சிறுவயதிலிருந்தே என்னுடைய கல்வித்துறை தவிர்ந்து எனக்கிருந்த கனவுகளில் ஒன்று மாடு வளர்ப்பது. என்னளவில் யாருக்காவது ஒரு பசு மாடு இருந்தால் அவன் தான் பணக்காரன் என்பேன். அந்தளவு வீட்டிற்கு மாடு என்பது செல்வங்களுள் சேர்த்தியாகின்றது. நான் பிறந்த ஓரிரு மாதங்களிலேயே என்னுடைய தாயாருக்கு சுவாதக்குணம் ஏற்பட்டு விட்டதால் பால் சுரப்பில் மாற்றம் ஏற்பட்டதுடன் அம்மாவிற்கு வைத்தியம் செய்ய வேண்டியிருந்ததால் குழந்தைக்கு பாலூட்டுவதை வைத்தியர் தவிர்க்க சொல்லிவிட்டாராம். இதனால் தாய்ப்பாலுக்கு நிகராக பசுப்பால் கொடுக்க சொல்லியிருக்கின்றார்கள. மற்றவர்களிடம் பால் வாங்குவதை விட நம் வீட்டிலேயே பசு இருந்தால் கலப்படமற்ற பால் கிடைக்கும் என வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது தான் எம்முடைய பசு லட்சுமி. லட்சுமிக்கும் ஒரு கன்று என் வயதில் இருந்தது அதற்கு சீதா என்று பெயர். இரு மாதங்களிலேயே தாய்ப்பால் நிறுத்தப்பட்டு நான் இரு வயது வரை குடித்தது லட்சுமியின் பால் தான். எனவே எனக்கு லட்சுமியும் ஒரு தாய் தான். சிறுவயது முதலே நான் கொழுமொழு என்று இருக்கின்றேன் என்றால் லட்சுமியம்மா தான் முக்கிய காரணம். சிறு வயதில் சில வேளைகளில் அம்மாவின் பெயரென்ன என்று கேட்டால் லட்சுமி என்றும் நான் சொல்வதுண்டாம். ஆனால் பெரியவளாகிய பின் நளினியுடன் முரண்பட்டு விட்டால் நீங்கள் என் அம்மா இல்லையே என்னுடைய அம்மாவின் பெயர் லட்சுமி என்றும் நான் கூறிக்கொள்வதுண்டு.
இன்னுமொரு ஒற்றுமையும் உண்டு. என்னுடைய பெயரான கேஷாயினி வடஇந்தியாவில் புழக்கத்திலுள்ளதொரு பெயர். இப்பெயர் பார்வதியினை குறிக்கின்றதாம். என் பெயரின் சொற்பிரிப்பும் சக்தி நிறைந்தவள் என்பதை குறிக்குமாம். இந்தப்பெயரில் பல சுலோகங்களும் உண்டு. இப்போது கோர்த்துப்பாருங்கள். லட்சுமி, பார்வதி என்று தொடர்பிருப்பது புரியும். எனவே இதில் ஆரம்பித்து மாடு வளர்பில் ஆர்வம் ஏற்பட்டு. இன்று பண்ணையில் பால் உற்பத்தி செய்யப்படுகின்றதுடன் தயிர், நெய் தயாரிப்புகளையும் நாம் மேற்கொள்கின்றோம். போதாதற்கு மட்டக்களப்பார்கள் உணவில் தயிரின் பங்கு உங்களுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும் மதிய உணவின் பின்னர் தயிர் சாப்பிடுவது என்பது எம் ஊரின் மரபும் கூட.
வீட்டில் பானையில் தான் தயிர் உறையிடப்படும். நானிருக்கும் நேரங்களில் அப்படியே தயிராடையை எடுத்து சீனியும் கொஞ்சம் உப்பும் போட்டு சாப்பிடுவதுண்டு....... ம்ம்ம்ம் அமிர்தம். அநேகமான நாட்களில் உணவின் பின்னர் அம்மா சோற்றுடன் தயிர் போட்டு பிசைந்து அனைவருக்கும் ஊட்டிவிடுவதுமுண்டு. வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் போகும் போது தயிர்ப்பானையும் கொடுத்துவிடுவதுண்டு. இதுவும் மட்டக்களப்பாரின் விருந்தோம்பலின் மரபாகும்.
சிலநேரங்களில் நான் தயிராடையில் கொஞ்சம் முகத்தில் பூசிக்கொள்வதும் உண்டு. பூசி ஒரு மணிநேரத்தின் பின்னர் இளஞ்சுட்டு நீரில் முகத்தினை கழுவிப்பாருங்கள் முகம் அவ்வளவு தெளிவாயிருக்கும். நிறைவுணவான தயிரும் தமிழரின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றாகும். இதற்கு பல இலக்கிய சான்றுகளுமுள்ளன.
- தயிர் செய்யும் முறை உவமையாகக் கூறப்பட்டிருப்பதனை புறநானூறு 276 வது பாடலில் "குட பால் சில் உறை போல" என்கின்ற வரிகள் உறைமோர் ஒரு துளி எவ்வாறு பாலின் தன்மையினையே மாற்றுகின்றது `என்பது பற்றியே குறிப்பிடுகின்றது.
- "முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்" (குறுந்தொகை 167 :1 பாடல்) தயிர் என்கின்ற சொல்லாடலிலேயே குறிப்பிடுகின்றது

No comments:
Post a Comment