நீதிக்கதை !

என்னுடைய அம்மப்பா ஊடகவியலாளராக பணியாற்றிய காலங்களில் அவருடைய உற்ற நண்பனாக  இன்னுமொரு ஊடகவியலாளரும் இருந்தார். பால்ய காலத்தில் இவர்கள் நட்பு ஆரம்பித்தாக அடிக்கடி கூறிக்கொள்வார்கள். இந்த நட்பு பின்னர் அரசியல் கொள்கைகள் மாற்றடைந்ததன் பின்னர் சற்று ஆட்டம் கண்டிருந்தாலும் இவர்களால் உருவாகியிருந்த குடும்ப நட்பு இவர்கள் இறந்த பின்னரும் கூட தொடந்துகொண்டுதானிருந்தது. இதன் நீட்சியாக மூன்றாவது தலைமுறையானவர்களான நாமும் நண்பர்களாயிருந்தோம். இதற்கு இன்னுமொரு காரணம் நாங்களும் இதே துறையில் பயணித்தமை என்றும் சொல்லலாம். அம்மப்பாவின் பேரனும் முன்னாள் பத்திரிகையாசிரியர், ஓவியனும் கூட. எம் வீட்டிலும் ஏனையவர்கள் பேனையையும் அதற்கான விலையையும் அறிந்ததாலோ அல்லது வேறு துறைகளில் மூழ்கிப்போனதாலேயோ பேனையை இறுகப்பற்றிக்கொள்ளவில்லை. சிறுவதிலிருந்தே அதனை பற்றிக்கொண்டவள் நான் தான். இதனால் நண்பரின் பேரனும் நானும் நல்ல நண்பர்களாயிருந்தோம். நண்பர்களாயிருந்தோம் என்றாலும்  இருவருக்குமிடையில் பத்துவயது வித்தியாசம். நானும் வகுப்பேற்றங்களுடன் கற்றவள் என்பதால் என்னுடைய சம வயதினரையும் விட என்னை விடவும் வயதானவர்களே பெரும்பாலும் நண்பர்களாயிருந்ததுண்டு. எனவே இந்த நட்பு வயது தாண்டியும் பயணித்திருந்து.

அவர்கள் குடும்பமும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து என்  மண்ணில்  (இது மட்டக்களப்பா? யாழா என்று குழம்ப வேண்டாம்.; இரண்டும் என் மண் தான். இவ்விடத்தில் மட்டக்களப்பு)  குடியேறியிருந்தமையால் தலைமுறை தாண்டிய எம் நட்பும் மிகவும் ஆழமாயிருந்தது. அந்த நாட்களில் நான் வானொலி நிகழ்வுகளுக்கு குரல் கொடுத்துக்கொண்டும், எம்மால் நடாத்தப்பட்ட பத்திரிகையின் உப ஆசிரியராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தேன். கட்டுரைகளுக்கான உதவிகள், தேவைப்படும் நேர்காணல்களை பெறுவதற்கான இலக்கங்களை பெறுவது என்பனவற்றிற்கு என்னுடைய இந்த நண்பர் தான் உதவிக்கொண்டிருந்தார். எம்முடைய வீடுகளும் சற்றுத்தூரங்களில் இருந்ததால் அடிக்கடி இருவரும் சந்தித்கொள்வதுமுண்டு. அப்போது நான் பல்கலைக்கு தெரிவாகி கொழும்பிற்கு போகவேண்டி வந்த போதும் கூட எனக்கான பொருட்களை அல்லது மீன்பொரியல், பலகாரங்களை மட்டக்களப்பிலிருந்து அனுப்பி வைப்பதற்கு அம்மா இவரிடம் தான் கொடுத்து விடுவதுண்டு. எனவே என்னுடைய விடுதி நண்பிகள், ஊடக நண்பர்களுக்கு நம்மிருவரின் நட்பு குறித்தும் நன்றாக தெரியும். 

இப்படியானதொரு நாட்களில் தான் பல்கலை விரிவுரையில் இருக்கும் போது திடீரென ஒரு புது இலக்கத்திலிருந்து எனக்கு அழைப்புக்கள் பலமுறை வந்திருந்தன. இடைவெளி இன்றி தொடர்ச்சியாக அந்த இலக்கத்திற்குரியவர் அழைத்ததால் எரிச்சலாகி விரிவுரையாளருக்கு தெரியாமல் இரகசிய குரலில் பின்னர் அழைப்பதாக கூறி தொடர்பை துண்டித்து விட்டேன். அதன் பின்னர் நானும் இதனை மறந்துவிட்டேன். மீண்டும் சில நாட்களின் பின்னர் இதே இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. எடுத்தக்கதைத்த போது என்னுடைய மேற்குறிப்பிட்ட நண்பன் தன்னை ஏமாற்றிவிட்டதாக பெண்ணொருவர் அழுதார். தொடர்ச்சியான சில உரையாடல்களில் இருவரும் பத்திரிகையில் பணியாற்றி வந்ததாகவும் அதன் போது இந்தப்பெண்ணை நண்பர் பல வருடங்களாக காதலித்து வந்தாகவும் (அப்படி தான் அந்த பெண் சொன்னார்) தமக்குள் உடலியல் ரீதியான தொடர்புகள் இருந்ததாகவும் இதன் நிமிர்த்தம் தான் பல தடவை கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் தற்போது தன்னுடனான தொடர்பை துண்டிக்க முயல்வதாகவும் குறிப்பிட்டார்.  மேலும் தன்னுடன் அவரை சேர்த்து வைக்கும் படியும் அழுதார். 

இந்த காலகட்டத்தில் நான் உப ஆசிரியராக இருந்தமையால் இப்படியான பல பாதிக்கப்பட்ட பெண்கள் என்னை தொடர்புகொள்வதுண்டு. பல இடங்களில் சட்டரீதியான நடவடிக்கை வரை கூட இப்பெண்களுடன் சென்றிருக்கின்றேன். ஆனால் இதில் பாதிப்புக்குட்படுத்தியவர் யாரோ முகம்தெரியாத நபராயிருப்பதுண்டு. ஆனால் இங்கு என் நண்பர். இந்த விடயத்தில் தலையிட்டால் எம் குடும்ப நட்பிலும் விரிசல் வரும் என்று எனக்குத் தெரிந்திருந்தது. போதாதற்கு அவர்கள் வீட்டிலும் சில பொருளாதார பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருந்தது எனக்குத் தெரியும். ஆனாலும் இதற்காகவெல்லாம் தட்டிக்கேட்காமல் இருக்க முடியுமா என்ன?

நண்பனுக்கு அழைப்பெடுத்து நடந்ததை சொல்லி கேட்டேன். அந்தப்பெண் தன்னுடன் பணிபுரிந்தது உண்மை ஆனால் மீதியெல்லாம் பொய் என்று விட்டார். மீண்டும் அந்தப்பெண்ணிடம் நண்பர் சொன்னதை சொன்னேன். நேரில் வந்தால் புகைப்பட ஆதாரங்கள் தருவதாக சொன்னார். இந்த காலப்பகுதியில் எங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் அரசியல் அழுத்தங்களும் இருந்திருந்தன. இது நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பல்கலையிலிருந்து வரும் போது இனந்தெரியாத ஒருவர் பேரூந்தில் என்னுடைய தலையை கம்பியில் மோதி மண்டை உடைந்து எட்டுத் தையல்களுடன் தப்பித்திருந்தேன். எனவே அந்தப்பெண் கூறியதை நண்பனிடம் சொல்லி என்னுடைய வருமாறு கேட்ட போது “உம்மை தாக்குவதற்கு அல்லது பணம் பறிப்பதற்கு இது திட்டமிடப்படுகின்றது. கவனம். என்னால் வரமுடியாது. ஏதாவது நடந்தால் உங்கள் வீட்டாக்கள் என்னை கொன்றுவிடுவார்கள். இவ்வளவு கால பழக்கம். அவ்வளவிற்கு என்னில் நம்பிக்கையில்லையா?” என்று கேட்டார். 

விடுதியில் நிதானமாக அமர்ந்து யோசித்த போது அவர் சொன்னதும் சரியெனப்பட்டது. ஒரு சிலநேரங்களில் என் தமையனாரிடம் சொல்வோமா என்றுமிருந்தது. ஆனால் இது பொய் என்றால் என்ன நடக்கும் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. அதேவேளை படிக்கும் போது இவ்வாறான விடயங்களில் ஈடுபட்டால் அம்மா எப்படி என்னை திட்டுவார், சத்தியம் வாங்குவார் என்றும் எனக்குத் தெரிந்திருந்தது. இரண்டிற்கும் நடுவில் நான் குழும்பிய நாட்கள் அவை. ஆனாலும் கடந்து போக என் போராட்ட புத்தி விடவில்லை. எனவே நண்பனை நேரில் சந்திக்க தீர்மானித்தேன். 

சிலநேரங்களில் ஆதாரங்கள் தீர்மானிக்க முடியாததை அல்லது அனுமானிக்க முடியாததை கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். எந்த உயிரினத்தினாலும் தவிர்க்க முடியாதது இந்த பார்வை தான். எந்தப்பெரிய கள்ளனாலும் சரி,துரோகியென்டாலும் சரி, பொறுக்கியெண்டாலும் சரி தீர்பிடுவது கண்கள் தான். ஆனால் ஆதாரமற்ற உறுதியான தீர்வு அது. எனவே கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் நண்பனை சந்தித்து கேள்விகளை கேட்டேன். ஏறத்தாழ ஒரு மணிநேரம் கதைத்திருந்தேன். அந்த ஒரு மணிநேர கலந்துரையாடலில் அவன் பார்வை ஒருதடவை கூட என் கண்களை சந்தித்திருக்கவில்லை. எனவே என் உள்ளுணர்வு கள்ளத்தனத்தினை எடைபோட்டுவிட்டது. 

எனவே அம்மாவிடம் விடயத்தினை சொல்லிவிட்டேன். அம்மாவும் இவ்வாறான பெண்கள் விடயம் என்றால் நிச்சயம் தீர்ப்பிட சுணங்க மாட்டார். எனவே இருவரும் நண்பரின் வீட்டிற்கு போனோம்.; அம்மாவின் நண்பியும் நண்பரின் தாயுமானவரிடம் பேசினோம். சொன்னதை கேட்டபின் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி அந்தப்பிள்ளை எந்தவிடம்? என்பது தான். மலையகப்பெண் என்றேன். நாங்கள் யாழ்ப்பாண ஆட்கள் அங்கு எப்படி பெண் எடுப்பது? என்றார். பெண் தானான கேட்பது வேண்டுமாயின் தவிர்க்கலாம் ஆனால் இங்கு உங்கள் மகன் ஏமாற்றியிருக்கின்றார். அந்தப்பெண்ணை விரும்பும் போது இதுவெல்லாம் தெரியாதா ? என்று கேட்டேன். இப்படித்தான் எங்கட பெடியன்களை அவர்கள் தங்கட பக்கம் எடுக்க நாடகமாடுவாள்கள் என்று விட்டார். நண்பனுக்கு ஒரு தங்கை. அப்போது மருத்துவருக்கு படித்துக்கொணடிருந்தார். அவரும் “அந்தப்பிள்ளை கல்யாணத்திற்கு முன் ரூமுக்கு போயிருக்கு என்கிறாள் எப்படிப்பட்ட பிள்ளை அது” என்று தன் அண்ணனை நியாயப்படுத்த தொடங்கிவிட்டார். என் அம்மா அதன் பின்னர் என்னை பேசவிடவில்லை. அங்கிருந்து வெளிக்கிட்டு வீடு வந்துவிட்டோம். அம்மா நிதானமாக “ அவன் அந்தப்பிள்ளையை ஏமாற்றிவிட்டான். அவன் வீடும் நியாயத்தினை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. பொடியன் கம்பீரமாக அந்தப்பிள்ளையை தான் கட்டுவேன் என்றாலோ அல்லது அவன் செய்தது பிழை அந்தப்பிள்ளையுடன் பேசுவோம் என்று குடும்பம் சொல்லியிருந்தாலோ நாமும் சேர்ந்து போராடலாம். இங்கு கதையே வேறு. அந்தப்பிள்ளை இவனை கட்டினாலும் நிம்மதியாகவிருக்காது” என்று சொல்லிவிட்டார். அன்றிலிருந்து நாம் அவர்கள் வீட்டிற்கு போவதனையும் குறைத்துக்கொண்டோம். அவர்களும் எம்மை தவிர்க்க ஆரம்பித்தார்கள்.

நான் திண்டாடிப்போனேன். வாழ்க்கை என்பது வழக்கின் தீர்ப்பை போன்றதல்ல. இருவர் சேர்ந்து வாழ்வதற்கு மனதில் அன்பிருக்க வேண்டுமல்லவா? தன் பிழையை ஒருவன் உணரவேண்டுமல்லவா? ஆனால் இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களும் அந்தப்பெண்ணை நன்றாக முடுக்கிவிட்டார்கள். நான் நியாயத்திற்கும் அநியாயத்திற்குமிடையில் போராடிய காலப்பகுதியை தவறாக தீர்ப்பிட ஆரம்பித்தார்கள். நண்பனை பூசிமெழுக நான் முயல்கின்றேன். ஒருவேளை நான் தான் அவனை திருமணம் செய்யவுள்ளேன் என்றும் எண்ணியிருந்தார்கள். இதனை அந்தப்பெண்ணும் என்னிடம் கேட்டுவிட்டார். எனக்குள் இருந்த போராட்டம், அந்தப்பெண் பேசிய அவதூறு எல்லாம் சேர்த்து படுபயங்கரமாக திட்டிவிட்டு அழைப்பை நிறுத்திவிட்டேன். சில நாட்களில் சாந்தமாகி அந்தப்பிள்ளையில் புள்ளியில் என்னை வைத்து யோசித்து பார்க்கும் போது அவள் வலி புரிந்தது. ஆனால் தன் வலியை தீர்ப்பதற்காக இன்னுமொரு பெண் மீது சேறுபூசியதை என்னால் தாங்க இயலவில்லை. என்றாலும் குறைந்த பட்சமாக நண்பனிடம் பேசுவோம் என்று மீண்டும் பேசினேன். எமது குடும்ப சாமி மீது சத்தியம் பண்ணும் படி கேட்டேன். தயக்கமின்றி பண்ணிவிட்டார். இதற்கு மேல் இரு தரப்பிடமும் பேசுவது என் மீது பழிவிழ வைக்கும் என்று பயப்பட ஆரம்பித்து அத்துடன் இது போன்ற விடயங்களில் கவனஞ்செலுத்துவது என் உயர்வுகளை தடுக்கும் என நினைத்து விலகிவிட்டேன். ஆனால் அப்பப்போ என் மனச்சாட்சி என்னை சுடாமலுமில்லை. இன்னும் கொஞ்சம் அழுத்தமான முயற்சி எடுத்திருக்கலாமோ என்று அவ்வப்போது நான் என்னையே நொந்துகொள்வதுமுண்டு. 

இதற்கு பின்னர் மூன்று வருடங்கள் கழித்து ஊடகவியல் பயிற்சிப்பட்டறையில் அந்தப்பெண்ணை முதன்முறை நேரில் சந்தித்தேன். என்னுடன் பெரிதாக முகங்கொடுத்து பேசவில்லை. ஆனால் என் நண்பியிடம் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக சொல்லியிருந்ததை கேள்விப்பட்டேன். மனதில் ஒருவித நிம்மதியும் படர்ந்திருந்தது. இந்தப்பக்கம் மூன்று தலைமுறை நட்பு விலகிப்போயிருந்தது. பொதுவெளியில் கண்டால் மட்டும் வெளிப்புன்னகையுடன் பேசிக்கொண்டோம். இதற்கிடையில் நண்பனின் தங்கையை என்னுடைய தமையனாருக்கு திருமணம் பேச முயற்சியும் நடந்தது. என்னுடைய தாயார் மறுத்தே விட்டார். நேர்மையற்ற குடும்பத்தில் பெண்ணெடுத்தால் அது தலைமுறை அழிக்கும் என்று பேச வந்தவர்களுக்கும் ஆணித்தரமாக சொல்லிவிட்டார். இவ்வாறு அம்மா சொன்னதற்காகவே அவசரமாக பெரிய இடத்தில் மாப்பிளை எடுத்து திருமணம் செய்வித்தும் அனுப்பிவிட்டார்கள். எமக்கும் அழைப்பிதழ் வந்திருந்தது. அம்மா மட்டும் ஒப்புக்காக போய் வந்தார்.

இது நடந்து சில வருடங்களின் பின்னர் நண்பரின் திருமண புகைப்படம் முகநூலில் பகிரப்பட்ட போது பார்க்க கிடைத்திருந்தது. இக்காலப்பகுதியில் நான் இலங்கையில் இல்லை. வீட்டவர்களும் இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்திருந்தார்கள். எனவே அவர்களும் அழைத்திருக்கவில்லை. அல்லது எம்மை தவிர்த்திருந்தார்கள். இதற்கிடையில் நண்பனின் அம்மப்பாவின் இழப்பிற்கு குடும்பமாக போய் வந்தோம். நண்பன் தன்னுடைய துணையை எமக்கு இதன் போது அறிமுகம் செய்தார். பெண் இந்நாரின் மகள், …… ஆக இருக்கின்றார் என்றெல்லாம் புளுகாகவும் நக்கலாகவும் சொல்லியிருந்தார். வீட்டிற்கு வந்த பின்னர் எப்படி இவர்களால் இப்படியிருக்க முடிகின்றது என்று எமக்குள் பேசிக்கொண்டோம். ஆனால் அம்மா மட்டும் இன்னும் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. கடவுள் கணக்கு தப்பாது என்று விட்டார். நாமும் அப்படியெல்லாம் கடவுள் இருக்கின்றாரா என்று நாத்திக கேள்விகளையும் கேட்டிருந்தோம்.

நேற்று மட்டக்களப்பில் பட்டத்திருவிழா. வீட்டிலுள்ள குஞ்சான்களை கூட்டிப்போக திட்டமிட்டிருந்திருந்தோம். இடையில் கடையில் பொருட்கள் வாங்க இறங்கியிருந்தேன். கடைக்குள் என்னைக்கண்டு ஒரு உருவம் ஒளிப்பது போன்றிருந்தது. சும்மா நின்றிருந்தால் கூட கண்டுகொண்டிருக்க மாட்டேன் ஆனால் திடீரென தவிர்க்க முயன்றது தான் அவரைக் காட்டிக்கொடுத்தது. என் நண்பன். நன்றாக மெலிந்து தாடியுடன் கையில் சிகரெட். பார்க்கவே சகிக்கவில்லை. இனி கண்ட பின் முகந்திருப்புவது நாகரீகமில்லை என்று புன்னகைத்தேன். அவரே வலிய வந்து பேச தொடங்கினார். 

எப்படியிருக்கின்றீர்கள் என்று கேட்டேன். “ இப்போது விரிவுரையாளராக இருக்கின்றேன் என்றார். என்னது விரிவுரையாளர் இப்படி கோலமாகிவிட்டார் என்று கேட்டேன் நான். கடைக்கு வெளியில் நடந்துகொண்டே கொஞ்சம் வெளியே வாரும் என்றார். போனேன் “ என்ட வைப் என்னை விட்டுப்போய்விட்டா. வேறு ஒருவருடன் தொடர்பிருந்திருக்கின்றது. எனக்குத் தெரிந்து சண்டை போட்டேன். விவாகரத்தாகி விட்டது. பிள்ளையும் அவளிடம். இப்ப அண்மையில் வேறொருவரை திருமணம் செய்து வெளிநாடு போய்விட்டாள். தங்கச்சிக்கும் விவாகரத்தாகிவிட்டது. அந்தப்பொடியனுக்கு பலருடன் தொடர்பாம். அம்மாவும் நடக்க முடியாமல் வீட்டில் தான். நான் தான் அம்மாவை பார்த்துக்கொண்டிருக்கின்றேன். இப்போது கடையில் தான் மூன்று வேளை சாப்பாடும்.  தங்கச்சியும் வேறொருவருடன் இருந்த புகைப்படங்கள் முகநூலில் வந்து எங்கட மானமே போய்விட்டது. சாகலாம் போலிருக்கின்றது ” என்றார். உண்மையில் இவ்வளவு நடந்திருந்தது எனக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர் கோலம், சொன்ன விடயங்கள் கவலையாகவும் பரிதாபத்தினையும் ஒருங்கே தந்திருந்தது. அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது என்றும் எனக்கு தெரிந்திருக்கவில்லை. நல்ல காலம் சின்னன்கள் என்னை கூப்பிட தொடங்கிவிட்டார்கள். எனவே இதனை சாக்காக வைத்து விடைபெற்றுவிட்டேன். 

தீர்ப்புக்கள் பிந்தலாம் ஆனால் கிடைக்காமல் போவதில்லை. பெண் பாவம் எப்போதும் பொல்லாதது. நாம் சில நேரங்கள் ஆதாரங்கள் இல்லாத போது சத்தியத்திலிருந்து தப்பிவிட்டதாக நினைக்கின்றோம். கிடைக்கின்ற ஏற்றங்களை வைத்து சிறப்பாக வாழ்வதாக நினைக்கின்றோம். அல்லது நடிக்கின்றோம். ஆனால் நீதி நின்று சுடுவது. தலைமுறையழிக்கும் சக்தி அதற்குண்டு. சும்மாவா சொன்னார்கள் “தெய்வம் நின்றறுக்கும் என்று? ஒருவர் வருந்தி அழும் போது வழிகின்ற கண்ணீருக்கான சூடு தணிவதேயில்லை. 

வாகனத்தில் ஏறி சீட்பெல்ட் போடும் போது சின்னதுகள் மடியில் பாய முன்னிருந்த படம் இடிபட அதனை நிமிர்த்தினால் எம் குலச்சாமி படம். பல வருடங்களுக்கு முன் சத்தியத்தினை வாங்கிய சாமி. இறைவனும் காலமும் மிகப்பெரியன. அம்மா தீர்க்கதரிசி!


No comments:

Post a Comment

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை