Monday, August 6, 2012

என்ன செய்வான் கடவுள்?

அதிகாலை வேளை பறவைகளின் கீதங்களோ சூரியனின் அழகிய பொற்கதிர்களோ அக்கிராமத்தில் விடியலை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கிராமங்களுக்கே உதித்தான பசுமை கூட அங்கில்லை. எல்லா மக்களினுடைய முகத்திலும் ஓர் எதிர்பார்ப்பு.... பலரிடம் கடன் வாங்கி பயிரிட்டு களையகற்றி உரமிட்டு வளர்த்த பயிர்கள் தாய் முகம் பார்க்கும் மழலைகளாக நீர் வேண்டி நிற்கின்றன. மழை தான் பொய்த்துவிட்டது. கிணற்றில் ஊறவது குடிப்பதற்கே போதாமல் இருக்கிறது. ஆறு குளங்களை கேட்கவே தேவையில்லை. நீரற்ற குளத்திலே ஓர் பறவை கூட பறக்கவில்லை. கொடும்பாவியும்; எரித்தாகிவிட்டது. குல தெய்வங்களை கூப்பிடுவதை தவிர வேறு நாதியுமில்லை.
ஒவ்வொரு மனித விழிகளும் மேலே அண்ணாந்த வண்ணம் கருமுகில்களை தேடுகின்றன. பெருமூச்சுக்கள் வரிவடிவாகி இறைவன் திருவடியில் வினாவாகிறது....”இறைவா மழை பொழியாதா? ஏம் பஞ்சம் தீராதா?”
.................................................................................................
யுத்த காலனால் விரட்டப்பட்டு புலம் பெயர்ந்தோர் வாழும் அகதி முகாம்... நனைந்த பறவைகளாக தம் செயற்பாடுகளை நிறுத்தி கூடாரங்களிலேயே முடங்கி கிடக்கிறார்கள் மக்கள். முழங்காலளவிற்கு பாய்ந்தோடுகிறது வெள்ளம். கால்கள் மரத்துப்போய் கழன்று விட்டது போன்றதொரு பிரமை. பொருட்களை காப்பாற்ற அவற்றை கூடார வளைகளில் கட்டியதில் கூன் விழுந்து நிற்கும் கூரைகள். குழந்தைகளின் ஓலங்கள் ஒரு புறம். ஓரு வாரமாக நீடித்திருக்கும் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட குப்பைகளினால் ஏற்பட்ட நுளம்புப் பெருக்கம் ஒரு புறம். வீட்டிற்கு வீடு நோயாளர்களும் அவர்களின் இருமல் ஈழை ஒலியும் கூட ஓர் சங்கீதமாக ஒலிக்கிறது. அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள்  பார்த்து உதவிகள் வழங்குகின்றன. அவர்களின் உலர் உணவுகளும் இலவச வைத்திய சேவைகளும் அன்றாட நிகழ்வுகளாகிட முடியுமா?
வானமோ விரிசல் கண்டதைப் போன்று குடம் குடமாக நீரைக் கொட்டுகிறது. எல்லோருடைய மனங்களிலும் வேண்டுதல்கள் அலையாகி இறை பாதம் நனைக்கின்றன...”இறைவா மழை ஒழியாதா? எம் அவலம் தீராதா?”
.......................................................
தன் படைப்பின் விந்தையை எண்ணி இறைவனின் மனதில் கூட குழப்பம். 

அதிகம் வாசிக்கபட்டவை