அவர்கள் அப்படித்தான்......

எப்போதுமே என் வீட்டவர்கள் எனக்கு சொல்கின்ற அல்லது எச்சரிக்கின்ற விடயங்களுள் ஒன்று நான் சில நேரங்களில் மிகவும் பரிதாபப்பட்டு ஒருவரிடம் இரக்கம் காட்டுவது, இரண்டாவது யாரோடாவது முரண்பட்டுவிட்டால் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்க்காமலிருப்பது. ஆனால் இதற்கு பின் நம்முடைய சுயகௌரவம் தாக்கப்படும் போது என்ன செய்வது.........?  எதிரிகள் கூட அருகில் இருக்கும் போது கடந்த சில தினங்களில் நான் என்றுமில்லாதவாறு நான்கு பேரை எல்லா தளத்திலிருந்தும்  Block செய்துள்ளேன். 

ஒருவர் அனாவசியமாக விளக்குப்பிடிக்கும் வேலை செய்பவர். இந்தாளுக்கு வேலையே முகநூலில் கம்பு சுழற்றுவது தான். தான் சுழற்றிக்கொண்டிருந்தால் பரவாயில்லை தேவையில்லாமல் என்னை இழுத்துவிட்டது தான் என்னுடைய பிரச்சினை. இந்த அக்காவிற்கு வேலையே இது தான் போல. அதாவது வெங்காய கூட்டிற்கு காற்றடிப்பது. ஆனால் எனக்கு இதற்கு நேரமுமில்லை. சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்ள விருப்பமுமில்லை. ஏற்கனவே இவரால் எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏற்பட்ட குழப்பங்கள் போதுமானது. இவற்றினை விட முக்கியமானது தன்னுடைய மனதைப்போல் அடுத்தவர் மனதையும் கரும்பலகை என நினைப்பது. அதாவது ஒருவரை நினைப்பது அழித்து மாற்றுவது பிறகொன்றினை மறுபடி எழுதுவது ... அழிப்பது. இது நியாயமான இல்லையா என்பது அவரவர் மனதை பொறுத்தது. ஆனால் நாம் மாற்றி மாற்றி எழுதுகின்றோம் என்பதற்காக மற்றவர்களை அவ்வாறு எதிர்பார்ப்பதும் அனாவசியமான தூதுவிடும் படலம் விடுவதற்கும் நான் ஆளில்லை. 

இதே ஆள் போன வருடம் செய்த கலகமே இன்னும் முடியவில்லை. புதிதாக ஒருவரை இதில் இழுத்துவிட்டு புறா வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். அந்தாளும் எனக்கு கறுப்பு பிடிக்கும் எனும் காரணத்தினால் தன்னுடைய புரைபைல் முதல் இன்ஸ்ரா போட்டோ வரை கறுப்பு வெள்ளையில் படங்களை போடுகின்றார். காலையில் வணக்கம் அனுப்புகின்றார். இடைக்கிடை சாப்பிட்டீங்களா என்று அக்கறை வேறு. போதாதற்கு பைபிள் வசனங்கள் வேறு.... இதற்கு காரணம் இந்த வெண்புறா தான். இதற்கு என்னவர் பற்றியும் நன்றாக தெரியும். தெரிந்தும் நேர்மையில்லாமல் நடந்தால் என்ன செய்வது? தினம் தினம் எத்தனை ஆண்களை கடக்கின்றோம் அத்தனை ஆண்களிடமுமா மனம் இலயித்துப்போகும். நாலைந்து தடவை அக்காவிடமும் சொல்லிப்பார்த்தாகிற்கு. தொடந்ததால் Block செய்தாகிற்று! 

வாழ்க்கைப் பயணத்தில் நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் சிலர் நம் இதயத்திற்கு நெருக்கமானவர்களாக மாறுகிறார்கள். ஆனால், எல்லா உறவுகளும் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. குறிப்பாக, ஒரு உறவில் நம்முடைய சுயமரியாதை (Self-respect) கேள்விக்குறியாகும் போது, அந்த உறவின் தன்மையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. 

"யாரோ ஒருவரின் ஓய்வு நேரத்தில் உன் இருப்பைத் தேடாதே" என்ற வரி, உறவுகளில் நிலவும் கசப்பான உண்மையை உணர்த்துகிறது. சிலர் தங்களுக்கு வேலை இருக்கும்போது நம்மை மறந்துவிடுவார்கள், ஆனால் அவர்களுக்கு சலிப்புத் தட்டும் போதோ அல்லது பொழுது போகாத போதோ மட்டும் நம்மைத் தேடி வருவார்கள். ​நாம் ஒருவருக்கு "முன்னுரிமையாக" இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் "ஓய்வு நேரக் கருவியாக" இருக்கக் கூடாது. நம்முடைய நேரமும் உணர்வுகளும் விலைமதிப்பற்றவை என்பதை நாம் உணர வேண்டும்.
​"யாரும் இல்லாத போது வரும் அழைப்பிற்குப் பதில் சொல்லாதே.." என்பது ஒரு எச்சரிக்கை மணி. ஒருவருக்குத் தேவைப்படும்போது மட்டும் நாம் நினைவுக்கு வருவது அன்பல்ல, அது சுயநலம். சுற்றியுள்ள அனைவரும் சென்ற பிறகு, வேறு வழியின்றி நம்மைத் தேடி வருபவர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. ஒருவர் நம்மை ஒரு Choice ஆக வைத்திருக்கும்போது, நாம் அவர்களை நம்முடைய "உலகமாக" கருதுவது முட்டாள்தனம். இது காலப்போக்கில் நம் மன அமைதியைக் குலைத்து, நம் மதிப்பைக் குறைத்துவிடும். அன்பு என்பது இருபக்கமும் சமமாக இருக்க வேண்டும். நம்மை மதிக்காத இடத்தில் நாம் இருப்பது, நமக்கே நாம் செய்யும் துரோகம். நம்மைத் தேடி வராதவர்களுக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும், நம்மை மதிப்பவர்களுக்காகவும், நம்முடைய சுய முன்னேற்றத்திற்காகவும் நேரத்தைச் செலவிடுவது சிறந்தது. உறவுகளை விடவும் மேலானது ஒரு மனிதனின் சுயமரியாதை. நம்மை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களிடம் இருந்து விலகி நிற்பதே நமக்குப் பெருமை. நானும் விலகித்தான் போனேன். எதுவும் இருக்கும் போது தெரிவதை விடவும் இழக்கும் போது தானே சிலருக்கு புரிகின்றது. 1360 நாட்கள் புரியாத அன்பு கடந்த 240 நாட்களுக்குள் புரிய ஆரம்பித்திருக்கின்றது. ஆனால் பாருங்கள் எனக்கு இப்போது தான் உலகம் புரிய ஆரம்பித்திருக்கின்றது. 
 
​"உன்னைத் தேடுபவர்களுக்கு உயிராக இரு; உன்னைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு அந்நியனாக இரு" என நாமும் அடுத்தவரை காயப்படுத்த கூடாது என்று விலகி மௌனமாக நடந்தால் அதற்கு பயம் என்று அர்த்தமல்ல. ஆலமரத்தினை விடவும் நாணல் உறுதியானது. இனி பேசிப்பயனில்லை Block பண்ணியாகிட்டு!
 
என்னைச் சூழ எத்தனை ஆண்கள் இருக்கின்றார்கள். எனக்கு தொழில்ரீதியான, குடும்ப ரீதியான, கருத்தியல் ரீதியான எதிரிகளும் இதற்குள் அடங்குகின்றார்கள். ஆனால் இதுவரை என் ஒழுக்கத்தினை அல்லது சுயத்தினை எந்த ஆணும் விமர்சித்தில்லை. அந்தளவு நேர்மை என்னிடமுள்ளது என நான் நினைக்கின்றேன். அதே போன்று யாரும் அனாவசியமான அல்லது நெருக்கமான கதைகள் என்னிடம் பேசுவதில்லை. என் தொலைபேசியை பொதுவில் வைக்குமளவு அல்லது  Chat ஐ அழிக்க வேண்டிய தேவையில்லாதளவு தான் என் சமூக ஊடக உறவுகளுண்டு. 
 
ஆனால் ஒரு பிள்ளை கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட நபர் தன்னிடம் வழிவதை அடிக்கடி எனக்கு படம்பிடித்து போட ஆரம்பித்தது. என்னிடம் இப்படியொருவர் பேசுவதற்கு முதலில் தைரியம் வேண்டும். அப்படியே பேசினால் அவர் எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் நீக்கிவிடுவேன். வழிஞ்சல்களுடன் நமக்கு என்ன தேவையுள்ளது.? ஆனால் இந்தாள் தன்னிடம் அவர் வழிவதை போன்று அந்த குறிப்பிட்ட நபர் வழியும் ஆட்களிடமிருந்தெல்லாம் Screen Shots சேமித்து எனக்கு அனுப்ப தொடங்கியது. 

முதலில் ஆலோசனை செய்து அவரை நீக்கும் படி சொன்னேன். கேட்கவில்லை. அப்படியே தொடர்ந்தால் நீங்கள் தொடருங்கள் எனக்கு அனுப்ப வேண்டாம் என்றும் சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. அந்த "வழிஞ்சலும்" சும்மா ஆளில்லை. 10, 11 மணிக்குத்தான் அண்ணன் நெளிவு சுழிவு பற்றியெல்லாம் பேசியிருக்கின்றார். அவ்வளவு பாலியல் வறட்சி. தராதரம் தெரியாமல் எல்லோரிடமும் கடலை தான். சரி ஏதாவது செய்து தொலையுங்கள் என்னை இழுத்துவிட வேண்டாம் என்று சொன்னாலும் அந்த பிள்ளையும் கேட்பதாயில்லை. நான்கு தினங்களுக்கு முன்னரும் வழிஞ்சல் நெளிப்பு பற்றி பேச அதை எனக்கு அனுப்ப.... அந்த அழகியையும் Block பண்ணியாச்சு 
 
நாம் குறிப்பிட்ட பதின்மவயதில் எதிர்பால் கவர்ச்சியில் எதிர்பாலாரிடம் கடலை போட்டிருப்போம். அப்படி போடவில்லை என்றால் நமக்கு ஹோமோன் வேலை செய்யவில்லை என்று தான் அர்த்தம். அதன் பின்னர் இருபதில் ஈர்ப்பு வந்திருக்கும். அதேவேளை பல்கலைக்கழகம், பணி என்று பலரை கடக்கும் போது ஒரு நிதானம் நம்மில் வந்திருக்க வேண்டும். அதிலும் 25 க்கு பின்னரும் கண்டவர்களிடமெல்லாம் சுணங்குகின்றோம் என்றால் நாம் என்ன தெருநாய் வகையா? உறவு நேர்மை வேண்டாமா? 
 
ஒரு பிள்ளை போட்டோ போட்டால் போதும். அந்த போட்டோக்கு பொதுவெளியில் பதிலளித்தால் நீங்கள் நேர்மையாளர். உள்பெட்டியில் போய் நெஞ்சை நக்குவதெல்லாம் தெரு நாய்க்குணம். அதுவுமில்லாமல் பொதுவில் "நல்லவர்" உள் பெட்டிக்குள் பேசி தண்ணி கழட்டுவதெல்லாம் என்னளவில் சைக்கோதனம். அப்டியொரு தேவையிருந்தால் யாராவது ஒருவரை தேர்ந்து வாழ்வது தானே. இப்படியானவர்கள் நிச்சயம் பிறப்பில் அல்லது வளர்ப்பில் தான் இதனை கற்றிருப்பார்கள். நன்றாக ஆராய்ந்தால் இதனை கண்டுபிடிக்கலாம்.  
 
இப்படியான சைக்கோக்கள் தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை. தராதரம் பார்ப்பதில்லை. யாரு? எவர்? பொருத்தமா? நேர்மையான உறவா? எதுவும் கிடையாது. அப்படியென்ன இருந்திடப்போகின்றது. பெண்ணென்றால இரு முலைகள் , பெண்ணுறுப்பு. ஆணென்றால் குறி. அவ்வளவு தான் வாழ்க்கை. என்ன நிறம் அளவில் தான் மாற்றம். 

இந்த தெளிவும் நிதானமும் இல்லாமல் பொதுவாழ்க்கையில் முட்டையில் முடி பிடுங்கி என்ன பயன்?  இவ்வாறான நேர்மையற்ற தொடர்பிருப்பவர்கள் நாளை ஒரு உறவு நிலையில் மட்டும் நேர்மையாகவா இருந்திடப்போகின்றார்கள். வாழ்க்கைத்துணை இருக்கும் போதே இவர்கள் அடுத்தவர்களிடம் போனாலும் வியர்ப்பிருக்காது.  இப்படி நேர்மையற்று இருக்க போகும் உறவிற்காகவா இவ்வளவும்? Block பண்ணியாகிட்டு...! ஆனால் ஏதோவொரு புள்ளியில் இது வலிக்காமலில்லை 
 
மனிதர்களையும் அவர் தம் குணங்களையும் காலம் உணர்த்திப்போகின்றது!   
 

No comments:

Post a Comment

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை