Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

நான் மீண்டும் எழுகிறேன்..........

 (Inspired by Maya Angelou’s “Still I Rise”)
 

நீங்கள்
என் வரலாற்றை
பொய்களால் எழுதி வைத்திருக்கலாம்.....
மண்ணுக்குள் என்னை
மௌனமாக புதைத்திருக்கலாம்.- ஆனால்
தூசியில் கூட
விதைகள் இருக்கின்றன என்பதை
நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
 
நான் சிரிக்கிறேன் என்றால்
அது அறியாமை அல்ல—நான் 
வாழ்கிறேன் என்பதற்கான
அறிவிப்பு.....
.
என் உடல் உங்களை
அசௌகரியப்படுத்தினால்,
என் குரல் உங்களை
பயமுறுத்தினால்,
அது என் குற்றமல்ல.
என்னை உடைக்க
நீங்கள் முயன்ற ஒவ்வொரு முறையும்
நான் இன்னும்
உயரமாக எழுகிறேன்......
 
கண்ணீரின் வரலாற்றிலிருந்து,
அடிமைத்தனத்தின் சாம்பலிலிருந்து,
பெயரற்ற பெண்களின் நினைவுகளிலிருந்து—
நான் எழுகிறேன்......
 
நீங்கள் என்னை
மறக்கச் சொல்லலாம்,
அழிக்க முயலலாம்...... - ஆனால்
என் எழுச்சி
என் உரிமை.
நான் எழுகிறேன்......
இன்னும்.....
மீண்டும்......
எப்போதும்......
 
04.02.2026 
 
 

நம்மவர் குறுந்திரைப் படங்கள் ஒரு பார்வை - வைச்சாக் குடும்பி

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48 மணிநேர படபிடிப்பு போட்டியில் தயாரிக்கப்பட்ட “வச்சா குடும்பி” குறுந்திரைப்படத்தின் இணைப்பினை பலர் முகநூலில் பதிந்திருந்தனர். என்னடா பேரே வித்தியாசமாயிருக்கே என்ன தானிருக்கு என்டு பார்ப்பம் என்று யு – டியுப்புக்கு போனா….. 8 நிமிடங்களுள் பல டென்ஷன்கள் குறைஞ்சத போலதொரு பீலிங்…. இதையும் தாண்டியும் “வச்சா குடும்பி” பற்றி சில சொல்லியே ஆகவேண்டும்.

நேரடியான நகைச்சுவை படைப்பாக இல்லாது இருண்ட நகைச்சுவை (Dark Comedy) ரீதியிலான கதையமைப்பு முறையில் கருவை மையப்படுத்தி நகைச்சுவையை இரண்டாம் பட்சமாகவும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதானதொரு படைப்பு இது.

இத் திரைப்படத்தின் பலமாக நான் கருதுவது இப்படத்தின் கருப்பொருள் மற்றும் திரைக்கதையமைப்பும் (மையப்) பாத்திர படைப்பும் ஆகும். இதன் கருப்பொருள் இன்று பொதுவாக உள்ள பிரச்சினையாகும். நிச்சயம் அண்ணன், தம்பி என்று எமக்கருகில் உள்ள ஒரு பாத்திரத்தின் உளப்பிரச்சினையை “வச்சா குடும்பி” வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. இளைஞர்களது “வழுக்கை விழல்” என்னும் இந்தப்பிரச்சினை பல இளைஞர்களின் ஆளுமையையும் ஆற்றலையும் மட்டுப்படுத்தும் பிரச்சினையாக இன்று மாறிவருகின்றது. அந்த வகையில் இக்குறும்படத்தின் மையப்பாத்திரமான நிரோஷ் ஏதோவொரு பாத்திரமாகவன்றி எம்மைக்கடக்கின்ற ஒரு நபராகவே குறும்பட முடிவில் மாறிவிட்டிருந்ததை உணரமுடிந்தது.

அடுத்து இதன் திரைக்கதையானது 3 ஆக்ட் (3 யுஉவ) கட்டமைப்பை பேணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது இக்குறுந்திரைப்படம் அது பே சவந்த விடயத்தை தெளிவாக சொல்லி ஒரு கதையை அனுபவிக்கும் உணர்வை பார்ப்பவர்களுக்கு கொடுக்க உதவியாக அமைந்துவிட்டது.  பல குறுந்திரைப்படங்களில் இந்த 3 ஆக்ட் கட்டமைப்பு இருப்பதில்லை. இது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. இந்த ஆக்ட் கட்டமைப்புக்களை உடைத்தும் திரைப்படங்கள் வரவேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ள படைப்பாளிகளுக்கு கதையைச் சரியாக சொல்ல இதுவே உசிதமான வழி. ஏனெனில் வதிகளைத் தெரிந்தவர்களாற் தான் விதிகளை உடைக்க முடியும். அத்துடன் இந்த 3 ஆக்ட் செந்நெறிக் கட்டமைப்பு எடுத:துக்கொண்ட கதையை தாக்கபூர்வமாக சொல்ல ஒரு இலகுவான வசதியானதொரு கருவி. அந்த வகையிழல் இக்குறுந்திரைப்படத்தில் மையப்பாத்திர அறிமுகம் படத்தின் பேசுபொருளை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தல், கதையின் திருப்புமுனை, மையப்பாத்திரத்தின் போராட்ட காலகட்டம், கிளைமாக்ஸ், முடிவு என்பன சரியான காலப் பரிணாமங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இது பார்ப்போருக்கு சௌகரியமாகவும் கதையோடும் மையப்பாத்திரத்தோடும் நாம் பயணிக்கவும் வசதி செய்து கொடுக்கிறது. உதாரணமாக படம் ஆரம்பித்து 20 ஆவது செக்கனிலேயே இந்தப்படம் இளவழுக்கை பற்றியது எனவும் இதன் மையப்பாத்திரம் இவர் தான் எனவும் தெளிவாக தெரிந்துவிடுகிறது. எமது சூழலில் வெளிவரும் பல குறுந்திரைப்படங்களில் இதற்காக படத்தின் அரைவாசி நேரம் வரையும் காத்திருக்க வேண்டியுள்ளது. சில படங்களில் கிளைமாக்சின் போது தான் “அட இது இதைப்பற்றித்தான்” என்பது தெரிய வருகின்றது.

அடுத்தது இப்படத்தின் முக்கிய அம்சம் படத்தின் பாத்திரப்படைப்பு ஆகும். இதுவும் உண்மையில் திரைக்கதை சார்ந்த விடயம் தான். அதேவேளை அந்தப்பாத்திரத்தை சரியாக புரிந்துகொண்டு அதன் அக மற்றும் புறவய பண்புகளை வெளிப்படுத்திய நடிகரின் நடிப்பாற்றல் சார்ந்த விடயமும் ஆகும். வெளிப்பார்வைக்கு இக்குறுந்திராப்படம் முடி அல்லது மொட்டை பற்றிய படமாக இருந்தாலும் இது மையப்பாத்திரத்தின் அகமுரண் பற்றிய படமாகும். காலகாலமாக திரைப்பட படைப்பாளிகள் அனைவரதும் சவாலாக இருந்து வரும் விடயம்.”பாத்திரங்களின் அகமுரணை எவ்வாறு காட்சிப்படுத்துவது?” மற்றும் “அகவயத்தை புறவயமாக்குவது” என்பனவாகும். இவை நாவல் அல்லது சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்பாகவும்  திரைப்படைப்பாளிகள், திரைக்கதை எழுத்தாளர்களுக்கு சாபமாகவும் இருந்து வரும் விடயம். இந்த முயற்சியில் தோற்றுப்போன பல படைப்பாளிகள் உண்டு. பெரும்பாலான வர்த்தகப்படங்கள் லாவகமாக அகவயப் (Introvert) பாத்திரங்களை தவிர்த்து குறிப்பாக மையப்பாத்திரங்கள் புறவய (Extrovert) வெளிப்பாடு அல்லது பிரச்சினைகளை கொண்ட பாத்திரங்களின் கதையோடு அல்லது பிரச்சினைகளை கொண்ட பாத்திரங்களின் கதைகளையே தொடுவதுண்டு. வச்சா குடும்பி அகமுரணை காட்சிப்படுத்துவதிலும் அகவயத்தை புறவயப்படுத்துவதிலும் ஓரளவு வெற்றியைக்கண்டுள்ளது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் அகப்பிரச்சினையை வெளிக்கொணரும் வகையில் அந்தப்பாத்திரத்திற்குக் கொடுக்கப்படும் செயற்பாடுகள் ஆகும். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு செயலும் யதார்த்தமானதாகவும் அகத்தை வெளிப்படுதுவதாகவும் அமைந்துள்ளன. இது பார்வையாளர்கள் அவர்களையே அறியாது  Sub-Conscious Mind இல் பாத்திரத்தின் உளப்பிரச்சினையோடு தம்மை தொடர்படுத்திச்செல்ல வழிசெய்கிறது.

இப்படத்தில் நான் கவனித்த இன்னொரு விடயமும் உள்ளது. மற்றவர்கள் இதை கவனித்தார்களோ தெரியாது. இதில் 3 ஆண் பாத்திரங்களும் 4 பெண் பாத்திரங்களும் வருகின்றார்கள். இந்தப் பெண்கள் நான்கு பேரும் கலகலப்பானவர்களாகவும், உணர்வுகளை வெளிப்படையாக பகிர்பவர்களாகவும், கரார் ஆனவர்களாகவும், எனஜெர்டிக்கானவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆண் பாத்திரங்கள் அனைவரும் டல்லானவர்களாகவும், உம்மென்று முகத்தை வைத்திருப்பவர்களாகவும், இறுக்கமானவர்களாகவும், எனேர்ஜி குறைந்தவர்களாகவும், மூன்று பேருமே மொட்டந்தலைகளாகவும் உள்ளனர். தெருவில் மோட்டார் சைக்கிளில் கடந்து போகும் ஆண்கள் கூட (Extras) சமூகத்தின் வக்கிரத்தினை பிரதிபலிப்பவர்களாகவும் இருக்கின்றனர். அந்த வகையில் இக்குறுந்திரைப்படத்தில் ஒரு பெண்ணியம் கலந்திருக்கின்றதோ என்ற சந்தேகம் வருகின்றது.

இப்படத்தில் சில ஓட்டைகளும் இருக்கத்தான் செய்கின்றன. திரைக்கதை சார்ந்து சொல்வதாயின் பார்மசி முதலாளிதான் மையப்பாத்திரத்தின் தந்தை என்பது பார்மசிக் காட்சியிலேயே காட்டப்பட்டிருக்க வேண்டும். திடீரென பார்மசிக்குள் நுழைகின்ற மையப்பாத்திரம் கடையிலுள்ள பொருட்களை அள்ளி பையில் போடுகின்றார். கடையிலுள்ள பெண்கள் அவரை வலு கஷ_வலாக கிண்டல் பண்ணுகிறார்கள். இது எப்படி நடக்க முடியும்? என்ற அசௌகரியம் இந்நேரத்தில் பார்ப்போருக்கு வருகின்றது. கடை முதலாளி நிரோஷின் தந்தை என்கின்ற முடிச்சு திரைப்படத்தின்மையப்பகுதியில் தான் அவிழ்கிறது. இது தயாரிப்பு குழு வைத்த சஸ்பென்ஸா அல்லது கதையமைப்பில் உறவு நிலையை முன்னரே தெரியப்படுத்தியிருக்க வேண்டியது விடுபட்டு விட்டதா? என்பது தெரியவில்லை. எது எவ்வாறாயினும் Dark Comedy  குறுப்படத்திற்கு இவ்வாறானதொரு சஸ்பென்ஸ் அநாவசியம் மட்டுமல்ல பார்ப்போரையும் சற்று குழப்பத்திற்கு உள்ளாக்கிவிடுகிறது

அதே போன்று, தமது வீட்டிற்கு வரும் அந்தப் பெண்ணை நிரோஷின் தாயார் மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று தடவை கட்டிப்பிடித்து முத்தமிடுகின்ற காட்சியும் பார்ப்போருக்கு சற்று அசௌகரியமாகவுள்ளது.. இது நடிப்பு, இயக்கம் சார்ந்த குறைபாடாகக் கூறலாம். இதில் இதன் இயக்குனர் கவனம் எடுத்திருக்கலாம். அல்லது எடிட்டிங்கிலாவது அதனைச் சரிப்படுத்தியிருக்கலாம். இதைவிட தேவைக்கு அதிகமாக கோணங்களில் பல இடங்களில் ஷொட்கள் வைக்கப்பட்டுள்ளன. அளவுக்கதிமான ஷொட்களும் கோணங்களும் கூட பார்ப்போருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியனவே.

இசை பற்றி சொல்வதாயின் இதற்கு இசையமைப்பாளர் என யாரும் குறிப்பிடப்படவில்லை. இசை ஆலோசகர்கள் என மூவர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தபேலாவை மட்டும் வைத்து இசையை கொடுத்திருக்கின்றார்கள். இது எமது தாளலய நாடகங்களை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது. கறுப்பு நகைச்சுவைக்கும் தாளலய நாடகங்களுக்கும் நியை சம்பந்தம் உண்டு என்னும் வகையில் அது ஓரளவு பொருத்தமானது தான். ஆனால் சில இடங்களில் இசை அதிகமாகவும் சில இடங்களில் பொருத்தமானதாகவும் உள்ளது. இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
எல்லாற்றையும் விட, இக் குறுந்திரைப்படத்தின் மிக முக்கிய குறைபாடாக நான் கருதுவது, இப்படத்தின் வேகம் கூடிவிட்டது. ஒன்றன் பின் ஒன்றாக காடசிகள் மாறிக் கொண்டேசெல்கின்றன. பார்ப்போருக்கு மூச்சுவிட நேரமில்லாதவாறு விடயங்கள் ஓடிக்கொண்டு போகின்றன. சுமார் ஏழு நிமிடப்படங்களைக் கொண்ட படம் ஒரு நிமிடத்துக்குள் முடிந்துவிட்டது போன்ற ஒரு பீலிங். ஒரு வகையில் இப்படத்துக்கு இது ஒரு சாதமான விடயமாக இருந்தாலும் ஒரு நகைச்சுவைப் படம் இவ்வளவு வேகவேகமாக நகர்வது பொருத்தமானதாக இல்லை. இதன் இயக்குனர், எடிட்டர்கள் ஒரு நகைச்சுவைப் படத்தைவிட த்ரிலர் படத்துக்கே பொருத்தமானவர்கள் என நான் நினைக்கிறேன். 

எது எப்பிடியிருப்பினும் காதல், நட்பு, போர் வரலாறு என ஒரு வட்டத்தில் சூழன்று கொண்டிருக்கின்ற எமது படைப்புக்களில் புதியதொரு கருவினைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'வச்சா குடும்பி' குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். 'வச்சா குடும்பி' இலங்கை குறும்பட முயற்சியில் ஒரு மைல்கல்.

Link -  https://www.youtube.com/watch?v=Y-baFhnASyk&list=UUtAmpJWHFElO60H8g9nrmcQ

ஊடகப்பெண்களும் ஊரார் பார்வையும்....

சுயம் - 01
அன்று காலையில் எனது தொலைபேசிக்கு வந்த அழைப்பு நான் எதிபாராத ஒன்று மட்டுமல்ல. ஊடகபெண்கள் எவ்வாறெல்லாம் ஊரார் பார்வைக்கு தீனியாகின்றார்கள் என்று எனக்கு சொல்லிய முதல் அழைப்பும் கூட

நான் ஹலோ சொன்னதுமே மறுமுனையிலிருந்த பெண்குரல் கேட்ட கேள்வி நீ நேற்று இரவு ….. என்பவருடன் தங்கினாயா? என்பதே. இந்தக்கேள்வியை இன்று கேட்டிருந்தால் என் பதில் வேறாயிருந்திருக்கும். ஆனால் இது கேட்கப்பட்டது இரு வருடங்களுக்கு முன்னர். அதாவது நான் ஊடகதுறையில் காலடிவைத்த நேரமது. வாயில் வார்த்தைகள் வரும் முன் கண்களுள் கண்ணீர் தான் முதலாக வந்தது அந்த நிமிடத்தில். மறக்க மட்டுமல்ல மனதிலிருந்து மறக்க முடியாத நிமிடங்கள் அவை. என்னுள் ஏற்பட்ட பதற்றத்தில் தொலைபேசியை நிறுத்தி விட்டு என்னுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்ட நபருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். அதன் பின்பு அந்தப்பெண்ணுடன் பேசினேன்.

இப்படி பல அழைப்புக்கள் ஏற்படுத்தியதன் விளைவாக இறுதியில் “ அவர் தனது காதலர் என்றும், பல வருட காதலில் தானும் அவரும் பல தடவை உடலுறவு வைத்து கருக்கலைப்பு செய்ததாகவும் தற்போது அவர் சாதியைக்காட்டி தன்னை உதறிவிட்டு வீட்டில் பார்க்கின்ற வேறு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாகவும் அவர் இல்லாமல் தன்னால் வாழமுடியாது தற்கொலை செய்ய போகின்றேன்” என்று பெண் தெரிவித்தாள். தான் “பத்திரிகை ஆசிரியராக இருந்த போது வறுமையால் மேடையில் பாடிய அந்த பெண்ணை தான் பத்திரிகை அலுவலகத்தில் இணைத்ததாகவும்  தன் பணத்திற்காக அவள் தன் பின் அலைவதாகவும்,  அப்படி தன்னை அடுத்தவர்களுடன் இணைத்து பேசும் அந்தப்பெண்ணுடன் என்னால் சேர்ந்து வாழமுடியாது. நான் அவளை காதலிக்கவும் இல்லை” என்று அந்த நபர் சொன்னார். இருவரது வாக்குமூலங்களும் இவ்வாறிருக்க நான் எங்கே இதில் வந்தேன்? என்று ஆராய ஆரம்பித்தேன்

என்னுடன் பணிபுரிகின்ற பெண்ணொருவர் எனக்கும் அந்த நபருக்கும் தொடர்புடையதாக சொல்லிய தகவலே இந்த தொலைபேசி அழைப்பிற்கு மூலம் என்பதை பின்னர் அறிந்தேன். இது உயர்மட்டம் வரை போய் மன்னிப்பு கேட்க வைத்ததுடன் முற்றுப்பெற்றது. ஆனால் நெருப்பில்லாமல் புகையாதல்லவா? இதற்கு நெருப்பு என்ன தெரியுமா? அவர் என் நண்பர் என்பதுடன் இருவரும் ஊடகத்தில் இருக்கின்றோம் என்பதே.

ஆண் - பெண் என்கின்ற நட்பினைத்தாண்டி ஊடகப்பெண்கள் குறித்த ஊரார் பார்வை தான் இன்று என்னை எழுத்தத்தூண்டியுள்ளது. அன்று ஒரு நண்பி பேசும் போது “நான் ஊடகத்துறையில் இருக்கின்றேன். அதனால் என் திருமணம் தள்ளிப்போகின்றது” என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் என்னிடம் பேசிய ஒருவர் ஒரு பெண்ணைப்பற்றி விமர்சிக்கும் போது “ இது மீடியாவில இருக்கிறது தானே… அப்படித்தான் இருக்கும்” என்றார். அன்றைய நிலையில் என்னால் பேசமுடியவில்லை. அப்போதிருந்த சூழ்நிலை அப்படி. ஆனாலும் பல தடவை மனதுள் செருப்பினால் அடித்திருக்கின்றேன். ஒருவேளை அந்த நபர் இந்தப்பதிவினை முகநூலில் பதியும் போது பார்க்கவும் கூடும்.

இவ்வாறு ஆண்களின் பார்வையில் ஊடகப்பெண்கள் இருக்கும் போது சில பெண்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். குறிப்பிட்ட என் நண்பனுடைய முகநூல் Hack  பண்ணப்பட்டிருக்கிறது. இந்த கைங்கரியத்தினை செய்த நபர் முகநூலில் உள்ள என் நண்பனுடன் பணிபுரிகின்ற ஊடகபெண்களின் படத்தினையே Copy பண்ணி என்னுடைய நண்பனின் முகநூலில் போட்டிருக்கின்றார். இதில் வேடிக்கை என்னவென்றால் என் நண்பனின் தங்கையின் படத்தினையும் “காதலிகள்” என்ற பெயரில் போட்டிருப்பது…. ஆக சகோதர உறவினை மதிக்க தெரியாத கயவரிடம் நட்பை புரிவார் என எதிர்பார்ப்பது மடத்தனம் என்பது ஒருபுறமிருக்க தமது தனிப்பட்ட உறவுகளினால் அடுத்தவர் வாழ்வினை எவ்வாறு நாசமாக்குகின்றோம் என்பதே இங்கு நோக்கப்படவேண்டியதான விடயம்.

இன்னுமொரு விடயமும் இருக்கு பாருங்கோ இன்று சில முன்னணி ஊடக நிறுவனங்களில் பாலியல் இலஞ்சங்கள் கோரப்படுகின்றதுடன் முன்னுக்கு வர எத்தனிக்கும் பெண்களுக்கு பின்னால் கதைகளும் கட்டப்படுகின்றன. இதற்கு பல காரணங்கள் ஒன்று தமது வலையில் குறிப்பிட்ட பெண் சிக்காமை… இன்னொன்று எங்கே தம்முடைய இடம் பறிபோய் விடுமோ என்கின்ற பயம்.. அல்லது தாம் எட்டமுடியா இடங்களை எட்டிவிடும் அடுத்தவர்களை மானபங்கப்படுத்தி பார்க்கின்ற ஒருவித குரூரமானநிலை….

ஊடகத்தில் பணிபுரியிறது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாதொரு விடயம். அதிலும் பெண்களை ஊடகத்தில் பணிபுரிய அனுப்ப பெரும்பாலான குடும்பங்கள் விரும்புவதில்லை… காரணம் அரசியல் பிரச்சினை என்பதை தாண்டி தம் பிள்ளைகள் அசிங்கப்பட்டு நிற்குமோ என்ற பயம்…. குறிப்பாக பெற்றோருக்கு தம் மகளை ஊடகப்பணிக்கு விடுவது என்பது இலங்கை கலாசாரத்தில் வேப்பங்காய் போன்றதொன்று. இதையும் தாண்டி பல பெண்கள் தம் இலட்சிய கனவிற்காக ஊடகப்பணியில் இணைவதுண்டு. இவ்வாறு பல தடைகளையும் தாண்டி தமது இலட்சியத்திற்காக போராடுகின்ற பெண்கள் தம் இலக்கினை அடைகின்றார்களா என்பது பெரியதொரு வினா?

பெண் என்பதால் குட்டப்பட்டார்கள்... இன்று ஊடகப்பெண் என்பதால் குட்டப்படுகின்றார்கள் ... நாம் குரங்கிலிருந்து கூர்ப்படைந்துவிட்டோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் நிலைக்கண்ணாடி  முன்னால் நின்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும்.

பிற்குறிப்பு - என்னுடைய அடுத்த பதிவில் இவ்வாறான சில சம்பவங்களினை பெயர்களுடன் பதியவுள்ளேன். ஆதாரங்களும் முன்வைக்கப்படும்.
 


காட்டூன்கள் எதை காட்டுகின்றன?

எனக்கு சின்ன வயசிலிருந்தே பிடித்த விடயங்களில் ஒன்று காட்டூன் பார்ப்பது. இது சின்ன வயசோடயே நின்றிருந்தா பரவாயில்ல… ஆனா இப்ப ஏழு கழுத வயசான பின்னும் (ஒரு கழுதைக்கு என்ன வயசு என்டு கேட்கப்படாது) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பதுண்டு. 

முதல் நல்ல ஞாபகம் ரூபவாஹினியில 6 மணிக்கு ஒரு கோழிக்காட்டூன் போடுவாங்க… ஒரு கோழி தன்னுடைய நாலைந்து குஞ்சுகளை சிறகுக்குள்ள வச்சுக்கொண்டு அதுகள் நித்திரை கொள்வதற்கு கதை சொல்லும். அது காட்டூனாக ஒளிபரப்பாகும்… இந்த 6 மணி காட்டூன் பார்ப்பதற்காகவே சில முன்னாயத்தங்கள் செய்துடுவன். இல்லாட்டி சரியா நான் டீவிக்கு முன்னுக்கு போய் குந்த அம்மா கத்துவா ஹொம்வேக் செய்ய சொல்லி…. ஆதால ஸ்கூல் ஹோம்வேக்குகளை ஸ்கூல் விட்டு  வந்தவுடனேயே மடமடவென்று செய்துவிடுவதுண்டு.

பிறகு கொஞ்சம் வளர தொடங்கின நேரம் தான் சீடிகள் அறிமுகமானது… அந்த நேரத்தில டிவிசன் கிளாஸ்களும் வந்துட்டுது. டிவிசன் முடிஞ்சதும் அம்மா தான் என்ன ஏத்திப்போக வருவா… இனி என்ன பைக்கில ஏறி அம்மாவ கட்டிப்பிடிச்சிட்டு தொணதொணக்க தொடங்குவன்…. கடைசில என்ட அரிப்பு தாங்காம அம்மா காட்டூன் சீடி வாங்கித்தந்ததும்…. இதை பயன்படுத்தி நல்ல மார்க்ஸ் எடுத்தா காட்டூன் சீடி வாங்கித்தருவன் என்டு ப்ளாக்மெயில் பண்ணினதும் வேற கதை…

பிறகு பெரிய வகுப்புகளுக்கு வந்ததால டீவி என்ட பெயரே வீட்டில் உச்சரிக்க முடியாம பொய்ட்டுது… இப்ப பழைய படி என் காட்டுல நல்ல மழை…. விடுதியில் சீடி வாங்கி பார்க்க எனக்கு யாரும் தடையில்லை…. காணாததற்கு யூடியுப்… வீட்ட போனா அங்க இப்ப சுட்டி டீவி இருக்கு…
ஆக என்னுடைய காட்டூன் பற்றிய அறிவு விருத்தியாக தொடங்கிட்டுது… பிங்கு, நிமோ, டொம் அன்ட் ஜெரி, லயன் கிங், பிரின்சஸ் காட்டூன்ஸ்…….. அப்பாடா சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் மோகுலி, சிம்பா போன்ற பல பாத்திரங்கள் என்னுள் பதிந்து போனதுமுண்டு. இந்த காட்டூன்கல பார்க்கும் போது இன்னொரு விடயமும் என் கருத்தினை கவர்ந்தது.. அது குறித்து தான் இந்த பதிவு…

சின்ரெலா (Cinderella) – சின்னம்மாவின் கொடுமைக்கு உள்ளாகி வருகின்ற ஒரு பெண். இளவரசனின் சுயம்வர நிகழ்விற்கு தேவதை ஒன்றின் உதவியுடன் போகின்றாள். நேரம் முடிந்து விரைவாக வரும் போது சப்பாத்து தவறவிடப்படுகிறது. பின்னர் எவ்வாறு பல சவால்களுக்கு மத்தியில் அந்த இளவரசனை கைப்பிடிக்கின்றாள் என்பதாக அமைகின்றது

ஸ்னோவைட் (snow white)  - மாற்றாந்தாயினால் காட்டுக்கனுப்படுகின்றாள். ஏழு குள்ளர்கள் உதவியுடன் காட்டில் வாழ்கின்றாள். அங்கு அவளை காணுகின்ற இளவரசன் அவளுடன் மையல் கொள்கின்றான். தொடரும் மாற்றாந்தாயின் சூழ்ச்சிகளிலிருந்து எவ்வாறு இளவரசனுடன் இணைகின்றாள் என்பது இதன் சுருக்கம்.

பியூட்டி அன்ட் த பீஸ்ட் (Beauty and the beast) - தேவதையின் சாபத்தினால் அரக்கனாக உருமாறி காட்டில் வசிக்கின்றான் ஓர் இளவரசன். தவறுதலாக காட்டினுள் செல்கின்ற ஒருவர் அவனால் சிறைப்பிடிக்கப்படுகின்றார். அவருக்கான சரீர பிணையாக வந்து அரக்கனிடம் சேருகின்றாள் அவரது பெண். பின்னர் அந்த அரக்கனின் அசிங்கமான தோற்றத்தினையும் தாண்டி எவ்வாறு அவர்களுள் காதல் மலர்ந்த அவன் சாபம் நீங்குகின்றது என்பதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

தாஷன் (Tarzan)  - காட்டினுள் தொலைகின்ற ஒரு ஆண் குழந்தை கொரில்லாக்களால் வளர்க்கப்படுகிறது. பல வருடங்களின் பின் அந்த காட்டிற்கு ஆராய்ச்சிக்காக வருகின்ற குழுவிலுள்ள பெண்ணுடன் காதல் மலர்கின்றது. கொரில்லா – மானிடர் என்ற இரு கரைகளை இணைக்கும் பாலமாக தாஷன் எவ்வாறு ஹீரோவாகின்றார் என்பது இதன் கதை

லயன்கிங் (Lion King) - சிம்பா என்கின்ற குட்டி சிங்கம் செய்கின்ற தனது வெகுளித்தனத்தினால் தந்தை உயிரிழந்து விட காட்டின் அரசாட்சியும் கைமாறிவிடுகிறது. இதை எவ்வாறு சிம்பா வளாந்து மீளப்பெறுகிறது என்பது லயன்கிங் என்ற காட்டூன் தொடரின் மையக்கரு
மூலான் (Mulan) - தன்னுடைய தந்தைக்கு பதிலான போரில் பங்கேற்பதற்காக மூலான் என்கின்ற வெகுளிப்பெண் ஆண் வேடமிட்டு போர்களம் போகின்றாள். அங்கு அவள் எவ்வாறு போர்ப்பயிற்சிகள் பெறுகின்றாள்… எதிர்நாட்டுப்படையை முறியடிக்கின்றாhள். இதன் போது ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சையின் போது அவள் பெண் என அறியப்படுகின்றாள். இதனால் போர்க்களத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றாள். ஆனாலும் தன்னால் தன் தந்தைக்கும் தன் கோத்திரத்தினருக்கும் அவமானம் ஏற்பட்டுவிட்டதே என்ற மனமுடைவில் வீட்டிற்கு போகாமல் மனம்போன போக்கில் போகின்றாள். இதன் போது முன்னர் முறியடிக்கப்பட்ட எதிரிப்படைகளில் சிலர் மீண்டும் தன் நாட்டிற்கு எதிராக சதி செய்வதை அறிகின்றாள். மீண்டும் அரண்மணைக்குப் போய் தன் நாட்டு வீரர்களை எச்சரிக்கின்றாள். ஆனால் யாரும் காதுகொடுத்து கேட்காத நிலையில் எதிரிகள் நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றனர். மறுபடியும் அவர்களை எவ்வாறு முறியடித்து வெற்றியுடன் வீடு திரும்புகின்றாள் என்பதாக இக்காட்டூன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல கதைகள்… இவற்றினை மாற்றுப்பார்வையுடன் நோக்குவோமானால் இங்கு பெரும்பாலானவை பெண்ணடிமை கருத்துக்களை விதைப்பதை நாம் உணரலாம்.
சிறுவயதில் விதைக்கப்படுபவை
சிறு பிள்ளைகளுக்கான இந்த காட்டூன் கதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பெரம்பான்மையான இளவரசி கதைகளாகட்டும் ஏன் விலங்குளை வைத்து உருவகப்படுத்திய கதைகளாகட்டும் எந்த கதையாகினும் களங்கள் மாறுகின்ற போதும் கருக்கள் ஒன்றாக தானிருக்கின்றன.

கஸ்டத்தில் இருக்கும் பெண்ணிற்கு ஒரு ஆண் பாத்திரம் ஊடாக தான் விடிவு பிறப்பதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு சித்தரிக்கபடுகின்ற பெண் பாத்திரங்கள் அதீத அழகு உடையதாகவும் மென்மையானதாகவும், கண்ணீர் வடிக்கும் பாத்திரங்களாகவும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஆண் பாத்திரங்கள் கம்பீரமானதானதாகவும் அதிபலம் வாய்ந்ததாகவும் மீட்பளிக்கும் ஒரு அதி உன்னத பாத்திரமாகவே காட்டப்படுகின்றன. ஓரிரு கதைகளில் மட்டுமே பெண் முக்கிய பாத்திரமேற்கின்றாள்.

சில விடயங்களையும் நாம் இதனூடு பட்டியல் படுத்தலாம்......
  • பெண் என்பவள் மென்மையும் அழகும் மட்டும் படைத்தவள் என்ற மாயை உருவாக்கப்படுகிறது
  • பெண்ணுக்கு பிரச்சினை பெண்ணாலயே ஏற்படுகிறது. (வில்லி மட்டும் தான் வில்லன் இல்லை) என்பதனூடான ஆண் என்பவன் நல்லவன் , அவன் பிழை செய்வதில்லை என்ற சித்தரிப்பு
  • ஆண் கம்பீரமானவன், உறுதியானவன் என்ற வலியுறுத்தல்
  • பெண்ணுக்கான மீட்பு ஆணால் மட்டுமே கிடைக்கும், அல்லது சாத்தியமானது என்கின்ற அச்சுறுத்தலுடனான எச்சரிக்கை

நான் நினைக்கின்றேன் அநேகமான குழந்தைகளின் மனதில் முதல் விதை இங்கு தான் விழுகின்றது என்று. இவ்வாறான கதைகளை பார்க்கின்ற பிஞ்சு உள்ளங்களில் ஆண் - பெண் என்பது மென்மை – கம்பீரம் என்ற கருத்தாகவே பதிகின்றது. இங்கு விழுகின்ற விதை ஆண் குழந்தைகளிடம் எதிர்காலத்திலும் பெண் என்பவள் தனக்கு கீழானவள் என்ற விருட்சமாக உருவெடுகின்ற அதேவேளை பெண் குழந்தைகளின் மனதில் “தான் ஒரு ஆணிற்கு கீழ்ப்பட்டவள்” என்றும் ஆழமாக பதிந்து விடுகிறது.

இங்கு விதைக்கப்படுகின்ற இந்த கருத்துக்கள் குழந்தைகள் வளர வளர அவர்களுடன் கூடவே மனப்பதிவுகளாகவும் உருவெடுகின்றன. போதாமைக்கு திரைப்படங்களும் இவ்வாறான சிந்தனைகளுக்கு உரமிடுவதாகவே தோன்றுகின்றது. ஆக நாம் களையவேண்டியதும், மனதில் விதைக்க வேண்டியதுமான காலகட்டம் மாணவர் பருவத்திலோ அல்லது அதற்கு பின்னரான பல்கலைக்கழக காலமோ அல்ல அதுமட்டுமல்ல கூடவே பல படிகள் எம்மை விட முன்னுள்ளவர்கள், பெண் விடுதலைக்கான வித்திட்டவர்கள் என்று கருதப்படுகின்ற மேலைக்தேயத்தவர்கள் படைப்புகள் கூட பெண்ணடிமை கருத்துக்களை கொண்டதாகவே படைப்புக்களை தயாரிக்கின்றன என்ற யதார்த்தங்களும் சுடுகின்றன.


பெண்ணுக்கு மறுக்கப்பட்டுள்ள மூன்று விடயங்கள்

இன்றைய சமூகக்கட்டமைப்பில் விளிம்புநிலையில் காணப்படுகின்ற பாலினமான பெண்கள் பல்வேறு வழிகளிலும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு போராடி வருகின்றனர். பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் பெண்ணியத்திற்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன பெண்ணுக்கு மறுக்கப்பட்டுள்ள மூன்று விடயங்கள்
இன்றைய சமூகக்கட்டமைப்பில் விளிம்புநிலையில் காணப்படுகின்ற பாலினமான பெண்கள் பல்வேறு வழிகளிலும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு போராடி வருகின்றனர். பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் பெண்ணியத்திற்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அன்று மூலையில் முடிங்கிக் கிடந்த காலம் போய் இன்று பெண்கள் பல தலைமைப்பதவிகளை வகிக்கின்ற நிலை தோன்றிவிட்டமை பெருமைக்குறியதொரு விடயமே. ஆயினும் அன்று தொட்டு இன்று வரை பெண் வெளிப்படையாக பேசிய முடியாத சில விடயங்கள் இருக்கவே செய்கின்றன. இவற்றுள் முக்கியமானவை மூன்று..........பெண்ணியம் இணையதளத்தில்

திரைக்கதைகளில் பெண்கள்

பொதுவாக அன்றைய சினிமா முதல் இன்றைய சினிமா வரை நோக்கினால் அவற்றில் “பெண்கள்” கையாளப்படுகின்றமை தொடர்பிலான ஒரு கண்ணோட்டமே இக்கட்டுரையின் நோக்கம். அன்று தொட்டே சினிமா தயாரிப்பில் பெண்களின் பங்கு ஒப்பிட்டளவில் ஆண்களை விட குறைவாகவிருந்தாலும் சினிமா நடிப்புத்துறையிலும் திரைக்கதைகளில் பெண்கள் பற்றிய கதைக்கருக்களும் தாராளமாகவே காணப்பட்டன. அதிலும் தமிழ் இலக்கியங்களைப் போன்றே தமிழ் சினிமாவில் “பெண்கள்” என்பதன் போக்கு விசித்திரமானதாகவே இருக்கின்றது. வேற்றுமொழி திரைப்படங்களில் பெண்கள் நிலை பற்றியும் தமிழ் சினிமாவில் பெண்களின் நிலை பற்றியும் ஒப்பிட்டு நோக்கும் போது பெண்கள் பற்றிய தமிழ் சினிமாவின் போக்கு இன்றும் மாறாமல் இருப்பதும் உலகின் தரம்வாய்ந்த படைப்புக்களில் தமிழ் சினிமா ஏனையவற்றுடன் ஒப்பிட்டளவில் பின்தங்கியிருப்பதற்கு ஒரு காரணமாக இருப்பதாக தோன்றுகின்றது.
ஒன்றில் தமிழ் சினிமாவில் பெண்கள் மட்டந்தட்டப்படுகின்றனர். முன்னர் திரைப்படங்கள் “கற்பு பெண்களுக்கு மட்டுந்தான்” என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தன. பின்னரான திரைக்கதைகளில் சமூகத்தில் இழிசெயல் செய்வது பெண்கள் தான் பிரதானம் என்பது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இன்றைய சினிமாக்களில் பெண்களது உடைகள் பற்றியும் அல்லது அவர்களது கவர்ச்சியில் மட்டுமே தங்கியிருக்கக் கூடியதான சினிமாக்கள் மலிந்து விட்டன. ஆக மொத்தத்தில் “பெண்கள்” என்பதற்கான நாகரீக மாற்றங்கள் தமிழ் சினிமாக்களில் காலாகாலத்திற்கு மாற்றமடைகின்ற போதும் கரு என்பது மட்டும் மாறுபடாமலேயே தொடர்கின்றதாகவே தோன்றுகின்றது.
ஆண்களை பெண்கள் ஏமாற்றிவிட்டால் அவ் ஆண் வாழ்வில் முன்னேறி வாழ்ந்து காட்டுவதாகவும் ஏமாற்றிய பெண் மீண்டும் மனந்திருந்தி அல்லது வேறொருவரால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் கதையமைக்கின்றவர்கள் அதுவே பெண் ஏமாந்துவிட்டாள் தற்கொலை செய்து கொள்வதாக காட்டுகின்றார்கள்….? அதற்கு பரிகாரமாக அவளுடன் தொடர்புடைய ஒருவர் பழிவாங்குவதாகவோ அல்லது அவள் ஆவியாகித்தான் பழிவாங்குவதாகவும் காட்டுவது ஏன்? அதே போன்றே ஆண்கள் கட்டிய மனைவி இருக்கும் போதே சின்ன வீடு வைத்தால் அல்லது இன்னொருத்தியுடன் தகாத உறவு கொண்டால் மனைவி மன்னித்து ஏற்றுக்கொள்வதாகவும் (இதில் சின்னவீடு இறந்துவிடும் அல்லது ஓடிவிடும் அல்லது வில்லன் கொன்று விடுவான்) குழந்தையை முதல் மனைவியே தத்தெடுத்து வளர்ப்பதாகவும் பெரும்பாலான படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஏன் ஒரு பெண் இன்னொரு சின்னவீடு வைத்தால் கணவன் ஏற்றுக்கொள்வானா? அல்லது அவளின் சின்னவீட்டினால் பிறந்த குழந்தைக்கு முதலெழுத்தாக தன் பெயரை இடுவாரா? திரைக்கதைகளில் பெண்கள்

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை