Showing posts with label கண்ணன். Show all posts
Showing posts with label கண்ணன். Show all posts

மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட தொடர்புண்டு

மீராவிற்கும் கண்ணனுக்கும் தான்
தொடர்புண்டு...
இவர்களது காதல்
காலம் கடந்த காதல்....
இலக்கியங்கள் இயம்புகின்றன.

மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட
தொடர்புண்டு...
கர்ணன் கொடையில் சிறந்தவன்
மீரா அன்பானவர்களை கொடுப்பதில்
சிறந்தவள்...

ஒற்றுமையிலும் ஓர் வேற்றுமை
அவன் கொடுத்தது உயிரற்ற
பொருள் தானம்...
மீராவினது..
உயிருள்ளவர்களை
கொடுப்பது.....
ஒவ்வொரு முறையும்
கொடுத்தே தொலைகிறேன்

இப்போதெல்லாம்
கொடுப்பதிலும்.....
தனியே கண்ணீர் வடிப்பதிலும்
ஒரு சுகமிருப்பதாகவே தோனுகிறது.

திகதி -30.05.2013

மீராவின் அன்புக் கண்ணனாக….




முன் தினங்களின்
ஆர்ப்பாட்டங்கள் -
அப்பா வாரியிறைத்திருந்த
பல ஆயிரங்கள் - அம்மாவின்
ஆயத்தங்கள் கூடவே
அறிவுரைகள்
ஆயாவின் சமையல் வாசனை
எதுவும் பிடிக்காமல்
அறையில் அமர்ந்திருந்தேன்
என்னவன் பற்றிய கற்பனைகளோடு…

அதிகாலையின் தூக்கத்திலேயே
அம்மாவின் முன்நெற்றி முத்தங்களுடன்
செல்லமாக எழுப்பப்பட்டிருந்தேன்.
மஞ்சள் குளித்து நீர்
சொட்ட வந்த போது
பட்டுப்புடைவையும்
பரம்பரை நகைகளும்
இறைந்திருந்தன – என்
கட்டிலில்….

மருதாணி இட்ட
கைகளில் நிறைந்த வளையல்கள்
சிவப்பு மூக்குத்தி
கூர்த் திலகம்
புடைவையின் பாரத்துடன்
கூடவே வெட்கத்துடன்
தலை குனிந்திருந்தேன்

அண்ணாவின் செல்ல அதட்டல்களும்
தம்பியின் சீண்டல்களும்
நண்பிகளின் எள்ளல்களும்….
நண்பன்களின் நக்கல்களும்…
இன்று தான் என்னுள் ஆன
நாணங்களை நானே கண்டுகொண்டேன்

அப்பா கூடத்திற்கழைத்த போது
குனிந்த தலை நிமிராது
துடுக்காய்
சற்றே கடைக்கண்ணால் பார்த்தேன்..
என்னவனாய்
அமர்ந்திருந்தான் -
ஆறடி உயரத்தில்
அருவா மீசையுடன்
வெள்ளை வேட்டியில் - என்
இனிய ஆருயிர் நண்பன்…
இதுவரையான நட்பு பார்வை மாறி
கண்ணிறைந்த காதலுடன்….
மீராவின் அன்புக் கண்ணனாக….











மூச்சிலும் என் வாசம் மட்டுமே....


என்னவனின்
மறுபக்கத்தினை கேள்விப்பட்டு…
கோபம்; பின்
அழுகையாயிருந்தது
அதுவும் மறைமுகமாக…
அடுத்தவன் சொன்ன போது தான்
மரமண்டையில் ஏறியது…
கேட்டதிலிருந்தே
வெம்பி வெடித்திருந்தது
மனம்…..

எந்தப் பெண்ணால் தான்
முடிந்திடும்…?
நமக்கு மட்டுமேயான
எம்மவர்களை பகிர…?
அதுபற்றி அறிந்ததிலிருந்து
ஆத்திரம் ஆற்றாமையாகியிருந்தது….

இன்று சிக்கிவிட்டான்
கள்ளத்தனமாய்….
எதிர்பார்க்கவில்லை
எதிரே வந்து நிற்பேனென்று…
அருகில் நெருங்கி –
எனக்கு மட்டுமேயான
என்னவனின்
உதட்டில் - அவன்
பற்றவைத்திருந்த சிக்ரேட்
சனியனை பறிந்தெறிந்தேன்…..
பற்றியெரிதலுடன்.. – என்னவனின்
உள்ளம்
உதட்டில் மட்டுமல்ல
மூச்சிலும் என் வாசம் மட்டுமே
வேண்டும்…..

திராட்சை தோட்டத்து நரியாக…

என்னவனை முத்தமிட
முயன்று தோற்பதே
வுhடிக்கையாகிவிட்டிருந்தது…

ஒவ்வொரு முறையும்
முயல்கையில் - அவன்
கேசம் என்னை ஸ்பரிசிப்பதும்…
மூக்கு நுனிகள் மோதிக்கொள்வதும்
என் உதட்டில் - அவன்
வியர்வை கரிப்பதும்
என்னவனின் கன்னத்து முடி
உறுத்துவதும்…..
அழகான கவிதை…

சில நேரம் மனம் கூட
தோற்பதை தான் விரும்புகிறது..
முயலும் போது அழகாக
என்னவனில் முட்டிக்கொள்ளலாம்
என்பதால்….. – அவன் கூட
அதனால் தான் என்னவோ
முயற்சிகளுக்கு கூட சொக்கலேட்டுகளை
விலை பேசியிருந்தான்…. என்
தோல்விகள் கூட என்னவனுக்கு
இன்ப அவஸ்தையாம்… ஆனால்
அவன் ஆறடி உயரத்திற்கு
எம்பி – அவன்
முன்நெற்றியில் - என்
இதழ் பதிப்பதென்பது
அன்று வரை
முயற்கொம்பாகவேயிருந்தது…

எட்டி சலித்த ஒரு நாள்
திராட்சை தோட்டத்து நரியாக…
எனக்கு பிடிக்கவில்லை என்று
ஒதுங்கிய வேளை…
அவன் சற்றே வளைந்து
இட்ட கன்னத்து முத்தம்….
அதன் சத்தம்….
கனவின் திடுக்கிடல்களிலும்
இனிக்கிறது…

இறந்திருந்தது என்னுள் ஒளிந்திருந்த குழந்தை…


உன்னிடம் மட்டும் தான்
அழ பிடிக்கிறது…
உன்னுடன் நடக்கும் போது
மஞ்சள் கோடுகள் கூட
எனக்குத் தெரிவதில்லை – நீ
என்னைப் பார்த்துக்கொள்வாய்…
பேரூந்தில் கூட – நீ
அருகிலிருந்தால் தூக்கம் எங்கிருந்தோ
தழுவிக்கொள்கிறது – உன்
தோளில் சாய்ந்துறங்கலாம் என்பதால்…
சந்திக்கும் போதெல்லாம்
சொக்லட்டுக்காய் உன்னிடம் மட்டும் தான்
இரந்து நிற்கப் பிடிக்கிறது…..
வீட்டாரின் கண்டிப்பை மீறியும்
கடற்கரையில் பட்டம் விட
உன்னிடம் தான்
கெஞ்ச முடிகிறது..
உன்னுடன் மட்டும்
ஊர் சுற்றுவது பிடிக்கிறது – நீ
விடுதி வரை வருவாய் என்பதால்….
சண்டைகள் கூட
தினம் உன்னிடம்
போடாவிட்டால் சாப்பாடு சமிபாடடைவதுமில்லை
நீ கன்னத்தில்
தட்டிவிட்டால் மட்டும்
கலங்கித் தொலைகிறது கண்கள்
ஏதோ உன்னருகில் மட்டும்
குழந்தையாகிவிடுகிறது என் மனம்….

ஆனாலும்;;;;
என்று என்னை
ஆபத்தானவள் - முன்
தெரிந்திருந்தால்
பழகியிருக்க மாட்டேன்….
நீ குழந்தையுமல்ல என்றாயோ…
அந்த நொடியே
இறந்திருந்தது – என்னுள்
ஒளிந்திருந்த குழந்தை…

திகதி – 20.04.2013
நேரம் - 12.55

விதி போலும்….


தொடர்ந்தவன்
தொலை தூரம்
சென்ற போது தான்
மனதையே
தொட்டது
ஏதோவொன்று …..

துரத்தியவன் தூர விலகிய
போது தான் - என்
காதலே எனக்கு
வலித்தது…

புரியாத பிரியம்
பிரியும் போது தான்
புரிந்தது….

மீராவின் காதல்
கவிதையிலேயே
கருவாகி
கருகிட
வேண்டுமென்பது
விதி போலும்….

ஆணழகனடா நீ

இதுவரை உன்னை – நான்
நிமிர்ந்து பார்த்ததில்லை – என்
பெண்மைக்கான நாணமும்
விட்டதில்லை….

வீதியில் உன்னை
இன்னொருத்தி பார்த்த போது தான்
நானும் பார்த்தேன்
கடைக்கண்ணால்….

ஆறடி உயரம்
அகன்ற தோள்
அடர்ந்த கேசம்
கூர் நாசி
குழிவிழும் கன்னங்கள் – அதை
மூடிய தாடி….
ஆணழகனடா  நீ….

இப்போது தான்
புரிகிறது வீதியே
ஏன் எம்மை பார்க்கின்றதென்று…..
நிச்சயம் எரிந்திருக்கும்
பல வயிறுகள் - நம்
பொருத்தம் பார்த்து…
சற்றே நெருங்கி கைகோர்த்து
சரணாகின்றேன் என்னவனிடம்…

உன்னுள் நான் இருக்கின்றேனா?




நீ இல்லை என்பது
நிதர்சனமான பின்பும்
தொலைய மறுக்கிறது
உன் நினைவுகள்….

உன் முன்பும் - என்
மனதில் எவனும்
புதிந்ததில்லை
பின்பும் முயன்று
தோற்றுவிட்டார்கள்….

ஆனால் என்னுள் ஒரு
சிறு கேள்வி…
உன்னுள் நான்
இன்றும் இருக்கின்றேனா…?
பல நாள் வினாவிற்கு
பதிலாகியது…- உன்
மனைவி அருகில்
இருக்கும் போதும் - அவளைக்
கடந்து பார்வையை
என்னில் பதித்து – நீ
உன் குழந்தையின் கன்னத்தில்
அழுந்தப் பதித்த
முத்தம்……

என்னவனே எங்கிருக்கின்றாய்?

என் விடியல்களை பகிர்வதற்கும்
பொழுதுகளில் கைகோர்ப்பதற்கும்
கனவுகளின் கதவை திறப்பதற்கும்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

என் சிறு நகர்வுகளை கூட கூற
பருவ சந்தேகங்களை வினவ
காலைக் கனவுகளையும் - என்னைக்
கடக்கின்ற ஒவ்வொரு கணங்களையும்
உன்னிடம் சொல்ல ஆசிக்கின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

அடுத்தவர்கள் என்னை
விமர்சிக்கும் போதும்
சந்தேகிக்கும் போதும்
என்னவன் இங்கிருக்கின்றான் என
சுட்டுவிரல் நீட்ட தேடுகின்றேன்….
கைகோர்த்து நடப்பதற்கும்
கவலைகளில் தோளில் சாய்வதற்கும் - என்
கஷ்டங்களில் கைநீட்டுவதற்கும்
வலிபட்ட இடங்களை
வருடி விடுவதற்கும் - உன்னை தேடுகின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

சீண்டுவதற்கும்
சிறு சண்டைகள் போடுவதற்கும் - அடுத்தவள்
உன்னைப் பார்க்கும் போது
உரிமைச்சட்டம் வாசிப்பதற்கும்…
ஊடல் கொள்வதற்கும்
கூடல் செய்வதற்கும்
கெஞ்சுவதற்கும் - குழந்தையாக
உன்னைக் கொஞ்சுவதற்கும்
தேடுகின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

சிறு காயம்பட்ட இடத்தில்
வருடுகின்ற அம்மாவின் பரிவையும்
கண்டிப்பாக பேசி - என்னை
வழிநடத்துகின்ற அப்பாவின் சாயலையும்
கூட்டத்தில் கூட பார்வையால் - என்னை
தொடர்கின்ற அண்ணாவின் பாசத்தையும்
சீண்டல்களால் கவலைகளை மறங்கடிக்கும்
தம்பியின் அன்பையும் - சேர்த்து
செய்த கலவையான ஒருவனாய்..
உன்னைத் தேடுகின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

உன் தோளில் சாய்ந்து – என்
கண்ணீரால் மனச்சுமைகளை கரைத்து- உன்
உதடுகள் என் நெற்றியை
ஈரப்படுத்தப் போகும் - அந் நாளுக்காக
காத்திருக்கின்றேன் கண்ணா….
என் நண்பர்களில் ஒருவனா நீ?
எதிரிக் கூட்டத்தில் இருக்கின்றாயா?
இல்லை அன்புள்ள எதிரியா?
தினம் தினம் - உன்னைத்
தேடியே தொலைகின்றேன்…..
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

மாலைநேரம் கடற்கரையில்….


நினைவு தெளிந்த நாளிலிருந்து –
ஓர் ஆசை…..
கடற்கரையில் மாலைநேரமொன்றை
செலவிட வேண்டுமென்று
பலமுறை குடும்பத்தினருடன்
சென்று விட்டேன் - ஆனால்
அந்த தனிமை
அந்த கவிதைப் பொழுது
இதுவரை கிடைத்ததில்லை

அப்பாவிடம் கேட்டுவிட்டேன்
அவருக்கு அலுவலக வேலையாம்
அம்மாவிடம் கேட்டேன்
அவருக்கு வீட்டுவேலை அதிகமாம்
அண்ணாவிடம் அனுமதியே கிடைக்கவில்லை
தம்பிக்கு தன் நண்பர்களுடன்
செல்வது தான் பிடித்திருக்கின்றதாம்
நண்பிகளை கேட்டால் - தம்
ஆண் நண்பர்களுடன் தான் வருவார்களாம்
நான் எதற்கு அங்கே சிவபூஜை கரடியாக…
என் நண்பனிடம் கேட்னே;
எதிர்பார்ப்பை  விதைத்துவிட்டு
கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விட்டார்
தனியே போவதற்கும் தைரியமில்லை

சில நேரங்களில் சில வினாக்களுக்கு
விடை கிடைப்பதில்லை….
இங்கும்
எனக்கு மட்டும் ஏன்?
யாருடன் தான் நான் போவது?
பல வினாக்கள் …- ஆனால்
இனிமேல் யாரிடமும்
கேட்கப்போவதில்லை..

என்றோ ஒரு நாள்
பௌர்ணமி தினத்தில்
கடற்கரை மணலில்
இனியதொரு மாலைப்பொழுதில்
என்னவனின் விரல்களை பிடித்தபடி
வெண்ணலைகள் எம் கால்களை
செல்லமாக மோத – அவன்
தோளில் முகம் புதைத்து – அவன்
வியர்வை மணம் சுவாசித்து
ஆரவாரங்களுக்கு மத்தியிலும்
மௌன மொழி பேசிக்கொண்டு
ஒரு கவிதைப்பொழுது
எனக்கும் கிடைக்கும் - என்ற
என் நிறைவேறாத
சின்ன சின்ன ஆசைகளுக்கான
(வழமையான) சமாதானத்தினை - என்
கடற்கரைப் பொழுது…
கற்பனைக்கும் - கூறி
கடிவாளமிடுகின்றேன்.



உன் முதல் குழந்தை



என்னைப் பார்த்த அன்றே கூறினாய் - என்
முகம் போன்றே மனமும் குழந்தையென்று..
தினமும் அழ வைத்தே வேடிக்கை பார்ப்பாய் - என்
குழந்தை சிணுங்கல்களை…

அதிகாலை அழைப்புக்களில் - இரசித்திருக்கின்றாய்
என் உறக்கத்தின் மழலை உளறல்களை…
என் பிடிவாதங்களில் கூட குழந்தைதனமிருப்பதாக
சாடியிருக்கின்றார் - உன்
முதல் குழந்தையும் நானென சத்தியம் செய்திருக்கின்றாய்

நீ என்னை குழந்தையாகவே நடத்துவதால்
பல தடவைகள் ஊடல் கொண்டிருக்கின்றேன் உன்னிடம்…

இன்று அதை காலம் கடந்த பின்
ஒப்புக்கொள்கின்றேன் - தாயின்
காலைச் சுற்றும் குழந்தையாய் - நீ
இன்னொருத்திக்கு சொந்தமாகிவிட்ட பின்பும்
உன்னையே – என்
நினைவுகள் சுற்றி – உன்
ஞாபகங்களுடனேயே வாழ – என்
மழலை மனம் அடம்பிடிப்பதால்….


பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை