Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

கல்லடிப்பால கறுப்பன்....


சில விடயங்களை நினைத்தவுடன் இசை நினைவிற்கு வரும் சிலநேரங்களின் அந்தந்த சம்பவங்களுக்கென வாசனைகள் உண்டு. சிலவற்றினை நினைக்கும் போது சில அடையாளங்கள் எம்மனக்கண்ணில் தோன்றும். அப்படி “மட்டக்களப்பு” என்றவுடன் எமக்குள் முதல் சிந்தையில் உதிப்பது “கல்லடிப்பாலம்”. கறுத்த கம்பீரமான அதன் தோற்றம் தான் பெரும்பாலும் “மட்டக்களப்பு’ என்பதன் அடையாளமாக கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பிற்கு வராதவர்கள் இருப்பார்கள் ஆனால் கல்லடிப்பாலத்தினை படங்களில் சரி ஒரு தடவை பார்க்காதவர்கள் இல்லை என்று சொல்லலாம். கடந்த சில வாரங்கள் நூலகத்தினுள் தொலைந்து கொண்டிருக்கும் எனக்கு இந்தக்கல்லடிப் பாலம் குறித்த சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றினை தொகுத்தே இதை வரைகின்றேன்.

மட்டக்களப்பு நீர்வளம் நிறைந்த பிரதேசம் என்பது நாமனைவரும் அறிந்ததே. இது களப்பு அமைப்பிலும் அமைந்துள்ளதால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்ல வேண்டுமாயின் நீர் நிலைகளை கடந்தே செல்ல வேண்டும். ஆக போக்குவரத்து தேவையினை கருத்திற்கொண்டு பிரிட்டிஷ்காரர்கள் பாலம் அமைக்க தீர்மானித்தனர். இதனடிப்படையில் மட்டக்களப்பு கல்லடிப்பாலம் கட்டுவதற்கான பணிகள் 1924 ஆம் ஆரம்பிக்கப்பட்டு 1928 ஆம் ஆண்டு நிறைவுற்றது.  இக்காலப்பகுதியில்  இலங்கையின் ஆளுநராக இருந்த சேர்.மனிங் மற்றும் அவரது துணைவியார் லேடி மனிங் அவர்களாலும் இப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலமானது “பாடும் மீன்கள்” வாழ்கின்ற மிகவும் ஆழமான நீர்நிலைகளுக்கு மேலாக அரசடி மற்றும் கல்லடி ஆகிய  இடங்களை இணைப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவெனில் பாலத்தின் இரு அந்தங்களிலும் நாற்சந்திகள் அமைந்துள்ளன. இப்பாலத்தின் ஆயுற்காலம் 1985 ஆம் ஆண்டு என குறிக்கப்பட்டிருந்த போதிலும் 2013 ஆம் ஆண்டு வரை இப்பாலம் மட்டும் தான் போக்குவரத்திற்கு புழக்கத்தில் இருந்தது. 2013 மார்ச் 13 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புதிய பாலம் ஒன்று இதற்கு சமாந்தரமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்தக்கல்லடிப் பாலம் எப்படி மட்டக்களப்பு என்றவுடன் சிந்தையில் உதிக்கின்றதோ அதேபோன்று கல்லடிப்பாலம் என்றவுடன் ஞாபகத்தில் தோன்றும் விடயங்களில் ஒன்று “தற்கொலை”. இன்றும் முந்தைய தலைமுறையினர் ஏசும் போது கூட “ கல்லடிப்பாலத்தில இருந்து குதிச்சு செத்துப் போ” என்டு தான் பேசுவதுண்டு. (எனக்கும் பலர் இப்படி சொல்லிருக்கின்றார்கள். குறிப்பாக உயர்தரத்தில் சறுக்கின போது… ஆனாலும் “ஆக்கிமிடிசின் தத்துவத்திற்கிணங்க நான் குதித்து நீர் அவ்வளவும் வெளியேறி சுற்றுமுற்றுமுள்ள கிராமங்கள் மூழ்கிவிடும் என்பதாலும் செத்தாலும் சவம் ஊதி அழுகி மீன் கடித்து அசிங்கமாக இருக்க கூடாது என்கின்ற என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தாலும் நான் குதிக்கவில்லை) இப்படி அவர்கள் இன்றும் பேசும் படியாக இருப்பதற்கான “தற்கொலை”யின் தொடக்கம் குறித்தும் ஒரு கதை உண்டு.

மகேஸ்வரி என்கின்ற தமிழ் இளம்பெண்ணும் மீரா மொகைதீன் என்கின்ற முஸ்லீம் இளைஞனும் உயிருக்குயிராக காதலித்திருக்கின்றார்கள். விஷயம் வெளியே கசிந்து மதத்தினை காரணம் காட்டி யாரும் இவர்களது காதலுக்கு சம்மதிக்கவில்லை என்பதால் இருவரும் பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார்களாம். இவர்கள் தொடங்கி வைத்த பின்னர் காதலில் தோற்றவர்கள் முதல் என்னத்தில் தோல்வியடைந்தாலும் கல்லடி பாலத்திலிருந்து குதித்து பலர் இதுவரை தற்கொலை செய்திருக்கின்றார்கள். இதில் பல பிரபலங்களும் அடக்கம். இதற்கொரு உதாரணம் “ராஜபாரதி” என்கின்ற புனைப்பெயரில் எழுதிப் புகழ்பெற்ற கவிஞரான வி.கி.ராஜதுரை என்கின்ற தமிழாசானும் தன்னுடைய இறுதிக்காலத்தில் கல்லடிப் பாலத்திலிருந்து குதித்துதான் தன் உயிரை மாய்த்துக்கொண்டாராம்.

இது இப்படியிருக்க சுனாமி, வெள்ள அனர்த்தங்களுக்கு முன்னர் இப்பகுதியில் பாம்புகள் திரள்திரளாக வந்து சென்றதுமுண்டு. இவை பாம்புகள் அல்ல விலாங்கு மீன் வகையில் ஒன்று என்கின்ற கருத்தும் உண்டு. நீர் நிலைகளுக்கடியில் ஆற்றுப்படுக்கைக்கருகில் வாழ்கின்ற இவ்வகை மீன்கள் பூகோளத்தில் பிரளயம் தோன்றும் முன் வேறிடம் நகர்வதற்காக தான் வருகின்ற என்றும் பிரளயம் தோன்றும் முன் உண்டாகின்ற வெப்பத்தினால் தான் மேல் தளங்களுக்கு வருகின்றன என்றும் கூறப்படுகின்றன. சுறா போன்ற பெரிய மீன்கள் கடலிலிருந்து குட்டி போடுவதற்காக பாலத்தின் கீழான ஆழமான பகுதிக்கு வந்து பாலத்தின் அடியிலுள்ள பகுதியில் நோவெடுக்கும் தமது வயிறை உராய்ந்து குட்டிகளை போட்டு விட்டு மீண்டும் கடலுக்கு சென்றுவிடும் என்றும் கூறப்படுகின்றது. இங்கும் கூட பாருங்கள் நீருக்கு மேலுள்ளவைக்கு இது உயிரை மாய்க்கும் இடம் நீருள் இருப்பவற்றிற்கு தமது இனத்தினை உற்பத்தி செய்யும் இடம். ஆக கல்லடிப்பாலம் “ கல்லறையாகவும் கருவறையாகவும்” இருக்கின்றது.

சுமார் 85 வருடம் பிரம்மசரியம் மேற்கொண்ட கல்லடிப்பால கறுப்பனுக்கு இப்ப தான் ஜோடியாக பக்கத்திலேயே ஒரு புதிய பெண் ஒன்று வந்திருக்கின்றா… இனியாவது ஜோடி சேர்ந்த இவர்கள் ஜோடிகளை சேர்த்து வைக்க வேண்டும்…..

நன்றி – நூலகம், செ.குணரத்தினம் அவர்களது குறிப்புக்கள்…. 



இதிலுள்ள படங்கள் என்னால் கிளுக்கப்பட்டவை... 

முதல் படம் - கல்லடி பாலம்
 
இரண்டாவது படம் - அருகில் மீன் பிடிக்கும் மீனவர் ஒருவர்

கடவுள் ஏன் சிலையானான்.....?


இன்றைய நவீன உலகில் கடவுள் நம்பிக்கை என்பது மிகவும் அரிதாகிக் கொண்டிருக்கின்றது. கடற்கரை, கடைகள், பூங்காக்கள் என சுற்றி வருகின்ற இளந்தலைமுறையினர் வழிபாட்டுத்தலங்களை நினைத்துப்பார்ப்பது சமயவிழா நாட்களில் மட்டுமே. அதுவும் தமது புதிய உடைகளை காட்டுவதற்காகவோ அல்லது வீட்டிலிருக்கும் முதியோர்களின் நச்சரிப்புகளை தாங்கமுடியாமையினாலோ மட்டுமே. எவ்வாறாயினும் இன்று இறைவழிபாடென்பது அரிதாகிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எம் முன்னோர்களை எடுத்துக்கொண்டால் அதிகாலை எழும்புவது முதல் இரவில் உறங்குவது வரை இறைவனுக்கும் இறைவழிபாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். ஒவ்வொரு வீடுகளிலும் கடவுளின் படங்களோ அல்லது சிலைகளோ இருந்திருக்கின்றது. அதிலும் முன்னைய காலங்களில் சிலை வழிபாடென்பது முக்கியமானதொன்றாக காணப்பட்டது. சிலைகள் செய்வதற்கான கல்லினை தேர்ந்தெடுப்பது முதல் அவற்றினை சிற்பங்களாக வடிப்பது வரை சாஸ்திரங்களை பின்பற்றியதுடன் அவற்றிற்கான வழிபாட்டு முறைகளுக்கும் கூட பலவித அபிஷேக முறைகளையும் ஐதீகங்களையும் வகுத்திருந்தனர். இவற்றை உருவாக்குவதை பிரதானப்படுத்தி இனங்கள் .தொழில்கள் என்பனவும் பாகுபடுத்தப்பட்டன. இதனையொட்டி சிற்ப,செதுக்கல்,நாட்டிய கலைகளும் தோற்றம் பெற்றன.

இவ்வாறான கடவுள்களின் சிலைகள் பெரும்பாலும் கருங்கற்களில் தான் வடிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் என்ன தெரியுமா? பிரபஞ்சத்தினையே படைத்த இறைவனை பஞ்சபூதங்களும் அடங்கிய கருங்கற்களினால் உருவாக்கவேண்டுமென்பதாலேயே.... எவ்வாறு கருங்கல்லானது நீர்,நிலம்,காற்று,நெருப்பு ,ஆகாயம் என்பவற்றை உள்ளடக்குகின்றதென ஆச்சரியமாகவுள்ளதா?

நிலம் - கல்லும், மண்ணும் சேர்ந்தது.
நீர்; - நீர் என்பது பாறைகளிலிருந்து தான் ஊற்றெடுக்கின்றது. ஆகவே நீரின் குணமான குளிர்ச்சியினை பாறைகள் கொண்டுள்ளன.
காற்று – பாறையினுள் தேரை போன்ற உயிரினங்கள் வசிக்கின்றன. அவ்வாறான உயிரினங்கள் சுவாசிப்பதற்கு வளி அவசியம். பாறையினுள் வளி கிடைப்பதனாலேயே அவை அங்கு வசிக்க முடிகின்றது. எனவே கல்லினுள் காற்றடங்கியுள்ளது.
நெருப்பு – ஆதிகாலங்களில் கல்லையும் கல்லையும் உராய்வதன் மூலம் நெருப்புண்டாக்கப்பட்டது. ஆகவே தீயென்பது கல்லினுள் அடக்கமாகின்றது.
ஆகாயம் - ஆகாயம் என்பது சப்தங்களின் தொகுப்பு. கற்களானது சப்தங்களை உண்டாக்குகின்றன.எனவே ஆகாயத்துவமும் இதனுள் உறைந்துள்ளது.

இதனால் தான் அசையா தன்மை கொண்டதாயினும் பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய கல்லினால் எம்மனைவரையும் ஆட்கொள்கின்ற இறைவனை வடிக்கின்றார்கள்.

கடவுள் என்பவன் இருக்கின்றானா? இல்லையா? என்பதைப்பற்றி ஆராய்ச்சிகள் ஒரு புறமும் கடவுளைக் கண்டவர்களுண்டா? அவனுக்கு வடிவங்களுண்டா என்கின்ற விரண்டாவாதங்களும் , கடவுள் என்பவன் எங்குமில்லை என்கின்ற நாத்திகவாதமும் . துன்பங்கள் வரும் போது “கடவுளே உனக்கு கண்ணில்லையா? நீயேன் சிலையாக இருக்கின்றாய் “ என்கின்ற புலம்பல்களும் இன்றும் தொடர்கின்றன....எவ்வாறாயினும் உலோக சக்தி,மனோ சக்தி, மந்திர சக்தி, எந்திர சக்தி, ஆத்ம சக்தி என உறைந்து பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டுள்ள விக்கிரங்களை வழிபட்டு “ அவனின்றி அணுவும் அசையாது” என அவன் காலடியில் சரணடைந்து விடுங்கள். அந்த நம்பிக்கையே உங்களை வாழ வைக்கும்.

                                            மீராபாரதி
                                            மட்டக்களப்பு
பிரசுரம் - தினகரன் 16.10.2012

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை