தயிரும் தமிழும்!

இப்போது கொளுத்துகின்ற வெயிலுக்கு மிகவும் சிறந்ததொரு உணவு இந்த தயிர். பசு எப்படி கோமாதாவோ அப்படி அதன் பாலும் பல்வேறு நிலைகளிலும் பயன்படுகின்றதொரு பதார்தம்.  பாலை குடிக்கலாம். நன்றாக காய்ச்சி உறையிட்டால் தயிராக்கலாம், தயிறை மோராக உப்பு காரம் சேர்த்தும் பருகலாம், நெய்யாக்கலாம். இப்படி பாலின் பயன்கள் நீண்டுகொண்டே செல்லும். 

சிறுவயதிலிருந்தே என்னுடைய கல்வித்துறை தவிர்ந்து எனக்கிருந்த கனவுகளில் ஒன்று மாடு வளர்ப்பது. என்னளவில் யாருக்காவது ஒரு பசு மாடு இருந்தால் அவன் தான் பணக்காரன் என்பேன். அந்தளவு வீட்டிற்கு மாடு என்பது செல்வங்களுள் சேர்த்தியாகின்றது. நான் பிறந்த ஓரிரு மாதங்களிலேயே என்னுடைய தாயாருக்கு சுவாதக்குணம் ஏற்பட்டு விட்டதால் பால் சுரப்பில் மாற்றம் ஏற்பட்டதுடன் அம்மாவிற்கு வைத்தியம் செய்ய வேண்டியிருந்ததால் குழந்தைக்கு பாலூட்டுவதை வைத்தியர் தவிர்க்க சொல்லிவிட்டாராம். இதனால் தாய்ப்பாலுக்கு நிகராக பசுப்பால் கொடுக்க சொல்லியிருக்கின்றார்கள. மற்றவர்களிடம் பால் வாங்குவதை விட நம் வீட்டிலேயே பசு இருந்தால் கலப்படமற்ற பால் கிடைக்கும் என வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது தான் எம்முடைய பசு லட்சுமி. லட்சுமிக்கும் ஒரு கன்று என் வயதில் இருந்தது அதற்கு சீதா என்று பெயர். இரு மாதங்களிலேயே தாய்ப்பால் நிறுத்தப்பட்டு நான் இரு வயது வரை குடித்தது லட்சுமியின் பால் தான். எனவே எனக்கு லட்சுமியும் ஒரு தாய் தான். சிறுவயது முதலே நான் கொழுமொழு என்று இருக்கின்றேன் என்றால் லட்சுமியம்மா தான் முக்கிய காரணம். சிறு வயதில் சில வேளைகளில் அம்மாவின் பெயரென்ன என்று கேட்டால் லட்சுமி என்றும் நான் சொல்வதுண்டாம். ஆனால் பெரியவளாகிய பின் நளினியுடன் முரண்பட்டு விட்டால் நீங்கள் என் அம்மா இல்லையே என்னுடைய அம்மாவின் பெயர் லட்சுமி என்றும் நான் கூறிக்கொள்வதுண்டு. 

இன்னுமொரு ஒற்றுமையும் உண்டு. என்னுடைய பெயரான கேஷாயினி வடஇந்தியாவில் புழக்கத்திலுள்ளதொரு பெயர். இப்பெயர் பார்வதியினை குறிக்கின்றதாம். என் பெயரின் சொற்பிரிப்பும் சக்தி நிறைந்தவள் என்பதை குறிக்குமாம். இந்தப்பெயரில் பல சுலோகங்களும் உண்டு. இப்போது கோர்த்துப்பாருங்கள். லட்சுமி, பார்வதி என்று தொடர்பிருப்பது புரியும்.  எனவே இதில் ஆரம்பித்து மாடு வளர்பில் ஆர்வம் ஏற்பட்டு. இன்று பண்ணையில் பால் உற்பத்தி செய்யப்படுகின்றதுடன் தயிர், நெய் தயாரிப்புகளையும் நாம் மேற்கொள்கின்றோம். போதாதற்கு மட்டக்களப்பார்கள் உணவில் தயிரின் பங்கு உங்களுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும் மதிய உணவின் பின்னர் தயிர் சாப்பிடுவது என்பது எம் ஊரின் மரபும் கூட.  

வீட்டில் பானையில் தான் தயிர் உறையிடப்படும். நானிருக்கும் நேரங்களில் அப்படியே தயிராடையை எடுத்து சீனியும் கொஞ்சம் உப்பும் போட்டு சாப்பிடுவதுண்டு....... ம்ம்ம்ம் அமிர்தம். அநேகமான நாட்களில் உணவின் பின்னர் அம்மா சோற்றுடன் தயிர் போட்டு பிசைந்து அனைவருக்கும் ஊட்டிவிடுவதுமுண்டு. வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் போகும் போது தயிர்ப்பானையும் கொடுத்துவிடுவதுண்டு. இதுவும் மட்டக்களப்பாரின் விருந்தோம்பலின் மரபாகும்.

சிலநேரங்களில் நான் தயிராடையில் கொஞ்சம் முகத்தில் பூசிக்கொள்வதும் உண்டு. பூசி ஒரு மணிநேரத்தின் பின்னர் இளஞ்சுட்டு நீரில் முகத்தினை கழுவிப்பாருங்கள் முகம் அவ்வளவு தெளிவாயிருக்கும்.  நிறைவுணவான தயிரும் தமிழரின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றாகும். இதற்கு பல இலக்கிய சான்றுகளுமுள்ளன.

ஆகக் குறைந்தது 4500 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் தயிரின் பயன்பாடு தொடங்கிவிட்டதாகவும் இயற்கையான நுண்ணுயிரிகளால் தயிரானது நொதிபட்டிருக்கலாம் என்பதுவும் உலகளாவிய பொதுக் கருத்துகள். அதே வேளை சிந்துவெளி நாகரிகம் சிறப்புற்றிருக்கும் போதே, பாற் பொருட்கள் சிந்துவெளி மக்களின் உணவில் முகன்மை வகித்தது பற்றியும் ஏராளமான சான்றுகளுண்டு. சிந்துவெளி மக்களின் முதன்மையான உணவுகளாக இறைச்சியும் பாற்பொருட்களுமே இருந்ததாகவும் ஆய்வுகள் கூறுகின்றன {Akshyeta Suryanarayan et al. 2021. Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India. Journal of Archaeological Science }. இவை எல்லாம் ஆரியர்களும் அவர்களது சமஸ்கிரத மொழியும் இன்றைய இந்திய நிலப்பரப்புக்கு வருவதற்கு முன் நடந்தவையாகும். 
 
சங்காலப் பாடல்களிலேயே தயிருக்கான சான்றுகளுண்டு. 
  • தயிர் செய்யும் முறை உவமையாகக் கூறப்பட்டிருப்பதனை புறநானூறு 276 வது பாடலில் "குட பால் சில் உறை போல"  என்கின்ற வரிகள் உறைமோர் ஒரு துளி எவ்வாறு பாலின் தன்மையினையே மாற்றுகின்றது `என்பது பற்றியே குறிப்பிடுகின்றது. 
  • "முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்" (குறுந்தொகை 167 :1 பாடல்)  தயிர்   என்கின்ற சொல்லாடலிலேயே குறிப்பிடுகின்றது 
"செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து" (புறநா 119:3) ஈசலைத் தயிருடன் போட்டுக் கிளறி, உருவாக்கப்பட்ட உணவு பற்றி புறநானுறில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வாறு பழந் தமிழ் இலக்கியச் சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.                                      
 
 `தயிர்` என்பது `தை` என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது என்பது அறிஞரின் கருத்து. முள் தைப்பது போல (முள் குத்துவது போல) பிரைமோர் (உறைமோர்) பாலினைத் தைப்பதால் ஏற்பட்ட பெயராகும். இங்கு `பிரைகுத்துதல்` / ``உறைமோர் குத்துதல்` எனப் பாலில் உறைமோர் கலக்கும் செயலினைக் கூறுவதனை உற்று நோக்குக {குத்துதல் =தைத்தல்}.

தை> தயி > தயிர் எனவே `தயிர்` என்பது தமிழிலேயே வேர்ச்சொல்லினைக் கொண்ட தமிழ்ச் சொல்லே! வேண்டுமானால் தயிரிலிருந்து `ததி` என்ற சமஸ்கிரதச் சொல்லும் பின் அதன் வழி `தஹி` என்ற இந்திச் சொல்லும் வந்திருக்கலாம். 
 
தயிருக்கான பால் பசுவிலிருந்தும் எருமை மாட்டிலிருந்தும் எடுக்கப்படுவதண்டு. இரண்டுக்கும் கெட்டித்ன்மை மற்றும் மணத்தில் தான் வித்தியாசம் காணப்படும். பாரம்பரியமான இந்த தயிர் உடல் சூட்டினையும் தணிக்கின்றதானதொரு உணவு. மட்டக்களப்பில் திருமணம், குழந்தைக்கு பெயர் சூட்டல், சாவீட்டின் சடங்கு என்பவற்றிலெல்லாம் தயிருக்கு இடமுண்டு. கோயில் நிகழ்வுகளிலும் தயிர்த்தண்ணி கொடுக்கும் வழக்கத்தை மட்டக்களப்பின் பெரும்பாலான இடங்களில் காணலாம். அதிலும் மட்டக்களப்பு படுவான்கரைத் தயிருக்கு நிகர் வேறில்லை. 
 
சுத்தமான தயிர் வேண்டுமென்றால் என்னுடைய மண்ணுக்கு வாருங்கள்.  ஆனாலொன்று நல்லா தயிரை வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு எழுந்து நடக்கமுடியாமல் சுருண்டு படுத்து விட்டு நாம் தான் பாயோடு ஒட்ட வைத்தோம் என்று மட்டும் சொல்க்கூடாது. 

No comments:

Post a Comment

பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை