Showing posts with label அபஸ்வரங்கள். Show all posts
Showing posts with label அபஸ்வரங்கள். Show all posts

காதல் Vs கள்ளத்தொடர்புகள்


இந்தத் தலைப்பினை மனைவி Vs வைப்பாட்டி என்று கூட மாற்றிக்கொள்ளலாம். இந்த ஊடகத்துறையில் காலடி வைத்ததிலிருந்தே தினம் தினம் பல்வேறுப்பட்ட மனிதர்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றேன். இவ்வாறானவர்களுள் சில மனிதர்களை அவர்களது குணாதிசயங்களைப் பற்றி என் விடுதி நண்பிகளுடன் பகிர்ந்து கொண்டு இவை பற்றி ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் பரிமாறிக்கொளள்வோம். அண்மையில் நாம் கலந்துரையாடிக்கொண்ட ஒரு தலைப்புத் தான் மேற்கூறியது.

இன்று உலகமயமாக்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு விளைவு “பல” உறவுகள் “பல” முகங்கள். (இவை நல்லதா? கேட்டதா? என்பது வேறு விடயம்.) இதனால் உருவாகின்ற “பல” உறவுமுறைகள். இங்கு இந்த “பல” பற்றித் தான் விவாதிக்க உள்ளேன்.

ஒரு ஆண் தன்னைக் கடக்கின்ற ஒவ்வொரு பெண்ணையும் பலவிதமான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றான். (நான் பால் சார்ந்து கதைப்பதாக என்ன வேண்டாம். பெரும்பாலும் ஆண்கள் தான் இவ்வாறு இருக்கின்றார்கள் அதற்காக பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்பதும் அர்த்தமல்ல). எடைபோட்டுக்கொள்கின்றான். தனக்கு மனைவியாக வரப்போகின்றவளிடம் பின்வரும் சில தகுதிகளை எதிர்பார்க்கின்றான்.
  •  தன்னை விட சற்றேனும் அழகானவள் (யாராவது மனம் மட்டும் தான்  என்று கூறினால் உச்சி பிளக்க குட்டவேண்டும்)
  •  சமூகத்தில் அடுத்தவர்களால் மதிக்கப்படுபவள் (இது குணமாகவும் இருக்கும்)
  •  சற்றுப் படித்தவள் , பண்பானவள்
  •  தன்னிடம் கேள்வி கேட்காதவள் (????)
  •  தன்னவளை ஒருவன் திரும்பிப்பார்த்தால் கூட கோபப்படுவார்கள் ( தாங்கள் பலரை வைத்துக்கொள்வது வேறு விடயம்)
  •  தன்னவள் மேல் சுண்டுவிரல் கூட திருமணத்திற்கு முன் படுவதை விரும்பமாட்டான்
  • குறிப்பிட்ட அளவிற்கு மேல் தொல்லை கொடுக்கமாட்டார்கள் ஆனால் கண்கானிப்பார்கள் (நடுநிசி அழைப்புக்கள் இருக்காது ஆனால் செக் பண்ணிக்கொள்வார்கள்)
  • தன் குடும்பம், அலுவலக நண்பர்கள் மற்றும் மேல்மட்ட நண்பர்களிடம் குறுகிய காலத்துக்குள் அறிமுகம் செய்து வைப்பார்கள்.
  • தன் மனைவியாகப் போகிறவளை கடற்கரை, பூங்காவிற்கு அழைத்துச் செல்வதை விடவும் ஆலயத்திற்கு அல்லது கல்வி, இலக்கிய கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
  • மனைவிக்கு/காதலிக்கு தன் முறையற்ற தொடர்புகளை மறைக்கும் அளவிற்கு ஒருவித தார்மீக பயமிருக்கும். ஆனால் முறையற்ற தொடர்புள்ளவர்களுடன் தன்னவர்கள் பற்றி கூறி எச்சரித்து வைக்கவும் தவறமாட்டார்கள்
இது மனைவிக்கு ஓர் ஆண் கொடுக்கின்ற மரியாதை. இதைத்தவிரவும் வேறு பெண்களும் தன் இழுப்புகளுக்கு இசைந்து கொடுத்தால் அவர்களையும் பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்புவான். இவர்களை தன் ஏனைய தேவைகளுக்காக (நிச்சயம் மனமாக இருக்காது) வைத்துக்கொள்வான் மனைவி/ காதலிக்குத் தெரியாமல். ஒரு பெண்ணின் மனதைப் பிடித்துத்தான் திருமணம் செய்கின்றோம் அல்லது காதலிக்கின்றோம் என்றால் அதன் பின்பும் ஒரு பெண்ணைத் தேடுகின்றோம் என்றால் நிச்சயம் அது காமம் என்பது ஒன்றன்று வேறெதுவுமாக இருக்கமுடியாது. இதற்கு உபயோகிப்பவர்களை மனைவி./காதலி அளவுக்கு அந்தஸ்து கொடுத்து வைக்காவிட்டாலும் மனைவியை விடவும் உரிமை இவர்களுக்கு அளிப்பார்கள்
  •  தன் அடுத்த நடவடிக்கைகள் குறித்து மனைவி/காதலியை விடவும் இவர்களிடம் தான் முழுமையாக கூறுவார்கள்
  •  தன் மின்னஞ்சல், முகநூல் கடவுச்சொற்கள் கொடுத்து வைத்திருப்பார்கள்
  •  நிறைய பரிசுகள் அளிப்பார்கள்
  • அதிக புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார்கள் 
  • நிறைய ஊர் சுற்றுவார்கள் (யார் கண்ணிலும் படாமல்)
 மனைவிக்கு மேற்கூறியவற்றினை மறுப்பான் காரணம் மனைவி..காதலி ஆயிரம் கேள்வி கேட்பாள். ஆராய்வாள், சந்தேகப்படுவாள்… ஏனென்றால் இவளளவில் நேசிப்பது மனம் என்பதை. அந்த மனதில் தன்னைத் தவிர வேறொருவர் புகுவதை எந்த சராசரி பெண்ணும் ஏற்கமாட்டாள். ஒருவேளை தன்னவர்கள் பிழைசெய்து அவர்களது முறைகேடான உறவுகள் தெரிய வந்தால்….
  • குடும்பம் வரை சென்று கேள்வி கேட்கும் உரிமை,சக்தி,துணிவு இவளுக்குண்டு (தனிமையில் அழுவது வேறு விடயம்)
  • ஒரு வேளை நிரூபிக்கப்பட்டால் விலகிவிடவும் இவளால் மட்டும் தான் முடியும் (விவாகரத்து,காதல் தோல்வி என்பதெல்லாம் சட்டபூர்வமான உறவுகளுக்குத் தான்)
  • சுயத்தை என்றும் இழக்கமாட்டாள் (மனைவி, காதலி தன்னவர்களை அடுத்தவர் புகழ்வதை இரசிப்பார்கள். தானே புகழ்ந்து சீன் எல்லாம் போடமாட்டார்கள்)
ஆனால் இந்த இரண்டாம் வகையினர் என்ன தான் ஆண்கள் பிழைசெய்தாலும் விட்டுவிலக மாட்டார்கள். ஆண்களும் தம் கள்ளம் பிடிபட்டுவிட்டால் மனைவி.. காதலியை பிரிவார்களேயன்றி கள்ளத்தொடர்புகளை விட்டு விலகமாட்டார்கள். இவர்களது தேவை தான் வேறாச்சே… (சிலவேளை ஆப்பில் சிக்கிய குரங்காக சிக்கவைக்கப்பட்டு கல்யாணத்தில் முடிவதும் உண்டு….)

என்னதான் சொன்னாலும் மனைவிக்குறிய மதிப்பே தனிதாங்க.. ஒருவன் தன் மனைவிக்கோ காதலிக்கோ துரோகம் செய்திருந்தால் அவளிடம் கெஞ்சமாட்டான். அவளை சந்திக்க தயங்குவான் அவள் கண்களை கூட பார்க்க அவனால் முடியாது. விலகத்தான் முயற்சிப்பான். ஆனால் வேறுவிதமான தொடர்பு உள்ளவர்களிடம் தன் சோகங்களை கொட்டி ஒட்டிக்கொள்ள பார்ப்பான்.

தன்னவன் மனதில் பழைய காதலின் சாயல் இருப்பதையே விரும்பாதவள் இன்னொரு உறவையா ஏற்றுக்கொள்வாள்? (மனம் வலித்தாலும்) நம்மவர்களை விட்டுக்கொடுக்காமல், காட்டிக்கொடுக்காமல் திமிராக விலகிவிடுவது தாங்க காதலிக்கான, மனைவிக்கான பெருமை. எல்லாரிடமும் இனிய நினைவுகளை பகிர்ந்து நம்மை கண்டவர்களுக்கும் நிரூபிக்கவேண்டிய தேவை நிச்சயம் மனைவிக்கோ காதலிக்கோ இருக்காது. (குத்துவிளக்கு சாமியறையில் தானிருக்க வேண்டும் அடுத்தவருக்கு தெரியப்படுத்த உறவுகள் என்ன தெருவிளக்கா?) “;மனம்” தான் போய்விட்டதே… மாளிகையா முக்கியம் நம்மவன் மனதில் மகாராணியாக இருப்பது தான் மானமுள்ள பெண்ணுக்கழகு

இலக்கியம் முதல் இன்று வரை மனைவிக்குத்தாங்க சோதனை அல்லது மனதை நேசிப்பவர்களுக்குத் தான் பரீட்சைகள் அதிகம்….. கண்ணகியால் தான் மதுரையை எரிக்க முடியும்.. சீதையால் தான் தீக்குளிக்க முடியும்.. வைதேகியால் தான் கண்ணுக்காக காத்திருக்க முடியும்….

(மனைவி, காதலி இலையிலுள்ள பதார்த்தத்தினை பார்க்க மாட்டாள் பரிசுத்தத்தினை பார்ப்பாள்…. மற்றதுகள் பதார்த்தத்தினை பார்த்து பலர் கைபட்ட எச்சிலையும் சாப்பிக்கூடும். உண்மை உறவுகள் பொய்க்கும் போது அறுத்துக்கொள்ளும் பொய் உறவுகள் தம்மை மறைத்துக்கொள்ளும்)

பிற்குறிப்பு - இது என் வயதிற்கு மேற்பட்ட விடயம் என்றாலும் நாளை நானும் ஒரு குடும்பத்தின் தலைவியாகப் போகின்றவள். அடுத்தவரை எடைபோட தெரியாமல் இருந்தால் அதைவிட கொடுமை இருக்கமுடியாது. யாருக்காவது இப்பதிவு கடுப்பேத்தினால் எனது விடுதிக்கு வந்து என் நண்பிகள் மண்டையில் குட்டலாம்)





மாடி வீட்டு நாயும் ஒரு தெரு நாயும்.....


தெருவழியே ஒரு தெரு நாய் சென்று கொண்டிருந்ததாம். அந்த வழியிலே இருந்த மாடி வீட்டு நாயை கண்டதாம். அந்த வீட்டு நாய் அன்று தான் வீட்டுக்கதவை முதன் முதல் தாண்டி படலையடியில் உலா வந்து கொண்டிருந்ததாம். அந்த தெரு நாயும் படலையடியில் வந்து சிநேகமாய் சிரித்தது. சாறிங்க குரைத்தது. வீட்டு நாயும் பதிலுக்கு சிநேகமாய் குரைத்தது. தெரு நாய்க்கு ஏகப்பட்ட குஷி. லயிட்டா ஒட்டிக்கொள்ள நினைத்தது. தீடீரென எங்கிருந்தோ இதை கண்டுவிட்ட வீட்டு நாயின் சகோதர நாயும், நண்பன் நாயும் தங்கள் வீட்டு பெண் நாயுடன் நாய் மொழில் பேசிக்கொண்டன. “இந்த தெரு நாய் எங்கிருந்து வந்ததோ… பார் உடபெல்லாம் சொறியாக இருக்கிறது. பல தடவை இந்த நாயை பல தெருநாய்களுடன் கண்டிருக்கின்றோம்” என்று எச்சரிக்கை செய்தன. வீட்டு நாயும் அத்துடன் சிநேகமாக சிரித்து விட்டு உள்ளே சென்று விட்டது.

விட்டதா இந்த தெரு நாய்….? கீழிருந்தே பல முறை குரைத்து பார்த்தது. நான் எந்த நாயையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை… மற்ற நாய்களை பார் அவை தான் அப்படி…. எனக்கு பின்னுக்கு எத்தனை பெண் நாய்கள் திரிகின்றன என்று பிதற்றியது. தன் ஜம்பங்களை சொல்லி (கவிதையாக) ஊளையிட்டு பார்த்தது. வேறு தெருக்களில் அலைந்ததை பற்றி கதையளந்தது. எங்கிருந்தோ புதிதாக வந்திருந்த தன் சக நாய்களுக்கும் கீழிருந்தவாறே அந்த வீட்டு நாய் எப்படி இருக்கு என்று காட்டி… அறிமுகம் செய்ய முயன்றது. தன் குடும்ப நாய்களையும் அறிமுகப்படுத்தியது வீட்டு நாய்க்கு தன் மேல் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக… இறுதியாக நீயில்லாட்டி என்னால் இருக்க முடியாது என்று பாவ்லா காட்டியது… கடுப்பேத்த நண்பன் நாயையும் வீட்டு நாயுடன் இணைத்துக் கதைத்து பார்த்தது. சற்றே எட்டிப் பார்த்த வீட்டு நாய் “கொஞ்சம் நேரம் தரமுடியுமா நாயே?” என்று கேட்டது. “அதற்கென்ன காலமெல்லாம் காத்திருக்கும் காவியக்காதல் என்னுடையது” …..மனிதக்காதல் அல்ல அல்ல… அதையும் தாண்டி புனிதமான நாய்க்காதல்… என்று “குணா” கமலஹாசன் ரேஞ்சில் பதில் சொல்லியது.

சிறு வயதிலிருந்தே செல்லமாகவும் பயிற்சியுமளிக்கப்பட்ட அந்த வீட்டு பெண் நாய் மௌனம் சாதிக்க முடிவெடுத்தது. கூடவே கொஞ்சம் நேரம் எடுக்க யோசித்தது. “ஏன் பல பெண் நாய்கள் தன் பின் சுற்றும் போது இந்த நாய் என்னை பார்க்க வேண்டும்.” என்ற சந்தேகம் வீட்டு நாய்க்கு ஏற்பட்டிருந்தது. எப்படியும் (நாயின்) வேஷம் கலைய கொஞ்ச நாள் எடுக்கும் அதுவரை பொறுப்போம் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு காத்திருந்தது.
கொஞ்சம் பொறுத்துப் பார்த்த தெரு நாய் பொறுமை இழந்தது… “என்னடா இந்த வீட்டு நாய் கீழிறங்கி வராதா? ஒரு வேளை வேறு நாயை பார்த்து விட்டதோ அல்லது நமது தெருக்கூத்துகள் விளங்கி விட்டதோ?” என்று லேசாக கலைய ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்து வந்த தன் தெரு நாய் சகாக்களிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் “இந்த வீட்டு நாய் தான் என் பின்னால் அலைந்தது. நான் தான் அந்த பைத்தியகார நாயை வேண்டாம் என்டிட்டன்” என்று சொல்லிக்கொண்டது. கூடவே நின்ற சொந்தக்கார நாய்களும் கிடைத்தது போதும் என்று நழுவ தொடங்கின.

சற்றே கோபப்பட்ட வீட்டுநாய் தெருநாய் ஏன் அலைந்தது என்று கேட்க எத்தனித்தது. தடுத்த வீட்டு நாயின் தாய் நாய் சொன்னது “அதனளவு நாம் இறங்கினால் நம் மதிப்பு கெட்டிடும் கண்ணம்மா…எல்லாம் நன்மைக்கே ”

தன் தங்கை நாயுடன் நின்ற ஆண் நாயும் நண்பன் நாயும் அந்த வீட்டு நாயிடம் சிரித்தபடியே “தெரு நாய் என்றும் தெரு நாய் தான். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது தன் குணத்தை ஒரு நாள் காட்டிவிடும். நீயும் அதனுடன் சேர்ந்து சொறி சிரங்கு படாமல் தப்பித்தாய் என்று நினைத்துக்கொள். அந்த நாய் உன்னைப்பற்றி சொல்வதால் நீயொன்றும் குறைவதில்லை. நம் வீட்டிற்கு பண்பாடிருக்கிறது. உன் தகுதிக்கு நல்ல அல்சேஷன் நாயே கிடைக்கும். விடு இந்த தெரு நாயை…” என்று கூறின.

சற்றே எட்டிப் பார்த்த வீட்டு நாய் அந்த தெரு நாய் இன்னொரு நாயுடன் போவதை பார்த்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டது கூடவே மனதுள் பாட்டும் படித்துக்கொண்டது “ இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி மிருகக் காதல்….”

குறிப்பு - தகுதியறிந்து பழக வேண்டும்

(காதலில்) சில முதிர்ச்சிகள்


மருத்துவ ரீதியாக பார்க்கும் போது ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் வளர்ச்சிப்படியின் ஒவ்வொரு மட்டத்திலும் சில அடைவுகளை எட்டும் போது தான் அதன் வளர்ச்சி சரியானது என கொள்ளப்படுகிறது. அல்லது அந்த நபருக்கு உடல், உள ரீதியான பாதிப்பு இருப்பதாக கணிக்கப்படும்.
நான் இன்று பதிவிற்காக எடுத்துக்கொண்ட விடயம் உடல்,உள ரீதியில் ஆரோக்கியமாகவும் ஆயினும் சில முதிர்ச்சிகள் அற்றவர்களாக இருப்பவர்கள் பற்றியும் அலசுவதே…
ஒருவனை சமூகம் அவனது பதவி,பணம்,படிப்பு என்பவற்றை வைத்து மதிப்பு கொடுத்தாலும்அ அவனது செயல், பழக்கங்கள், பேச்சு என்பவற்றினை வைத்துத்தான் மட்டுக்கட்டுகிறது.( நம்மைக் கண்டவுடன் எழுந்து நின்று வாழ்த்துபவர்கள் மனதிற்குள்ளும் மருகக்கூடும்). இந்த மட்டுக்கட்டல்கள் நம்மை மட்டுமன்றி நமது குடும்ப கௌரவம், நமது பதவிக்கான மதிப்புகளைக்கூட பாதிப்பது மட்டுமல்ல நாம் சமூகத்திற்கு சில செய்திகளை முன்வைக்கும் போது அவை எடுபடாமல் போவதற்றும் ஏதுவாகிறது.

வேறெங்கும் போகத்தேவையில்லை முகநூலிற்கு போனாலே போதும் ஒருவனுடைய தராதரத்தினை அறிவதற்கு. ஒரு லைக் பண்ணுவதை வைத்துக்கூட ஓரளவு கணிக்கலாம் யாருக்கும் யாருக்கும் கள்ளத் தொடர்புகள் , நல்ல தொட்புகள் இருக்கிறதென்று) சில ஆண்களும் சரி பெண்களும் சரி குறிப்பிட்டவர்களது முதுகு சொரிதல்களுக்கு கூட தேடிப்பிடித்து லைக் பண்ணுவார்கள். இன்னும் சிலர் வழிஞ்சு வாயால் ஒழுகுகின்ற அளவிற்கு கொமண்ட் போட்டிருப்பார்கள்.. இன்னும் சில ஜென்மங்கள் படித்திருக்கும், நல்ல பொறுப்பான பதவியிலிருக்கும், பண்பான குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஆனால் நையாண்டிக் கருத்துக்களை போட்டு தன்னுடைய தரத்தினை தானே இறக்கியிருக்கும்…..
இது நமக்கு தேவையா? எல்லாம் அளவோட இருந்தால் எமக்கான மரியாதையை நாமே காப்பாற்றிக்கொள்ளலாமல்லவா? நம்மவர்களிடம் குழந்தையாக இருப்பதில் நியாயம் இருக்கிறது. அதற்காக பொது இடத்திலுமா? அதிலும் வாழ்க்கையினை தெரிவு செய்யும் வயதில் இருப்பவர்கள், காதலிப்பவர்களுக்கென்று சில முதிர்ச்சிகள் இருக்க வேண்டும். அதற்காக வாழ்க்கையினை அனுபவிக்க வேண்டாம் என்பதல்ல என் வாதம்..
  • நண்பர்களுடன் அரட்டையடியுங்கள், ஊர்சுற்றுங்கள் ஆண்களென்றால் குடியுங்கள் ஆனால் உங்கள் ஈரல்கள் சுருங்கும் அளவிற்கோ ஆட்டக்காரி என்று பெயரெடுக்கும் அளவிற்கோ அது இருக்க வேண்டாம்
  •  எதிர்பாலாருடன் கடலை போடுங்கள் இந்த வயதில்லல்லாமல் பொல்லூண்டிக்கொண்டா கடலை போடமுடியும்? ( எனக்கும் நிறைய கடலைகள் இருக்குதுங்க) ஆனால் அதுவே நம்மவர்களை காயப்படுத்தாமல் , நம்மைக் களங்கபடுத்தாமல் இருக்க வேண்டும்.
  •  சண்டை பிடியுங்கள் அவை செல்லச்சண்டையாக இருக்கட்டும். சிறு விடங்களிற்கும் முகத்திலடித்தபடி “உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்னை தொடர்புகொள்ள வேண்டாம்” தூக்கியெறியாதீர்கள். காதலில் இன்றைய கீறல்கள் நாளைய வெடிப்புகளாக மாறும்.
  •   யாருடன் பழகுகின்றோம்? என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் ஒரு பொறுக்கியுடனோ அல்லது ஒரு தரம் கெட்ட பெண்ணுடனோ பழகும் போது நம்மையும் பிழையாகவே எடை போடக்கூடும்.
  •  காதலர்களுக்கிடையில் ஒருவர் இன்னொருவருடன் பழகும் போது பொறாமை வருவது சகஜம் (நமக்கெ தெரியும் இது நம்மள விட்டு போகாதென்று ஆனாலும் சும்மா ஒரு இது…) ஆனால் அதுவே ஒரே குறிப்பிட்ட ஒருவருடன் இணைத்துப் பேசும் போது சந்தேகமாக மாறுவதுடன் பிழை செய்யாத தரப்பினரிடம் ஏற்படும் வலி இருக்கிறதே அதுவும் சகோதர உறவுடன் பழகும் ஒருவருடன் மூன்றாம் நபர் முன்னிலையில் பேசும் போது( தண்டவாளத்தில் தலை வைக்க தோன்றும்) அதுவே உறவிற்கான முற்றுப்புள்ளியாக மாறும்.
  • குடும்ப பாசம் இருக்க வேண்டும். முகநூலில் பல மணி செலவளிக்கும் நமக்கு நம்மவர்களுக்கு சில வார்த்தை பேசுவது பாரமாகின்றது. ஆரம்பத்தில் இருக்கும் பற்று ஏன் இறுதியில் குறைகிறது? ( ஒரே முகநூலில் இருக்கும் ஆணையும் இரவில் முகநூலில் இருக்கும் பெண்ணுக்கும் எனது விடுதியில் வேறு பெயரிருக்கிறது) சமூக ஊடகம் தேவை தான் அதுவே நம்மை சந்தி சிரிக்க வைக்காமல் இருந்தால் சரி…
  • தொடர்புகளை குறைத்துக்கொள்ளுங்கள். முதல் நாம் பருவத்தில் செய்ததைப் போன்று தொடர்ந்தும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்க முடியாதுங்க. நமக்கென்று ஒருவர் வந்த பின் வேறு நண்பர்களை குறைப்பது நல்லது. (சில வேளை நம்மவர்கள் செல்லப் பெயரால் கொமண்ட் போடுவதை விரும்பாத நாம் அடுத்தவர் போடும் “ ரு அநயn வை னநயச  ஐ டழஎந ர….”  என்று அடுத்தவர் போட்டதை லைக் பண்ணியிருப்போம்.) இதே செயலை எதிர்பாலார் செய்திருந்தால் பொறுத்திருப்போமா? உங்கள் நண்பர்களிடம் வெளிப்படையாக உங்களவர்களை அறிமுகம் செய்து கொஞ்சம் ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள்.   
  •   சில வேளை மூன்றாம் நபரும் நம்மை அவதானிக்க கூடும் (என்ன வடை போச்சே என்று தான்) அவர்கள் சில வேளை உங்கள் முதிர்ச்சியின்மைகளை காட்டி உங்களவர்களை மட்டந்தட்டக்கூடும் (வயிற்றெரிச்சல் தான் ) நம்மவர்கள் தலைகுனியுமளவிற்கு நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டாமே
நமது சமூகம் ஆண் என்னபவன் பெண்ணை விட வயதில், பதவியில், படிப்பில் ஏன் உயரத்தில் கூட உயர்வாயிருப்பதை தான் வரவேற்கிறது. நாம் வீட்டிற்கு கடைக்குட்டியாக இருக்கலாம், ஒரே பெண்ணாக இருக்கலாம்… நமது சுட்டித்தனங்களை விட்டு கொஞ்சம் நம்மவளை பொறுப்பாக வழிநடத்தக்கூடிய அளவிற்கு முதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டு காதலிக்க ஆரம்பியுங்கள். இல்லாவிட்டால் நாளை குடும்பத்தில் பெண் குரல் உயர்ந்த விவாகரத்து வரை செல்ல உங்கள் முதிர்ச்சியின்மையே வழிசமைக்கக் கூடும்.

வாழ்க்கையென்பது வாழ்வதற்கு தாங்க. உண்மையாய், கவிதையாய் வாழுங்கள்

ஒரு பெண் இன்னொரு தந்தையையும் ஒரு ஆண் முதல் குழந்தையையும் தேடுவது தான் காதல்

காதலெனும் பெயரில் சில களியாட்டங்கள்....


எம் முன்னோர்களது காதல் வாழ்க்கையினை எடுத்துக் கொண்டால் மிகமிக புனிதமானதொன்றாக விளங்கியது. அவர்கள் கண்டவுடன் காதலிக்கவில்லை. நின்று நிதானித்து காதலித்தார்கள். காலமெல்லாம் காத்திருந்து கைப்பிடித்தார்கள். ஒரு வேளை அவர்கள் காதல் திருமணத்தில் முடியாவிட்டாலும் ஒருவித புனிதத்தன்மை காணப்பட்டது. இவ்வளவிற்கும் அன்று தொலைத்தொடர்பு வசதிகள் கூட இருக்கவில்லை.

இன்று பாருங்கள் “கண்டதும் காதல் கொண்டது கோலம்” என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஒரு பெண்ணை /ஆணை காதலிப்பார்கள் துரத்தி துரத்தி வீட்டவர்களுக்கும் சில நேரம் அறிமுகம் செய்து வைப்பார்கள். ஆனால் முகநூலிலோ. பொதுக்கூட்டங்களிலோ பழைய நண்பிகள் , நண்பன்களை கண்டுவிட்டால் ஒரடி தள்ளியே நிற்பார்கள். தாம் நேர்மையானவர்கள், நமது உறவுகளும் நேர்மையானது என்றால், அவர்கள் தான் நம் வாழ்க்கைத்துணை என்று தீர்மானித்திருந்தோமானால் ஏன் அதை மறைக்க வேண்டும்? ஒருவனுக்கு ஒருத்தியென்றால் அதை ஏன் ஒளிக்க வேண்டும். தொலைபேசியிலும் நேரிலும் வழிகின்ற நாம் ஏன் அடுத்தவர் முன் நம்மவர்களை “சகோதரம்” என்றழைக்க வேண்டும். நமது அக்கா,தங்கை, அண்ணா, தம்பியுடன் காதல் +  காமத்துடன் தான் பழகுகின்றோமா? கேட்டால் “சமூக ஊடகமாம்”. இப்படியானதொரு சமூக ஊடகம் நமக்குத் தேவை தானா?

சிலர் வெளியில் ரொம்ப நல்லவர்கள் போல் தாம் வேறு ஆண்களையும் பெண்களையும் ஏறெடுத்தே பார்ப்பதில்லை என்று பீற்றிக்கொள்வார்கள். அடுத்தவர்கள் பற்றி ஆயிரம் விமர்சனம் வேறு. பழகிப்பார்த்தால் தெரியும் இவர்களது சுயரூபம்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் “காதலில் தொடுகைகள் முக்கியமாம். இல்லாவிட்டால் அது உண்மைக்காதல் இல்லையாம்” ஏன் தொட்டால் தான் காதலா? மனதைப்பார்த்து தான் விரும்புகின்றோம் என்றால் ஏன் தொடுகை அத்தியாவசியமாகிறது.? நமது தாத்தா, பாட்டி காலத்திலெல்லாம் எங்கே சந்தித்துக் கொண்டார்கள்? திருமணம் செய்து நல்லதொரு அர்த்தமான வாழ்க்கை வாழ்ந்து காட்டவில்லையா? கவனம் காதலுக்கு முன் தொடுகை கண்ணை கசக்க வைக்காமலிருந்தால் சரி தான்.
 

இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். காதலுக்கு (????) ஒருத்தி களியாட்டங்களுக்கு பலர். இவர்களது தொலைபேசிக்கு இரவில் அழைப்பினை ஏற்படுத்தி பார்த்தாலே தெரிந்துவிடும். அதென்னங்க தினமும் “நடுநிசி அழைப்புக்கள்” நிச்சயம் அலுவலக வேலைகள் நடுச்சாமம் வரை இருக்கப்போவதில்லை. ஒரு வேளை இருந்தாலும் ஒவ்வொரு நாளுமா இருக்கும்? கல்யாணக் கனவுகளுடன் காதலர்கள் இருப்பார்கள் தொலைபேசியில் கண்டவர்களுடன் கள்ளக்காதல் நடந்து கொண்டிருக்கும். இதை காதலர்கள் கண்டுகொண்டால் பழியை தேடிப்பிடித்து ஒதுக்கிவிடுவார்கள். (நாம் தான் ரொம்ம்ம்ம்…ப நல்லவர்களாயிட்டே… அடுத்தவர்கள் தான் பண்பு தெரியாதவர்கள்) இதற்காக நண்பர்கள் இருக்க கூடாது என்பதல்ல அர்த்தம். அந்த நட்பு (???) நமது பிறந்த நாளுக்கு கூட விழித்திருந்து வாழ்த்துகின்ற அளவுக்கு போகாமல் இருந்தால் சரி. காதலிப்பவர்கள் வாழ்த்தினால் அர்த்தமிருக்கும் கண்டவர்களும் வாழ்த்துவதென்றால் நிச்சயம் நட்பையும் , காதலையும் கடந்த ஏதோவொன்றும் இருக்கும் என்பது ஆணித்தரமான கருத்து.

ஆனாலும் சில ஆச்சரியங்கள்
  •  தாம் எவ்வளவு தான் விளையாட்டுப்பிள்ளையாக இருந்தாலும் காதலே செய்யாத புத்தம்புதிதான காதலி தேவை சிலருக்கு.
  • சில நல்ல குடும்பத்து பிள்ளைகளே இவ்வாறு நடப்பது மட்டுமன்றி நல்ல குடும்பத்து துணைகளை தேடி அந்த அப்பாவியின் வாழ்க்கையையும் சிதைக்க நினைக்கின்றார்கள்
ஆகமொத்தத்தில் பதவியை காட்டி பல பெண்களை தேடுகின்ற ஆண்களும் உடம்பைக் காட்டி ஆண்களை மயக்குகின்ற பெண்களும் தான் இன்றைய காதல் உலகத்தில் கதாநாயகர்கள். ஆனால் கல்யாணத்திற்கு மட்டும் ஒரு நல்ல பண்பான, படித்த, அப்பாவியான இழிச்சவாய் வேண்டும்.

எத்தனை பெண்களின் பின் அலைகின்றோம் என்பதிலில்லை நமது ஆண்மை எத்தனை ஆண்களை சுண்டி இழுக்கின்றோம் என்பதிலில்லை எமது பெண்மை…… ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் அது காதலே என்றாலும்!

தெரு நாய் தாங்க எந்த நாய் கிடைக்குமென்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையுமாம்……

சில சில உறவுகள் பிரிவதேன்?


பொதுவாக உறவுகள் பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. புரிந்துணர்வு இன்மை, வீண் வரட்டு கௌரவங்கள், சந்தேகங்கள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நம்மைத் துரத்தி துரத்தி வந்தவர்கள் திடீரென விலகுவதற்கு ஒரு சில காரணங்களே இருக்க கூடும்.

•    நம்மை விட ஏதோவொரு வகையில் சிறந்தவர்கள் கிடைத்திருக்க கூடும். இது உடல் தேவைகள், பணம், பதவி என நீளும். ஆனால் நிச்சயம் மனதாக இருக்க முடியாது நாம் ஒருவருடைய மனதை மட்டுமே நேசித்தவர்கள் எனின் நிச்சயம் அவர்களை விட்டு விலகிட முடியாது.

•    தாழ்வு மனப்பான்மை கூட சில வேளை ஒருவர் எம்மை விட்டுப் பிரிந்துசெல்ல ஏதுவாகின்றது. குறிப்பாக ஆண்களுக்கு இந்த மனப்பாங்கு உண்டு தாம் எவ்வளவு தான் ஒரு பெண்ணை நேசித்தாலும் அவள் தன்னை விட ஏதோவொரு வகையில் உயர்வாயிருந்தால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. பிறர் அவளைப் பற்றி பேசும் போதோ அல்லது புகழும் போதோ ஏற்படும் இந்த மனோபாவம் அந்தப் பெண்ணிடம் சிறு சிறு விடயங்களுக்கு கூட எரிந்து விழுவதில் தொடங்கி இன்னொருவருடன் இணைத்து பேசுவது வரை வக்கிரமாக தொடரும். ஒரு சிலரால் மட்டுமே தங்களவர்களை தட்டிக்கொடுத்து பாராட்ட முடிகிறது. இவர்கள் மனித உருவில் வாழும் புனிதர்கள்

•    இறுதியான விடயம் நாம் பழகும் ஒருவருக்கு நம்முடைய போலியான இன்னொரு முகம் தெரிய வரும் போது விலகிட முற்படுவோம். அதுவும் அவர்களிலேயே பழியைப் போட்டு உறவுகளை இலகுவில் முறித்து நமது சுயம் வெளிப்படாமல் தவிர்க்க முயல்வோம்.

எதுவாயிலும் ஒருவரை நன்கு அறிந்து அவருடன் உறவுகளை ஏற்படுத்த வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறுத்துக்கொண்டு ஓடிவிடுவது நல்லவர்களுக்கு அழகில்லைங்க. நாம் பலருடனும் பழகுவதால் சில வேளைகளில் பிரிவுகள் நம்மை தாக்குவதில்லை. நமக்குத்தான் ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று இருக்கிறதே… எதுவும் நாம் நிரந்தரமாக வைத்துக்கொள்வதில்லையே…. ஆனால் எதிர்பக்கத்தினரிடமான வலிகள், காயங்கள் பற்றியும் நினைக்கும் போது தான் தாம் மனிதர்களாகின்றோம்.

இதன் மறுபக்கத்தில் எதிர் தரப்பினர் நினைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் தப்பிவிட்டீர்கள் என்று. தெளிவற்ற மாறுகின்றதானவர்கள் வாழ்க்கையில் என்றும் நம்மோடு வருவார்கள் என்று எப்படி நம்புவது? வாழ்க்கை என்பது மண் விளையாட்டில்லை கல்லிலான செதுக்கள். இன்று நம்மை காயப்படுத்துபவர்கள் நம்மை நாளை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்களா என்பது பெரியதொரு கேள்வியும் கூட….நம்மவர்கள் நமது கரம் கோர்த்து என்றும் கூடவே வரவேண்டும் அது தாங்க வாழ்க்கை. இங்க கொஞ்ச நாள் அங்க கொஞ்ச நாள்…. இதெல்லாம் விபசார வாழ்க்கைங்க…. இங்கு விபச்சாரம் உடலளவில் அல்ல மனதளவில்….. எல்லாம் நன்மைக்கே! திரும்பவும் சொல்கின்றேன் வாழ்க்கையை தெரிவு செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிழை செய்தவர்கள் நாம் தப்பிவிட்டோம் அல்லது நம்மை நியாயமானவர்களாக காட்டிவிட்டோம் என்று நாம் நமக்குள் கூறிக்கொள்ளலாம். ஆனால் நாம் செய்த ஒவ்வொன்றிற்கும் மறுதாக்கம் நிச்சயம் உண்டு. கடவுள் என்று ஒருவன் இருக்கின்றான். காலமும் பதில் சொல்லும். தர்மம் எப்போதும் நின்று தான் கொல்லும்........

“குலமும் குணமும்”


எனக்கொரு உற்ற நண்பனிருக்கின்றான். எனது குடும்ப நண்பனும் கூட. சமூகத்தில் பொறுப்பானதொரு பதவியிலிருப்பவர். நல்லதொரு ஓவியன். நாமிருவரும் அநேகமாக பல விடயங்கள் பற்றி பேசி விவாதித்துக் கொள்வோம். அரசியல் அறிவில் எனக்கு குருவும் கூட. அரசியல், கலை , இசை பற்றி இருவருக்கும் பல ஒன்றுபட்ட எண்ணங்கள் உண்டென்றாலும் எனக்கு பிடிக்காத ஒரு விடயம் அவரது “சதி வெறி” இது தொடர்பில் நாமிருவரும் முரண்பட்டுக் கொண்டாலும் இந்த சித்திரை புத்தாண்டன்று நடந்த ஒரு விடயம் பற்றி சொல்லிக்கொள் வேண்டும்.
எனக்கு கவிஞர் நண்பர் ஒருவர் இருக்கின்றார். இந்த கவிஞருக்கும் ஓவியருக்கும் என்ன பிரச்சினை எனக்குத் தெரியாது (தனிப்பட்ட முறையில் ஏதுமுண்டோ???) அவரைப் பற்றி இவரும் இவரைப் பற்றி அவரும் பேசி ஒரே மோதிக்கொள்வதுண்டு. நேரடியாகவல்ல இவர்களிருவரினதும் வீரமும்  என்னிடம் தான். (இருதலைக் கொள்ளி எறும்பு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்போது தான் புரிகிறது அந்த எறும்பின் அவதி எப்படியிருக்குமென்று). ஆரம்பத்திலிருந்தே என் ஓவிய நண்பனுக்கு அவர் பற்றி நல்ல அபிப்பிராயமில்லை. “எல்லாம் கொஞ்ச காலம் தான் இன்னொன்றை கண்டவுடன் எல்லாம் போய்விடும்…. கவிஞரா? வழிஞ்சலா? என்பது கொஞ்ச நாளில் தெரியும்” என்று ஒரே கூறுவார்.

கடந்த சில நாட்களாக கவிஞர் நண்பர் என்னுடன் பேசுவதில்லை எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகொண்டிக்கின்றார் என்பது உண்மை தான். புதுவருடத்தன்று கூட “ என்னை இனி அழைக்க வேண்டாம் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை” என்று குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். இது நடக்கும் போது எனது குடும்பத்தினருடன் ஓவிய நண்பன் வீட்டில் விருந்திற்கு சென்றிருந்தோம். கவிஞரின் குறுஞ்செய்தி பார்த்து நான் கண்கலங்கியவுடன் இந்த ஓவியருக்குள் சாத்தான் புகுந்துவிட்டது. “என்ன நான் சொன்னது நடந்து விட்டதா?” என்று தான் கேட்டார். எனக்கு கவிஞரை விட்டுக்கொடுக்க மனமில்லை. “அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் வேலையாக இருக்கிறாராம்” என்று முடித்துக்கொண்டேன். ஆனாலும் இந்த சாத்தான் விட்டதா? திரும்ப திரும்ப “குலத்தளவே குணம்” என்று சொல்லி கடுப்பேத்திக்கொண்டிருந்தது.

இந்த நீண்ட சம்ப விபரித்தலுக்குப்பின் ஒரு விடயத்தினை தான் சொல்ல வருகின்றேன். அதென்ன குலம்….? ஒருவனது குலம் அவனது பிறப்பினால் முடிவாகிவிடுவதல்ல குணத்தினால் முடிவாகும் விடயம். ஒரு வேளை அவர் வேலைப்பளுவினாலோ அல்லது வேறொரு கோபத்தினாலோ அவ்வாறு கூறியிருக்க கூடும். அவரும் பொறுப்பானதொரு பதவியிருப்பவர். அதற்காக அவரது குலம் எப்படி காரணமாகிட முடியும். நான் அவருடன் பல மாதங்களாக நண்பியாக இருக்கின்றேன்.. நான் கூட வேலைப்பளுவினால் அதனால் ஏற்பட்ட அழுத்தங்களினால் பலமுறை  காயப்படுத்தியிருக்கின்றேன். அதற்காக வேறொருவருடன் புது உறவு ஏற்பட்டுவிட்டது என்றோ அல்லது பதிதாக நல்லதொன்றை பார்த்துவிட்டேன் என்பதா அர்த்தம்? அல்லது ஏமாற்றப் போகின்றேன் என்பதா பொருள்?
ஆகவே சும்மா சாதிகளை கொண்டு மனித மனங்களை எடை போடாமல் புரிந்துகொள்ளப் பழகவேண்டும். ஒருவனது பண்பும் அவன் அடுத்தவர் மேல் கொண்டிருக்கின்ற அன்பும் தான் அவனது சாதியை தீர்மானிக்கின்றதே அன்றி ஒருவனது பிறப்பல்ல. படித்து பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் போதாதுங்க அடுத்தவரை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஓவியத்தினை கிறுக்குவதை விட மனிதத்தினை மதியுங்கள் நண்பரே…..

ஆண் - பெண் நட்பு

எனது முன் பதிவானது “புரிதலும் பிரிதலும்” என்ற பதிவில் என் நண்பனின் நட்பை நியாயப்படுத்தியிருந்தேன். இது தொடர்பில் என் முகநூல் நண்பி ஒருவர் “உங்கள் காதலருக்கோ/கணவனுக்கோ பெண் ஒருவருடன் நட்பு இருந்தால் உங்கள் கருத்து என்ன?” என்று வினவி அதை அடுத்த பதிவாக எழுதும் படியும் கேட்டிருந்தார்.

நல்லதொரு வினா: நான் இந்த வினாவிற்கான பதிலை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டிய வயதில் தான் இருக்கின்றேன். (இதற்காக எனக்கு திருமணமாகிவிட்டது / காதல் உண்டு என்று நினைத்து கடலை போடுவதை நிறுத்தி விடாதீர்கள்)

உளவியல் ரீதியாக ஒரு ஆணோ, பெண்ணோ பாலர் பருவத்தில் எதிர்பாலாரின் கவனத்தினை தம்மிடம் திருப்ப முயற்சிப்பது முதல் பருவவயதில் பெண்ணாயின் தந்தையிடமும், ஆணாயின் அம்மாவிடமும் மற்றும் பாடசாலைப் பருவத்தில் எதிர்பாலானவரிடமான ஈர்ப்பு வரை எதிர்பால் கவர்ச்சி இருப்பது தான் சாதாரண மனித இயல்பென்றும் இல்லாதுவிடின் அது அதாதாரண நிலை (Disorder) என்றும்  சொல்லப்படுகின்றது.

அத்துடன் என்னை எடுத்துக்கொண்டால் நான் ஊடகவியல் மற்றும் பொறியியல் துறையில் இருக்கின்றேன். நிச்சயம் ஒரு பெண்ணாக ஆயிரம் ஆண்களையும், அது போல் ஓர் ஆண் இருப்பின் அவர் ஆயிரம் பெண்களையும் தாண்டிப் போகவேண்டியிருக்கும். இப்போது அன்றைய காலம் போல் நாம் தனியுலகமாக இருக்க முடியாது. உலகத்தை கைக்குள் உள்ளடக்கியுள்ள நவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆகவே என்னளவில் என் கணவருக்கோ/காதலருக்கோ ஒரு பெண் நண்பி இருந்தால் அதனை நான் நிச்சயம் வரவேற்பேன். ஆனால் அதற்கான எல்லைகளை என்னவர் எவ்வாறு வரையறுத்துள்ளார் என்பதையும் கருத்தில் கொள்ள தவறமாட்டேன். ஒரு நல்ல நண்பியுடன் என்னவர் பழகும் போது தான் ஒரு பெண்ணுடைய உள, உடல் ரீதியான பிரச்சினைகள் பற்றி நிச்சயம் தெரிந்து கொண்டு மனைவியை/காதலியை அணுசரித்து போவார் என்பது என் கருத்து. ஓர் ஆண் - பெண் நட்பு எங்கே பிழையாக நோக்கப்படுகிறதென்றால் அவை இருவருக்கும் பொதுவானதாக இல்லாத போதுதான்.

என்றுடைய கணவர்/காதலன் தன் நண்பியை எனக்கு அறிமுகம் செய்தால் நிச்சயம் அவர்கள் நட்பை வரவேற்பேன் அணுசரித்தும் போவேன். (இடைக்கிடையில் கொஞ்சம் செல்ல சண்டைகளும் பிடிப்பேன். அதற்காக சொக்கலேட்டும் வாங்கி தரவேண்டும்.)

என்னவனின் நட்பு எல்லையை தாண்டாமல் இருக்கும் வரை நிச்சயம் அதை புரிந்துகொண்டு அந்த நட்பிற்கு மதிப்பளிப்பேன். ஏன் அதை பிளஸ் ஆக கூட பயன்படுத்தி கொள்வேன். ஒரு வேளை என்னவன் என்னுடன் சண்டை போட்டால் அவர் நண்பியிடமே சொல்லி (நல்லா நிறைய குட்டுகள் போட்டு) என்னுடன் சமாதானப்படுத்த வைப்பேன். என்னவன் நட்பையும் காதலையும் வேறுபடுத்திப் பழகக்கூடிய நிதானமானவனாக அமைவான் என்பது நிச்சயம். எனக்கும் ஆண் சகோதரர்கள் இருக்கின்றார்கள் அவர்கள நல்ல நண்பிகள் நிறையப் பேருடன் பழகுகின்றார்கள். அதற்காக அவர்கள் பிழையா செய்கிறார்கள்?. என்னவனை பயமுறுத்தி அவர் நட்புகளுக்கு தடை போட்டு அவரை Disorder Person ஆக மாற்ற நான் தயாரில்லை.

“ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை”  போன்று (நான் Sweet தான் சும்மா ஒரு கதைக்கு)  என்னை மட்டும் கண்டு நட்பாகி அது காதலாகி கடைசியில் கடுப்பாகுவதை விட நிறைய இனிப்பை பார்த்தவன் போல் பல நல்ல நண்பிகளுடன் பழகியும் என்னில் ஏதோ இருப்பதாக எண்ணி என்னை தெரிவுசெய்பவனைத் தான் எனக்கு பிடிக்கும். ஏன் அது தான் நிலைக்கும். ஆகமொத்தத்தில் பக்குவப்பட்ட ஒருவனைத் தான் நானும் வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்வேன்.

எதுவும் நாம் பார்க்கின்ற முறையிலும், அனுகுகின்ற விதத்திலும் தான் இருக்கின்றது. எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என்னவனுக்கும் நிறைய நல்ல நண்பிகள் இருந்தால் நிச்சயம் வரவேற்பேன். கூடவே நல்ல கணவர்/காதலன் கிடைக்கப் போகின்றான் என்று நினைத்து சந்தோசமும் அடைவேன். அவ்வப்போது பெண்மைக்கே உரிய பொறாமை எட்டிப்பார்த்தாலும் குட்டிச் சண்டை போட்டு விட்டு அடுத்த நிமிடமே மறந்திடுவேன்.

என்னவனுக்கு நல்ல நண்பி இருக்கின்றாள் என்றால் இது என்னவனின் பண்பையும், அதை புரிந்து கொண்டு நான் நடக்கும் போது அது எம்மிருவருக்கான அன்பையும் அந்நியோன்னியத்தையும் காட்டும் நண்பி

எப்படி எனது பதிலில் உங்களுக்கு திருப்தியா நண்பி???

புரிதலும் பிரிதலும்

எனது இறுதிப்பதிவில் சந்தேகம் எனும் நோய் என்ற தலைப்பில் சில உளவியல் தொடர்பான விடயங்களை கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியானதான மேலும் சிலதை இன்று பகிர விரும்புகின்றேன். நான் அந்தப் பதிவினை பதிந்த வேளை சந்தேகத்தினால் ஊசலாடிக் கொண்டிருந்த என் பல்கலைக்கழக நண்பன் - நண்பியின் காதலினையும் அவர்களிடையான பிரிவிற்கான சில விடயங்களையும் கருத்தில் கொண்டு முன்வைத்திருந்தேன்.

உண்மையில் பல்கலைக்கழக காலம் என்பது வாழ்வில் மறக்க முடியாத பல நினைவுகளை கொண்டிருக்கும். பரீட்சைகள் , விரிவுரையாளர்களின் அறுவைகள் , ஆய்வுகூடத்தில் நடத்தும் கூத்துக்கள் என பல சுவாரஸ்யங்களுடன் பல நல்ல நண்பர்கள் சில வேளை அந்த நட்புகளே காதலாகி கனிவது முதல் பல இனியவைகள் என்றும் மறக்கமுடியாதவை. 
எங்களது பொறியியல் பிரிவிலும் ஒரு குழாம்; இருக்கின்றது. மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக மொத்தம் ஆறு பேர். அதில் ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று விட மீதியாக நாங்கள் ஐந்து பேர். எங்கள் குழுவிலும் ஒரு காதல் சோடி இருந்தது…( இங்கு இறந்தகாலத்தினை பாவிப்பதற்கு காரணம் அவர்கள் காதல் கடந்த கிழமையுடன் இறந்து விட்டது) நாங்கள் ஐவருமே சமூகத்தில் பொறுப்பான பதவி வகிப்பபவர்கள். எங்கள் இலட்சியங்களுக்காக மட்டுமே பொறியியலினை தெரிவு செய்துள்ளவர்கள். அனைவரும் கட்டடப்பொறியியல் தான் பயில்கின்றோம். பொறியில் என்றாலே பெரிய சுமை அதிலும் கட்டடப்பொறியியல் கேட்கவே வேண்டாம். கூடவே எங்கள் பணிகளும் எம்மை அழுத்துவதால் சில வேளைகளில் ( 24 வயதில் இது பெரியதொரு தியாகம்) கடலை போட கூட நேரம் கிடைப்பதில்லை. எம் குழுவில் நானும் இன்னொருவரும் கொஞ்சம் அமைதியானவர்கள் மற்ற நண்பன் கொஞ்சம் கலகலப்பானவர். அவரும் இன்னொரு நண்பியும் தான் காதலித்துக்கொண்டிருந்தார்கள். சிறு சிறு சந்தேகங்களினால் இன்று பிரிந்தும் விட்டார்கள். என்னவில் என் நண்பனைப் பிரிந்தது என் நண்பியின் துரதிஷ்டம் என்று தான் கூறுவேன். நான் கூட அவருடைய புரிந்துணர்வு, சிறு விடயங்களில் கூட காட்டும் அக்கறைகள், எவ்வளவு வேலைப்பளு இருப்பினும் அவளுடன் கதைக்காது இருப்பதில்லை போன்ற விடயங்களைப் பார்த்தும் பொறாமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு அக்கறையான, பாதுகாப்பான ,புரிந்துணர்வுடைய காதலை இன்று பார்ப்பது மிகமிக அரிது. ஏன் இவருடைய முகநூல் பாஸ்வேட்டை கூட தன் காதலிக்கு கொடுக்கின்றளவு நேர்மையான ஒருவர்.

நான் முன்னரே கூறியது போல் இரவு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பினால் வந்த சந்தேகம், அவனின் நண்பியினுடனான உறவில் ஏற்பட்ட சந்தேகம் என்பன இன்று விரிசலாகவே மாறிவிட்டது. இங்கு பார்வையில் தான் பிழை இருந்ததே தவிர என் நண்பனில் பிழை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இன்று இரு துருவங்களாகிவிட்ட இவர்களின் காதலை கனக்கும் மனதுடன் வேடிக்கை பார்க்கத்தான் எம்மால் முடிகிறது.
ஆனால் இதிலும் கூட பல பாடங்கள் உண்டு. ஒருவரை தெரியும் முன் யோசிக்க வேண்டும். நாம் கலகலப்பான பல ஆண் பெண்களுடன் பழகுபவர்களாயின் நம்மைப் புரிந்துகொள்பவர்களாக தெரிவுசெய்ய வேண்டும். நல்ல நட்புகளைக் கூட வேறு அர்த்தம் கொள்பவர்கள் நமக்கும் நமது தொழிலுக்கும் பொருத்தமற்றவர்களாயின் ஆரம்பத்திலேயே விலகிவிட வேண்டும்.

பழகிய பின் பிழை பிடித்து அடுத்தவர்களுக்கு வலிகொடுத்து விலகுவதை விட பழகும் முன்பே புரிந்துகொண்டு பழகுவது நல்லது

(யாரை முன்வைத்து எழுதினேனோ அவர்கள் என் எழுத்தினை வாசித்தும் இருவரையும் என் எழுத்து கூட சுடவில்லை என்பதும், நன்றாக புரிந்துகொண்டு உண்மையாக நேர்மையாக நடப்பவர்களுக்கு காதல் வாழ்க்கை அமைவதில்லை பலமுகங்களுடன் பலருடன் பழகுபவர்களது காதல் தான் கடைசி வரை நிலைக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. கடவுளை ஒரு வேளை கண்டால் அவனிடமும் இதற்கான காரணத்தினை நான் கேட்க வேண்டும்)

சில வினாக்கள்….


எல்லோருடைய மனதிலுமே நிச்சயம் எப்போதும் சில வினாக்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். வினா இல்லா மனம் வெற்றுத்தாளுக்கு சமம் என்று கூட கூறலாம். சில வினாக்களுக்கு விடைகள் இருப்பதில்லை. காரணம் இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தவனான கடவுள் வாய் திறப்பதில்லை என்பதால்.. இன்னும் சில வினாக்களுக்கு தேடியலைந்து விடையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். விடைகள் சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கக்கூடும். மேலும் சில கேள்விகளுக்கு பதிலே தெரியாமல் இருப்பது நல்லதே என்று கூட நினைக்கத் தோன்றும்.

இந்தப் பதிவில் நான் சொல்ல விழைகின்ற விடயம் “ நாம் ஒர் விடயத்தினை செய்யும் முன் எம்முள் வினா எழ வேண்டும்” என்பதே. அண்மையில் என் நண்பருக்கும் எனக்குமிடையில் முகநூலில் கருத்து பகிர்வது தொடர்பில் சிறு பிரச்சினை ஒன்று தோன்றியிருந்தது. நான் முகநூலில் இட்ட பதிவினை அவர் இருமுறை நீக்கிவிட்டார். நான் ஏன் என கேட்ட போது தன்னுடைய சகோதரன் யாரென கேட்பார் என பதிலளித்தார். நான் எதிர் கேள்வியாக மற்றவர்கள் “Dear” போடுவதைப் பற்றி அவர் கேட்கமாட்டாரா? என்று கேட்டு மூன்று நாட்களாக போரொன்றையே (????) தொடுத்திருந்தேன். இது மிகச்சிறியதொரு விடயம் ஆனால் என்னைப் மிகவும் பாதித்தது மட்டுமல்லாது நிறைய சிந்திக்கவும் கூட தூண்டிய விடயம்
போரின் இறுதிகட்டத்தில் அவரை வார்த்தைகளால் நான் காயப்படுத்திய தருணத்தில் என் மனதில் சில கேள்விகள் எழுந்திருந்தன. அவற்றிற்கான விடையை காண முயன்ற வேளை உரிமைச் சண்டை போட தோனவில்லை. சமாதானமாகி விட்டேன். ஆனால் சில உறுதியாக முடிவுகளுடன்….

அப்போது தோன்றியதொரு விடயம்  இக் கேள்விகள் எனக்கு ஏன் முன்பே தோன்றவில்லை என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறான உறவுகளுக்கிடையான சிறு விரிசல்களை போக்குவதற்கும், பல சந்தர்ப்பங்களில் சங்கடப்படாமல் இருப்பதற்கும் சில வினாக்கள் எம்முள் தினம் எழ வேண்டும்

•    (நான்) யார்?
•    எங்கு?
•    ஏன்?
•    எப்போது?
•    எதற்காக?
•    விளைவு என்ன?

இவை எம் மனதில் ஒன்றை செய்யும் முன்போ அல்லது ஒரு விடயத்தை பேசும் முன்போ எழுமாகவிருந்தால் எவ்வளவோ பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம். வீண் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் அல்லது மிகமுக்கியமாக அடுத்தவர் மனதை புண்படுத்துவதை தடுக்கலாம்.

கல்வியில் கேள்விக்கான பதில்கள் எம் அறிவை பெருக்குகின்றன. வாழ்க்கையில் எம்முள்ளான கேள்விகள் எம்மை செதுக்குகின்றன.


நிறம் மாறும் மனிதர்கள்





சூழலுக்கேற்ப மாறும்
பச்சோந்திகள்..
படித்ததுண்டு பாடசாலையில் -
தன்னைப் பாதுகாக்க தான்
மாறுகின்றன.. விஞ்ஞான ஆசிரியர்
அளித்தார் விளக்கம்
மேற்கோள் காட்டினார்
டாவின்சி கோட்பாட்டை

விஞ்ஞானம் கற்றுக் கொடுத்தது
ஐந்தறிவுகளின் மாறலை – என்
அனுபவங்கள் கற்றத் தருகின்றது
ஆறறிவுகளின் வேடமிடல்களை…

பிறப்பு முதல் இந்நாள் வரை
காதல் முதல் நட்பு வரை
காலை முதல் மாலை வரை
சலித்துவிட்டன (மா) மனிதர்களின்
நிறம் மாறல்களைப் பார்த்து….

புகழ்ந்த வாய்கள் இகழ்கின்றன
சிரித்த முகங்கள் முறைக்கின்றன
அணைத்த கைகள் நேரம் பார்க்கின்றன
அடிப்பதற்கு
நட்புகள் கூட மறைகின்றன
சூழலிலிருந்து தப்புவதற்கு

ஐந்தறிவு மாறலுக்குக்குக் கூட
இயற்கை சூழல்
எதிரியிடமிருந்து பாதுகாப்பு
உணவுச் சங்கிலி - என
காரணங்கள் பலவுண்டு
நிறம் மாறும் மனிதர்களுக்கு….?

பணமா?
கவர்ச்சிகளா?
உயர்ந்ததை தேடுகின்ற இயல்பா?
காமமா?
காரிய சித்திகளா? - இல்லை
காரணமில்லா கர்மங்களா?

கேள்வி கேட்க
வாழ்க்கைப் பாட ஆசிரியரில்லை
கோட்பாடெழுத டாவின்சி இல்லை
இப்போதெல்லாம் - கடவுள்
கூட சிலையாகி – சில
வேளை நிற்பதால் - என்
கேள்விகளுக்குப் பதில்களும்
கிடைப்பதில்லை
கிடைத்தாலும் ஏற்பதற்கு
மனதில் சக்தியில்லை…

முகமூடி மனிதர்களிடையே
விடைகளை விட
விடையில்லா வினாக்கள்
மேலெனத் தோன – விளைகின்றேன்
நானும் நிறம் மாற… -  அல்லது
மௌனமாக தடம் மாற…



கனக்கின்றது மனம்.....


இன்று காலை முதல் இந்நிமிடம் வரை என் மனதில் பாரமாகவே அமைந்துவிட்ட ஒரு விடயத்தினை பகிந்துகொள்ள விரும்புகின்றேன்.
காலையில் கொழும்பு பொறளை – பலவத்தை வீதியில் பேரூந்தில் பயணிக்கும் போது இடம்பெற்றதொரு சம்பவம். நூன் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து ஐந்தாறு வரிசைகளுக்கு முன்பாக ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தார். தீடீரென நான் ஜன்னலோரம் அமர்ந்து இரசனையிலும் தொலைபேசியில் பாட்டும் கேட்டுக்கொண்டிருந்த போது பெரிய சத்தம் போட்டு ஏதோ கதைத்தார். ஏதோ காசுப் பிரச்சினை போல என்று நினைத்து பழைய படி நானும் பாட்டுக் கேட்கத் தொடங்கிவிட்டேன். பின்னர் அவர் அவரது தந்தையாரிடம் தொலைபேசியில் சொல்லி அழுத போது தான் புரிந்தது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவன் மறைகேடாக நடந்திருக்கின்றான். இந்த பெண் அடித்து விட்டு கூச்சல் போட அவன் இறங்கி போய் விட்டான். ஆனால் அருகிலிருந்த யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. (நானும் உட்பட பாழாய் போன பாட்டு என்ன வேண்டியிருக்கின்றது எனக்கு)

அவன் ஒரு குற்றவாளியென்றால் சுற்றியிருந்தும் தட்டிக் கேட்காமல் விட்ட நாமெல்லோரும் கூட ஒருவகையில் குற்றவாளிகள் தான். ஒரு ஆண் கூட இருக்கவில்லையா?.  இல்லை சமவுரிமை பேசுகின்ற பெண்கள் இருக்கவில்லையா? நமது தாய்க்கு , சகோதரிக்கு , மகளுக்கு , காதலிக்கு , மனைவிக்கு நிகழ்ந்திருந்தால் சும்மா இருந்திருப்போமா? வெட்கப்பட வேண்டிய தருணங்கள்….
இல்லை தெரியாமத் தான் கேட்கின்றேன்… அதென்ன பேரூந்தில் ஒரு பெண்ணுடன் உரசல் வேண்டியிருக்கின்றது? அப்படியென்ன இன்பம் கண்டுவிடுகின்றீர்கள்? உங்களுக்கு உரசுவதற்குத் தான் எத்தனையோ வழிகள் இருக்கின்றதே.. இரவு விடுதிகள் எத்தனை உண்டு அங்கு போய் உரசிப்பாருங்கள். இல்லை உங்கள் பிறப்பு உண்மையென்றால் உங்கள் அம்மாவிடம் கேளுங்கள்… ஒரு ஆணுக்கு பெருமையே பெண்ணை பாதுகாப்பது தான். எத்தனை பெண்களுடன் உரசினீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் ஆண்மை கணிக்கப்படகிறதா?
இங்கே ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் பிழை இருக்கின்றது. முதல் தடவையிலேயே நீங்கள் தட்டிக் கேட்டிருந்தால் இன்று எவ்வளவோ விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். சம உரிமை என்ற பெயரில் ஆடைக்குறைப்புக்கள் , மாலை நேர களியாட்டங்கள் என்று எப்போது படி தாண்டினீர்களோ அன்றே தொடங்கிவிட்டது இவ்வாறான வியாதிகள். பெண்ணியம் என்ற பெயரில் பெண்மைக்கு எதிரியும் நீங்கள் தான்…
அடுத்தது இந்த பாழாய்ப் போன சமூகம். யார் பிழை செய்தாலும் முதல் அடி பெண்ணுக்குத்தான். காலையில் கூட பக்கத்தில் இருந்த ஒன்று சொல்கிறது “ஏன் இந்த பிள்ளை இதை பெரிதாக்குகின்றதென்று?” உங்களுடைய இரத்த உறவுகளுக்கு நடந்தால் இப்படி கேள்வியெழுப்புவீர்களா? இல்லை எல்லோரும் சேர்ந்தாவது தட்டிக் கேட்க நினைத்தீர்களா? ஆறறிவு படைத்த உங்களை விட குறைந்தளவு அறிவுள்ள உயிர்களை பாருங்கள்… அதுகளுக்குள்ள ஒழுக்கங்கள் கூட உங்களிடமில்லை.  மனிதம் எங்கே போகின்றது…?

இந்த கொழும்பிற்கு வந்து நான் படிக்கின்றேனோ இல்லையோ நிறைய விடயங்களுக்கு பயப்படுகின்றேன். எனது ஊரிலெல்லாம் 6 மணிக்கு முதல் வீடு திரும்ப வேண்டும். அல்லது அப்பா அல்லது சகோதரங்களுடன் தான் செல்ல வேண்டும். அன்று ஒரு நண்பி மூலம் அறிந்தேன் இங்கு இரவு விடுதிகள் இயங்குவதாகவும் அங்கு யாரும் யாருடனும் செல்ல முடியும் என்று. இன்னொரு விடயம் அறிந்தேன் “காதல்” என்பது இப்போது வேறு மாதிரியாம். ஒரு பெண்ணுடன் ஒரு ஆணுடன் ஊர் சுற்றி, எல்லாவிடமும் போய் திரியலாமாம். ஆனால் அது திருமணம் முடிப்பதற்கு இல்லையாம். ஆச்சரியமாக உணர்கின்றேன். கூடவே சில அப்பாவிகளும் பாதிப்படைகிறார்கள் என்று கவலையுடன் தட்டிக்கேட்ட முடியவில்லை என்ற இயலாமையும் நெஞ்சை அடைக்கின்றது. 
ஏன் நண்பர்கள் கூறுவது போன்று உலகம் முன்னோக்கி போக நான் தான் பின் தங்கி விட்டேனா? இல்லை என் பாதை சரியாகத் தான் உள்ளதா? ஆயிரம் வினாக்கள் கூடவே காலையில் நானும் சூழ்நிலைக் குற்றவாளியாகி விட்டேன் என்ற மன உளைச்சல்…..



கனக்கின்ற இதயமுடன் மீரா


ஆண் எனப்பிறந்ததை பெருமையாய் கூறுவேன் !
பெண்ணைக்காக்கும் பெருங்கடமை !
எனக்கும் உண்டென்பதால் ......
மீண்டும் மீண்டும் ஆணாய் பிறக்கவேண்டும் !
பெண்மைக்கென்றே மீண்டும் வாழ வேண்டும் !
பெருமையுடன் பாரதி !!!


இனக்கவர்ச்சி, காதல், நட்பு


பொதுவாகவே பருவ வயதில் அனைவருக்குமே தோன்றும் இயல்பான உணர்வுகளே இவை. எதிர்பாலாரிடம் எமக்கு இவ்வாறான உணர்வுகள் தோன்றுகின்றன. இவற்றினை நாம் எவ்வாறு கையாள்கின்றோம் என்பதில் தான் இவற்றின் வெற்றி தங்கியிருக்கின்றது இவற்றிற்கான ஆயுளும் தங்கியிருக்கின்றது. அதிலும் இன்றைய சினிமா மற்றும் பொழுது போக்கு ஊடகங்களும் இவற்றிற்கான அடிப்படைகளை அமைத்து கொடுக்கின்றன.
ஒரு பெண்ணைப்பார்க்கின்றோம் அவளுடைய ஏதோவொன்று எம்மைக் கவர்கின்றது அவளுடனான தொடர்பை ஏற்படுத்துவோ அல்லது அதனை வலுப்படுத்தவோ அடிக்கடி கதைக்கின்றோhம் அல்லது நம் பக்கம் அவள் கவனத்தினை திருப்ப முயற்சிக்கின்றோம் அதேவேளை இன்னொரு பெண்ணைக்காணும் போது முன்னவளுடனான உறவைக் குறைக்கவோ அல்லது அவளில் குறை கண்டுபிடித்து உறவை கழற்றிவிடவோ முயற்சிக்கின்றோம். அதுவும் எப்படியென்றால் அவளுக்கு இன்னொருவனுடன் உறவு இருப்பதாக கற்பனைக் கதைகளையோ அல்லது அவள் நம்மிலும் தகுதியில் உயர்ந்தவனை தான் விரும்புகிறாள் என்றோ நம்மைப் போலவே அடுத்தவர்களையும் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம் அவ்வாறான கவாச்சிகளும் இதன் விளைவுகளையும் பழகத் தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே உணரலாம் அல்லது உண்மைச் சாயம் வெளுக்கத்தொடங்கும். ஒருவரால் நீண்ட காலத்திற்கு நல்லவராக நடிப்பதென்பது கடினம். இந்த கவர்ச்சிகளை நம்பி பெண்களே உங்கள் குடும்ப பெயர், படிப்பு என்பவற்றினை இழந்து விடாதீர்கள். எதுவுத் குறுகிய காலத்தில் வருகிறதென்றால் மீண்டும் குறுகிய காலத்திலேயே சென்று விடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். “மணலில் எழுதுவது எளிது ஆனால் விரைவில் அழிந்து விடும். பாறையில் எழுத அதிக நேரமெடுக்கும் ஆனால் காலங்காலமாக நிலைத்திருக்கும்.”


அடுத்தது நட்பு. இன்று மெல்ல மெல்ல ஆண் - பெண் நட்பினை சமூகம் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. நட்பு என்பது தூய்மையான ஒரு விடயம். பெற்றோரிடமோ அல்லது சகோதரங்களிடமோ சொல்லத் தோன்றாத எத்தனையோ விடயங்களை நண்பர்களிடம் தான் சொல்லத் தோன்றும். அதற்காக அந்த நண்பர்கள் நம் வாழ்நாள் முழுவதும் எம்முடன் வரவேண்டுமென நினைப்பதும் நமது நண்பியுடன் இன்னொருவரை இணைத்துக்கதைப்பதும் அபர்த்தமான விடயம். நுண்பர்களை தெரிவு செய்யும் போது நல்லவராக தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்து பழகிக் கொண்டே கெட்டவள் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு மறுபுறம் அவளுடன் உறவாடாதீர்கள். அதற்கு சமூக ஊடக காலமிது எல்லோரும் நண்பர்கள் என்று கதையளக்காதீர்கள். ஆண் என்பதால் எவ்வாறும் நடக்கலாம் நமக்கு நல்லதை கணிக்க தெரியும் பெண்ணென்றால் “முள் மேல் சேலை” என்று சிந்திக்க வேண்டுமென்று நியாயப்படுத்தாதீர்கள் “நண்பனை வைத்துத் தான் நம்மையும் கணிப்பார்கள்” இது ஆண் - பெண் இருபாலாருக்கும் பொருந்தும்

இறுதியானது காதல் சில வேளைகளில் புரிந்துணர்வு நிறைந்த நட்புகள் காதலாக மாறுவதுண்டு இவ்வாறானவை வரவேற்கத்தக்க விடயங்களும் கூட அதுவும் அவள் காதலில் தோற்றுவிட்ட பெண்னென்று தெரிந்த பின்பும் குறுகிய காலத்தில் நமது காதலை ஏற்கவில்லையே என நினைத்து அவளை சந்தேகப்படுவதும்  வார்த்தைகளினால் கொல்வதும் நமது அன்பையே கொச்சைப்படுத்திவிடும். பெண்களில் பலவகையுண்டு பலர் பலவித தேவைகளுக்காகவும் காதலிக்கின்றார்கள். ஆனால் நல்லதொரு குடும்பத்திலிருந்து வந்த மென்மையான உணர்வுகளைக்கொண்ட பெண்னென்றால் தனக்கு வரப்போகிறவரிடமிருந்து அன்பையும் பாதுகாப்பையும் நம்பிக்கையினையும் எதிர்பார்ப்பாள். மீண்டும் ஒருவரில் நம்பிக்கையினை பெறுவதற்கு சற்று நீண்ட காலம் எடுக்கலாம். அவள் காலம் தாமதிக்கும் போது அவள் ஏற்கவில்லை என்பதற்காக அவளை தவிர்க்க நினைப்பதும் குறைகளை கண்டுபிடிப்பதும் “உனக்கு ஈகோ” என்று கூறுவதும் நல்லதல்ல. எல்லோராலும் இலகுவில் ஒன்றை பிரதிபண்ண முடியாது. ஆனால் காலம் தாமதித்த எடுக்கும் முடிவுகள் சீரானதாக அமையும் என்பதை மறக்கக்கூடாது. நமது அன்பையும் . அக்கறையையும் தொடர்ந்தளிப்பதன் மூலம் நம்பிக்கையினை ஏற்படுத்த முயல வேண்டும். என்றொவொரு நாள் உங்கள் அன்பு அப்பெண்ணின் மனதை தொடும் உங்களில் ஏற்படுகின்ற நம்பிக்கை உங்கள் தோளில் சாயவைக்கும்.
எவருக்கும் தம் காதலில் தோற்கும் போது உடனடியாக இன்னொரு காதலில் ஈடுபட தோன்றும். நம்மிடம் புதிதாக காதலை தெரிவிப்பவர்கள் அருகில் போய் நிற்கத் தோன்றும். காதலை மறுத்து நட்புகள் பிரியும் போது மிகவும் வலிக்கும் ஏன் நம்மை நேசித்த ஒருவர் இன்nனொரு பெண்ணை பற்றி கதைக்கும் போது பொறாமைப்பட தோன்றும். அதையும் தாண்டி ஒரு இளவயது பெண் மறுக்கின்றாள் என்றால் எவ்வளவு வலிகள் இருக்கும் என யோசித்துப்பாருங்கள். ஏன் என்றால் வலிகளை நினைக்கும் போது மனம்; சுவரில் அடிபட்ட பந்தாக மீண்டுவிடும் என்பதால் தான். “ எவரும் தோற்றுவிடுவோம் என நினைத்து காதலிப்பதில்லை ஆனால் தோற்றுவிட்டால் காதலை மறுபடி நினைப்பதுமில்லை.” (இது உண்மையாக நேர்மையாக காதலித்து தோற்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.பலருடனும் நட்பு என்ற பெயரில் நேரம் கடத்தி கடலை போடுபவர்களுக்கல்ல அதன் பின் கழற்றிவிடும் போது “நட்பு” பற்றி வரைவிலக்கணம் படிப்பவர்களுக்கும் அல்ல)

உங்கள் காதல் உண்மையானது என்றால் மாற்றத்திற்காக காத்திருங்கள். தொடர்ந்தும் அன்பு செய்யுங்கள். “உண்மைக்காதல் என்றும் தோற்பதில்லை காதலிப்பவர்களை தெரிவு செய்வதில் தான் தோற்கின்றோம்”. எமக்கு கிடைக்கவில்லை என்பதற்காக பழிவாங்காதீர்கள். வார்த்தைகளால் வதைக்காதீர்கள் காத்திருங்கள் காலம் பதில் சொல்லும்.

“சீனியோரிட்டி” (seniority) என்றால் என்னங்க?




நாம் வேலை செய்யும் இடங்களில் வயதில் மூத்தவர்கள் அல்லது அதிக ஆண்டுகள் பணிபுரிபவர்கள் சில இளசுகளை மட்டந்தட்டுவதைப் பற்றி எனது இந்த வலைப்பூவில் பதியவுள்ளேன்.
பொதுவாக ஒரு குடும்பத்தினை எடுத்தக்கொண்டால் வயதில் மூத்தவர்கள் பிழை செய்யும் சிறியவர்களை தண்டிப்பதும் அன்பால் திருத்துவதும் உண்டு. அவை ஒவ்வொன்றும் “தொற்றுநோய்களுக்கு முன்னரான அம்மாவின் கைமருந்து” போன்று மூத்தவர்களிடமிருந்து இளையவர்களுக்கு கிடைப்பதான அனுபவ பகிர்வுகள். ஏன் வாழ்க்கையிலும் அத்தகையவர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள்.; இளையவள் நான் அந்த நிமிடம் கோபப்பட்டாலும் முரண்டு பிடித்தாலும் காலம் கடந்து இன்றும் யோசிக்கும் போது அம் மூத்தவர்கள் எடுத்துக்கொண்ட உரிமைகள் அவர்களது கண்டிப்புக்கள் தங்களை எந்தளவு என்னை செதுக்கியுள்ளதென்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் இன்று அலுவலகத்தில் பணிபுரியும் போது எனக்கு ஏற்படுகின்ற அனுபவங்கள் என்னை செதுக்கும் உளிகளல்ல பாதத்தினை பதம் பார்க்கும் விஷ முட்கள் என உணர்கின்றேன்.

அலுவலகம் என்று வரும் போது ஏன் இளையவர்களை மட்டந்தட்டுகின்றோம்? எவ்வளவுதான் படித்து பட்டம் பெற்றிருந்தாலும் யாருமே எல்லாவற்றையும் நூறு வீதம் அறிந்து வருவதில்லை. காலங்கள் தான் ஒவ்வொருவரையும் அனுபவஸ்தவராக்குகின்றது. ஏன் இன்று “சீனியர்ஸ்” என்று சொல்லிக்கொள்பவர்களும் ஒரு நாள் “ஜீனியராக” இருந்திருப்பார். அப்படியிருக்கும் போது ஏன் பிழை பிடித்து எமது சிறு குறைகளை பெரிதுபடுத்தி அதிகாரங்களின் விரல் கொண்டு நசுக்குகின்றார்கள். எங்களது மனதில் தினம் ஒருவித பயத்தையும் “என்னால் முடியுமா?” என்ற ஐயத்தினையும் எங்கள் மனதில் தோற்றுவிக்கின்றார்கள்.?
ஒரு வேளை எங்கள் திறமையை கண்டு பயப்படுகின்றார்களோ? என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால் உங்கள் அனுபவர்கள் தான் எம்மை முன்நோக்கி கொண்டு செல்லும் என்ற உண்மையை இளையவர்கள் நாம் மிகவும் உணர்ந்திருக்கின்றோம்.

இனிமேலாவது எம்மைப் புரிந்து கொண்டு எமக்கு களம் அமைத்துத் தாருங்கள். உங்கள் அனுபவம் + எங்கள் திறமை சேரும் போது பல வெற்றிகளை உருவாக்க முடியும் எடின்பதை புரிந்து கொள்ளுங்கள். “ஒரு தாய் தவறி விழுந்த குழந்தையை கைதூக்கி விடுவதால் அவளுடைய தாய் என்ற பதவி பறிபோய்விடுவதில்லை”. “சீனியர்” என்ற ஆயுதம் ஏந்தி தினமொரு போர் தொடுக்காமல் உங்கள் அனுபவ உளியால் எம்மை செதுக்குங்கள். உங்களது செதுக்கல்கள் எங்களை சிற்பங்களாக்குவதுடன் உங்களையும் சிறந்த சிற்பிகளாக்கும்.

பதுங்கியிருந்து பாதையில் முட்களை தூவாமல் தினமொரு பூ கொடுங்கள்….சீனியோரிட்டி (seniority) என்றால் அது தாங்க “சிறந்த சிற்பங்களே சிற்பியின் வெற்றிச்சின்னங்கள்” எனபதை உணருங்கள்.

இது யாரையும் தனிப்பட்ட ரீதியாக புண்படுத்துவதற்காகவோ அல்லது அவர்களை சாடுவதற்காகவோ எழுதப்பட்டதல்ல. தினம் எனது அலுவலகத்தில் பணிபுரிபவர்களினால் என் பாதையில் சந்திக்கும் சம்பவங்களின் வலிகளே  ஆயினும் அண்மையில் எனது ஊடகபணியின் நிமிர்த்தமாக பயணத்தினை மேற்கொண்ட போதான எனது கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடு இவ்வலைப்பூவினை உடன் என் அதிமுக்கிய வேலைப்பளுக்களின் மத்தியிலும்  எழுத தூண்டியது. வலிகளை வரிகளில் வடிக்கும் போது ஒருவித ஆற்றுகை ஏற்படுவதாக உணர்கின்றேன்.இதனை வாசிக்கும் உள்ளங்கள் தங்களை திருத்திக்கொண்டு இளையவர்களை தட்டிக்கொடுத்தால் அதுவே எனது எழுத்தின் வெற்றியும் எனது உள்ளத்தில்  ஏற்பட்ட வடுவிற்கான மருந்தும் ஆகும்

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை