நேற்றைய தினம் முகநூலில் பிரபலமானதொரு ஊடகம் வினாவொன்றினை பகிர்ந்திருந்தது. “நீங்கள் கணிதபாடத்தில் வாங்கிய குறைவான புள்ளி என்ன?” என்கின்ற கேள்வி. எனக்கு கணக்கு என்றாலே முதலில் வந்து நிற்பது அம்மாவின் முகம் அடுத்தது சசி சேரின் முகம். அதுவும் தெரிகின்ற இரு முகங்களுக்கும் பக்கத்தில் கூடவே அவர்களது மூங்கில் கம்பும் வந்து நிற்கும்.
எங்கள் வீட்டில் பொங்கல், கிறிஸ்மஸ் போன்று தான் ரிப்போட் தரும் நாளும். அவ்வளது சம்பவங்கள் அன்றைய நாளில் காத்திருக்கும். வழமையாக எல்லா வீடுகளிலும் தங்களுடைய பிள்ளைகள் வகுப்பில் முதலாவதாக வந்தால் எப்படியெல்லாம் பூரித்து போவார்கள். ஆனால் நளினிக்கு (அம்மா) மட்டும் வாய்ப்பேயில்லை. அம்மாவின் கணக்கே வேறு. முதலாம் பிள்ளை என்பதை விட புள்ளி மேல் தான் கவனம் இருக்கும். அநேகமாக நாமனைவரும் மூன்றாம் பிள்ளைக்குள் வந்துவிடுவதுண்டு. ஆனாலும் வாங்கிக்கட்டுவதுண்டு. காரணம் புள்ளி!
ரிப்போட் தரும் நாளின் பாதிப்பு வகுப்பில் வினாத்தாள் காட்டத்தொடங்கியதுமே ஆரம்பித்துவிடும். ரிப்போட் தரும் நாளின் காலையில் எல்லா மாணவர்களும் அன்றிலிருந்து தொடங்கும் பள்ளி விடுமுறையில் குதுகலிப்பில் இருக்கும் போது நமக்கு மட்டும் வேப்பிலை உருண்டை சாப்பிட்டது போல ஏதோவொன்று தொண்டைக்குள் வந்து போகும். ஆனால் வீட்டில் இருவர் மட்டும் வழமை போன்றே இருப்பார்கள். அவர்களுக்கு பாடங்களின் புள்ளியும் 95 விட்டு இறங்குவதில்லை. ஜீனியஸ்! அவர்களை பற்றி சொல்லத்தேவையே இல்லை. புத்தகம்- விளையாட்டு, புத்தகம்- சாப்பாடு, புத்தகம் - இசை என்று புத்தகத்ததையே கட்டிக்கொண்டிருப்பார்கள். இப்போது நரம்பையும், மூளையையும் வெட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இருவர் தவிர்ந்த மற்றவர்களுக்கு கனவிலும் அம்மா கம்போடு தான் நிற்பார்.
ரிப்போட் நாளன்று மதியம் பாடசாலை விட்டு வந்ததும் முன் மேசையில் அனைவரது ரிப்போட்டும் வைக்கப்படும். புத்தகங்களின் ஓரம் மட்டுமல்ல ரிப்போட்டின் ஓரமும் கசங்கியிருந்தாலோ அல்லது ஊத்தை பட்டிருந்தாலோ அதற்கு வேறு கேர்ணல் நளினியிடம் வாங்கிக்கட்ட வேண்டியிருக்கும். அன்று மதிய உணவின் போது வழமை போன்று சேட்டைகள் இருக்காது. மாலை 4.30 மணியிலிருந்து எப்போது அம்மாவின் பைக் சத்தம் கேட்கும் என்று காது உன்னிப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். கிறிக்கட் கொமன்றி மாதிரி வந்து விட்டார், பைக்கை வைத்துவிட்டார், ரிப்போட்டை பார்க்கின்றார், விளாசப் போகின்றார் என்று மனம் வாசித்துக்கொண்டேயிருக்கும்.
வந்ததும் தன்னுடைய கைப்பையை வைத்துவிட்டு சாறியை தூக்கி இடுப்பில் ஒரு சொருகி சொருகிவிட்டு ரிப்போட்களை கையிலெடுப்பார் பாருங்கள் அப்படியே சொர்ணாக்கா தான். பிறகென்ன அகரவரிசைப்படி விழும். கையால் கிள்ளுவது நுள்ளுவது எல்லாம் கிடையாது. நல்ல மூங்கில் பிரம்பொன்று அந்த நாட்களில் வீட்டில் இருந்தது. கிட்டத்தட்ட நாட்டாமையின் அங்கவஸ்திரத்திற்கான மதிப்பு அதற்கிருந்தது. அதனை இரகசியமாக கைப்பற்ற சூழ்ச்சிகளும் நடாத்தப்பட்டு முறியடிக்கப்பட்டிருந்தது என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
முழங்காலுக்கு கீழ் தான் அடிவிழும். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி மெனு. 90 எடுத்தாலும் மிச்ச 10 என்னாகிட்டு என்று தான் விழும். நளினியின் நல்ல காலம் அந்த காலத்தில் “சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்” என்பதெல்லாம் கணக்கில் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்களுள் ஒரு சிறுமி தான் நான். அம்மாவிடம் தங்களுடைய கைகளை நீட்டி டீசன்டாக அடி வாங்கிய ஒருசிலரும் இருந்தார்கள். ஆனால் கம்மை ஓங்கும் போதே கத்த ஆரம்பிப்பவர்களாகிய நாங்களும் இருந்தோம். இதற்கிடையில் அடிவாங்கி கத்தும் போது தன்னார்வத்தில் எம்மை காப்பாற்ற நடுவில் புகுந்து அடிவாங்கவும் அம்மம்மா என்றொருவர் இருந்தார். அம்மா அடித்த தடங்கள் அழியும் வரை “பிள்ளைகளுக்கு எருமைமாட்டை அடிப்பது போல ஏன் பிள்ளை அடிக்கிறாய்…?” என்று சட்டம் பேசி ஆஜராகின்ற வக்கீலும் அவரே!
இப்படியான நேரத்தில் தான் ரிப்போட் தருவதற்கு முன்னர் பெற்றோர்கள் திருத்திய வினாத்தாளினை பார்ப்பதற்கானதொரு முறைமை ஏற்பட்டது. ஏற்கனவே படிப்பித்த ஆசிரியர்களுள் பலர் அம்மம்மா அதிபராகவிருந்த காலத்தில் அவரிடம் படித்தவர்கள், மீதம் சிலர் அம்மா வலயக்கல்வி பணிப்பகத்தில் இருப்பதால் அவருக்குத் தெரிந்தவர்கள். இனி கேட்கவா வேண்டும். பள்ளி வாழ்க்கையே கத்தி விளிம்பு போல தான். சின்ன பிழை விட்டாலும் அவ்வளவு தான். போதாததற்கு இந்த முறைமை வேறு வந்து தொலைத்தது.
அப்போது நான் 6 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். அம்மாவும் திருத்திய வினாத்தாள்கள் பார்க்க வந்திருந்தார். பிழை விட்ட இடங்களில் என்ன பதிலளித்திருக்க வேண்டும் என்று சொல்லித்தந்துகொண்டிருந்தவர்கள் கணித வினாத்தாளில் புள்ளியை பார்த்ததும் விட்டார் பாருங்கள் ஒரு அறை. என்னுடைய 6ஆம் ஆண்டு வகுப்பறையே சுற்றி வந்தது. அதன் பின் அம்மா கதைத்தவைகளும் விளங்கவில்லை. பெருத்த அவமானமாக போய்விட்டது. அம்மா வீட்டில் என்னை ஊறவைத்து அடித்திருந்தால் கூட எனக்கு இவ்வளவு நோ வந்திருக்காது. ஆனால் அன்று கொடுத்த அறை அவமான அடி. சக மாணவிகள், அவர்களது பொற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் முன் விழுந்த அவமான அடி. ஆனால் சத்தியமாக அன்று தான் என் வாழ்க்கை மாறியது.
நான் சின்னனில் இருந்தே கொஞ்சம் ஈகோ பிடித்த ஆள். அலப்பறை பிடிச்ச ஆள். பிடிவாதம் பிடிச்ச ஆள், யாராவது சொன்னால் அதை மட்டும் செய்ய மாட்டேன். இப்படிப்பட்ட அழிச்சாட்டியங்கள் நிரம்பிய என்னை உசுப்பிட்ட புள்ளி இது தான். பாடசாலை காலத்தில் குண்டுக்கன்னங்கள், கொஞ்சம் சிவப்பு கலந்த வெள்ளை என்றிருப்பேன். அதனால் அம்மா அறைந்ததில் அவரது விரல்கள் தெளிவாக என் கன்னத்தில் பதிந்துவிட்டன. மதியம் வீட்டிற்கு வந்த பின்னும் அம்மம்மா இதனை பார்த்து பார்த்தே அம்மாவை திட்டிக்கொண்டிருந்தார்கள்.
மாலை அம்மா வரும் போது எனக்கு பிடித்தவற்றினை வாங்கி வந்திருந்தார். (அந்தக்காலத்தில் தேன்குழல் தான் என் உயிராகவிருந்தது என்பதை இங்கு பதிவு செய்கின்றேன்.) உடை மாற்றிய பின் அருகில் வந்து கன்னத்து தழும்பை தொட்டுப்பார்த்தார். அமைதியாக கணக்கில் என்ன பிரச்சினை என்று கேட்டார். நாளையிலிருந்து டியுசன் கிளாஸ் போகவேண்டும் என்றார். இப்படி அறிமுகமானவர் தான் சசி சேர். லெப்டினன் கேர்ணல் சசி சேர்.
அம்மா கொண்டு போய் சேர்த்த அடுத்த நாள் முதல் வகுப்பு. ஒரு நீண்ட கொட்டகை ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒரு பக்கம். ஏறத்தாழ ஒவ்வொரு வகுப்பிலும் 100 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள். வகுப்பிற்குள் வாத்தியார் நுழைந்தவுடனேயே கேட்ட முதல் கேள்வி டியுட் செய்து வராதவர்கள் எழுந்து நில்லுங்கள் என்பது தான். நானும் முதல் நாள் தானே வந்திருக்கின்றேன். எனவே செய்து வரவில்லை தானே என்று எழுந்து நின்றேன். கையை நீட்டச்சொல்லி விழுந்தது அடி. இதென்ன அக்கிரமம். போனன்றே அடியா? அன்றைய நாள் அழுதழுதே வகுப்பு போனது. வகுப்பு முடியும் போது தன்னை வந்து சந்திக்கச் சொன்னார் சசி வாத்தியார். தனியே சந்திக்க போனேன். ஏன் பிள்ளை அழுது கொண்டிருந்தனீ? ஏன்று கேட்டார். நான் இன்று தான் முதல் நாள் வருகின்றேன். டியுட் பற்றி தெரியாது. ஆனால் அடி வாங்கினேன் அது தான் அழுகின்றேன் என்றேன். அதை அப்போது சொல்லிருக்கலாமே என்றார். பிறகு தவணையில் பெற்ற புள்ளியை கேட்டார். இறுதியில் கணக்கு அப்படியொன்றும் கஸ்டமானதில்லை. கூட்டலும் கழித்தலும் தான் கணக்கு. பெருக்கல் கூட கூட்டல் தான் பிரித்தல் கூட கழித்தல் தான் என்றார். இனி விளங்கவில்லை என்றால் கேட்டு படிக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்பிவிட்டார்.
அன்று ஆரம்பித்தது கணக்கு மீதான பைத்தியம், பித்து, இன்னும் என்ன வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இது தான் அம்மா ஆரம்பித்து வைத்த என்னுடைய கால கணக்கும் கூட. அம்மாவின் அறையும் சசி சேரின் வழிகாட்டலும் இல்லாட்டி இன்று இங்கு நின்று கொண்டிருக்க மாட்டேன். அம்மாவும் சேரும் என்னை அடித்த போது அவ்வளவொரு ஆற்றாமை கோபம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்று இவ்வளவு தூரம் வந்த பின் திரும்பிப்பார்த்தால் கடந்த தடங்கள் எல்லாவற்றிலும் என்னை செதுக்கியது இவை தான் என்று தோன்றுகின்றது. அம்மாவிடம் அன்று வாங்கிய அறைக்கு பின்னர் இதுவரை கணக்கின் பெயரில் அடிவாங்கியதில்லை. ஒரு கட்டத்தில் கணிதம் என்றாலே என் பெயரை அடுத்ததாக நினைக்குமளவிற்கு கணக்கும் என் வசப்பட்டு போய்விட்டது.
இப்போது சசி சேருக்கு வயதாகிவிட்டது. அவ்வப்போது காணுவதுண்டு. நானாக போய் தான் கதைக்க வேண்டும். அவருக்கு எம்மை ஞாபகமிருப்பதில்லை. ஒவ்வொரு தடவையும் யார் பிள்ளை நீ என்று புதிதாக காணுவது போல் தான் கேட்கின்றார். மறக்க கூடிய மனிதரா இவர். நான் பல்கலைக்கழகத்தில் திரவ இயற்பியல் மற்றும் நீரியல் இயந்திரவியல் (hydraulic and fluid mechanics) இனை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றேன். கணிதத்துறையில் மிகவும் சிரமமான பகுதியிது. ஆனால் முதல் வகுப்பில் மறக்காமல் என் ஆசான் எனக்கு கற்றுத்தந்த “கணக்கு அப்படியொன்றும் கஸ்டமானதில்லை. கூட்டலும் கழித்தலும் தான் கணக்கு. பெருக்கல் கூட கூட்டல் தான் பிரித்தல் கூட கழித்தல் தான்” என்பதை மறக்காமல்… மறைக்காமல் சொல்கின்றேன்.
இவையொரு பக்கமிருக்க அநேகமாக மட்டக்களப்பில் நான் பங்குபற்றுகின்ற விமர்சன அரங்குகள், புத்தக வெளியீடுகளுக்கு அம்மாவும் என்னுடன் வருவதுண்டு. அதே போன்று அம்மாவினை அழைக்கும் சந்தர்ப்பங்களில் நானும் செல்வதுண்டு. இப்படியானதொரு நிகழ்வில் நம்முடை தாயார் செய்ததொரு அலப்பறையும் நான் கணக்கு பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்குள் ஞாபகம் வருவதுண்டு.
கேர்ணல் நளினிக்கு நேரம் மிக முக்கியமானது. வேலைக்கும் காலை 7.20 க்கே போய்விடுகின்ற ஆள் அவர். சிலர் நளினா மிஸ் வருகின்றார் என்றாலே நேரம் இது தான் என்று அடித்துப் பேசமளவு நேர ஒழுங்கில் சுத்தபத்தமானவர். பற்றரி பழுதாகி கடிகாரம் கூட அப்பப்போ பிந்தும் ஆனால் நளினி….. Never! Ever!
இப்படியான ஆளை சொந்த காசில் சூனியம் வைப்பது போல் வீட்டிற்கு வந்து அழைப்பிதழ் கொடுத்து வருந்தி கூப்பிட்டிருந்தார்கள். வழமை போன்று நிகழ்விற்குரிய நேரத்திற்கு முன்னரே காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் அடித்துப்பிடித்து அம்மாவும் நானும் போய் விட்டோம். நிகழ்வு தொடங்க இருந்த நேரத்திற்குத் தான் ஒழுங்கமைப்பாளர்களே வர ஆரம்பித்தார்கள். நிகழ்வு ஆரம்பிக்கும் போது குறிப்பிட்ட நேரத்திலும் 40 நிமிடங்கள் பிந்திவிட்டன. அம்மா தான் அதிதி வேறு. துனது உரையின் போது அம்மா போட்ட கணக்கு இருக்குதே அது வரலாற்றில் பதியப்பட வேண்டியது.
“இங்கு ஏறத்தாழ 100 ற்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளீர்கள். சரி நூறு என்று வைத்துக்கொண்டால் 100 ஐ 40 ஆல் பெருக்கினால் 4000 நிமிடங்கள். 4000 ஐ 60 பிரித்தால் 66.6 மணித்தியாலங்கள். 66 என்று எடுத்துக்கொண்டு 24 ஆல் பிரித்தால் ஏறத்தாழ 3 நாட்கள். இன்று 40 நிமிட தாமத்தினால் 3 மனித நாட்களை வீணாக்கிவிட்டோம்” என்றார். சபையில் சத்தமே இல்லை. இவ்வாறு பொன்னான நேரத்தினை வீணடித்த இந்த நிகழ்வில் நான் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாது என்று வெளியேறி விட்டார். இது தான் என் அம்மாவின் கணக்கு!
பிற்குறிப்பு 01: கன்னத்தில் அறை வாங்கும் முன்னர் எடுத்திருந்த ஆகக்குறைந்த புள்ளி 72!
பிற்குறிப்பு 02: “பாடசாலை காலத்தில் குண்டுக்கன்னங்கள்…..” என்று எழுதியிருக்கின்றேன். ஆனால் இப்போதும் அப்படித்தான் இருக்கின்றது. மிகவும் அரிதான நேரங்களில் மட்டும் கன்னக்குழி தென்படும். இதனை அண்மையில் நண்பரொருவர் அழகாக படம் பிடித்துள்ளார்.
பிற்குறிப்பு 03: என்னுடைய அடுத்த கற்கையினை (seismology) நிலநடுக்கம் சார் விடயமாக மேற்கொள்ளவுள்ளேன். துல்லியமான கணக்கிடல் உள்ளவர்கள் இதனை மேற்கொள் முடியும். நீங்களும் முயற்சியுங்கள் ஏன் என்றால் “கணக்கு அப்படியொன்றும் கஸ்டமானதில்லை. கூட்டலும் கழித்தலும் தான் கணக்கு. பெருக்கல் கூட கூட்டல் தான் பிரித்தல் கூட கழித்தல் தான்”
உலகில் எல்லாமே கணக்கு தான் அன்பு உட்பட
இந்த நாட்கள் உலகின் பல வடிவமைப்பாளர்களுடன் கழிந்துகொண்டிருக்கின்றது. பொதுவாகவே இரு பெண்கள் அல்லது பெண் குழு என்றாலே உடை, நகை பற்றித்தான் பேசுவார்கள் எனும் கற்பிதங்களை உடைத்துக்கொண்டிருக்கின்றோம் நாம். நிகழ்விற்காக அழைக்கப்பட்டு எமக்கு வழங்கப்பட்ட தனித்தனி சிறு வீடுகளில் நால்வர் வீதம் தங்கியிருக்கின்றோம். யார் அந்த நால்வர் என்பது எம்முடைய தேர்வு. சிலர் ஆண்கள்- பெண்கள் என கலப்பாகவும் இருக்கின்றார்கள். எமது வீட்டில் நாம் இருவர். என்னுடன் தங்கியிருக்கும் வடிவமைப்பாளர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். எல்லோரும் கூட்டுச் சேர்ந்த பின்னர் எஞ்சிய நாம் இருவரும் இந்த வீட்டில் தங்கியிருக்கு முடிவுசெய்தோம். எனக்கும் ஒரு ஆணுடன் தங்குவதை விடவும் இவருடன் தங்கியிருப்பது இலகுதன்மையாக இருக்கும் என்று தான் தோன்றியது.


