புத்தாக்கம்


ஒரு ஊரில் ஒரு பெரிய தனவந்தன் இருந்தானானம். அவனுக்கு மூன்று பிள்ளைகள். தன்னுடைய அந்திமகாலத்தினை நெருக்கிக்கொண்டிருந்த வேளையில் தனது வியாபார சாம்ராஜ்யத்தை யாரிடம் ஒப்படைப்பது என்கின்ற கேள்வி இந்த தனவந்தனனை குடையத் தொடங்கியது. இத்தனை வருடங்களாக கட்டிக்காப்பாற்றிய இத்தனை சொத்துக்கள், வியாபார நிறுவனங்கள், நிர்வாகங்களை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று பலமாக யோசித்த தனவந்தன் இறுதியில் ஒரு உத்தியை கைக்கொள்ள நினைத்தான். அதாவது நமது Biggboss இல் வருவது போன்று task வைத்து யார் பொருத்தமானவர் என்று தீர்மானிப்பது என முடிவெடுத்தான்.

தன்னுடைய பிள்ளைகள் மூவரையும் அழைத்து ஒரு பெட்டி நிறைய சீப்புக்களைக்கொடுத்தான். “இந்த சீப்புக்களை நீங்கள் புத்த துறவிகளிடம் விற்க வேண்டும். அதிகளவு சீப்புக்களை விற்பதற்கான தந்ரோபாயம் தெரிந்தவருக்கே என் வியாபாரத்தின் உரிமையை கொடுக்க நினைக்கின்றேன்” என்றும் கூறினான். இதென்ன முடியே இல்லாதவர்களிடம் எப்படி சீப்பு விற்பது? இந்த மனிதனுக்கு வயதாகியதால் அறளை பெயர்ந்துவிட்டதோ? என்று சுற்றியிருந்தவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். 

முதலாவது மகன் சீப்புகளுடன் சென்று இரு நாட்களில் திரும்பி வந்தான். “அப்பா நான் துறவிகளிடமே மூன்று சீப்புக்களை விற்றுள்ளேன். சீப்புக்களினால் தலைமுடி வாரிட முடிவதுடன் அப்பப்போ முதுகு சொறிவதற்கும் சீப்புக்கள் பயன்படும் என்று கூறினேன். உடனே மூன்று சீப்புக்கள் வாங்கிவிட்டார்கள்” என்று கூறினான். தந்தையும் அவனது முதுகில் தட்டி” நல்லது” என்று கூறினார். 

இரண்டாவது மகன் நாலைந்து நாளில் திரும்பி வந்தான். வரும் போதே முகத்தில் அப்படியொரு களை. வந்தவுடனேயே காலணிகளை கழட்டி எறிந்த படி “ அப்பா, நான் பத்து சீப்புக்களை விற்றுவிட்டேன். எப்படியென்று தெரியுமா?” என்று கேட்டு அவனே பதிலளிக்க ஆரம்பித்தான். “இந்த புத்த மடாலயத்திற்கு எத்தனை பக்தர்கள் தினமும் வந்து போகின்றார்கள். அதில் பலர் தூரங்களிலிருந்தும் வருகின்றார்கள். அப்படி வருபவர்களுக்கு முகங்கழுவிய பின்னர் சீப்பு இருக்குமாயின் தலைசீவி நேர்த்தியாக இருப்பார்கள். எனவே வழிபாடுகளின் போதும் நேர்த்தியினை உணர முடியும் என்று கூறினேன். உடனேயே நிர்வாகம் என்னிடம் பத்து சீப்புக்களை வாங்கி பக்தர்கள் உடைமாற்றுமிடத்தில் வைத்துள்ளார்கள்” என்று புளுகுடன் அண்ணன்காரனையும் நக்கலுடன் கடைக்கண்ணால் பார்த்தபடி கூறினான். தந்தை அதற்கும் அவனது முதுகில் தட்டி “நல்லது மகனே” என்று புன்னகையுடன் கூறினார். 

கடைசி மகள் ஒரு வாரத்தின் பின் திரும்பி வந்தாள். அண்ணன்கள் இருவரும் ஒருவித சிரிப்புடன் “ என்ன வியாபாரமாகியதா? எத்தனை விற்றாய்? ஒன்றாவது விற்க உன்னால் முடிந்ததா?” என்று கேலி கலந்த அக்கறையுடன் விசாரித்தனர். அந்த பெண்ணும் “நூறு சீப்புக்களை விற்றுள்ளேன்” என்று அடக்கமாக சொன்னாள். அண்ணன்களுக்கு நெஞ்சுவலி வராத குறை. பக்கத்தில் இருந்த அள்ளக்கை வேறு “ ஓ பொம்பிள பிள்ளை என்றால் வாங்குவார்கள் தானே” என்று இரு அர்த்தத்தில் கதைக்க ஆரம்பித்தது. துந்தை தன் மகளை பார்த்து “எப்படியம்மா உன்னால் அவ்வளவு விற்க முடிந்தது?” என்று வினவினார். பக்கத்தில் கதையளந்த அந்த அள்ளக்கையை கண்களால் எரித்தபடியே “அப்பா அந்த மடாலயத்திற்கு தினமும் பல நூறுபேர் வந்து போகின்றார்கள். எனவே அந்த சீப்புக்களின் விளிம்பில் புத்தனின் மொழிகளை வாக்கியங்களாக எழுதி பக்கதர்களுக்கு விற்றால் தினமும் தலைவாரும் போது இந்த வசனங்களையும் படிப்பார்கள். எனவே அது அவர்களுக்கு மனதிலும் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று துறவிகளுக்கும் நிர்வாகத்திற்கும் விளக்கினேன். உடனே என்னிடமிருந்த நூறு சீப்புக்களையும் வாங்கிவிட்டார்கள். ஒவ்வொரு மாதமும் இவ்வாறு நூறு சீப்புக்கள் கேட்டுள்ளார்கள். நாம் விற்ற சீப்புக்களை வாங்கிய வெளிநாட்டு பக்தர் ஒருவர் தனக்கும் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.” என்று அமைதியாக கூறினாளாம். தந்தை சட்டத்தரணியை சந்திக்க நேரம் தேடினார் தன் வியாபாரத்தினை சட்டரீதியாக மகளிடம் ஒப்படைப்பதற்கு.

குறிப்பு 01. இக்கதை கடந்த வாரம் இடம்பெற்ற பயிற்சியின் போது சொல்லப்பட்ட கதை. இதை கொஞ்சம் அங்கங்கே மெருகூட்டி நான் எழுதியிருக்கின்றேன். எனவே இது என்னுடைய தனிப்பட்ட கதையல்ல. எல்லா கதைகளிலும் மூன்று மகன்கள் மட்டுமே “வியாபார புள்ளியான” தந்தைகளுக்கு இருப்பதுண்டு. இனிமேலாவது வியாபாரத்தினை தொழிலை கொண்டு செல்ல பெண் வாரிசுகள் பிறக்கட்டும். குறைந்தது கதைகளிலாவது இருக்கட்டும்.

குறிப்பு 02. தொழில் முயற்சியாண்மை என்பது எப்படி புத்தாக்கத்துடன் சிந்திப்பது என்பதாகும். மேலும் நேரத்திற்கும் இடத்திற்கும் தக்கபடி சிந்திக்கும் போது தான் நம் உற்பத்திகளை நாம் விற்பனை செய்ய முடியும். புத்தாக்கத்துடன் சிந்தியுங்கள் நண்பர்களே!
 

No comments:

Post a Comment

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை