சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பயிற்சிநெறியினை மேற்கொள்கின்ற மாணவர்களும் பங்குபற்றவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததுடன் என்னைப் போன்ற சுயாதீன chef ற்கும் உணவு தயாரித்து பரிமாறுவதற்கான அனுமதி தரப்பட்டிருந்தது. (எல்லா துறைகளைப் போன்றும் Chef துறையிலும் சுயாதீனமாக பணியாற்ற முடியும். உதாரணமாக என்னுடைய சிறந்த தயாரிப்பாக ஆசிய உணவு மற்றும் இத்தாலிய உணவுகளை குறிப்பிட முடியும். நான் முழுநேர Chef பணியாற்ற முடியாது என்பதால் 2022 காலப்பகுதியில் Shangri la colombo இல் குறிப்பிட்ட உணவு வகைகளை தயாரிக்கும் chef பணியாற்றினேன். ஒரு நாளில் சில மணித்தியாலங்கள் சென்று அங்கு தயாரிப்புக்களையும் என் கீழ் பணியாற்றிய sous chef ற்கான வழிகாட்டல்களையும் வழங்குவதுண்டு. குறிப்பிட்ட நேர அட்டவணையில் தான் இவ்வுணவுகள் பரிமாறப்படும்.)  நானும் நீண்ட நாட்களுக்குப் பின்னான இந்நிகழ்வில் பங்குகொள்ள நினைத்திருந்தேன். நம்முடையவர்கள் பெரும்பாலும் சுவைக்காத சூப் வகைகளை தயாரித்து பரிமாறும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. இது வரை ஹோட்டல்களில் பரிமாறிய எனக்கு என் மண்ணில் என் மக்களுக்கு உணவு பரிமாற கிடைத்த சந்தர்ப்பம் இது. மிகவும் அழகிய தருணங்களில் ஒன்று! ஆனால் அங்கு வந்தவர்களுள் பெரும்பாலானோர் கேட்ட கேள்வி “ பொறியியலாளர் என்ன இந்த வேலைக்கு வந்துவிட்டீர்கள்? ” என்பது. ...

எனக்கு மிகவும் குழப்பமாக விடயம் இது தான். ஏன் ஒரு வீட்டில் பெண் விஞ்ஞானியாகவே இருந்தாலும் சமைக்கும் போது கேள்வி கேட்காத இந்த அழுமந்த சமூகம் அப்பெண் பொதுவெளியில் கரண்டியை கையிலெடுக்கும் போது பேந்த பேந்த விழித்தபடி பார்க்கின்றது என்பது தான். என்னைப் பொறுத்தளவில் சமைத்தல் என்பதும் கலையின் ஒரு வடிவமே. எப்படி கலையை குறிப்பிட்டவர்கள் மட்டும் தம்முடைய தொடர் முயற்சிகளால் தம் வசப்படுத்திக்கொள்கின்றார்களோ அதேபோன்று தான் சமையலும் தொடர் பயிற்சியினால் நம்மிடம் வசப்பட்டு விடுகின்றதானதொரு கலை. என் நினைவறிந்து நான் சிறுவயதிலேயே நேசிக்கத்தொடங்கிவிட்டதொரு விடயம் இந்த சமையல். பல பெண்களுக்கு சமையல் ஒரு வகையில் அவர்களை அடக்கி குசினிக்குள் வைக்க சமூகம் வைத்துள்ள சாட்டை. வீட்டில் சமைக்கும் போது அவளுக்கு கிடைக்காத அங்கீகாரம் அதுவே ஓர் ஆண் தன்னுடைய தொழிலாக சமையலை கையிலெடுக்கும் போது உயர்வாகவும் பெறுமதிமிக்கதுமான தொழிலாக பார்க்கப்படுகின்றது. 

என்னை பொறுத்தளவில் சமையல் மீதான என் காதல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அது சிறுவயதிலேயே என்னை பற்றிக்கொண்டதொரு விடயம். இந்த பிளாஸ்டிக் துவக்கு, பொம்மைகள் வைத்து விளையாடும் காலத்திலேயே குட்டி குட்டி பாத்திரங்களில் “இது சோறு…. இது கறி என்று…” கற்பனை சமையலுக்குள் நுழைந்தவிட்ட ஆள் நான். பிறகு கொஞ்சம் வளர்ந்த பின்னர் சிரட்டைகளில் ஈரமண்ணை நிரப்பி அதனை பலகைகளில் பரப்பி இது கேக் என்று வீட்டில் பூத்திருந்த பூக்களை வைத்து அலங்காரம் செய்தவள்.செங்கல்லை அரைத்து கொச்சிக்காய் தூள் தயாரித்தவள்.

அதற்கும் பிறகு வீட்டில் சமையல் நடக்கும் போது கெஞ்சி, அடம்பிடித்து கொஞ்சம் அரிசி, ஒரு வெங்காயம், கொஞ்சம் பச்சகொச்சிக்காய், ஒரு பிடி பருப்பு என்று வாங்கி குட்டி மண் சட்டிகளில் பல மணித்தியாலங்கள் மெனக்கெட்டு சமைத்து, அதை புளுகுடன் வீட்டாக்களுக்கு கொடுத்து அழிச்சாட்டியம் பண்ணியவள். இந்தக் காலத்தில் மாமாங்கம் தொடங்கினால் என் அழிசாட்டியங்களும் ஆரம்பித்துவிடும். சின்ன சின்ன மண் சட்டிகள், ஒரு பானை என அடுக்கி ஒரு தூக்கில் கோர்த்து மாமாங்கத்தில் விற்பதுண்டு. பூந்தியும் இந்த மண்சட்டி கோர்வையும் இல்லாட்டி எனக்கு மாமாங்கம் என்பதே இல்லை. மாமாங்க பிள்ளையாரை கும்பிடுவதோ அல்லது மாமாங்க கீரை வாங்குவதோ இரண்டாம்பட்சம் தான். இது குறித்த சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு. 

ஒரு முறை பாடசாலை பரீட்சை காரணமாக எம்மை மாமாங்கம் கூட்டி போகவில்லை. அம்மாவிடம் கூட்டிப்போகும் படி அழுததற்கு தீர்த்தம் அன்று கட்டாயமாக கூட்டிப்போவதாக வாக்களித்து விட்டார் அம்மா. கடைசி நாள் தீர்த்தமன்று காலையிலேயே என் குட்டிச்சட்டி கற்பனைகள் ஆரம்பமாகிவிட்டது. அங்கு மாமாங்கம் போய் பார்த்தால் கீழே விழுந்த பொருட்களை கூட குனிந்து பொறுக்க முடியாதளவு சனக்கூட்டம். “பிறகு வாங்கித்தாறேனே மகள்…” என்று அம்மா என்னைப்பார்த்து கேட்க எனக்குள் இருந்த பிடிவாதம் விடவில்லை. இல்லை வாங்கித்தாருங்கள் என ஒரே பிடியில் அழத்தொடங்கினேன். என் அரியண்டம் பொறுக்க முடியாமல் கூட வந்த அனைவரையும் மாமாங்க கோவில் மரத்தடியில் அமர்த்திவிட்டு என் கைகளை பற்றி அம்மாவும் நானும் கூட்டத்தில் நீந்த ஆரம்பித்தோம். ஒரு மாதிரியாக முட்டி மோதி சட்டி பானை விற்கும் அம்மாவின் கடையில் ஒரு தூக்கு சட்டி வாங்கி மீண்டும் சன நெரிசலில் நீந்தி கரைசேர்ந்து பார்த்தால் கையில் இரு சட்டி மட்டும் தான் எஞ்சியிருந்தது. மீண்டும் அழுத்தொடங்க அம்மா பத்ரகாளி அவதாரமெடுத்து முதுகில் போட்ட அடியில் வீடு வந்தும் நான் அழுகையை நிறுத்தவில்லை. சும்மாவே முகம் குண்டாக கொழுக்கட்டை மாதிரித்தான் இருப்பதுண்டு. இதில் தொடர் அழுகையால் முகம் மாப்பிள்ளை கொழுக்கட்டையாகவே ஆகிவிட்டது. போதாதற்கு சாப்பிடாமல் வேறு பிடிவாதம் பிடிக்க கடைசியில் சந்தையடிக்கு போய் சட்டிகள் வாங்கிவரப்பட்டது. சந்தையில் கூட குட்டி சட்டிகள் வாங்கலாம் என்பது அன்று தான் எனக்கும் தெரியவந்தது. இப்படியொரு வழியிருக்கின்றதென்றால் ஏன் மாமாங்கம் ஆவணியில் வரும் வரை காத்திருந்தோம் என்று அப்போது தான் யோசித்தேன். 

இப்படி சமையலை மண், கூட்டான் சோறு என்று விரிவுபடுத்திக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் அம்மா வேலை விடயமாக வெளியில் போக அன்றன்று பார்த்து சமையல் செய்யும் ஆளும் வராமல் போக உண்மையாகவே கரண்டியை கையில் எடுக்க வேண்டியதாகிட்டு. முதன் முதலாக என்ன சமைத்தேன் என்பது இன்றுவரை எனக்கு நினைவுண்டு. சோறு, பருப்பு வெள்ளைக்கறி, டின் மீன் குழம்பு, சொதி, பப்படம் என்பன தான் என் முதல் சமையல் cuisine ஐ என் சகோதரன்களும் விரும்பி உண்ண அன்றிலிருந்து ஆரம்பமாகிது என் வித்தைகள். இப்படி வீட்டில் வித்தைகள் காட்டிக்கொண்டு பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் தான் சமையல் Suprime Chef வாய்ப்பு என் வீட்டுக்கதவை flyer வடிவில் தட்டியது. சும்மா கலந்துகொண்டு பார்ப்போமே என்று ஆரம்பித்த இந்த பயணம் இறுதியில் மேடை வரை கொண்டு வந்துவிட்டது. இதில் பல Chef களை சந்திக்கவும் அவர்களுடன் சமையல் குறிப்புகளை கலந்துரையாடவும் நல்லதொரு வாய்ப்பு ஏற்பட்டது. அதில் முக்கியமானவர் Chef பீற்றர் குருவிட்ட. சிறுவயதில் தன்னுடைய பாட்டியிடம் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்ட வேளையில் அவர் மூலமாக தன் சமையல் கலைக்கான முதற்படி ஆரம்பிக்கப்பட்டதாக அடிக்கடி கூறுவார். தன்னுடைய பாட்டியின் பெயரில் சோஸ் ஒன்றும் வைத்துள்ளார்.

போட்டியில் வெற்றிபெற்றவர் எனும் வகையில் Chef பீற்றர் குருவிட்டவிற்கு சொந்தமான அவுஸ்திரேலிய உணவகத்தில் ஆறுமாத கால பயிற்சிக்கு அனுப்பப்பட்டேன். நான் வாழ்ந்த நாட்கள் அவை. தினப்படி பயிற்சிகள் இராணுவ ஒழுங்கில் தான் நடைபெறும். (கேர்ணல் நளினியின் வளர்ப்பில் இதென்ன பெரிய கஸ்டம்…..). நிறைய விடயங்கள, நிறைய நுட்பங்கள் என கற்றுக்கொள்ள கடலளவு விடயங்கள் இருந்தன. இன்னும் இருக்கின்றன. ஏன் குரு ….. சொல்லும் ஒரு விடயம் “உனக்கென தனித்துவமானதொரு சமையல் நுட்பத்தினை உருவாக்கு” என்பதே. உணவு முதலில் கண்ணுக்கு அழகாயிருக்க வேண்டும், பின்னர் அதன் மணம் நம்மை வாயூர வைக்க வேண்டும். இதனால் கவரப்பட்டு உண்ணும் போது சுவை நாவில் தங்க வேண்டும், அது உடலுக்கு ஆரோக்கியத்தினை கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவார். நானும் இன்றுவரை முயன்றுகொண்டேயிருக்கின்றேன். ஒரு நாள் அது என் வசப்படும் என்றும் நம்புகின்றேன். சாப்பிட்ட பின் கரண்டியை வைக்கும் முறை தொடங்கி ஒருவருக்கு பரிமாறுகின்ற வரை ஏகப்பட்ட மொழிகள் இத்துறையில் உண்டு. ஒரு விஞ்ஞான துறை கணக்கியல் துறைக்கு எவ்வாறான கனதியுண்டோ அதேயளவு கனதி இத்துறைக்கும் உண்டு. இத்தொழிலிலும் கம்பீரமுண்டு. ஆக யாரையாது பார்த்தால் உங்கள் பார்வை மற்றும் சொற்களில் ஏளனம் செய்வது உங்கள் மடமையே.

அடுத்தது சமையல் பெண்ணுக்கானது அவள் கடமை என்பதை உங்கள் சிந்தையிலிருந்து அகற்றுங்கள். யாரால் ஒருவருக்கு வயிறார உணவளிக்க முடியுமோ அவர்கள் இக்கலையை வீட்டிலும் சரி தொழிலாகவும் சரி தொடரலாம். எனக்கு என் வருங்கால குசினி குறித்த கனவும் உண்டு. அது நிச்சயம் “Grate India Kitchen” போன்று ஆணாதிக்க சிந்தை நிறைந்ததாக இருக்காது என நம்புகின்றேன். பாரம்பரிய மற்றும் நவீன உபகரணங்கள் உள்ளடக்கியதாக என்னால் வடிவமைக்கப்படும். எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் நிச்சயம் ஏதாவது சாப்பிட்டுவிட்டே போகவேண்டும் எனும் எழுதாத விதி வைக்கப்படும். 

எனக்கு என் வாழ்க்கைத்துணை நன்றாக உண்பவராக , உணவின் இரசிகராகவிருக்க வேண்டும். இந்த துணைவி சமைத்துக்கொடுப்பதை உண்டு கொஞ்சம் தொந்தி வைக்க வேண்டும். ஆனால் ஒன்று எல்லாம் எல்லோராலும் முடிவதில்லை என்பதற்கிணங்க எனக்கு எவ்வளவு முயன்றும் பாயாசமும், உளுந்து வடையும் இன்னும் வசப்படவில்லை. ஆயக்கலை 64 யும் கூட பிரயோகித்துப்பார்த்து விட்டேன். ஆக என் துணைவருக்கு இது இரண்டும் பிடித்திருக்க கூடாது இறைவா என்பதே என் வேண்டல். மற்றும் படி மஞ்சள், உப்பு , மிளகு போன்றவற்றுடன் சற்றே அன்பினையும் தூவி நமக்கானவர்களுக்காக சமைக்கும் போது அது அமிர்தமாகிவிடாதா என்ன? சரி நண்பர்களே உங்களுக்கெல்லாம் என்ன சமையல் பிடிக்கும்? 

புத்தாக்கம்


ஒரு ஊரில் ஒரு பெரிய தனவந்தன் இருந்தானானம். அவனுக்கு மூன்று பிள்ளைகள். தன்னுடைய அந்திமகாலத்தினை நெருக்கிக்கொண்டிருந்த வேளையில் தனது வியாபார சாம்ராஜ்யத்தை யாரிடம் ஒப்படைப்பது என்கின்ற கேள்வி இந்த தனவந்தனனை குடையத் தொடங்கியது. இத்தனை வருடங்களாக கட்டிக்காப்பாற்றிய இத்தனை சொத்துக்கள், வியாபார நிறுவனங்கள், நிர்வாகங்களை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று பலமாக யோசித்த தனவந்தன் இறுதியில் ஒரு உத்தியை கைக்கொள்ள நினைத்தான். அதாவது நமது Biggboss இல் வருவது போன்று task வைத்து யார் பொருத்தமானவர் என்று தீர்மானிப்பது என முடிவெடுத்தான்.

தன்னுடைய பிள்ளைகள் மூவரையும் அழைத்து ஒரு பெட்டி நிறைய சீப்புக்களைக்கொடுத்தான். “இந்த சீப்புக்களை நீங்கள் புத்த துறவிகளிடம் விற்க வேண்டும். அதிகளவு சீப்புக்களை விற்பதற்கான தந்ரோபாயம் தெரிந்தவருக்கே என் வியாபாரத்தின் உரிமையை கொடுக்க நினைக்கின்றேன்” என்றும் கூறினான். இதென்ன முடியே இல்லாதவர்களிடம் எப்படி சீப்பு விற்பது? இந்த மனிதனுக்கு வயதாகியதால் அறளை பெயர்ந்துவிட்டதோ? என்று சுற்றியிருந்தவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். 

முதலாவது மகன் சீப்புகளுடன் சென்று இரு நாட்களில் திரும்பி வந்தான். “அப்பா நான் துறவிகளிடமே மூன்று சீப்புக்களை விற்றுள்ளேன். சீப்புக்களினால் தலைமுடி வாரிட முடிவதுடன் அப்பப்போ முதுகு சொறிவதற்கும் சீப்புக்கள் பயன்படும் என்று கூறினேன். உடனே மூன்று சீப்புக்கள் வாங்கிவிட்டார்கள்” என்று கூறினான். தந்தையும் அவனது முதுகில் தட்டி” நல்லது” என்று கூறினார். 

இரண்டாவது மகன் நாலைந்து நாளில் திரும்பி வந்தான். வரும் போதே முகத்தில் அப்படியொரு களை. வந்தவுடனேயே காலணிகளை கழட்டி எறிந்த படி “ அப்பா, நான் பத்து சீப்புக்களை விற்றுவிட்டேன். எப்படியென்று தெரியுமா?” என்று கேட்டு அவனே பதிலளிக்க ஆரம்பித்தான். “இந்த புத்த மடாலயத்திற்கு எத்தனை பக்தர்கள் தினமும் வந்து போகின்றார்கள். அதில் பலர் தூரங்களிலிருந்தும் வருகின்றார்கள். அப்படி வருபவர்களுக்கு முகங்கழுவிய பின்னர் சீப்பு இருக்குமாயின் தலைசீவி நேர்த்தியாக இருப்பார்கள். எனவே வழிபாடுகளின் போதும் நேர்த்தியினை உணர முடியும் என்று கூறினேன். உடனேயே நிர்வாகம் என்னிடம் பத்து சீப்புக்களை வாங்கி பக்தர்கள் உடைமாற்றுமிடத்தில் வைத்துள்ளார்கள்” என்று புளுகுடன் அண்ணன்காரனையும் நக்கலுடன் கடைக்கண்ணால் பார்த்தபடி கூறினான். தந்தை அதற்கும் அவனது முதுகில் தட்டி “நல்லது மகனே” என்று புன்னகையுடன் கூறினார். 

கடைசி மகள் ஒரு வாரத்தின் பின் திரும்பி வந்தாள். அண்ணன்கள் இருவரும் ஒருவித சிரிப்புடன் “ என்ன வியாபாரமாகியதா? எத்தனை விற்றாய்? ஒன்றாவது விற்க உன்னால் முடிந்ததா?” என்று கேலி கலந்த அக்கறையுடன் விசாரித்தனர். அந்த பெண்ணும் “நூறு சீப்புக்களை விற்றுள்ளேன்” என்று அடக்கமாக சொன்னாள். அண்ணன்களுக்கு நெஞ்சுவலி வராத குறை. பக்கத்தில் இருந்த அள்ளக்கை வேறு “ ஓ பொம்பிள பிள்ளை என்றால் வாங்குவார்கள் தானே” என்று இரு அர்த்தத்தில் கதைக்க ஆரம்பித்தது. துந்தை தன் மகளை பார்த்து “எப்படியம்மா உன்னால் அவ்வளவு விற்க முடிந்தது?” என்று வினவினார். பக்கத்தில் கதையளந்த அந்த அள்ளக்கையை கண்களால் எரித்தபடியே “அப்பா அந்த மடாலயத்திற்கு தினமும் பல நூறுபேர் வந்து போகின்றார்கள். எனவே அந்த சீப்புக்களின் விளிம்பில் புத்தனின் மொழிகளை வாக்கியங்களாக எழுதி பக்கதர்களுக்கு விற்றால் தினமும் தலைவாரும் போது இந்த வசனங்களையும் படிப்பார்கள். எனவே அது அவர்களுக்கு மனதிலும் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று துறவிகளுக்கும் நிர்வாகத்திற்கும் விளக்கினேன். உடனே என்னிடமிருந்த நூறு சீப்புக்களையும் வாங்கிவிட்டார்கள். ஒவ்வொரு மாதமும் இவ்வாறு நூறு சீப்புக்கள் கேட்டுள்ளார்கள். நாம் விற்ற சீப்புக்களை வாங்கிய வெளிநாட்டு பக்தர் ஒருவர் தனக்கும் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.” என்று அமைதியாக கூறினாளாம். தந்தை சட்டத்தரணியை சந்திக்க நேரம் தேடினார் தன் வியாபாரத்தினை சட்டரீதியாக மகளிடம் ஒப்படைப்பதற்கு.

குறிப்பு 01. இக்கதை கடந்த வாரம் இடம்பெற்ற பயிற்சியின் போது சொல்லப்பட்ட கதை. இதை கொஞ்சம் அங்கங்கே மெருகூட்டி நான் எழுதியிருக்கின்றேன். எனவே இது என்னுடைய தனிப்பட்ட கதையல்ல. எல்லா கதைகளிலும் மூன்று மகன்கள் மட்டுமே “வியாபார புள்ளியான” தந்தைகளுக்கு இருப்பதுண்டு. இனிமேலாவது வியாபாரத்தினை தொழிலை கொண்டு செல்ல பெண் வாரிசுகள் பிறக்கட்டும். குறைந்தது கதைகளிலாவது இருக்கட்டும்.

குறிப்பு 02. தொழில் முயற்சியாண்மை என்பது எப்படி புத்தாக்கத்துடன் சிந்திப்பது என்பதாகும். மேலும் நேரத்திற்கும் இடத்திற்கும் தக்கபடி சிந்திக்கும் போது தான் நம் உற்பத்திகளை நாம் விற்பனை செய்ய முடியும். புத்தாக்கத்துடன் சிந்தியுங்கள் நண்பர்களே!
 

பிரண்டை (வச்சிரவல்லி) தொக்கு


கொஞ்ச நாளைக்கு முன்னர் நான் ஊர் சுற்றிய போது பிரண்டைச் கொடிகள் கிடைத்திருந்தன. சரிடியென்டு அதனை விட்டுக்கொண்டு வந்து வீட்டிலிருக்கும் அக்காவிடம் இதனை நாட்டிவிடுகள் என்று கொடுத்து விட்டு நான் மீண்டும் கிளம்பி விட்டேன். இந்த தொடர் பயணங்களில் பிரண்டையும் மறந்து போய்விட்டது. ஒரு நாள் வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் எங்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்கும் போது இதென்னது இதனை இங்கு வைத்துள்ளீர்கள் என்று அலறின அலறரில் என்ன தான் அப்படிப் பார்த்தார்கள் என்று பார்த்தால் மதிலருகில் ஏலெட்டு பிரட்டைச் கொடிகள் அழகாக துளிர்த்து வளர்ந்திருந்தன.  அழகாக வளர்ந்திருக்கும் கொடிகளைப் பார்த்து இவர்கள் ஏன் அலறவேண்டும் என கேட்டேன். பிரண்டையை யாராவது வீட்டில் வளர்ப்பார்களா? வீட்டுக்கு நல்லதல்ல என்று வெடியை கொளுத்திப் போட்டு விட்டார்கள். இப்படித்தான் எங்கள் வீட்டில் நன்றாக வளர்ந்திருந்த அகத்தி மரம் ஆட்களின் கதையால் அகற்றப்பட்டிருந்தது. எனவே பிரண்டை பற்றி வீட்டில் யாரின் காதிலாவது விழுந்தால் பிரண்டையும் பிய்த்து எறியப்படும் என்று நினைக்கும் போதே வீட்டின் நாரதர் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.  

அடுத்த நாள் விட்டில் பிரண்டைத் தாக்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மாலை பார்க்கும் போது பிரண்டைக்கொடிகள் அகற்றப்பட்டிருந்தன. தமிழர்களின் இடங்களில் புத்தர் முளைப்பது போல் அதற்கு பதில் வேறு புமரகொடிகள் சில நடப்பட்டிருந்தன. அட அறியாயமே என்று மனதிற்குள் நினைத்து, வீட்டிலும் ஒரு கத்து கத்திய பின் பிரண்டை எல்லோராலும் மறக்கப்பட்டுப் போனது. இப்போது கொஞ்ச நாளைக்கு முன்னர் பலருக்கும் ஏற்பட்டுள்ள மூட்டுவலி போன்று நம்முடைய வீட்டாக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஊரில் இருக்கின்ற வயதானவர்கள் சொன்ன பரிகாரம் தான் பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது. பிரண்டையை தேடினால் கிடைத்தால் தானே. பல நாள் தேடல்களுக்கு பின்னர் தான் சில இடங்களில் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதனை வைத்து இப்போதெல்லாம் அடிக்கடி பிரண்டை தொக்கினை எம்முடைய  மதிய உணவு தட்டுக்களில் காணக்கிடைக்கின்றது. பிரண்டை தொக்கு செய்வதென்பது அப்படியொன்றும் வேலைப்பளுவான விடயமல்ல  

பிரண்டை துளிர்களை எடுத்து வாழையிலையில் சுற்றி நீராவியில் சற்று வதங்க வைக்க வேண்டும். வதங்கிய பிரண்டை துளிர்களை தேங்காய்பூ, பச்சைகொச்சிக்காய், வெங்காயம், சிறிய துண்டு இஞ்சி வைத்து நன்றாக விழுதான அரைக்க வேண்டும். அரைக்கும் போதே தேவையானளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்றாக அரைத்த பின்னர் தேசிப்புளி விட்டு பிசைந்தெடுத்தால் பிரண்டை தொக்கு தயார். இனியென்ன சுடுசோறுடன் இதனையும் வைத்து உண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும் கூடவே கீரி மீன் பொரியலும் இருந்தால் சுவை இன்னும் அதிகம். 

பிரண்டை என்பது நமது முன்னோர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறந்த மூலிகையாகும். கிராமப்புறங்களில் வேலிகளில் எளிதாக வளரக்கூடிய இந்த தாவரத்திற்குப் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. பிரண்டையின் மருத்துவப் பயன்கள் சில.....

  • பிரண்டையின் மிக முக்கியமான குணம் எலும்புகளை வலுப்படுத்துவது. முறிந்த எலும்புகள் விரைவில் கூடுவதற்கும், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு தேய்மானப் பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
  • மூட்டு வலி, முதுகு வலி மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
  •  பிரண்டை பசியை நன்கு தூண்டக்கூடியது. செரிமானக் கோளாறுகளை நீக்கி, வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் குடல் புண்களைக் குணப்படுத்தும்.
  • வாயுத் தொல்லை (Gastric problems) மற்றும் அஜீரணத்தை போக்கவல்லது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் (LDL) கரைக்க பிரண்டை உதவுகிறது
  • உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் (LDL) கரைக்க பிரண்டை உதவுகிறது.
  • வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
  • மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு பிரண்டை ஒரு சிறந்த மருந்தாகும். இது இரத்த மூலத்தைக் கட்டுப்படுத்தி, மூல முளைகளைச் சுருங்கச் செய்யும். மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கும்.

இது எல்லாவற்றினையும் விட நமக்கே நமக்கென்று மாதாந்தம் வருகின்ற மாதவிடாயின் போது ஏற்படுகின்ற வயிற்நுவலி மற்றும் இடுப்புவலிக்கும் பிரண்டையை உணவில் சேர்ப்பது நல்லது. மேற்சொன்ன வலிகள் குறைந்துவிடும்.  

பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பலவகை இருக்கின்றதாம். 

எனக்கென்னமோ பிரண்டை என்பதை விடவும் வச்சிரவல்லி என்ற பெயர் மிகவும் பிடித்திருக்கின்றது.  அவற்றின் வகைகளை எப்படி இனங்காண்பது என்பதை அறிந்துகொண்டு இந்த வகைகளை நாமும் உருவாக்க வேண்டும். இன்றைய காலத்தில் பல மூலிகைகளை நாம் தொலைத்துக்கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே பலதை தொலைத்தும் விட்டுவிட்டோம்..... வச்சிரவல்லி போல தூய அன்புகொண்ட மனிதர்களையும் தான்! . 

சுருளிடு தாடி.....

அண்மையில் ஒரு ஆடைவடிவமைப்பு நிறுவனத்திற்கு சில ஆடைகளில் வடிவமைப்புக்களை வரைந்துகொடுத்திருந்தேன். இந்நிறுவனத்தின் தலைமை என் தமையனார் என்பதாலும் அவருக்கு தங்கையின் இரசனை மேல் இருந்த நம்பிக்கையிலும் வடிவமைப்புகளுக்கான மொடல்களையும் தெரியும் குழுவில் என்னையும் உள்வாங்கியிருந்தார். என்னுடைய பரிந்துரைகள் அல்லது தெரிவில் பெரும்பாலும் தாடி வைத்த ஆண்களை தேர்ந்தெடுத்திருந்தேன். என் கற்பனையிலும்  ஆண்களுக்கான உடை வடிவமைப்பில் கற்பனை பண்ணும் போது ஆண் என்பவன் தாடியுடன் தான் உலா வந்திருந்தான். அண்ணா உட்பட குழுவில் இருந்தவர்கள் இது குறித்து கேட்ட போது ஆண்கள் எப்போதும் தாடியுடன் இருக்கும் போது மிக அழகாகின்றார்கள். மீசையுடன் இருக்கும் போது பேரழகாகின்றார்கள் என்று குறிப்பிட்டேன்.  சரி தாடி பற்றி நம்முடையவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போமா?    

 தாடிக்கு அணல் என்ற பெயரும் உண்டு, தாழ்ந்திருப்பதால் தாடி எனப்பட்டது, எனவே தாடி என்பது தூய தமிழ்ச்சொல்தான்!

  • ' சுருளிடு தாடி... ' - (சிலப்பதிகாரம் ) .
  • ' மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி... ' - (கலித்தொகை ).

கலித்தொகையில் வரும் "மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி" என்ற தொடர், யானையின் வளைந்த தந்தங்கள் தாடி போலத் தொங்குவதை விவரிக்கிறது. இத்தொடரின் மூலம் சங்க காலத்திலேயே 'தாடி' என்ற சொல், தாடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது. 

  • கம்பராமாயணத்தில் 'தாழ்சடை' - என்று தாடியைக் குறிப்பிடுகிறார் கம்பர். தாழ்தல் - என்றால் தாழ்ந்திருத்தல், தொங்குதல். தாழ் கழுத்து மயிர் = தாடி. தாழ்ந்து, தொங்கும் மயிர் = தாடி.
  • தாடி என்பது அன்றைக்கு ஆண்மையின் அடையாளமாக விளங்கியதை புறநானூறு குறிப்பிடுகிறது. 
  • சங்க இலக்கியங்கள் தாடியை 'அணல்' என்றும் குறிப்பிடுகிறது. அணல் - என்ற சொல் மனிதர்களின் தாடியை மட்டும் குறிப்பிடாமல், கோழி, சேவல், மந்தி, குரங்கு ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் குறிப்பிடுகிறது. 
     
    தாழ் என்பது எப்படி மருவி தாடி ஆகியுள்ளது என்பதற்கும் எமது இலக்கணங்களுள் விளக்கமுண்டு
    தாழ் > தாழி > தாடி.

    தாழ் > தாழை > தாடை.

    தாழ் + வாய் = தாழ்வாய் > தாவாய். ( தாவாங்கட்டை).

    (ஒப்பு நோக்குக : தாவாய், மோவாய்) .

    ( ழகரம் > டகரம் ஆவது இயல்பான திரிபே!
     
    இதே போன்றே  மீசை - மேலிட மயிர். மீ - என்றால் மேலிடம் /மேல்புறம்
தாடி - என்ற தமிழ்ச்சொல்லே திரிந்து வடமொழியில் 'தாடிகா' - ஆகிவிட்டது.
சேவலின் கழுத்தில் அமைந்த தொங்கு சதைக்கும் தாடி என்று பெயர். ஆடு, மாடுகளின் கழுத்தின் கீழே தொங்கும் சதைக்கு 'அலைதாடி' - என்று பெயர். (ஆங்கிலத்தில் dewlap).
 
நம்முடைய தமிழ் ஆண்கள் மூன்று தருணங்களில் தான் அழகாகின்றார்கள். ஒன்று வேட்டியுடுத்தி கம்பீரமாக வலம் வரும் போது, இரண்டாவது மீசை மற்றும் தாடியுடன் இருக்கும் போது மூன்றாவது ஒரு பெண்ணை மட்டும் முழுதாக நேசிக்கும் போது.... என்ன நான் சொல்வது சரிதானே... விரைவில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் புகைப்படங்களை எதிர்பார்த்திருங்கள். 
 
பிற்குறிப்பு: நம்முடைய ஆள் சூர்யாவை கறுப்பு சேட் வேட்டியுடன் தேடித்தேடியே என்னுடைய டைப்பண்ணின விரல்கள் சற்று தேய்ந்து போய்விட்டன. 

 

ப்ரத்யேகம்!


திருமணம் என்னும் நிக்கா படத்தில், "என் தாரா என் தாரா நீயே என் தாரா" பாடலை கேட்டிருக்கின்றீர்களா? இந்தப்பாடலின் ஒரு வரியை கார்த்திக் நேத்தா, "ப்ரத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் என் வாா்த்தை ஆனதே!" என்று எழுதி இருப்பார்.. யார் யாரிடமோ ஆயிரம் ஆயிரம் சொற்கள் கேட்டாலும் ஒருவரின் மௌனம் மனதை முழுதாய் நிறையுமெனில் அதுதான் ப்ரத்யேகம்..! நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 

காதல் மொழிகளிலேயே மிக உயர்ந்த மொழி மௌனம் தான்.. மற்றவர்களுக்கு அது வெறும் சப்தமின்மை..ஆனால், நேசிக்கும் இருவருக்குள் அந்த மௌனத்தில் ஓராயிரம் வார்த்தைகள், நூறு கவிதைகள், பல சிறு ஊடல்கள் பரிமாறப்படும். அந்த ப்ரத்யேக மௌனத்தை வாசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே ஒருவரின் வாழ்நாள் காதலையும் வாசிக்க முடியும்.. ஆதலால் தான், "காதல் என்பது ப்ரத்யேக தேடல்" ஆகிறது.. தன் மௌனத்தைப் புரிந்துகொள்ளும் அந்த ஒருவரைத் தேடும் முடிவற்ற, இனிமையான பயணமே காதல் என நான் எப்போதும் நினைப்பதுண்டு
 
"உங்களுக்கென்று பிரத்யேகமாக ஒளிர்கிற வெளிச்சத்தில் நீங்கள் யாரை நிறுத்திப் பார்க்கத் துடிக்கிறீர்களோ, அவரே உங்கள் முதல் கனவும் நேசமும் ஆகிறார்.." என்ற இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதிய சொற்களாக அந்த வெளிச்சம், சூரியனோ நிலவோ தரும் வெளிச்சம் அல்ல. அது நம் உள்ளங்கைக்குள், நம் கற்பனையில் நாம் பொத்தி வைத்திருக்கும் உயிரின் வெளிச்சம்! அந்தப் ப்ரத்யேகமான ஒளியில் எல்லாரையும் நாம் நிறுத்திப் பார்த்துவிட முடியாது. யாரை நிறுத்தும் போது அந்த வெளிச்சம் இன்னும் பிரகாசமாகிறதோ, யாரை நிறுத்தும் போது மனம் "இவர்தான் என் உலகம்" எனச் சரணடைகிறதோ... அவரே வாழ்வின் முதல் கனவாகவும், தீராத நேசமாகவும் உருமாறுகிறார்..

இந்த உலகத்தில் நமக்கென்று ஒரு தனித்துவமான கைரேகை இருப்பதைப் போல, நமக்கென்று ஒரு ப்ரத்யேகமான வானம் இருக்கிறது.. அந்த வானத்தில் நமக்கென மட்டுமே ஒரு நட்சத்திரம் பூத்திருக்கும். அந்த பேரன்பை இன்னொருவரிடம் கடனாகவும் பெற முடியாது, திருடவும் முடியாது. அது நமக்காக பிறந்து வாழ்நாள் முழுதும் நம்மோடு மட்டுமே பயணிக்கக் கூடிய, உலகத்தில் ஒன்றே ஒன்றான பொக்கிஷம்.......அதுவே ப்ரத்யேகம்!

உதாரணமாக நாம் எப்போதும் தூறல் மழை என்று நனைந்திருப்போம் எல்லோரும் நனையும் மழை தான்! ஒருவரோடு நடக்கும்போது மட்டும் கவிதையாவது ப்ரத்யேகம்! எத்தனை குரல்கள் ஒலித்தாலும்  ஒரு குரல் மட்டும் இதயத்தின் கதவை நேரடியாகத் தட்டுவது ப்ரத்யேகம்..! கடப்பவர்கள் எல்லோருக்கும் நின்று பதிலளிக்க முடியாது தானே.... ஏதோவொரு இடத்தில் மனம் தேங்கிப்போகும்... மண்டியிட்டு நிற்கும்.... இறுகப்பற்றிக்கொள்ளும். எல்லாவிடத்திலும் தேங்குதென்றால் அது குட்டை. ஒருவிடத்தில் தேங்கினால் ப்ரத்யேகம் !
 
"ப்ரத்யேகம்" என்ற சொல்லுக்கு "தனித்துவம்", "சிறப்பு", அல்லது "தனிப்பட்ட" என்று பொருள் 

இறுகப்பற்றிக்கொள்!


நான் உன்னை மறுத்த 
நிமிடத்தின் 
நினைவில் அழும் போது 
அழுகையை நிறுத்த என்ன செய்வாய் அன்பே? 
என்று கேட்டேன்

முதலில் புன்னகைத்தான்
பின் அலட்சியமாக - தன்
தலைமுடியை கோதிக்கொண்டான்.
தலையை சற்றே சாய்த்து
திரும்பிக் கேட்டான்
காற்றில்லா இடத்தில் எப்படி சுவாசிப்பாய் நீ?

தடுமாறி நான் 
வார்த்தைகளை கோர்க்கும் முன்பே
அவனே பதிலளித்தான்
காற்றில்லாவிடத்தின் சுவாசம் நின்று விடும்
நீ இல்லாவிடத்தில் நான் 
அசையாமல் நின்று விடுவேன்.... -என் 
கைகளை இறுகப்பற்றிக்கொள்.....என்னருகில்  

மௌனமாக அமர்ந்துவிடு...- அல்லது 
நான் நினைவுகளின் அரூபமாகவேனும் இருந்துவிடு 
என்றான்....
 

அவன் மட்டுமா தொலைந்து போனான்.... - அவன் 
கைளை இறுகப்பற்றிக்கொண்டே நானும்...
வா அன்பே நாம் தொலைந்து போய்விடலாம் -  நீ

என்னை - இறுகப்பற்றிக்கொள் 

 

சிங்கம்!

கடந்த சில நாட்களாக எனது சட்டத்தரணி நண்பனும் நானும் உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகளை வலுப்படுத்தல் நிகழ்வில் வளவாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பல மாவட்டங்களிலும் இந்நிகழ்வுகள் இடம்பெறுவதாலும் நாமிருவரும் துணை வளவாளர்களாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாலும் வாரத்தில் மூன்று நாட்களாவது சந்தித்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. நாமிருவரும் சேர்ந்து வளவாளர்களாக பல வருடங்களாவே செயற்படுகின்றோம். எப்படியும் ஆறேழு வருடங்களுக்கு மேற்பட்ட நட்பு. பல்கலைக்கழகக்காலத்தில் இருவரும் பால்- பாலின விடயங்கள் குறித்த ஐ.நாவின் தன்னார்வதொண்டர்களாக தான் பயணிக்க ஆரம்பித்திருந்தோம். நீண்டகால பயணம் என்பதாலோ என்னவோ இருவரும் இணைந்து பயிற்சிகளை அல்லது கொள்ளளவு விருத்தி நிகழ்வுகளை முன்னெடுத்தால் நிகழ்வு முடிவில் நிறைவுத்தன்மை எமக்கும் பங்குபற்றுநர்களுக்கும் ஏற்படுவதுண்டு. நிகழ்வுகளின் போது சிறு சறுக்கல் வந்தாலும் இருவரும் ஆளாளுக்கு முட்டுக்கொடுத்துக்கொள்வோம். எமது நண்பர்கள் கூட இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி என்று பகிடி பண்ணுவதுண்டு. நமக்குள்ளான இரசாயம் இதில் மட்டுமல்ல ஏதாவது சட்டம் சார் விடயங்கள், புலமைபரிசில் நிகழ்வுகள் வந்தால் நானும் ஊடகத்துறை அல்லது பொறியியல்சார் விடயங்கள் தொடர்பில் அவரும் பரிமாறிக்கொள்வோம்.  
 
நிகழ்வுகளின் போது இந்தாள் கடும் கொதியன். தான் பேசும் போது யாராவது பேசினாலோ அல்லது பராக்கு பார்த்தாலோ பயங்கர கோபம் வந்துவிடும். நான் இதற்கு நேர் எதிர்மாறு. இந்த குணவியல்பும் நம்மிருவருக்குள்ளும் இரசாயனம் இருப்பதற்கு இன்னுமொரு காரணம் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் அடுத்தவர்களிடம் தான் இந்த பாய்ச்சலும் கொதித்தனமும் என்னிடம் இதுவரை ஒரு தடவை தான் கோபப்பட்டுள்ளார். இதுவும் நண்பர்கள் எம்மை இணைத்து பேச இன்னுமொரு காரணம். நாமிருவரும் சில வெளிநாட்டுப்பயணங்களையும் ஒன்றாக மேற்கொண்டுள்ளோம். பொது நிகழ்வுகளில் நான் ஒருவருக்காக காத்திருந்து உணவு உட்கொண்டதென்றால் அது இருவருக்காகத்தான். அதில் ஒருவர் இவர். அவரும் அப்படியே நானிருக்கும் நிகழ்வுகளில் என்னைவிட்டுவிட்டு சாப்பிடவே மாட்டார். அது ஒழுங்குபடுத்துனர்களே கூப்பிட்டாலும் அவர்களிடம் முகத்திலடித்த மாதிரி சொல்லிவிட்டு காத்திருப்பார். அநேகமாக எனக்கும் பரிமாறி எடுத்து தன்னருகில் வைத்திருப்பார். அந்தளவு எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது கூட அவருக்கு தெரியும். சில நேரங்களில் சாப்பிடும் போது நான் இது நல்லாயிருக்கின்றது என்று சொன்னால் தன்னுடையதை எனக்கும் வைத்துவிடுவதுண்டு. அதேபோன்று ஏதாவது பிடித்திருந்தால் சடாரென்று என்னுடைய தட்டில் கைவைப்பதுண்டு. சில நேரங்களில் இது எனக்கு அந்தரமானதாகவும் இருப்பதுண்டு. அடுத்தது பார்ப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று நான் பதற்றமாவதுமுண்டு. இவை ஒரு பக்கமிருக்க!

கடந்த சில வாரங்களாக ஒன்றாக பயணிக்கின்றோம் என்று சொன்னேனில்லையா? நான் சில நாட்களாக நல்ல மனநிலையில் இல்லை. இதை என்னுடைய முகத்தையோ என்னத்தையோ வைத்து இந்தாள் கண்டு பிடிச்சுட்டுது. நூறு தரம் குறுஞ்செய்தி, அழைப்பு என்றும் கேட்டுப்பார்த்தார். எனக்கு அந்தவிடயத்தினை பகிர மனமில்லை. நான் வெள்ளைச்சட்டையுடன் வீதியில் போகின்றேன். சேறு சட்டையில் பட்டுவிட்டது. இதனை நீரில் கழுவிப்பார்த்தாகிட்டு, சவக்காரம் போட்டும் பார்த்தாகிட்டு கறை போகவில்லை. இனி சலவைக்குத்தான் போடவேண்டும். இந்த மனநிலையில் நானிருக்கும் போது ஏன் சேறுபட்ட இடத்தை மறைக்கின்றாய் என்று இவர் கேட்டால் நான் என்ன பதிலளிப்பது? இப்படிப்பட்ட மனநிலையை நாமிருவரும் கடந்துகொண்டிருக்கின்றோம். சில நாட்களுக்கு முன்னரான பயிற்சியின் போது எனக்கு மாதவிடாயும் வந்துவிட்டது. ஏன் இன்று சரியில்லை என்று பயிற்சி நாளன்று காலையில் கேட்ட போது நானும் சொல்லிவிட்டேன். எனவே தான் அன்றைய பயிற்சியை முழுமையாக பொறுப்பேற்பதாகவும் அமாந்திருந்து பார்க்கும் படியும் ஏதாவதென்றால் தான் கேட்பதாகவும் வற்புறுத்தி கூறிவிட்டார். எனக்கும் சொல்லிக்கொள்ளா விட்டாலும் இந்தாளுக்கு கொஞ்சம் பயம். இதனாலேயேயும், அந்த கண்டிப்பில் இருந்த அன்பிலும் அருகில் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

அழகான அர்த்தமானதொரு கதை! 

அவர்: ஒருவன் காட்டில் இருக்க வேண்டுமென்றால் என்ன தேவை?

பங்குபற்றுநர்கள்: அறிவு இருக்க வேண்டும், உடல் வலிமையாக இருக்க வேண்டும், விரைவாக ஓட வேண்டும், எதிரிகளை தாக்கும் திறன் வேண்டும், தந்திரமாக இருக்க வேண்டும்.

அவர்: நமக்குத் தெரிந்து காட்டுக்கு யார் ராஜா? 

பங்குபற்றுநர்கள்: சிங்கம்

அவர்: சிங்கத்திற்கு இருக்கும் அறிவை விட, பலத்தை விட யானைக்கு அறிவும் பலமும் உண்டு. சிறுத்தை சிங்கத்தை விட விரைவாக ஓடும். ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை விட உயரம், மான் சிங்கத்தை விட அழகானது. இப்படி எல்லாமே சிங்கத்தை விட ஏனைய விலங்குகளுக்கு அதிகமுண்டு. பின்னர் எப்படி சிங்கம் அரசனாகவிருக்கின்றது? 

பங்குபற்றுநர்கள்: ………..

அவர்: கர்ச்சிப்பதால் தான் சிங்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்கின்றது. கர்ஜனை என்பது குரல் உயர்வு, உரத்துக்கத்துதல், கத்துவதன் மூலம் அடுத்தவரை அடக்கியாள்கின்றது. 

நான்: ஆக இவ்வளவு நாளும் அடுத்தவர்களை நோக்கி கத்தியது, முறைத்தப்பார்த்தது, கோபப்பட்டது எல்லாம் இதற்கு தானா…. அடப்பாவி (எல்லாம் மை மைன்ட் வொயிஸ் தான் நண்பர்களே… முகத்திற்கு நேரே சொல்லவில்லை. சொல்லி சிங்கம் எல்லோர் முன்னிலையிலும் என்னை நோக்கி கர்ஜிக்கவா…? ) ஆனால் ஒன்று ஆண் சிங்கம் அழகு தான். முடியெல்லாம் சடையாக இருக்கின்றது தான். ஆனால் பெண் சிங்கம் தான் வேட்டையாடுகின்றது என் இனிய நண்பனே!

சரி கதையிருக்கட்டும் முன்னுக்கு சொன்ன   Intro எல்லாம் என்னத்திற்கு என்று நீங்கள் புருவம் உயர்த்துவது எனக்கு விளங்குகின்றது. அதனை விரைவில் நாம் உத்தியோகபூர்வமாக சொல்கின்றோம். இன்னுமொரு கொசுறு தகவல். கடந்த வருடம் இருவரும் பாரீஸ் போய் வந்தோம். மீண்டும் நண்பனும் நானும் விரைவில் வெளிநாடொன்றிற்கு பயிற்சிக்காக பயணிக்கின்றோம். அதுவும் வளவாளர்களுக்கான பயிற்சி தான். எப்போதும் எதிலும் நம்முடன் பயணிப்பவர்களுக்கும் நமக்குமிடையில் இரசாயனம் வேண்டுமல்லவா..? 

கொழு கொழு கன்னங்கள்

நேற்று ஒரு முகநூல் நண்பி மிகவும் மனவழுத்தில் தான் இருப்பதாகவும், தன்னுடைய உடற்பருமனைக்காட்டி ஒருவர் தன்னை நிராகரித்துவிட்டதாகவும் பதிவினை எழுதியிருந்தார். அண்மைக்காலமாக பலரும் இவ்வாறான பதிவுகளின் பின்னர் தம்மை மாய்த்துக்கொள்வதால் சற்று உள்பெட்டியில் போய் உரையாட ஆரம்பித்தேன். தான் ஒருவரை விரும்பியதாகவும் அவரும் தன்னை விரும்புவதாக தான் செய்கைளை மேற்கொண்டதாகவும் ஆனால் தான் நேரடியாக இவ்விடயத்தினை அணுகும் போது அந்தப்பெண்ணின் உடல் பருமனைக்காட்டி மறுத்துவிட்டதாகவும் இது தன்னுள் மிகவும் உளரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் பகிர்ந்துகொண்டார். உடனடியாக தொலைபேசி இலக்கத்தினை வாங்கி உரையாடத்தொடங்கினேன். இது உடனடியாக மனவழுத்தத்தில் உள்ள ஒருவருக்கு நாம் செய்ய வேண்டியது. உன்னுடன் நானிருக்கின்றேன் என்று முதலில் கொடுக்கின்ற நம்பிக்கை தான் மிகப்பெரியது. இப்படி ஆரம்பித்து இரவும் கதைத்து இன்று ஓரளவு தெளிவாகிவிட்டார். இப்பதிவு இவர்களைப் போன்றவர்களுக்கானது!

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எம்முடைய கட்டடடப்பொறியியல் பிரிவில் நாம் இரு பெணகள் தான் இருந்தோம். அடுத்த மாதத்திலிருந்து மற்ற பெண் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக படிப்பினை இடைநிறுத்திவிட்டார். ஆக ஆண்கள் குழுவில் தனித்த பெண் நான் தான். எனவே எங்கு போனாலும் என்ன செய்தாலும் கைகோர்த்து திரிய பெண் துணை இருந்திருக்கவில்லை. விரிவுரையுள்ள நாட்களில் கன்டீனில் சாப்பிடுவது, நூலகம் போவது எல்லாமே இந்த தடியன்களுடன் தான். அப்படி ஒன்றாக இருக்கும் நேரங்களில் யாராவது பெண் பிள்ளைகள் போனால் , அல்லது நம்மைக் கடந்தால் சில பிள்ளைகளைப் பார்த்து “முள்ளுக்குத்தும் வேண்டாம்” என்பான்கள். ஏன்டா அப்படி சொல்றீங்க என்று கேட்டால் நீ வளரல இன்னுமு; என்று பகிடி பண்ணுவதுண்டு. இதுவொரு வயது வந்தோருக்கான 18+ கதை, உடலுறவை வைத்து சொல்லப்படுகின்றதொன்று என நான் அறிந்துகொள்ள சில நாட்களாகியிருந்தது. அதாவது மெல்லிய பெண்களது எலும்பு குத்தும் என்ற நோக்கிலேயே இந்த கதையாடல் அமைந்திருந்திருக்கின்றது. 

ஒரு வகையில் இந்த மனநிலை இலங்கையை தாண்டி பயணிக்கும் போது என்னாலும் அவதானிக்க முடிந்திருக்கின்றது. “மெலிந்த” பெண்களை தேடுவது நம்முடைய சமூகத்தில் தான். திருமணத்திற்கு பெண்தேடும் விளம்பரங்களையும் பாருங்களேன். ஆனால் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் Chubby யான பெண்களையே விரும்புவதை அவதானித்திருக்கின்றேன். அவ்வாறு அணுகப்பட்டுமிருக்கின்றேன். 


இதுவொரு கற்பிதம் தான். பெரும்பாலும் காதல், திருமணம் என்றவுடன் நமக்குள் முதலில் கட்டில் தான் நினைவுக்கு வந்து நிற்கின்றது. இதன் நீட்சி தான் மெலிந்த பெண் தேடும் படலம். இன்னும் மேலே பாய்வதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் பலர். ஆனால் பல பொசிஷன்கள் வந்துட்டு. இன்னுமொரு கற்பிதம் இருக்கின்றது சாப்பாடு தான் உடலளவினை தீர்மானிக்கும் என்று . ஆனால் அப்படியல்ல மகிழ்ச்சியும் உள ஆரோக்கியமும் தான் உடல் பருமனை திர்மானிக்கின்றது. சிலர் பானை கணக்கில் சாப்பிட்டாலும் வெண்டைக்காய் போல் தான் எப்போதும் இருப்பார்கள். 

அதே போல் தான் என்னுடைய நண்பிகள் சிலர் “மொட்டையான” ஆண்களை நிராகரிப்பதுமுண்டு. ஆனால் பாருங்கள் மெலிந்த பெண் திருமணத்தின் பின் குண்டானால் என்ன செய்வது? அல்லது நிறைந்த தலைமுடியுடன் இருப்பவருக்கு திருமணத்தின் பின் முடியுதிர்ந்தால் என்ன செய்வது?  என்னைப்பொறுத்தளவில் மெலிவாகவோ குண்டாகவோ இருப்பது என்று பேசிக்கொள்வதை விட BMI சரியாக இருக்கின்றதா என்று கணக்கிட்டுக்கொள்வது தான் முக்கியம். குளுகுளுவென்று இருந்தாலும் நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும் பெண்கள் இருக்கின்றார்கள். Zero சைசில் உள்ள சோம்பேறிகளும் இருக்கின்றார்கள் (இது எல்லா விடயத்திலும் தான்…. செக்ஸ் டூ)

முக்கிய விடயம் குளுகுளுவென்றிருக்கும் பெண்களை துணையாக கொள்ளும் ஆண்கள் மிகவும் சந்தோசமான மனநிலையில் இருப்பதாகவும் இவ்வாறான இணையங்கள் விவாகரத்தினை பெருமளவில் நாடுவதில்லை எனவும் ஆய்வுகளும் சொல்கின்றன. எங்கள் வீட்டில் வயதானதொரு பெண்மணி இருந்தார். அவர் மெலிந்த பெண்களைக்கண்டால் வஞ்சம் பிடித்தவர்கள் என்பார். இப்போது நினைக்கும் போது இரண்டுக்கும் தொடர்புள்ளதாக படுகின்றது). ஆண்களிலும் பாருங்கள் குண்டான பெடியன்கள் தன்னுடைய பெரும்பாலும் இணையர்களுடன் பாசமாக  இருப்பார்கள். 

எனவே பெண்களே யாராவது உங்களைப்பார்த்து சொல்வதற்கு முன்னர் நீங்களும் வாடலான, சப்பென்றிருக்கின்ற, ஒல்லியான ஆண்களை நிராகரித்துவிடுங்கள். கேட்டால் முள்ளுக்குத்தும் என்று சொல்லிவிடுங்கள். குளுகுளுவென்றிருந்த இட்லி நடிகைக்குத்தானே கோவில் கட்டப்பட்டது. யாராவது அசினுக்கோ இலியானாவிற்கோ கட்டியிருக்கின்றார்களா என்ன? 

குளுகுளுவென்று இருந்தால் தான் நெஞ்சில் சாயலாம், கன்னத்தை கிள்ளலாம், வயிற்றில் செல்லமாக குத்தலாம். நானெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பேன். வாடலாயிருந்தால் நமக்கும் சோடிப்பொருத்தம் சரி வராது.. பிள்ளைகளும் எலும்பும் தோலுமாகவிருக்கும். நமக்கு எல்லாமே குளுகுளுவென்று இருக்க வேண்டும் . இல்லாட்டி நமக்கும் முள்ளுக்குத்தும் தானே. 

பாத்திரமறிந்து......

மீரா என்றாலும் அந்தப்பெண் அவரை Block செய்திருக்க கூடாது. இருவரும் பேசினாலே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட்டுவிடும். இருவருக்கும் நடுவில் பலரும் தலையிட்டு குழப்புவதாக படுகின்றது. பல உண்மைக்காதல்கள் பிரிவது இவ்வாறான பிரச்சினைகளால் தான். இது குறித்து சிந்தித்துப்பாருங்கள். 

வணக்கம் நண்பரே உங்களைப் போன்று நால்வர் https://veenaganam.blogspot.com/2026/04/blog-post_23.html இந்தப்பதிவிற்கு இவ்வாறான பதிலூட்டங்கள் அளித்துள்ளனர். நீங்கள் இச்சம்பவத்தினை படர்க்கையில் பேசியிருப்து ஒருவகையில் நல்லாதாகவும் பேசுவதற்கு இலகுவானதாகவுமிருப்பதாக எனக்குப்படுகின்றது. நிற்க

முதலாவது நீங்கள் கவலைப்படுமளவு அந்தப்பக்கத்தில் கவலையோ இல்லை தேடலோ இருக்கும் என அந்தப்பெண் நினைக்கவில்லை. அன்று Block பண்ணிய பின்பு ஒரு தடவை கூட அந்தப்பெண் திரும்பிப் பார்க்கவில்லை. உங்களுக்கு அடித்துச்சொல்கின்றேன் முடிந்தால் அவரது சமூக ஊடகங்களுக்கு போய் பாருங்கள் வழமை போன்று பதிவுகள், பகிடிகள், சிலவேளை தன்னுடைய படங்களை மாற்றுதல் என தான் கடந்திருப்பார். காரணம் பாதிப்பு இதனால் ஏற்படவில்லை என்பது தான். ஆனால் அந்தப்பெண்ணின் சகல சமூக ஊடகங்களும் அந்த நிமிடத்திலிருந்து இயக்கப்படவில்லை. நம் அன்புக்குறியவர்களை காணவில்லை என்றாலோ அல்லது நம்மை விட்டு தூரப்போய் விட்டார்கள் என்றாலோ நம்மில் பாதிப்பு எப்போது தெரியுமா வரும்? நாம் அவர்களை மனமாற நேசிக்கும் போது தான். 

இப்படி சிந்தித்து பாருங்களேன். ஒரு பெண் ஒரு நபரை விரும்புகின்றாள். அவருக்கு சொல்லவில்லை. அவர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்யவிருக்கின்றார் எனும் போது தானாக விலகிவிடுகின்றாள். அவளது குடும்பத்திற்கான அரசியல் அழுத்தத்தினாலும் மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு போய்விடுகின்றாள். இதற்கிடையில் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றது.  சில வருடங்களின் பின்னர் எதேச்சையாக மீண்டும் சந்திக்கின்றார்கள். சந்தத்தித்த பின் தான் அவரது திருமணவாழ்க்கை முறிந்துவிட்டது தெரிய வருகின்றது. அதேவேளை இங்கு அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட வாழ்வில் பெரிதான ஈர்ப்பு இல்லை. ஐந்து சகோதரன்களுக்கு ஒரே பெண்ணாக பிறந்து வளர்ந்த அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்டவரது அழுத்தமான போக்கு, மண் மீதான பற்றற்றதன்மை என வேறுபாடுகள் அதிகம். இப்படிப்பட்ட நிச்சயார்த்ததை நிறுத்த அந்தப்பெண் யோசித்துக்கொண்டிருக்கும் போது இவ்விடயம் தெரிய வருகின்றது. இப்போது என்ன முடிவினை அந்தப்பெண் எடுக்க வேண்டும்? பொதுவாழ்வில் இருக்கும் மூவரது தன்மானம், சுயகௌரவம், எதிர்காலம் குறித்த விடயம் இது. நிதானமாகத்தான் கையாள வேண்டும். 

அந்தப்பெண்ணிற்கு அந்த நபரின் முதல் வாழ்க்கை , முறிவு பற்றி தெரிந்திருந்தும் அவருடன் பழகிய நாட்களில் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. காரணம் காயப்படுத்திவிடக்கூடாது எனும் நோக்கம், பழைய வாழ்க்கை அல்லது முடிந்த விடயம் பற்றி பேசுவதால் இருபக்கமும் ஏற்படுகின்ற மனக்காயம் என தவிர்த்திருந்தாள். அந்த நபரின் அனுகுமுறைகள், பதிவுகளை வைத்தும் அவரும் தன்னை விரும்புவதாக தான் நினைத்து தாயிடம் பேசியிருந்தாள். அந்தப்பெண் தன் தாயிடம் இதனை குறித்து பேசும் போது தான் மேற்குறிப்பிட்ட நபர் தன்னுடைய அவசர புத்தியில் அரைவேட்காடு ஒன்றுடன் இதனை பகிர அது பொதுவெளியில் பேச அதனை அந்தப்பெண்ணின் குடும்பம் பிழையாக பார்க்க ஆரம்பித்துவிடுகின்றது. 

“அவர் விருப்பம் கேட்டார், நான் இல்லை என்று விட்டேன்” என்பதில் பல அர்த்தங்கள் உள. ஒன்று அந்த நபர் இவ்வளவு நாட்களும் அந்தப்பெண்ணின் மன உணர்வுகளுடன் தான் விரும்புவது போன்று காட்டி விளையாடியிருக்கின்றார். அல்லது பல பெண்களுடன் பழகிய ஒருவரால் தான் இவ்வாறு ஏதுமறியாத ஒருவர் மேல் பழி போட்டு கரி பூசிவிட்டு பொதுவெளியில் சந்தோசமாகவிருக்க முடியும். அல்லது அவர் பகிர்ந்துகொண்ட பெண்ணுடன் அவருக்கு இருந்த நெருக்கதில் தன்னை நல்லவனாக காட்ட நடந்த நாடகம் இது.  எதுவாகிலும் அடுத்தவருக்கு செய்த களங்கம் குறித்த சிறிதளவு கூட வெட்கம் இன்றி, கவலையின்றி இந்த கூட்டணி நன்றாகத்தானிருக்கின்றது. 

இந்த விடயத்தினை முதலில் 43 க்கும் 30 வயதுக்குமான வயதிடைவெளி தான் காரணம், போகப்போக இந்த இடைவெளி குறையும் புரிதல் வரும் என்று என்று அந்தப்பெண் நினைத்திருந்தாள். அதேவேளை பொது வாழ்வில் இருக்கும் இருவர் தம் தனிப்பட்ட வாழ்க்கைக்காக சமூக அந்தஸ்த்தை இழக்க கூடாது என்று நினைத்து பொதுவாகவுள்ளவொரு பெண்ணை சில மாதங்களுக்கு முன் அணுகியிருந்தாள். கதைத்த போது தான் அந்தப்பெண்ணுக்கும் அந்த நபருக்கும் கூட இருந்த உறவு அவளுக்கு தெரிய வந்திருந்தது. இதற்குள் இந்த பெண்ணுக்கு வளர்ந்த இரு பிளளைகளும் உண்டு. எனினும் அதனை கூட அந்த பெண் நம்பவில்லை. எப்போதும் ஒருவரை நேசிக்கும் போது குறைகள் தெரிவதில்லை தானே. ஆனால் அந்த பெண் அனுகியிருந்த நபர் மூலம் பலருக்கும் இவ்விடயம் பரவி கடந்த மாதம் சில பெண்கள் அந்தப்பெண்ணுக்கு தங்களுக்கும் அந்த நபருக்கும் முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய அந்தரங்கமான விடயங்களின் … அனுப்பியிருந்தனர். இந்த வினையெல்லாம் யாரால்? 

வயது வேறுபாடு, அதுவும் வேற்று இனத்தவருடன் மணவாழ்க்கை முறிந்தவர் பற்றி அந்தப்பெண் அவள் குடும்பத்தில் பேசுவதே எவ்வளவு அபர்த்தமானது அதையும் தாண்டி போராட நினைக்கும் போது அதனை மதிக்க வேண்டும். குறைந்த பட்சம் மிதிக்க நினைக்க கூடாது. வாழ்க்கையென்பது வெறும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதல்ல. நிதானம் முக்கியம் .அதுவும் ஒருமுறை தோற்றவர்கள் இன்னும் நிதானமாக அனுகவெண்டும். அதைவிடவும் வயது வித்தியாசம் 13 வருடங்கள். அப்படியிருக்கும் போது முதிர்ச்சியாக நடந்துகொள்ளாமல் ஏட்டிக்கு போட்டியாக தற்போது கட்டுரை எழுதல் வேறு தொடங்கியிருக்கின்றது. 

நூறு நேர்காணல் கொடுத்தென்ன? ஆங்கிலம் பேசியயென்ன பயன்? ஒரு மனிதனுக்குள் தெளிவையும் முதிர்ச்சியையும் தராத அனுபவம் என்னத்திற்கு? கல்வி என்னத்திற்கு? கௌரவமாக வாழ்கின்ற எந்த குடும்பத்தினை சேர்ந்தவர்களும் இவ்வாறான விடயங்களை விரும்புவதில்லை. ஒருவரது முன்னைய வாழ்க்கை முறிவடைந்து மீண்டும் அவரை புரிந்துகொண்டு வாழ்வது என்பது வேறு அதேவேளை பல பெண்களுடன் பதினொரு மணிக்கு நெளிவு பற்றி பேசுகின்றவருடன் நம்பி ஏமாறுவது வேறு. இது மீதியிலைக்கும் எச்சியிலைக்குமான வேறுபாடு. இதில் மிக முக்கியமானது அனுப்பப்பட்டவற்றிலுள்ள திகதிகள். கடந்த ஆவணியில் ஆரம்பமாகிய இப்பிரச்சினையில் தான் அவரை ஏதோவொரு கோபத்தில் காயப்படுத்திவிட்டோம் என்று என்று அந்தப்பெண் கவிiயெழுதிக்கொண்டிருக்க இங்கே பலருடன் “பரந்த மனது” பற்றி பேசிக்கொண்டிருந்திருக்கின்றார். இனியும் அந்தப்பெண் சுணங்க வேண்டுமா? 

உங்களுக்கு தெரியுமா அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவரில் உள்ள ஒரேயொரு பிரச்சினை எந்நேரமும் இயந்திரத்தனமாக இருப்பது மட்டும் தான். அந்த ஆணை இந்த பெண்ணை தவிர எந்த பெண்ணாலும் அனுகமுடியாது. அந்தளவு பெண் விடயத்தில் நேர்மையுண்டு. எந்தபெண் தானாக போய் விழுந்தாலும் கூட தள்ளிப்போ என்று சொல்கின்ற பக்குவமுண்டு. ஆனால் இங்கு அடிப்படையே தவறு. வறட்டு கௌரவம், அடுத்தவரை காயப்படுத்தி பார்த்து மகிழ்கின்ற வக்கிரம், வழிஞ்சல் தனம்…. இவருடன் வாழ நினைக்கும் அந்தப்பெண் எதிர்காலத்தில் நிம்மதியாகவிருக்க முடியாது. முன்னைய நாட்களில் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் கூட ஒருவருடன் இருக்கும் போது மற்றவருடன் வழிவது என்னவொரு வழிஞ்சல் புத்தி. முதல் வாழ்க்கையிலும் இது தான் நிகழ்ந்திருக்கின்றது. இதுவரையான அறிந்த தெரிந்த விடயங்கள் இவை தான்.

அந்தப்பெண் தேடுவது தனியே துணை மட்டுமல்ல. எதிர்காலத்தில் அந்த குடும்பம் கட்டியெழுப்பவுள்ள விடயங்களுக்கான ஆளுமையுள்ள ஒருவரை. அவர் நிதானமும் ,முதிர்ச்சியுமுள்ளவராக இருத்தல் முக்கியம். அடுத்தது அந்தப்பெண்ணின் அண்ணா அண்ணி மரணத்தின் பின் அவர்களது மூன்று குழந்தைகளும் அந்தப்பெண்ணின் பொறுப்பிலுள்ளார்கள். அவர்களையும் அணைத்துக்கொள்கின்ற முதிர்ச்சியான தந்தையையும் தான் அவள் தேடுகின்றாள். அடுத்தது பிரத்யேகம் என்பது ஒரு உறவில் மிக முக்கியம். 

எல்லோரும் நனையும் மழை தான்!
ஒருவரோடு நடக்கும்போது மட்டும் கவிதையாவது ப்ரத்யேகம்!

எத்தனை குரல்கள் ஒலித்தாலும் 
ஒரு குரல் மட்டும் இதயத்தின் கதவை நேரடியாகத் தட்டுவது ப்ரத்யேகம்..!

நீங்கள் பெரிதாக கவலைப்படவே தேவையில்லை. அவர் அப்படியொன்றும் கவலைப்பட்டிருக்க மாட்டார். முடிந்தால் அந்தப்பெண்ணுக்கு மறைந்திருந்து சேறு பூச அல்லது ஏட்டிக்குபோட்டியாக கட்டுரை எழுதிக்கொண்டிருப்பார். அன்பு உணரப்படாதவிடத்து சுணங்கிடவே கூடாது. 

இன்னுமொன்று தெரியுமா அந்தப்பெண்ணிற்கு அந்த நபரின் வட்டத்திலுள்ள இன்னுமொரு வளர்ந்து வருகின்ற ஒருவரே காதலை சோல்லியிருக்கின்றார். எல்லாவற்றிலும் பொருத்தமாகவுள்ள அவரை அந்த பெண் தற்போது நிராகரித்துக்கொண்டிருப்பதே அந்த வட்டத்தில் இணைந்து வாழும் போது இவரை காயம் செய்யக்கூடாது என்பது தான். நினைத்திருந்தால் பார் நான் வாழ்ந்து காட்டுகின்றேன் என்று ஏட்டிக்கு போட்டியாக அந்தப்பெண்ணால் நடந்துகொள்ள முடியும். ஆனால் இது வாழ்க்கை. பல மனங்கள் சம்பந்தப்பட்டது. நிதானமாகத்தான் அனுகவேண்டும்.  

ஒரு பக்கம் நீ தான் வேண்டும் என்று நிற்கின்ற நிச்சயிக்கப்பட்டவர், இன்னொரு பக்கம் பிரச்சினைக்குறியதொரு மேற்கூறிய நிலை,  மற்றப்பக்கம் பதிலை எதிர்பார்த்திருக்கும் ஒருவர் என நாட்கள் சிக்கலாகிக்கிடக்கின்றது. முடிச்சுக்கள் அவிழவும் காயங்களை ஆற்றவும் காலம் தேவை. அநியாயம் நியாயம் அவனே அறிவான் அவனிடமே அந்தப்பெண் விட்டுச்செல்கின்றது.  

அடுத்தது அந்தப்பெண் கதைத்துப்பார்க்கலாமே என்று கேட்டிருந்தீர்கள். அவளாகப் போய் பேசினால் அவள் அவளது குடும்பம் பற்றி கட்டாயம் பேசியாக வேண்டும். அது தான் முறையும் கூட. ஆனால் அப்படி பேசி அவளது பின்னணி தெரிந்து தான் ஒரு ஆண் நேசிக்க வேண்டுமென்பதல்ல. உண்மையில் அவர்கள் நாட்கள் சமூகமாகச் சென்று இருவரும் அன்பை பரிமாறியிருந்தால் நிச்சயம் அந்தப்பெண் சில நாட்களிலேயே தன் குடும்பம் பற்றி சொல்லியிருப்பாள், ஏன் அறிமுகம் கூட செய்து வைத்திருப்பாள். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அணுகுவது? அந்தப்பெண்ணின் பக்கம் இருந்து நகர்த்திட இனி வழியில்லை. வலித்தாலும் உண்மையை உண்மையாகத்தானே சொல்ல வேண்டும்

அந்தப்பெண்ணின் குடும்பம் விரைவில் புலம்பெயரவுள்ளது. அந்தப்பெண்ணும் அடுத்த மாதம் படிப்பிற்காக செல்லவுள்ளாள். இதற்கு மேலும் நடந்தவை பொய்யாகவிருந்து இருவருக்குமிடையில் அன்பென்பது தூய்மையானதும் நேர்மையானதுமாயிருந்தால் சேருவார்கள். ஆனால் அது வரை அந்தப்பெண் இனி இது பற்றி பேசவிரும்பவில்லை. இத்துடன் இது குறித்து நாமும் பேசிட வேண்டாம். 

 பிச்சை மட்டுமல்ல அன்பையும் பாத்திரமறிந்து இடவேண்டும் !!! 

புரியாத பிரியங்கள் பிரியும் போது புரியும்!

நீங்கள் நமக்கு முந்தைய தலைமுறையினருடன் பேசும் போது அந்தக்காலத்தில் அவர்களது அன்பு பரிமாறல்கள் குறித்து கேட்டுப்பார்த்துள்ளீர்களா…. ? நான் என் தாயாரிடம் கேட்ட போது என் அம்மாவிற்கு அப்பா குறித்த நினைவுகளாக இருப்பதில் ஒன்று குறிப்பிட்டதொரு பாடல் என்றார். அடுத்தது சில கடிதங்கள் , வாழ்த்து அட்டைகள் சேர்த்து வைத்திருக்கின்றார். அப்பாவின் கைகுட்டையொன்றிருக்கின்றது.  அவர்கள் அந்தக்காலத்தில் கைத்தொலைபேசி, சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் ஒருவரையொருவர் நேசித்தவர்கள். அந்த நாட்களில் கண்கள் தான் செய்தியனுப்பும் ஊடகம். அதையும் தாண்டி பேசுவதென்றால் கடிதம். இதனால் தவறாது கண்களால் தகவல்களை பரிமாறிக்கொண்டேயிருப்போம் என அம்மா சொல்லிக்கொள்வார். இதை தாண்டி ஊரில் திருவிழாக்கள், விளையாட்டுப்போட்டிகள் நடந்தால் போதுமாம் நாள் முழுக்க கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம். இப்படியானதொரு நாளில் தான் பாடல் கேட்பது ஆரம்பித்திருக்கின்றது. அக்காலகட்டங்களில் இவ்வாறான நிகழ்வில் பாடல்களை ஒலிபரப்புவதற்கென்றே ஓரு குழு பாட்டுப்பெட்டி, மைக்செட்டுடன் வந்துவிடுவார்களாம். பெரும்பாலும் ஆண்கள் தான் அக்குழுவினரிடம் சென்று பணம்செலுத்தி தம்முடைய காதலிகளுக்கு பிடித்த அல்லது அந்நேரத்தில் பிரபல்யமாயிருக்கின்ற காதல் பாடல்களை ஒலிபரப்புசெய்வார்களாம். ஊரே பாடலை கேட்டாலும் அதன் பின்னுள்ள காதல் கதை பற்றி குறிப்பிட்ட பெண்ணுக்கு தெரிந்திருக்குமாம். இப்படியானதொரு நாளில் தான் அப்பாவும் அம்மாவிற்கு பாடல்களை ஒலிபரப்புச்செய்திருக்கின்றார். “காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்…” , “வான் நிலா ….” ஏன்கின்ற இரு பாடல்கள் தம் காதல் கதையின் பசுமையில் எப்பொதும் எஞ்சியிருப்பதாக அம்மா கூறிக்கொள்வதுண்டு.  பதிலுக்கு தான் எம்ரோயிட் செய்த கைக்குட்டை, வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதாக சொல்லுவார். இதனை எம்முடன் பகிரும் போது அம்மாவின் முகத்தில் தெரிகின்ற பெருமை படர்கின்ற செம்மை சொல்லிச்செல்லும் அவர்கள் அன்பை. என்னதான் சொல்லுங்கள் இன்று ஒருவரை தொடர்புகொள்ள ஆயிரம் வழியிருந்தும் இவ்வாறான சின்ன சின்ன பரிமாறல்கள், நினைவுகள் என்பவற்றை தொலைத்துவிட்ட தலைமுறை நாம் தான். 

பொதுவான திருமணம் பேசப்பட்டு அச்சடங்கு நடைபெறும் வரை இணையர்களுக்கு கொடுக்கப்படுகின்ற காலம் இருக்கின்றதே இது அலாதியானது. இருவர் நட்பிலிருந்து பின் காதல் செய்யும் போது ஓரளவாவது ஒரவரையொருவர் புரிந்திருப்பார்கள், அல்லது தெரிந்துவைத்திருப்பார்கள்.  ஆனால் குடும்பங்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் இதற்கான அவகாசம் இருப்பதில்லை. ஆனால் சிலருக்கு படிப்பு, குடும்ப நிலையை முன்னிருந்தி சிலநேரங்களில் இவ்வதிஷ்டம் வாய்ப்பதுண்டு. அப்படிப்பட்ட இருவரின் கதையிது. இனம், சாதி, குடும்ப நிலை, படிப்பு, பதவி என்று நீண்ட வரிசையான விடயங்கள் ஒப்பிட்டு பார்த்து இருவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஜாதகம் பார்த்த சோதிடர் கூட ஆபூர்;வ பொருத்தம் 10 இல் 9 பொருந்துகின்றது என்று சொல்லிவிட்டார். பங்குத்தந்தையும் தேவாலயத்தில் மோதிரம் மாற்றி விட்டு பின்னர் இந்து முறைப்படி தாலி கட்டுங்கள் பிரச்சினையில்லை என்று பச்சைகொடி காட்டிவிட்டார். ஆனால் இந்த 10 இலும் சரி முன்னர் ஆராயப்பட்ட வரிசையிலும் சரி “மனம்” இருந்திருந்ததா என்பது குறித்த கேள்வியை காலம் போக போக தான் ஆராயத்தொடங்கியது.  

சதாசர்வ காலமும் மருத்துவமனையின் (ஒருமையில்லை பன்மை)  சத்திரசிகிச்சை பிரிவில் நோயாளிகளின் மூளையை கிளறிக்கொண்டும், மிஞ்சிய நேரங்களில் பணத்தினை எண்ணிக்கொண்டும் புத்தாண்டில்லை, பொங்கலில்லை, முக்கிய நாட்களில்லை எல்லா நாட்களுமே சத்திரசிகிச்சை மிஞ்சினால் டிவிட்டர் , பிடித்த இடங்களிலிலெல்லாம் சொத்து  வாங்க வேண்டும் என்று வாழ்கின்ற ஆணுக்கும், இசை, வர்ணம், எழுத்து, ஊர் சுற்றல், புத்தகம், சின்ன சின்ன நினைவுகளை கூட சேர்த்து வைக்க நினைக்கின்ற பெண்ணும் பொருந்திப்போகும் என்றா நினைக்கின்றீர்கள்? தன் வருங்கால துணை உலகின் தலைசிறந்த சத்திரசிகிச்சை நிபுணர்கள் வரிசைக்குள் வந்த போது முதல் வாழ்த்தை அனுப்பி சிறு அரிசியில் பெயரை நுணுக்கமாக எழுதி அனுப்பி வைத்த பெண்ணுக்கும் தன் வருங்கால மனைவி முன்னிலை வடிவமைப்பாளராக தெரியப்பட்ட போது ஓரு மாதம் கழித்தும் வாழ்த்தாமல் பிளாட்டின மோதிரம், நூறு ரோஜாக்கள் இணைத்த பூங்கொத்தும் அனுப்பி வைத்த ஆணுக்கும் பௌதீகமான தென் ஈழத்திற்கும் - அமெரிக்காவிற்குமான தூரம் என்றாலும் மனம் அதனையும் தாண்டி பல மைல் தூரத்திலாளனது. 

சிறு குழந்தைகள் என்றாலும் அவர்களை தூக்குவதற்றும் வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுக்கும் நீரிலும் கூட சாதி, மேல்மட்டம் தேடி பிடிக்கும் ஆணுக்கும் பாரதியின் புதுமைப்பெண்ணிற்குமான சிந்தனையின் ஆழம் வேறுபட்டது. மொழியறிவு அற்றவர்கள் முன் கூட தன் பெருமையை காட்ட ஆங்கிலத்தில் பேசும் ஆணுக்கும் தமிழை மூச்சாக சுவாசிக்கும் அந்த பெண்ணுக்குமான பண்பின் நீளம் வேறானது. ஓன்றல்ல இரண்டல்ல 365 ஐ மூன்றால் பெருக்கி வருமளவு நாட்களை புரிதலுக்காக காலம் கொடுத்திருந்தும் தூரம் கடந்து பார்க்கும் போது வருங்கால மனைவி அனைத்;திலும் அந்தஸ்த்து பொருத்தமானவள் என மட்டும் தான் ஆணுக்கு புரிந்திருந்தது. எல்லாமிருந்தும் அன்பிற்கும் பகிர்தலுக்கும் இவ் உறவில் இடமில்லை என்பதும் மட்டும் அந்த பெண்ணுக்கு புரிந்துபோனதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் பாருங்கள் எதுவும் நம் அருகில் இருக்கும் போது நமக்கும் அதன் அருமை புரிவதில்லை தானே! ஒன்றை மட்டும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அன்பை காட்ட ஒருவர் அருகில் இருக்கும் போது, பதிலன்பை காட்டமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் போது நாம் காட்டுகின்ற அலட்சியங்கள் அவர் நம்மை பிரிந்த பின் தான் நடுமண்டையில் குட்டிச்சொல்லும். இது எப்போதும் நேர்மையான நேசித்தலுக்கு உண்டு. 

நிழலின் அருமை வெயிலில் தானே தெரிவதுண்டு! இவ்வளவு காலமும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இன்று அந்த பெண்ணின் முகநூலில் பழைய படங்களை எல்லாம் இரசித்து “சிவப்பு இதயம்” ஐ தட்டிவிடுகின்றார், தன்னுடன் இருந்த நாட்களில் “படம் வரைவதை விட வேறு உருப்படியானதை பாரும், எனக்கு இந்த ஓவியங்கள் புரிவதில்லை" என தூக்கியெறிந்து பேசிய அதே ஆண் தான் அந்த பெண் நடாத்துகின்ற ஓவிய கண்காட்சிகளின் போது பூங்கொத்துக்களை அனுப்பி வைக்கின்றார். ஆங்கிலத்தில் பேசு, எழுது .. தமிழ் சோறு போடாது என்று சொன்னவர் தமிழில் கவிதையாக அந்தப்பெண்ணுக்காக எழுதித்தள்ளுகின்றார். இதுவென்ன சத்தம், பாம்புக்கு மகுடி போல என்று தூக்கிவீசிய அந்த பெண் இசைத்த வீணை பாடல்களை இன்று தேடி தன்னுடைய அழைப்போசையாக வைத்திருக்கின்றார். இன்னும் ஒருபடி மேலே போய் டிவிட்டரில் “கண்ணம்மா” என்று பதிலளிக்கின்றார். அந்தப்பெண் தேடியலைந்து வாங்கி கழுத்துப்பகுதில் எம்ரோயிட் செய்தனுப்பிய உடைகளை பிறகு போடுகின்றேன் என்று அலட்சியப்படுத்தியவர் இன்று தினமும் போட்டு இன்ஸ்ராவில் பதிவிடுகின்றார்.எத்தனை நாள் அந்தப்பெண் ஒன்றாக சாப்பிடுவதற்கும், தான் சமைத்த உணவை பற்றி பேசமாட்டாரா என்றும் தவித்திருந்தது, அழுதிருந்தது. இப்போது பல முறை ஒன்றாக போவோமா என்று கெஞ்சிக்கொண்டிருக்கின்றார். பூரணை நாளுக்கு கூட 12 மணிக்கு அந்தப்பெண்ணுக்கு குறுஞ்செய்தியனுப்புகின்றார். புரியாத பிரியங்கள் பிரியும் போது புரியும் என்பார்கள் அவருக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.

முன்னரெல்லாம் நூறு குறுஞ்செய்திகள் அனுப்பி பதிலுக்கு காத்திருந்து அந்தப்பெண் அழுதிருக்கின்றாள். முதலாக வாழ்த்திவிட்டு கைத்தொலைபேசி சத்தமிடும் போதெல்லாம் ஓடிப்போய் பார்த்துமிருக்கின்றாள். ஒரு நாளில் இருக்கின்ற 1440 நிமிடத்தில் ஒரு நிமிடம் பேசலாமே என்று கெஞ்சியிருக்கின்றாள். இன்று இதெல்லாம் கடந்துவிட்டது. நேசிப்பென்பது மண் மீதும் இருக்கலாம் தான். 

நீங்கள் உங்கள் இணையரோடு அல்லது வருங்கால துணையோடு நடக்கும் போது சற்று வந்த பாதையை திரும்பி பாருங்கள். ஆங்காங்கே சில பூக்கள், முட்கள், சின்ன சந்தோசங்கள், நினைவுகள் இருந்தால் நீங்கள் வாழ்ந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதுவே கார்ப்பேட் வீதியும், சொகுசு வீடுகளும், பிராடோவும் மட்டும் தான் தெரிகின்றது என்றால் கடந்திருக்கின்றீர்கள் என்றே அர்த்தம். வாழ்தலுக்கும் கடத்தலுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. வாழக்கற்றுக்கொள்ளுங்கள்!

அல்பா ஆண்களுக்குத்தான் வாழ்க்கையமைக்க அசாதாரண பெண் மனைவியாக வேண்டும்! அசாதாரண பெண்களுக்கு சாதாரணமானவனின் குட்டி இதயம் போதும் வாழ்வதற்கு. கைகோர்த்து நடப்பதில் உள்ள சுகம் விரலில் அணிகின்ற வைரமோதிரத்தினை விட அலாதியானது. ஸ்கோப்பியனிலும் பிராடோவிலும் ஓரடி தள்ளியிருந்து பயணிப்பதை விட மோட்டார்பைக்கிள் அருகருகே இதயத்துடிப்பு உணர பயணிப்பது கனதியானது!

இருக்கும் போது பிடித்தவற்றினை கொடுக்காது இறந்த பின் மாலயம் செய்வதில் என்ன பயன்? நம்மவர்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்காத நாம் இன்று LinkedIn இல் வந்து அடிக்கடி பார்த்து என்ன பயன்? பிரியங்களை பிரியங்களால் நிரப்ப பாருங்கள். சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கின்றது! 

பிற்குறிப்பு 01: ஏற்கனவே பல கவிஞர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இம்சையே போதுமானது. இன்னுமொரு கவிஞர் வேறு இப்போது தான் உருவாகிக்கொண்டிருக்கின்றார். பரவாயில்லை கவிதைத்தொகுப்பை வெளியிட்டால் புதிய நூலகத்தில் வைத்திட முடியும்! 

 பிற்குறிப்பு 02: இந்த AI காலத்திலிருந்தாவது இனி வரும் சோதிடர்கள் 11ஆவது பொருத்தமாக "மனதை"வைக்க யோசிக்கலாம். காலம் மாறிவிட்டது தானே 

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்மை பார்த்து கேட்கின்ற மூத்த தலைமுறைக்கும் எமக்கு போராட்டம் பற்றி முகநூலில் தான் தெரியும் என்று சொல்லுகின்ற இளைய தலைமுறைக்கும் இடைப்பட்டவர்கள் நாம். சிறு வயதில் நாம் சாப்பிட மறுக்கும் போது அல்லது ஏதாவது குழப்படி செய்யும் போது வீட்டின் பெரியவர்கள் “அந்தா பூச்சாண்டி” அல்லது “பொக்கான்” என்று சொல்லி பயமுறுத்தும் போது வாயைப்பிளந்து கண்ணை உருட்டி வாய்க்குள் வைத்தது எதுவாகினும் விழுங்கிய கடைசி தலைமுறை நாம் தான். இப்போதெல்லாம் தொலைபேசியில் காட்டூன் இருந்தாலே போதும் இளையவர்கள் சாப்பிட்டு விடுகின்றார்கள். தவறு செய்தால் சாமி  தண்டிப்பார் என்பதற்கும் கோயில் வாசல் , தேவாலய வாசலில் நின்று செல்பி எடுக்கும் தலைமுறைக்கும் இடையானவர்கள் நாம். இவைகளைத்தான் நானறிந்த போராட்டத்துடன் இணைத்து பார்க்க தலைப்படுகின்றேன்.  

போராட்டம் என்பது ஏறத்தாழ இன்று 47 வருடங்களை கடக்கின்றது. நான் சொல்வது ஆயுதப்போராட்டத்தையும் உள்ளடக்கிய உரிமைப்போராட்டம். வீட்டிலேயே அரசியல் இருந்ததால் போராட்டங்களின் வடிவங்களும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களும் ஓரளவு தெரியும்

கடவுள் இருக்கின்றாரா இல்லையா? இந்தக்கேள்வியை நீங்கள் எப்போதாவது உங்களுள் கேட்டுப்பார்த்ததுண்டா? நான் பல முறை கேட்டுப்பார்த்திருக்கின்றேன். திறமையிருந்தும் தமிழ் என்பதால் மட்டும் ஒதுக்கப்படும் போது…… என்னருகில் இருந்த பெண் குழந்தை பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட போது…… திடீரென கேட்ட சத்தத்திற்கு எட்டிப்பார்த்த நண்பன் இன்று வரை விசாரணையின்றி இருக்கும் போது….. ஊரிலுள்ள காவாளிகள் பெண்களுடன் சேட்டைவிட்டும் அவன் சமூகத்தில் கொண்டாடப்படும் போது….. காசினால் தான் செய்ய அநீதிகளை ஒருவன் மறைக்கும் போது அதற்கு ஏனையவர்களும் ஒத்தூதும் போது… இன்னும் இன்னும் நான் கையறு நிலையில் இருந்த போது என்னுள் கேட்டுப்பார்த்திருக்கின்றேன். 

ஏன் கடவுள் இருக்கின்றாரா என கேட்டுப்பார்த்திருக்கின்றேன்?  என்னால் என் சக மனிதர்களையே திருத்த முடிந்திருக்கவில்லை, என்னால் எவ்வளவு போராடியும் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. என்னால் போராட்டத்தின் போது என் குடும்பத்தை காக்க முடியவில்லை. என்னால் வெளிப்படையாக கத்த முடியவில்லை. 

கடவுள் ஏன் வேறுபடுகின்றான்? கடவுளைக்கண்டால் மனிதனுக்கு பயமிருந்திருக்கின்றது… கடவுளிடம் மனிதனை தண்டிக்கும் ஆயுதம் இருந்திருக்கின்றது. கடவுளிடம் மனிதனின் கசவாரப்புத்தியை கேள்வி கேட்டு தீர்ப்புகொடுக்கும் சக்தி இருந்திருக்கின்றது.

.கடவுள் எப்படி தண்டித்தார்? உலகிற்கு வந்திருக்கின்றாரா? நானறிந்த நூல்கள் கடவுள் மனிதருடன் வாழ்ந்த காலத்தை பற்றி சொல்லியிருக்கின்றன. 
பிறகு? .....பிறகு தன் சார்பாக சிலரை அனுப்பி வைத்திருக்கின்றார். அவர்கள் தட்டிக்கேட்டார்கள். அவர்கள் தண்டித்தார்கள், அவர்கள் போரிட்டார்கள், அவர்கள் தரம்கெட்டவர்களை அழிக்கவும் அந்த விளிம்புநிலையினரது உரிமைகளை மீட்கவும் ஆயுதமேந்தினார்கள். மனசாட்சிக்கும் மனிதர்களின் கண்ணீருக்கும் பயப்படாதவர்கள் கையிலிருந்த ஆயுதங்களுக்கு அடிபணிந்தார்கள்!

2010 இல் வெளிவந்ததொரு படம் “மந்திரப்புன்னகை” இந்தப்பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் அறிவுமதி. நீண்ட காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கியிருந்த அறிவுமதி மீண்டும் பிறப்பெடுத்தது இப்படப் பாடலின் மூலமாகத்தான். இது கண்ணன் பாட்டு வகையென்றாலும் முன்னெழுத்தை மட்டும் “அ” என்ற உயிரெழுத்தாக மாற்றிப்பாருங்கள். அது கண்ணன் அல்ல “அண்ணன்” பாடல்! இதனை பாடகி சுதா ரகுநாதன் பாடியிருக்கின்றார். வித்யாசாகர் இசையமைப்பில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தின் இந்த பாடலில் “க” என்பது உயிர் “அ” ஆக மாறும் போது கருத்தே மாறிப்போயிருக்கும். 

கண்ணா….! கண்ணா….!

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

(என்ன குறையோ..)

நன்றும் வரலாம் தீதும் வரலாம்

நண்பன் போலே கண்ணன் வருவான்

வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான்

கண்ணில் மழைத் துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்த கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே!

(என்ன குறையோ…)

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் வரலாம்
உறவைப் போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழிகேட்டு பறவை வாடலாம்
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையால் உலகினை அணைப்பான்

அந்த கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா மனமே!

பாடலிணைப்பு - https://www.youtube.com/watch?v=gPXdcBlVSeE&list=OLAK5uy_nk0Uinm6Yj9I20VGOlmtrR8YcYDhE3lOE&index=3 

 

 

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை