Showing posts with label வினா. Show all posts
Showing posts with label வினா. Show all posts

வினாக்களுக்கான பதில்கள் 02



 முற்பகுதி 

 
வினா 03: 
மீரா நீங்கள் கோவக்காரி, பிடிவாதக்காரி என்றறிந்தேன் இதில் உண்மையுள்ளதா? கோபம் போன பின் என்ன செய்வீர்கள்? உங்கள் சமூகஊடகங்களை பின்தொடர்ந்த வகையில் அப்படித்தெரியவில்லையே அன்பே….

பதில் : சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்தால் தெரியாது தான். என்னை நேரில் தொடர்ந்தால் தான் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். எல்லோரும் நடத்தைப் பிறழ்வு காட்டுவது போன்று நானும் சிலநேரங்களில் அந்நியன் போல் நடப்பதுண்டு. நீங்கள் அறிந்ததை போன்று கோபம், பிடிவாதம் கொஞ்ஞ்ஞ்ஞ்…….சம் கூட தான். ஆனால் எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும், எல்லோரிடமும் நான் கோபம் கொள்வதில்லை, பிடிவாதம் பிடிப்பதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது மாதிரி எப்போதாவது கோபத்தின் உச்சத்திற்கு போவதுண்டு. நிச்சயம் இச்சந்தர்ப்பங்களில் சுற்றியுள்ளவர்களை ஆழமாக காயப்படுத்துவதும் உண்டு. ஆனால் பிடிவாதம் மட்டும் எப்போதும் உண்டு. சின்னச்சின்ன விடயங்களில் கூட பிடிவாதம் பிடிப்பதுண்டு. நான் குழப்படி செய்து அம்மாவிடம் வாங்கிய அடிகளை விட பிடிவாதம் பிடித்து வாங்கிக்கட்டிக்கொண்டவை அதிகம். 


அநேகமாக கோபத்தில் யாரையாவது காயப்படுத்திவிட்டால் கோபம் குறைந்த பின் தனியே இருந்து அழுவதுண்டு. இன்னும் மனதிற்குள் சஞ்சலம் இருந்தால் கடற்கரைக்குச் சென்று காலார நடப்பதுண்டு. அதுவே நெருக்கமானவர்களை காயப்படுத்தி விட்டால் ஏதாவது கிறுக்குவதுண்டு. 
மிகவும் சலிப்பான நேரங்களில் ஏதாவது பேரூந்தில் ஏறி அது பயணிக்கும் கடைசி இடம் வரை பயணித்து அங்கு இறங்கி எங்காவது ஓரிடத்தில் நல்ல கோப்பி ஒன்று குடித்துவிட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு வருவேன். எப்போதும் மன சஞ்சலங்களை காயப்படுத்தல்களை ஆசுவாசப்படுத்துவதில் கோப்பி, பயணம், கடல், வர்ணங்கள் என்பவற்றிற்கு பாரிய பங்குண்டு.
 

என்னுடைய கோபம் பற்றி அறிய வேண்டும் என்றால் என்னுடைய அலுவலகங்களில் கேட்டுப்பாருங்கள். கோபத்தில் விசிறியடிக்கின்ற தாள்களை அநேகமாக சேர்த்தெடுப்பவர்கள் அவர்கள் தான். இனிமேல் என்னைத் தெரிந்துகொள்ள சமூக ஊடகங்களிலன்றி நேரில் தொடருங்கள் அன்பே…. சிலநேரங்களில் நீங்களும் வாங்கிக்கட்டிக்கொள்ள கூடும். 


வினா 04: எப்போது நல்ல செய்தி சொல்லப்போறீர்கள்? மனம் + மனம் திருமணம் மூன்றாம் பாகம் எப்போது வெளிவரும்?

பதில்: அநேகமாக அடுத்த வருடம் பல நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். மகரராசிக்கு இனித்தான் நல்ல காலம் பிறக்கவுள்ளதாம் என்று சோதிடரும் சொல்கின்றார். வாழ்க்கை நடப்பும் அப்பிடித்தான் சொல்கின்றது. 

விரைவில் எழுதுகின்றேன் நண்பி. காலம் நேரமும் கூடி வரவேண்டுமல்லவா……. முதல் இரு பாகங்களும் இரு தலைமுறையின் கதைகள். முடிந்து போன பின் எழுதப்பட்ட கதைகள். ஆனால் இனி எழுதவுள்ள மூன்றாம் பாகம் நடந்துகொண்டிருக்கும் கதை. முடிவினை அறுதியிட்டு கூற முடியாத கதை. எனவே மூன்றாம் தலைமுறையினதை எழுத நேரம் அதிகம் தேவைப்படுகின்றது. அதனால் தான் தாமதமாகின்றது.

வினா 05: முன்னைய காலங்கள் போன்று தற்போது கவிதைகள் எழுவதில்லையா மீரா? உங்கள் கவிதைகளின் வரிகளைத் திருடி காதல் வளர்த்தவன் நான்….. 

பதில்: கவிதை எழுத மனதுள் மெல்லிய உணர்வு வேண்டும். தற்போதெல்லாம் வன் உணர்வகள் தான் பெரும்பாலும் தலைதூக்கி நிற்கின்றன. ஊடகவியலும் பொறியியலும் தான் தற்போது என்னை நீரோட்டத்தில் இழுத்துச்சென்று கொண்டிருக்கின்றன. பரபரப்பும் அழுத்தமும் நிறைந்ததாக என் நாட்கள் நகர்கின்ற இதில் கவிதை வருவதெப்படி? 

பரவாயில்லையே தெரிந்தோ தெரியாமலோ பல காதல்கள் என் கவிதையால் வாழ்ந்துள்ளன, வளர்ந்துள்ளன என்பது பெருமையே… அதுசரி நீங்கள் இன்னும் கவிதைகளை மட்டுமா கொடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்… வளர்ந்த / வளர்த்த காதல் என்னாச்சு?  ஆத்மார்த்தமாக கதைப்பதென்றால் இதில் சில கவிதைகள் என் நண்பர்கள் தங்கள் காதலர்களுக்கு கொடுப்பதற்காக கேட்டு நான் எழுதிய கவிதைகள். சிலது எனக்கே எனக்கானவை….. 





வினாக்களுக்கான பதில்கள் -01

 

வணக்கம் நண்பர்களே>

நீண்ட நாட்களின் பின்னர் நேரங்கிடைத்துள்ளது. பயணங்களினாலும் குடும்பத்திற்கான நேர ஒதுக்கல்களினாலும் நிரம்பிவிட்டது என்னுடைய நாட்குறிப்பு. இந்த இடைவெளியில் 177 வினாக்களை அனுப்பியுள்ளீர்கள். அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றிகள். அதில் பெரும்பாலானவை ஒத்த தொனியிலானவை மேலும் சில பதிலளிக்க முடியாதவை.  எனவே அனுப்பியவற்றிலிருந்து பதினைந்து முக்கிய கேள்விகளை தேர்ந்து அதற்கு பதிலளிக்க விழைகின்றேன். 

வினா 01: மீரா நீங்கள் இரு கைகளாலும் எழுதுபவர். வரைபவர் என்று அறிந்தேன் உண்மையாகவா? AK எனும் பெயரில் நீங்கள் பல வருடங்களாக வரைந்து வந்ததாகவும் தற்போது வரைவதில்லை என்றும்> உங்கள் ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் அறிகின்றேன். இது உங்கள் காதலுடன் தொடர்புடையது என்றும் கூறப்படுகின்றதே இவையெல்லாம் உண்மையா?

பதில்: பரவாயில்லையே நண்பரே என்னை குறித்து ஆய்வே செய்துள்ளீர்கள் போல. நீங்கள் அறிந்தது உண்மையே. ன்னால் இரு கைகளாலும் வரைய முடியும். ஆனால் இடது கையால் தெளிவாக எழுத முடியாது. இவ்வாறு இரு கைகளாலும் எழுதுபவர்கள் உலகில் ஒரு சதவீதமானவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. எம்மைப் போன்றவர்கள் 

Ambidexterity என்று அழைக்கப்படுகின்றார்கள்.  AK  எனும் பெயரில் கிறுக்கியுள்;ளேன். பpன்னர் அவற்றினை முற்றாக நீக்கியதும் நானே. கடந்த வருடம் சில கிறுக்கியுள்ளேன். என்னுடைய இன்ஸ்ராகிராமில் உள்ளது. அதனை மீண்டும் கடந்த ஆகஸ்ட் 8 உடன் நிறுத்தி விட்டேன். ஓவியம் என்பது என்னளவில் மனதுடன் இணைந்த விடயம். மேலும் கட்டடப்பொறியில் சார் ஓவியங்கள் மட்டும் வரைகின்றேன். வரைவேன். ஆக நீங்கள் அறிந்தவை உண்மையே. எப்போதும் கலைஞர்கள் ஒவ்வொருவருள்ளும் ஒரு கிறுக்குபுத்தி ஒளிந்திருக்கும் என்பதையும் உங்களுக்கு சுட்டவிரும்புகின்றேன். இவ்வாறு நான் மட்டுமல்ல வரலாற்றில் பலர் செய்துமுள்ளார்கள். சுய அழிப்பு இது. 

வினா 02: நீங்கள் உங்கள் வாழ்வில் மிகவும் கேவலமான மனிதரை சந்தித்தித்துள்ளீர்களா?

பதில்: நான் கேவலமான மனிதரை சந்திக்கவில்லை. நான் சந்தித்தவர் கேவலமானவர். ஓரு கதை சொல்லவா? 

ஒரு இளம் பெண்> படித்த> பண்பான குடும்பத்தினை சேர்ந்தவள், குடும்பத்தில் பல ஆண் சகோதரர்களுக்கு ஒரு பெண்ணாக பிறந்தவள் அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஒருவரை அடிக்கடி சந்திக்கின்றாள். அவரைப் பற்றிவிசாரிக்கும் போது அவருக்கு காதலி இருப்பதாக அறிகின்றாள். தனக்கும் அவருக்குமான வயது வித்தியாசம் பற்றியும் தெரிந்துகொள்கின்றாள். விலகி நடக்கின்றாள். இருவருமே ஒரு தளத்தில் இயங்குபவர்கள். ஆக விரும்பியோ விரும்பாமலோ குறித்த நபர் பற்றிய விடயங்கள் அவளுக்கு அறியக்கிடைக்கின்றது. சில மாதங்களின் பின்னர் அவர் வேற்றின பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அறிகின்றாள். திருமணம் அன்றும் யாருக்கும் தெரியாமல் அந்த நிகழ்வில் அண்மித்திருந்து அழுகின்றாள் கடந்து விடுகின்றாள். ஆனால் சிலரின் மனம் கண்ணாடி இல்லை தானே மாற்றி மாற்றி முகம் பார்த்துக்கொள்வதற்கு. இதே காலப்பகுதியில் அரசியல் காரணங்கள், தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகளால் வெளிநாடு சென்று விடுகின்றாள். மீண்டும் அவள் நாடு திரும்பும் போது நிகழ்வொன்றில் அவளைக்காணும் குடும்பமொன்று தானாகவே வீடேறி பெண் கேட்க வீட்டவர்களின் விருப்பத்திற்கு தலையசைத்துவிடுகின்றாள். ஆனால் எல்லாம் பொருந்திய அந்த திருமண ஒழங்கில் இருவருக்கும் மணப்பொருத்தம் குறைவாகவிருக்கின்றது. இதனால் நிச்சயார்த்தம் பிற்போடப்படுகின்றது. தளும்பலுடன் நகர்கின்றது இந்த உறவு. இப்படியிருக்கும் கால கட்டத்தில் ஒரு பயிற்சியில் மீண்டும் அந்த முதல் நபரை எதிர்பாராமல் சந்திக்கின்றாள். அந்த பயிற்சியின் மூன்று நாட்களும் மிகுந்த பதற்றத்துடன் எதிர்கொள்கின்ற அவள் அந்த நபர் விவாகரத்து பெற்றுவிட்டதை எதேச்சையாக அறிகின்றாள். மீண்டும் மனம் முருங்கை மரமேறி விடுகின்றது. ஆனால் எந்த கட்டத்திலும் காயப்படுத்திவிடவோ அவரது பழைய காயங்களை பற்றி பேசிடவோ விரும்பாது பழக ஆரம்பிக்கின்றாள். பின்னர் தான் அவருக்கும் பல பெண்களுக்குமான உறவுகளை புரிந்தும் தெரிந்தும் கொள்கின்றாள். இதனால் அவர் மனஆழுத்தங்களால் காயப்படுத்தும் போதெல்லாம் தாங்கிக்கொள்கின்றாள். இதன் போது அவரின் கடுஞ்சொற்கள்> தூக்கியெறிதல்கள் > அவமானப்படுத்தல்கள் என எல்லாவற்றினையும் கடக்கின்றாள்.

ஆனால் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? ஓரிரவு இந்தப்பெண் விருது பெறும் நிகழ்வில் தன் மாணவியுடன் கலந்துகொள்கின்றாள். இதன் போது முகநூலில் அந்த நபர் மாணவியுடன் உரையாடுவதை அறிகின்றாள். அந்த மாணவியும் வேற்றினத்தை சேர்ந்தவர்> விவாகரத்து > பல தொடர்புகள் என பிரச்சினைகளுக்குறியவர். இருவரும் நள்ளிரவில் உரையாடுகின்றனர். இங்கு அந்தப் பெண்ணைப்பற்றி அந்த நபரும் அந்தப்பெண்ணின் மாணவியும் பேசிக்கொண்டது மிக முக்கியமானது. ஆனால் அறமும் நேர்மையுமற்ற உரையாடல் அது. தன்னிடம் அந்தப்பெண் விருப்பம் கேட்டதாகவும் தான் இல்லையென்று சொன்னதாகவும், அந்தப்பெண்ணுக்கு வேறு யாரும் கிடைக்காமல் தன் பின்னால் அலைவதாகவும் சொல்லிவிடுகின்றார் அந்த நபர். இதனை அந்த மாணவி அந்தப்பெண்ணை அவமானப்படுத்தும் நோக்குடன் பொதுவில் சொல்லி விடுகின்றாள்.

போராட்ட குணம் கொண்ட அந்தப்பெண் தனக்கு நடந்ததை உரத்துசொல்லியிருக்க முடியும். ஆனால் அந்த நபர் பிறந்தநாளன்று காயப்படுத்திவிடக்கூடாதென நினைத்து சில நாட்களின் பின்னர் இது குறித்து மின்னஞ்சல் செய்கின்றாள். இன்று வரை அந்த நபர் அந்தப் பெண்ணிடம் ஒற்றை மன்னிப்பு கூட கேட்கவில்லை. இதை விட முரண் என்னவென்றால் சமூக ஊடகங்களில் நீதி. நேர்மை என்று வெட்டிப்பிளக்கும் அந்த நபர் தான் செய்த நேர்மையற்ற செயலை எண்ணி தலை குனியாதது.

ஆனால் இதற்குப் பின்னரும் சமூக ஊடகத்தில் இந்த நபரைப்பற்றி தரக்குறைவாக பேசப்பட்ட போது அந்தப்பெண் தன்னுடைய சுயகௌரவத்தினையும் மீறி இந்த நபருக்கு அழைப்பெடுத்துள்ளார். அதற்கும் பதிலளிக்கவில்லை. கள்ளமனங்கள் அப்படித்தானிருக்கும். தன் முன்னால் தான் விரும்பிய நபர் அவமானப்படுவதை பொறுக்காது தற்காலிகமான தன்னுடைய சமூக ஊடகங்களை அப்பெண் நிறுத்தி விடுகின்றாள். அப்போது கூட தன்னுடைய முகநூலில்  “எல்லாம் சுபம்” என்று அந்த நபர் பதிவிடுகின்றார்.

நீங்களும் கூட அவர் சொன்னது போல அவளுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை என்பது தான் சரி என்று நினைக்கின்றீர்களா? அல்லது அந்தப்பெண்ணுக்கு குறையுள்ளது என்பது உங்கள் அபிப்பிராயமா? அந்தப்பெண் இந்த வருடம் உலகில் உள்ள வடிவமைப்பாளர்களில் 100 பேருக்குள் வந்துள்ள அறிவாளி> அவளுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளவர் இன்னும் சில வருடத்தில் உலகின் தலைசிறந்த சந்திரசிகிச்சை நிபுணராகவுள்ளவர். பல சந்தர்ப்பங்களில் இப்படித்தான் நம்மிடம் எளிமையாக நடமாடுபவர்களை> எளிமையாக உடுத்துபவர்களை> அதீத அன்பாக உள்ளவர்களை குறைத்து மதிப்பிட்டு விடுகின்றோம். தில் கறைபட்டாலும் கழுவிவிட இரசாயனம் இருக்கின்றது. ஆனால் மனதில் ஒரு கேவலமானவனை நினைத்து அதற்காக சுயகௌரவம் இழந்து இன்று வருத்தப்படுகின்ற அந்த பெண்ணின் மனதை கழுவ ஏதும் மருந்திருக்கின்றதா? இப்போது சொல்லுங்கள் அந்த மனிதன் கேவலமானவர் இல்லையா? குறைந்த பட்சம் தான் செய்த தவறை கூட உணராதவன் மனிதனுள் அடங்குவானா? இது நமக்கு தெரிந்ததொரு சம்பவம். இதனைப் போன்று எத்தனை பெண்களின் வாழ்க்கை இவரால் சீரழிக்கப்பட்டிருக்கும்? இரவில் 10.45க்கு ஒரு பிரச்சினைக்குறிய பெண்ணிடம் தன்னை நேசித்த பெண்ணைப் பற்றி அறமின்றி கதைப்பவன் எப்படி நேர்மையாளனாக இருக்க முடியும்?

இவரைத்தான் நான் சில வருடங்களுக்கு முன்னர் வீதியோர போராட்டத்தில் முதன்முறை சந்தித்திருந்தேன்.

மீதி வினாக்களுக்கான விடை சில தினங்களில்....  

 

 

 

சில வினாக்கள்….


எல்லோருடைய மனதிலுமே நிச்சயம் எப்போதும் சில வினாக்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். வினா இல்லா மனம் வெற்றுத்தாளுக்கு சமம் என்று கூட கூறலாம். சில வினாக்களுக்கு விடைகள் இருப்பதில்லை. காரணம் இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தவனான கடவுள் வாய் திறப்பதில்லை என்பதால்.. இன்னும் சில வினாக்களுக்கு தேடியலைந்து விடையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். விடைகள் சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கக்கூடும். மேலும் சில கேள்விகளுக்கு பதிலே தெரியாமல் இருப்பது நல்லதே என்று கூட நினைக்கத் தோன்றும்.

இந்தப் பதிவில் நான் சொல்ல விழைகின்ற விடயம் “ நாம் ஒர் விடயத்தினை செய்யும் முன் எம்முள் வினா எழ வேண்டும்” என்பதே. அண்மையில் என் நண்பருக்கும் எனக்குமிடையில் முகநூலில் கருத்து பகிர்வது தொடர்பில் சிறு பிரச்சினை ஒன்று தோன்றியிருந்தது. நான் முகநூலில் இட்ட பதிவினை அவர் இருமுறை நீக்கிவிட்டார். நான் ஏன் என கேட்ட போது தன்னுடைய சகோதரன் யாரென கேட்பார் என பதிலளித்தார். நான் எதிர் கேள்வியாக மற்றவர்கள் “Dear” போடுவதைப் பற்றி அவர் கேட்கமாட்டாரா? என்று கேட்டு மூன்று நாட்களாக போரொன்றையே (????) தொடுத்திருந்தேன். இது மிகச்சிறியதொரு விடயம் ஆனால் என்னைப் மிகவும் பாதித்தது மட்டுமல்லாது நிறைய சிந்திக்கவும் கூட தூண்டிய விடயம்
போரின் இறுதிகட்டத்தில் அவரை வார்த்தைகளால் நான் காயப்படுத்திய தருணத்தில் என் மனதில் சில கேள்விகள் எழுந்திருந்தன. அவற்றிற்கான விடையை காண முயன்ற வேளை உரிமைச் சண்டை போட தோனவில்லை. சமாதானமாகி விட்டேன். ஆனால் சில உறுதியாக முடிவுகளுடன்….

அப்போது தோன்றியதொரு விடயம்  இக் கேள்விகள் எனக்கு ஏன் முன்பே தோன்றவில்லை என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறான உறவுகளுக்கிடையான சிறு விரிசல்களை போக்குவதற்கும், பல சந்தர்ப்பங்களில் சங்கடப்படாமல் இருப்பதற்கும் சில வினாக்கள் எம்முள் தினம் எழ வேண்டும்

•    (நான்) யார்?
•    எங்கு?
•    ஏன்?
•    எப்போது?
•    எதற்காக?
•    விளைவு என்ன?

இவை எம் மனதில் ஒன்றை செய்யும் முன்போ அல்லது ஒரு விடயத்தை பேசும் முன்போ எழுமாகவிருந்தால் எவ்வளவோ பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம். வீண் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் அல்லது மிகமுக்கியமாக அடுத்தவர் மனதை புண்படுத்துவதை தடுக்கலாம்.

கல்வியில் கேள்விக்கான பதில்கள் எம் அறிவை பெருக்குகின்றன. வாழ்க்கையில் எம்முள்ளான கேள்விகள் எம்மை செதுக்குகின்றன.


பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை