Made in Koria

இன்று பார்க்க கிடைத்த எளிமையானதொரு படம் "Made in Koria” . இயல்பான எளிமையான காட்சிகள், குடும்பமாக அமர்ந்து பார்க்க கூடியதொரு திரைப்படமாக அண்மையில் வெளிவந்தவற்றில் இதனை குறிப்பிடலாம். 

கிராமமொன்றில் சாதாரண குடும்பத்தில் பிறந்த செண்பாவிற்கு கொரியன் படங்கள், பாடல்கள் மிது சிறுவயது முதலே அதீத ஆர்வம். கொரியன் மொழியையும் கற்றக்கொள்ள ஆரம்பிக்கின்றார். இதற்கு முக்கிய காரணமாக அவர் சிறுவயதில் விநோத உடை போட்டியில் பங்குபற்றிய “செம்பவளம்” கதாபாத்திரமும் காரணமாக அமைந்துவிடுகின்றது. எப்படியாவது கொரியாவிற்கு சென்றுவர வேண்டும் என்கின்ற ஆர்வமும் மேலோங்கி காணப்படுகின்றது. வளரும் போது தன் கூடப்படித்த மணி மீதும் காதலாகி இருவரும் யாருக்கும் தெரியாமல் விரும்பிக்கொண்டிருப்பார்கள். மணிக்கு தன் தந்தையால் ஏற்பட்ட கடன், தொழில் பிரச்சினை என ஏகப்பட்ட பொருளாதார பிரச்சினைகள். இதேவேளை செம்பாவிற்கு திருமணம் பேச ஆரம்பிக்க தம் காதலை தன் தந்தையிடம் வெளிப்படுத்தி பேசுமாறு மணியிடம் நச்சரிக்க ஆரம்பிக்கின்றார். ஒரு கட்டத்தில் செம்பாவின் தந்தைக்கும் விடயம் தெரிய வர இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கிராமத்தினையுமு; விட்டு போய்விடுகின்றார்கள். அங்கு மணி செம்பாவின் விரும்பத்தினை நிறைவேற்ற கொரியாவில் செம்பாவிற்கான வேலை வாய்ப்பினையும் பெற்று இருவரும் அங்கு செல்ல ஆயத்தங்களை மேற்கொள்கின்றார். செம்பாவினை விமான நிலையத்திற்கு அனுப்பிவிட்டு மணி என்னவானார் என்பதும் செம்பா கொரியாவிற்கு யாருடன் சென்றார் என்பதும் கதையின் முதலாவது திருப்பம். 

கொரியாவில் செண்பாவின் கனவுகள் எவ்வாறு உயிர்கொள்கின்றது, அங்கு அவருக்கு ஏற்படும் நட்பு, அதன் பின்னர் நாடு திரும்ப வேண்டியே ஆகவேண்டி ஏற்படுகின்ற நிர்ப்பந்தம் என நகர்கின்றது கதை. பா.கார்த்திக்கின் இயக்கத்தில் சிறீநிதி தயாரிப்பில் இப்படம் வெளிவந்துள்ளது. முக்கிய பாத்திரமான செண்பா பாத்திரத்தில் பிரியங்கா மோகனும் மணி பாத்திரத்தில் ரிஷிகாந் கொரியா நாட்டின் இரு முக்கிய பாத்திரங்களில் Park Hye-Jin , Si-hun Baek  உம் நடித்துள்ளனர். 

பிரியங்கா மேனனின் நடிப்பு இயல்பாயிருக்கின்றது. ஆனாலும் இயக்குநர்களின் முக்கிய பிரச்சினையான கதாநாயகிகளின் வெண்தோல் மீதான நம்பிக்கை இந்த பாத்திரத்திற்கு பொருந்திப்போகவில்லை. கிராமத்தில் இருக்குமு; ஏனைய பெண்கள், செண்பாவின் அம்மா உட்பட அனைவரும் பொதுநிறத்தில் இருக்க வழமை போன்று கதாநாயகி மட்டும் ஏலியனாக இருப்பது இங்கும் முரணாகின்றது. அடுத்த இடைவெளியாக என் சிந்தனைக்கு எட்டியது கதையின் நகர்வு. சில நேரங்களில் தொய்வு இருப்பதாக உணரமுடிந்திருந்தது. மற்றுமொரு குழப்பம் செண்பா வேலைசெய்யுமிடத்தில் உள்ள வயோதிப பெண்ணுடன் ஊர் சுற்றிவிட்டு நேரத்திற்கு திரும்பும் போது அவர்கள் பயணிக்கின்ற மோட்டார் பைக் எப்படி வீட்டவர்களுக்கு தெரியாமல் மாயமாகிவிடுகின்றது என்கின்ற கேள்வி பார்வையாளர்களிடம் நிச்சயம் தோன்றியிருக்கும். இன்னுமொரு இடத்திலும் சறுக்கல்களை அவதானிக்கலாம். ஒரு கிராமத்திலிருந்து திடீரென கொரியா செல்லும் செண்பாவின் உடைகளின் திடீர் மாற்றமும் பாத்திரத்தின் உருமாற்றத்தில் முரணாக தெரிகின்றது. அவர் நவீன உடைக்கு மாறுவதற்கு சற்றுநேரமெடுத்திருக்கலாம்.  அதை கதையில் இயக்குநரும் கொடுத்திருக்கலாம் என்பது என் பார்வை 

எளிமையான கதை நகர்வு, ஒளியமைப்பு, பின்னணி இசை அனைத்தும் அருமை. குறிப்பாக படத்தில் அடிக்கடி சொல்லப்படுகின்ற “ எங்கு முடிந்துவிட்டது என்று நினைக்கின்றோமோ அங்கு தான் ஆரம்பமுள்ளது” என்கின்ற வசனம் நச்சென்று மனதில் நிற்கின்றது.  Si-hun Baek- செண்பா இடையேயான கெமிஸ்ரி அருமை. குறிப்பாக இடையில் ஓடிவிட்ட மணி, செண்பாவிற்கு வலிய வந்து உதவும்  Si-hun Baek என்கின்ற ஒப்பிடல் நிச்சயம் இன்றைய இளைஞர்களுக்கு முக்கியமானது. சிலவேளைகளில் நாம் நம்புபவர்கள் நம்மை ஏமாற்றுவதும் யாரோ முகமறியாத ஒருவர் நமக்கு உதவுவதும் பல இடங்களில் இன்று நடந்துகொண்டுதானிருக்கின்றது. ஒருவரை எடை போடுவதற்கு பாத்திரங்களை படைந்திருப்பது இந்த இடத்தில் அருமை. 

கொரியாவில் தமிழர்களின் இருப்பு குறித்த காட்சிகள் விரைவில் கொரியாவிற்கு நானும் பெட்டி கட்ட நினைக்கின்ற எண்ணப்பாட்டை உறுதிசெய்ய ஆரம்பித்திருக்கின்றது. மொத்தத்தில் படம் அருமை. குடும்பமாக அமர்ந்து பாருங்கள்.  இந்தப்படத்தில் எல்லாவற்றினையும் தாண்டி “செம்பவளம்” என்று வந்து போன பாத்திரம் பற்றி ஆராய ஆரம்பித்தேன். 

செம்பவளம் (Sembavalam)

செம்பவளம் என்பது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு இந்திய இளவரசி. கொரிய வரலாற்று நூல் Samguk Yusaவில் வரும் கதையின் அடிப்படையில், அவர் பின்னர் Heo Hwang-ok என்ற பெயரில் கொரியாவின் கயா (Gaya) அரசின் ராணியாக ஆனார். செம்பவளம் “அயுடா” (Ayuta) எனப்படும் தென் இந்திய அரசாட்சியில் பிறந்தவர் எனக் கூறப்படுகிறது.16 வயதில் கடல் மார்க்கமாக கொரியாவுக்கு சென்று, கயா அரசர் கிம் சுரோவை (King Suro) திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு, அவர் கொரியாவின் முதல் ராணிகளில் ஒருவராக மதிக்கப்பட்டார்.இன்று கூட, பல மில்லியன் கொரியர்கள் தங்களை அவரது சந்ததியினர் எனக் கருதுகின்றனர்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக, இன்று சுமார் ஆறு மில்லியன் கொரியர்கள் — அதாவது கொரியா மக்கள்தொகையில் சுமார் 10% — தங்களது வம்சாவளியை இந்திய இளவரசியுடன் இணைக்கின்றனர் என்று நீங்கள் நம்ப முடியுமா? ஆம், இது உண்மையாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் 13ஆம் நூற்றாண்டில் ஒரு புத்த சந்நியாசியால் எழுதப்பட்ட Samguk Yusa என்ற கொரிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நூலில், 16 வயதான இந்திய இளவரசி செம்பவளம் (Heo Hwang-Ok என்றும் அழைக்கப்படுகிறார்) கொரியாவிற்கு தனது மணமகனைத் தேடி பயணம் செய்து, கிம் சுரோவை திருமணம் செய்து கொண்டு கயும்க்வான் கயா அரசின் முதல் ராணியாக ஆனார் என்று கூறப்படுகிறது.இந்த இளவரசி, தனது அடிமைகள் மற்றும் அரண்மனைச் சேவகர்களுடன் தமிழ்நாட்டிலிருந்து கொரியாவிற்கு பயணம் செய்தார். அவருடன் சென்ற குழுவினர் அங்கேயே தங்கியதால், தமிழர் பண்பாடு அங்குச் பரவுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், Heo, Lee மற்றும் Kim குலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை ராணி Heo Hwang-Ok அவர்களின் சந்ததியினராகக் கருதுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

Heo அவர்கள் தென் இந்தியாவில் அமைந்திருந்த அயுடா (Ayuta) இராச்சியத்தின் இளவரசி. சிலர் தவறாக அயுடா இராச்சியத்தை அயோத்தியாக (Ayodhya) இணைக்கின்றனர். ஆனால் அக்காலத்தில் அயோத்தியாவின் பழைய பெயர் “சாகேதா” (Saketa) என்பதாக இருந்தது. மேலும், Samguk Yusa 13ஆம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டது என்பதால், அது அயோத்தியாவைக் குறிக்கவில்லை. இங்கு “அயுடா” என்பது பண்டைய தமிழகம் பகுதியில் பாண்டிய வம்சத்திற்குச் சேர்ந்த “ஆய் இராச்சியம்” (Ay Kingdom) என்பதைக் குறிக்கிறது. இதற்கு ஆதாரமாக, இளவரசி Heo தன்னுடன் கொண்டு வந்த “இரட்டை மீன்” சின்னம் குறிப்பிடப்படுகிறது. பாண்டிய அரசின் கொடி, நாணயம் மற்றும் சின்னங்களில் இரண்டு மீன்கள் இடம்பெற்றுள்ளன. மீன் சின்னம், பாண்டிய நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையில் முக்கியமான அர்த்தம் கொண்டதாக கருதப்பட்டது. மேலும், Heo அவர்களை தமிழில் “செம்பவளம்” என்றும் அழைத்தனர்; இதன் பொருள் “சிவப்பு பவளம்” (Red Coral). அதேபோல், கொரிய பெயரான Heo Hwang-Ok என்பதிலும் இதே பொருள் இருப்பது சுவாரஸ்யமான ஒன்றாகும்.

ஆனால் இந்தப் பெயர் பழமையான கொரிய நூல்களில் இல்லை. பின்னாளில் உருவான பெயராக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கதை வரலாற்று உண்மை என உறுதி செய்யப்படவில்லை. பல அறிஞர்கள் இதை ஒரு புராண/கதை எனக் கருதுகின்றனர். இருந்தாலும், இது இந்தியா–கொரியா கலாச்சார தொடர்பின் ஒரு முக்கிய சின்னமாக பார்க்கப்படுகிறது.

தமிழர்கள் பின்பற்றும் “நடுக்கல்” மரபு, ராணி Heo Hwang-Ok அவர்களின் கல்லறையிலும் காணப்படுகிறது. கொரியாவில் Heo Hwang-Ok ஒரு தெய்வமாக வழிபடப்படுகிறார். இந்தியாவிலிருந்து வந்த ஒரு இளவரசி கொரியாவில் தெய்வமாக வழிபடப்படுவது பெருமைக்குரியது. அதே நேரத்தில், இந்த தகவலை பெரும்பாலான இந்தியர்கள் அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

தமிழ்நாடு மற்றும் கொரியா இடையே காணப்படும் ஒரு தனித்துவமான ஒற்றுமை முத்து வேட்டையாகும் (Pearl hunting). பவள ஆபரணத் தொழிலுக்காக முத்து தேடும் செயல்கள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, இளவரசி Heo கிம் சுரோவை திருமணம் செய்த காலத்தில், பண்டைய தமிழ்நாட்டில் மட்டுமே பரவலாக அறியப்பட்டிருந்தன. ஆச்சரியமாக, இன்றும் தமிழ்நாடு மற்றும் தென் கொரியாவில் பெண்கள் ஆழ்கடலில் மூழ்கி முத்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரியர்கள் பெரும்பாலும் அரிசி உணவையே உட்கொள்கின்றனர். அவர்களின் நெல் சாகுபடி முறையை தமிழர்கள் கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தமிழர்களைப் போலவே, கொரியர்களும் வீட்டிற்குள் செல்லும் முன் செருப்புகளை வெளியே வைக்கும் பழக்கத்தையும், மூத்தவர்களுக்கு முன் வணங்கி மரியாதை செலுத்தும் மரபையும் கடைப்பிடிக்கின்றனர். இப்படி செம்பவளம் அரசி குறித்து ஆராய முற்பட்ட போது நீண்டுகொண்டே போகின்றது தமிழ்-கொரிய உறவு. இதைவைத்தே ஒரு நூல் எழுதும் அளவு தகவல்கள் என் தேடல்களில் கிடைத்துள்ளன. 

 

No comments:

Post a Comment

பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை