Friday, October 26, 2012

ரகசியத்தை சொல் கிளியே – அநுராதாரமணன்

அன்றாடம் நாம் பலவித விடயங்களை கடந்து செல்கின்றோம். என்றாலும் சில விடயங்கள் நம் உள்ளங்களில் ஏதோவொரு புள்ளியை தொட்டு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வாறான ஒரு தாக்கத்தினை என் மனதில் ஏற்படுத்திய ஒரு படைப்பு தான்  அண்மையில் நான் வாசித்த ஒரு புத்தகம். “ரகசியத்தை சொல் கிளியே” என்ற பிரபல இந்திய எழுத்தாளர் அநுராதாரமணன் எழுதிய இந்நூல் கங்கை புத்தக நிலையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நூலில் “ரகசியத்தை சொல் கிளியே” “உனக்காக உமா” என்கின்ற இரு நாவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இரண்டுமே வரதட்சனை எவ்வாறு திருமண சந்தையிலும் காதலிலும் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை வௌ;வேறு கோணங்களில் விளக்கியிருந்தது.

ரகசியத்தை சொல் கிளியே

இம் முதல் கதையில் தன் தங்கை குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து அவளது மகளை தனது மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைக்கின்றார் ஒரு தாராள மனப்பான்மை உடைய தந்தை. ஆனால் ஒரு காலகட்டத்தில் பொருளாதார அழுத்தங்கள் தாளாமல் மற்றதொரு பணக்கார தங்கையின் மகளுக்கு மகனை மணமுடித்து கொடுத்து விடுகிறார்.
இக்கதையின் நாயகி “கிளி” சிறு வயது முதல் அத்தானுக்காக வாழ்ந்து வரும் ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்படுகிறாhள். கிராமத்து வெகுளித்தனமும் குழந்தை மனமும் முகத்திலடித்தால் போன்று பேசும் குணமும் சேர்ந்த கலவை. தன் அத்தான் இன்னொருத்திக்கு கணவனாக போவது தெரிந்து “ இன்றிலிருந்து ஒரு வருடத்தினுள் உன் கையால் மறு தாலி வாங்குவேன்” என சபதமிடுவதும் “நீ அவளை தொடக் கூடாது “ என அத்தானிடம் சத்தியம் வாங்குவதும் யதார்த்தத்திற்கு பொருந்தாவிட்டாலும் கிராமத்து பெண்ணின் வைராக்கியத்தினை மனதில் வரித்துவிட்டவனை அடைய வேண்டுமென்ற பிடிவாதத்தினை காட்டுவதாக அமைந்திருந்தது.

நகரத்து பணக்கார பெண்ணாக வரும் நளினா வாசலில் நைட்டியுடன் நின்று கோலம் போடுவது நிச்சயம் இன்றைய நாகரீக பெண்களை கண்முன் நிறுத்துகிறது. தனது கணவனுக்கு தினமும் பாடம் சொல்லிக் கொடுப்பதும் பணக்கார திமிறின்றி ஏழையான கிளியுடன் சகஜமாக பழகுவதும் நளினாவின் குணாம்சங்களாக கூறப்படுகின்றது. இது நடைமுறைக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறி....

நளினா மற்றும் கிளியின் பாட்டி காவேரி முதலில் கிளியுடன் பாசமக இருப்பதும் பின் புதுப் பணக்கார பேத்தியை கண்டதும் அவள் கட்சிக்கு தாவி கிளியை உதாசீனம் செய்வதும் “பணத்தைக் கண்டவுடன் நிறம் மாறும் பச்சோந்தி மனிதர்கள்” இன்றும் எம்முடன் வாழ்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றார்.

கிளியின் அத்தானாக வரும் முத்து பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும் போது “மூட்டை தூக்கியாவது கிளியை காப்பாற்றுவேன்” என்றும் திருமணத்திற்கு முதல் நாள் கிளியை சந்திக்கும் போது “அப்பா ரொம்பக் கஷ்டத்தில இருக்கார் கிளி... இல்லையினா அவரும் இப்படிப் பேசக் கூடியவர் இல்லே....” என்று நழுவியதும் தான் ரொம்ப நல்லவன் என்று புது மனைவியிடம் காட்டுவதற்கு “என்னைக் கூடுமானவரைக்கும் கூப்பிடாம இருக்கிறதே நல்லது....” என எரிந்து விழுவதும் அதே மனைவியிடமே சில நாட்களில் “ மச்சமா இது … நான் ஏதோ மை ஒட்டிருக்கோ என பார்த்தேன்...” என வழிவதும் இன்றைய யதார்த்தம்.

முத்துவை விடவும் படித்த பணக்கார மாப்பிளைகளை பெற்றோர் பார்கும் போது இப்போது எனக்கு திருமணம் வேண்டாம் என்பதும் எனக்கு திருமணம் தேவைப்படும் போது உங்களுக்கு சொல்கின்றேன் என முகத்திலடித்தால் போல சொல்வதும் கிளியின் காதலின் அளவை அவளோடு ஒப்பிடும் போது முத்துவின் கயமையை காட்டுகிறது.

நளினாவிற்கு ஏற்படும் சிறு சிறு விபத்துக்களுக்கு கிளியை சூழ்நிலைக் கைதியாக்கி அடித்துக் கொடுமைப்படுத்தும் போதும் வாசிப்பவர்களுக்கே நெஞ்சம் கணக்கின்றது. இறுதியாக முத்து – நளினாவின் குழந்தையை கையில் ஏந்தியபடி “ அட நான் தானே உனக்கு இப்ப பொண்டாட்டியையே திருப்பிக் கொடுத்திருக்கிறேன்? இதைவிட வேற என்ன தரமுடியும்.....?” என்பதும் “ஒரு தாங்க்ஸ் கூட சொல்ல முடியாத பயந்தாங்கொள்ளி அப்பனுக்கு பொண்ணாh பொறந்து....” என கிளியின் கடைசி உரையாடலாக கதையின் இறுதி வரிகளாகவும் அமைகின்ற இவ்வாத்தைகள் நிச்சயம் இன்று சமூகத்தில் உள்ள முதுகெலும்பில்லாத ஒவ்வொரு சூழ்நிலையை காரணங்காட்டி தப்பித்துக்கொள்ளும் “முத்து” கதாபாத்திரங்களை நிச்சயம் ஒரு தடவை சுட்டியுமிருக்கும் சுட்டுமிருக்கும் வசனங்கள்.

இந்நூல் என்னைக் கவர்ந்திருந்தது என்பதனை விட என் உணர்வுகளை மிகவும் பாதித்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் இத் தாக்கத்தின் பிரதிபலிப்பு எனக்கு இருந்தது என கூறலாம். “ஏன்?” என்ற வினாவினை என்னுள்ளே எழுப்பிய போது “கிளி” பாத்திரத்தின் வெகுளித்தனம், பிடிவாதங்கள் என்னிலும் அடக்காமாகியிருந்ததினை உணர முடிந்தது. ஆனால் இதன் முடிவினை வாசித்த போது என் மனதின் ஒரு புள்ளியில் வலித்ததையும் உணர்ந்தேன்.

உங்களுக்கும் இப்புத்தகத்தினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள் நிச்சயம் நீங்களும் ஒரு கிளி, முத்து , காவேரி என நீளும் இக்கதையின் பாத்திரங்களுள் யாராவது ஒருவரை கடந்திருப்பீர்கள்.

Thursday, October 18, 2012

கடவுள் ஏன் சிலையானான்.....?


இன்றைய நவீன உலகில் கடவுள் நம்பிக்கை என்பது மிகவும் அரிதாகிக் கொண்டிருக்கின்றது. கடற்கரை, கடைகள், பூங்காக்கள் என சுற்றி வருகின்ற இளந்தலைமுறையினர் வழிபாட்டுத்தலங்களை நினைத்துப்பார்ப்பது சமயவிழா நாட்களில் மட்டுமே. அதுவும் தமது புதிய உடைகளை காட்டுவதற்காகவோ அல்லது வீட்டிலிருக்கும் முதியோர்களின் நச்சரிப்புகளை தாங்கமுடியாமையினாலோ மட்டுமே. எவ்வாறாயினும் இன்று இறைவழிபாடென்பது அரிதாகிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எம் முன்னோர்களை எடுத்துக்கொண்டால் அதிகாலை எழும்புவது முதல் இரவில் உறங்குவது வரை இறைவனுக்கும் இறைவழிபாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். ஒவ்வொரு வீடுகளிலும் கடவுளின் படங்களோ அல்லது சிலைகளோ இருந்திருக்கின்றது. அதிலும் முன்னைய காலங்களில் சிலை வழிபாடென்பது முக்கியமானதொன்றாக காணப்பட்டது. சிலைகள் செய்வதற்கான கல்லினை தேர்ந்தெடுப்பது முதல் அவற்றினை சிற்பங்களாக வடிப்பது வரை சாஸ்திரங்களை பின்பற்றியதுடன் அவற்றிற்கான வழிபாட்டு முறைகளுக்கும் கூட பலவித அபிஷேக முறைகளையும் ஐதீகங்களையும் வகுத்திருந்தனர். இவற்றை உருவாக்குவதை பிரதானப்படுத்தி இனங்கள் .தொழில்கள் என்பனவும் பாகுபடுத்தப்பட்டன. இதனையொட்டி சிற்ப,செதுக்கல்,நாட்டிய கலைகளும் தோற்றம் பெற்றன.

இவ்வாறான கடவுள்களின் சிலைகள் பெரும்பாலும் கருங்கற்களில் தான் வடிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் என்ன தெரியுமா? பிரபஞ்சத்தினையே படைத்த இறைவனை பஞ்சபூதங்களும் அடங்கிய கருங்கற்களினால் உருவாக்கவேண்டுமென்பதாலேயே.... எவ்வாறு கருங்கல்லானது நீர்,நிலம்,காற்று,நெருப்பு ,ஆகாயம் என்பவற்றை உள்ளடக்குகின்றதென ஆச்சரியமாகவுள்ளதா?

நிலம் - கல்லும், மண்ணும் சேர்ந்தது.
நீர்; - நீர் என்பது பாறைகளிலிருந்து தான் ஊற்றெடுக்கின்றது. ஆகவே நீரின் குணமான குளிர்ச்சியினை பாறைகள் கொண்டுள்ளன.
காற்று – பாறையினுள் தேரை போன்ற உயிரினங்கள் வசிக்கின்றன. அவ்வாறான உயிரினங்கள் சுவாசிப்பதற்கு வளி அவசியம். பாறையினுள் வளி கிடைப்பதனாலேயே அவை அங்கு வசிக்க முடிகின்றது. எனவே கல்லினுள் காற்றடங்கியுள்ளது.
நெருப்பு – ஆதிகாலங்களில் கல்லையும் கல்லையும் உராய்வதன் மூலம் நெருப்புண்டாக்கப்பட்டது. ஆகவே தீயென்பது கல்லினுள் அடக்கமாகின்றது.
ஆகாயம் - ஆகாயம் என்பது சப்தங்களின் தொகுப்பு. கற்களானது சப்தங்களை உண்டாக்குகின்றன.எனவே ஆகாயத்துவமும் இதனுள் உறைந்துள்ளது.

இதனால் தான் அசையா தன்மை கொண்டதாயினும் பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய கல்லினால் எம்மனைவரையும் ஆட்கொள்கின்ற இறைவனை வடிக்கின்றார்கள்.

கடவுள் என்பவன் இருக்கின்றானா? இல்லையா? என்பதைப்பற்றி ஆராய்ச்சிகள் ஒரு புறமும் கடவுளைக் கண்டவர்களுண்டா? அவனுக்கு வடிவங்களுண்டா என்கின்ற விரண்டாவாதங்களும் , கடவுள் என்பவன் எங்குமில்லை என்கின்ற நாத்திகவாதமும் . துன்பங்கள் வரும் போது “கடவுளே உனக்கு கண்ணில்லையா? நீயேன் சிலையாக இருக்கின்றாய் “ என்கின்ற புலம்பல்களும் இன்றும் தொடர்கின்றன....எவ்வாறாயினும் உலோக சக்தி,மனோ சக்தி, மந்திர சக்தி, எந்திர சக்தி, ஆத்ம சக்தி என உறைந்து பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டுள்ள விக்கிரங்களை வழிபட்டு “ அவனின்றி அணுவும் அசையாது” என அவன் காலடியில் சரணடைந்து விடுங்கள். அந்த நம்பிக்கையே உங்களை வாழ வைக்கும்.

                                            மீராபாரதி
                                            மட்டக்களப்பு
பிரசுரம் - தினகரன் 16.10.2012

அதிகம் வாசிக்கபட்டவை