவு நேர்மையாகவும் நடக்க முயற்சிப்பேன். எனவே நான் நினைப்பதை போன்று நீங்களும் நினைத்தால் ஒருவரை எடைபோட்ட பின் பழகுங்கள். பழகிய பின் எடைபோடாதீர்கள். ஏனென்றால் இப்படி செய்தால் நீங்கள் உங்கள் மரியாதையில் எடை குறைந்திருப்பீர்கள். 

அதற்காக எடைபோடுவதை ஒருவரது தோற்றம் , உடை என வெளியலங்காரங்களை வைத்தும் எடை போட்டுவிடாதீர்கள். சில நேரம் சிலர் வெறும் செருப்புடன் நிறமிழந்த உடையுடன் சுற்றுவதால் அவர்கள் ஏழ்மையானவர்கள் என்று அர்த்தமல்ல. நிறையவிருந்தும் எளிமையாகவிருப்பவர்களாகவிருக்கலாம். அமைதியாக இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது என எடை போடாதீர்கள் நிறைகுடங்கள் தளும்புவதில்லை. ஒருவர் முகப்பூச்சின்றி இருக்கின்றார் என்றால் அவர் அசிங்கம் என்றல்ல அர்த்தம். பல சந்தர்ப்பங்களில் மனதில் சிறந்த அழகுள்ளவர்களாகவிருக்கலாம். நம் முன்னால் அழுதால், கண்கலங்கினால் பலவீனமானவர்கள் என்று எடைபோடாதீர்கள். அழுகை உடைதலின் அடையாளமே தவிர கோழைத்தனமல்ல. மனதை எடைபோட, பண்புகளை எடை போட , ஒருவரின் நேர்மையை எடைபோட பழகுங்கள். ஒருவரின் குடும்பத்தை ,நண்பர்களை ,சுற்றத்தை எடைபோட பழகுங்கள் வாழ்க்கை அழகாகும் 


பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை