Showing posts with label சந்தேகம். Show all posts
Showing posts with label சந்தேகம். Show all posts

புரிதலும் பிரிதலும்

எனது இறுதிப்பதிவில் சந்தேகம் எனும் நோய் என்ற தலைப்பில் சில உளவியல் தொடர்பான விடயங்களை கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியானதான மேலும் சிலதை இன்று பகிர விரும்புகின்றேன். நான் அந்தப் பதிவினை பதிந்த வேளை சந்தேகத்தினால் ஊசலாடிக் கொண்டிருந்த என் பல்கலைக்கழக நண்பன் - நண்பியின் காதலினையும் அவர்களிடையான பிரிவிற்கான சில விடயங்களையும் கருத்தில் கொண்டு முன்வைத்திருந்தேன்.

உண்மையில் பல்கலைக்கழக காலம் என்பது வாழ்வில் மறக்க முடியாத பல நினைவுகளை கொண்டிருக்கும். பரீட்சைகள் , விரிவுரையாளர்களின் அறுவைகள் , ஆய்வுகூடத்தில் நடத்தும் கூத்துக்கள் என பல சுவாரஸ்யங்களுடன் பல நல்ல நண்பர்கள் சில வேளை அந்த நட்புகளே காதலாகி கனிவது முதல் பல இனியவைகள் என்றும் மறக்கமுடியாதவை. 
எங்களது பொறியியல் பிரிவிலும் ஒரு குழாம்; இருக்கின்றது. மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக மொத்தம் ஆறு பேர். அதில் ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று விட மீதியாக நாங்கள் ஐந்து பேர். எங்கள் குழுவிலும் ஒரு காதல் சோடி இருந்தது…( இங்கு இறந்தகாலத்தினை பாவிப்பதற்கு காரணம் அவர்கள் காதல் கடந்த கிழமையுடன் இறந்து விட்டது) நாங்கள் ஐவருமே சமூகத்தில் பொறுப்பான பதவி வகிப்பபவர்கள். எங்கள் இலட்சியங்களுக்காக மட்டுமே பொறியியலினை தெரிவு செய்துள்ளவர்கள். அனைவரும் கட்டடப்பொறியியல் தான் பயில்கின்றோம். பொறியில் என்றாலே பெரிய சுமை அதிலும் கட்டடப்பொறியியல் கேட்கவே வேண்டாம். கூடவே எங்கள் பணிகளும் எம்மை அழுத்துவதால் சில வேளைகளில் ( 24 வயதில் இது பெரியதொரு தியாகம்) கடலை போட கூட நேரம் கிடைப்பதில்லை. எம் குழுவில் நானும் இன்னொருவரும் கொஞ்சம் அமைதியானவர்கள் மற்ற நண்பன் கொஞ்சம் கலகலப்பானவர். அவரும் இன்னொரு நண்பியும் தான் காதலித்துக்கொண்டிருந்தார்கள். சிறு சிறு சந்தேகங்களினால் இன்று பிரிந்தும் விட்டார்கள். என்னவில் என் நண்பனைப் பிரிந்தது என் நண்பியின் துரதிஷ்டம் என்று தான் கூறுவேன். நான் கூட அவருடைய புரிந்துணர்வு, சிறு விடயங்களில் கூட காட்டும் அக்கறைகள், எவ்வளவு வேலைப்பளு இருப்பினும் அவளுடன் கதைக்காது இருப்பதில்லை போன்ற விடயங்களைப் பார்த்தும் பொறாமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு அக்கறையான, பாதுகாப்பான ,புரிந்துணர்வுடைய காதலை இன்று பார்ப்பது மிகமிக அரிது. ஏன் இவருடைய முகநூல் பாஸ்வேட்டை கூட தன் காதலிக்கு கொடுக்கின்றளவு நேர்மையான ஒருவர்.

நான் முன்னரே கூறியது போல் இரவு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பினால் வந்த சந்தேகம், அவனின் நண்பியினுடனான உறவில் ஏற்பட்ட சந்தேகம் என்பன இன்று விரிசலாகவே மாறிவிட்டது. இங்கு பார்வையில் தான் பிழை இருந்ததே தவிர என் நண்பனில் பிழை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இன்று இரு துருவங்களாகிவிட்ட இவர்களின் காதலை கனக்கும் மனதுடன் வேடிக்கை பார்க்கத்தான் எம்மால் முடிகிறது.
ஆனால் இதிலும் கூட பல பாடங்கள் உண்டு. ஒருவரை தெரியும் முன் யோசிக்க வேண்டும். நாம் கலகலப்பான பல ஆண் பெண்களுடன் பழகுபவர்களாயின் நம்மைப் புரிந்துகொள்பவர்களாக தெரிவுசெய்ய வேண்டும். நல்ல நட்புகளைக் கூட வேறு அர்த்தம் கொள்பவர்கள் நமக்கும் நமது தொழிலுக்கும் பொருத்தமற்றவர்களாயின் ஆரம்பத்திலேயே விலகிவிட வேண்டும்.

பழகிய பின் பிழை பிடித்து அடுத்தவர்களுக்கு வலிகொடுத்து விலகுவதை விட பழகும் முன்பே புரிந்துகொண்டு பழகுவது நல்லது

(யாரை முன்வைத்து எழுதினேனோ அவர்கள் என் எழுத்தினை வாசித்தும் இருவரையும் என் எழுத்து கூட சுடவில்லை என்பதும், நன்றாக புரிந்துகொண்டு உண்மையாக நேர்மையாக நடப்பவர்களுக்கு காதல் வாழ்க்கை அமைவதில்லை பலமுகங்களுடன் பலருடன் பழகுபவர்களது காதல் தான் கடைசி வரை நிலைக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. கடவுளை ஒரு வேளை கண்டால் அவனிடமும் இதற்கான காரணத்தினை நான் கேட்க வேண்டும்)

சந்தேகம் எனும் நோய்…..


இன்று உளவியல் தொடர்பானதொரு விடயத்தினை தொட்டுச்செல்ல நினைக்கின்றேன். வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும் ஒன்று. ஏன் நாம் பிறந்தது இந்தத் தாய்க்குத் தான் என்பது கூட நம்பிக்கையில் தான் தொடங்குகின்றது. அந்த நம்பிக்கை தான் இவர் என் தந்தை என்பது தொடங்கி அனைத்திலும் தொடர்கின்றது. அதற்காக “இவரை அவ்வளவு நம்பினன் ஏமாற்றிவிட்டார்” என்று யாராவது சொன்னால் அவர்களது மண்டையில் 100 தடவை குட்டவேண்டும். நம்பிக்கை என்பதும் மண்குதிரையை நம்பி மோசம் போறதும் வேறு விடயங்கள்.

ஓகே நம்மோட சப்டருக்கு போவம். பொதுவாக இந்த நம்பிக்கை என்ற விடயம் இன்று காதலர்கள், தம்பதியர் மற்றும் நண்பர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றியே கூற விரும்புகின்றேன். அதிலும் குறிப்பாக காதலர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எவ்வாறு விளைவுகளை தோற்றுவிக்கின்றது என்பதை நான் கூறுவதே என் வயதிற்கு பொருத்தமானது என நான் நினைக்கின்றேன். இவ்வாறான உறவுகளிடையே நம்பிக்கையிழந்து சந்தேகம் தோன்றுவதற்கு சில விடங்களை உளவியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

•    உறவுகளிடையேயான தாழ்வுணர்ச்சி
•    சிறுவயது தாக்கங்கள்
•    தம்மை கொண்டே அடுத்தவரையும் மட்டுக்கட்டுவது.

இந்த முதலாவது விடயத்தினை சரிசெய்ய சந்தேகப்படும் நபரை சூழ இருப்பவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அந்த நபரிடம் அவருக்கேயுரிய விசேட இயல்புகளை அடுத்தவரோடு ஒப்பிட்டு அவர்களுக்கான தனித்தன்மைகளை விளங்கிக் கொள்ள செய்து உறவுகளுக்கிடையான நம்பிக்கையினை வளர்க்க முடியும்.

இரண்டாவது வகையினரை கட்டாயம் உளவியல் வைத்தியரிடம் அழைத்து செல்ல வேண்டும. இதனை நன்றாக கையாளத் தெரிந்த ஒருவரால் தான் சிறுவயதில் ஏற்பட்ட மனக்காயங்களை கண்டறிந்து சரிசெய்ய முடியும்.பக்குவம் இல்லாதவர்கள் இதை அணுகுவதை விட அனுபவம் கொண்டவர்களால் இதனை குணப்படுத்த முடியும்.

மூன்றாவது விடயம் தான் இன்று எனது முக்கிய கருப்பொருள். இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகின்றபொரு விடயம். தான் கள்ளனாயிருப்பதால் அடுத்தவரையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது. தான் இரவில் அடுத்தவருடன் தொலைபேசியில் கதைத்துப் பழகியவனுக்கு அடுத்தவர்களும் இவ்வாறு தானிருப்பார்கள் என்றதொரு பயம் இருக்கும் தான் பலருடனும் தவறாக இரட்டை அர்த்தத்தில் பழகினால் நம்மைச் சார்ந்தவர்கள் அடுத்தவருடனும் இவ்வாறு தான் பழகுகின்றார்களோ என்றதொரு பயமிருக்கும். நமக்கு அடுத்தவர்களுடன் நல்லதொரு உறவு இருக்குமானால் எம்மவர்களின் நட்பின் தூய்மைதான் கண்ணுக்குத் தெரியும். இன்னும் சிலர் ஏதோ தான் மட்டும் வானத்திலிருந்து அப்படியே குதித்த பரிசுத்தர்கள் போலவும் அடுத்தவர்கள் சேற்றிலேயே இருப்பவர்கள் போலவும் காட்டிக் கொள்வார்கள். இப்படியானவர்களுக்கு அதிக சந்தேகம் அடுத்தவர்களிடம் இருக்கும். காரணம் வெளியில் காட்டிக்கொள்வது ஒரு முகம் உண்மை முகம் வேறு. இன்னொரு பகுதியினர் தம்மிடம் பழகுபவர்கள் நல்லவர்கள் என்றும் அடுத்தவர்களுடனான உறவுகள் மட்டும் பிழையானதென்றுத் தப்பர்த்தம் செய்து கொள்வார்கள். இதற்கும் மேற்கூறியதே காரணம் கூடவே தம்மை நல்லவர்கள் என்று நியாயப்படுத்திக்கொள்வதற்கும் இவ்வாறு கூறிக்கொள்வார்கள். இவ்வானவர்களிடம் நம்மை நிரூபிக்க முயல்வதை விட மௌனமாக விலகுவது சிறந்தது. அல்லது தமது தோல்விகளை குறைகளை மறைக்க அடுத்தவர்களை கெட்டவர்களாக சித்தரிக்க முயல்வார்கள்.

நான் முதல் பதிவுகளில் கூறியுள்ளதினைப் போன்று வாழ்க்கைத் தெரிவுகளை மேற்கொள்ளும் போது மிகவும் நேர்த்தியாகவும் , அதிக நேரம் எடுத்தும் வாழ்க்கை துணையை தெரிவுசெய்யுங்கள். ஏனென்றால் வாழ்வை ஒரு தடவை தான் வாழப் போகின்றோம்.(இது எமது வாழ்க்கை முறைக்கானது. மேலைத்தேய வாழ்வு வாழ்பவர்களுக்கல்ல). நமது துணையென்பது அழகானது, அறிவானது என்பதை விட புரிந்துகொள்பவர்களாக இருப்பது மிகமுக்கியமல்லவா? அல்லது எல்லாம் இருந்தும் வாழ்க்கை சூனியமானதாக தெரியும்.



நானும் காதலிக்கின்றேன்…

ஏன் நீ காதலிக்கவில்லை
என் நண்பர்கள் கேட்கிறார்கள்?
யாரோ இரசியமாக இருக்கிறார்கள்….
திமிர்…
ஈகோ…
உயர்ந்தவனை தேடுகிறேன்…
அழகானவனை தேடுகின்றேன்…
வீண்பிடிவாதம் - என
என் சுயம் பற்றிய
வாதங்கள் ஆயிரம்
அவர்களிற்குள்…

யார் சொன்னது
நான் காதலிக்கவில்லையென்று
நானும் காதலிக்கின்றேன்…
உயிர்வரை காதலிக்கின்றேன்…

இயற்கையை காதலிக்கின்றேன்
எனக்கு மனவமைதி தருவதால்
புத்தகங்களை காதலிக்கின்றேன்
என்னுடன் அவை மௌனமாக பேசுவதால்
இசையை காதலிக்கின்றேன்
காயங்களை வருடிவிடுவதால்
என் வீட்டு செல்லப்பிராணிகளை காதலிக்கின்றேன்
அவை என் அன்பை சந்தேகிப்பதில்லை
பொம்மைகளை காதலிக்கின்றேன் -அவை
என்னை இன்னொருவருடன் இணைத்துப் பேசுவதில்லை
என் தொழிலை நேசிக்கின்றேன்
அது உண்மையாக இருப்பதால் - ஏன்
என் வலிகளை கூட காதலிக்கின்றேன்
என்னை அவை செதுக்குவதால்….

உயர்ந்த
அழகான
அறிவுள்ள
பகுத்தறிவுள்ள மனிதனை
காதலித்து ஏமாறுவதை விட
என்றும் நிறம்மாறிடாத
என் காதல் அழகானது…..
அர்த்தமுள்ளது….


எதை புரிதல் என்கிறாய்......?


எடுத்ததற்கெல்லாம் - என்னை
புரியாதவள் நீ என்கிறாய்
உன்னளவில் புரிதல் என்றால் என்ன?

என்னை விட நீ
முகநூலிற்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தினை
முணுமுணுக்காமலிருப்பதா?
உன் அருகில் நிற்கும்
கணங்களில் கூட – நீ
அடுத்தவளை விமர்சிப்பதை
இரசிக்காமலிருப்பதா…?
நீ என் அழைப்புக்களை
அலட்சியப்படுத்துவதை பற்றி
அலட்டாமல் இருப்பதா..? - இல்லை
அடுத்தவனை என்னுடன் நீ
இணைத்துப் பேசுவதை கூட
பொறுக்காமல் துடிப்பதையா?
எதை புரிதல் என்கின்றாய்?

எனக்கு மட்டுமான உன்னை
உன் அன்பை
அடுத்தவர்களுடன்
பகிர்வது தான் - புரிதல்
என்றால்…
உன்னளவில் உன்னை
புரியாது – என்னளவில்
உன்னை பகிராத
மௌனங்களே போதும்
இறுதிவரை - நம்
இருவருக்கிடையான புரிதல்களுக்கு…(பகிர்தல்களுக்கு)




பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை