Wednesday, July 31, 2013

மௌனப் பொழுதுகளில்....


வார்த்தைகள் கேட்டிடாத......
சுவாசங்கள் சுட்டுவிடாத..... – பல
மைல் தொலைவில் நாம்…. – உன்
நினைவுகள் மட்டும்
பேரூந்தின் ஜன்னல் ஓரத்து நிலவாக
என்னைத் தொடர்கிறது.....
.



எழுத்தில் மட்டுமே
தொடர்கின்ற பிரியங்களில்
உணர்ந்திடா தூரங்கள்…..
மடல் வரைந்திடாத
மௌனப் பொழுதுகளில் மட்டும்
இடைவெளிகளை இடையறாது
இதயத்துள் இழையோடிய படி!!!

Tuesday, July 23, 2013

41 வது இலக்கிய சந்திப்பில்........ எனது உரை

கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெண்கள்

நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் கேள்விக்குட்படுத்தக்கூடிய ஒரு விடயம் கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

1978 இன் 4 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுச் சட்டம், 1981 இன் 8 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழச் சட்டத்தமின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இச்சட்டம் 1948 செப்டெம்பர் 8 ஆம் திகதி முதன்முதலாக சட்டமாக்கப்பட்டது. பின்னர் 1950, 1953,1955,1981 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது.

  • மேற்படி ஆணைக்குழு பரிசீலனை செய்ய வேண்டுமென ஜனாதிபதியவர்கள் நியமித்த விடயங்கள் வருமாறு2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி அமுலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வி அடைவதற்கான காரணங்கள் மற்றும் 2009 மே 19 வரை இடம்பெற்ற சம்பங்களுக்கான காரணங்கள்
  • யாராவது தனிநபர் , குழுவினர் அல்லது நிறுவனம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இது தொடர்பான பொறுப்புக்களை ஏற்கின்றார்களா?
  • இத்தகைய சம்பவங்கள் மீள ஏற்படாத வகையில் அதனை உறுதிப்படுத்தக் கூடிய மேற்படி சம்பவங்களிலிருந்து நாம் கற்க வேண்டியள பாடங்கள்
  • இச்சம்பவங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு நபரோ அல்லது அவர்களில் தங்கி வாழ்பவர்களோ அல்லது அவர்களின் பிறப்புரிமை கொண்டோரோ நல்லிணக்கம் செய்யப்படக்கூடிய வழிகள்
  • இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்கக்கூடிய வகையிலும் சகல சமூகங்களுக்கிடையில் தொடர்ந்தும் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளக்கூடிய நிர்வாக ரீதியிலான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றுமு; புலனாய்வு செய்யப்பட்ட விடயங்களில் ஏதேனும் ஓர் விடயத்திற்கு ஏற்புடைய வேறு பரிந்துரைகளை செய்தல். ஆகிய ஐந்து விடயங்களே அவை….
இந்த ஆணைக்குழு 2010 ஆகஸ்ட் 11 ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பித்தது. கொழும்பிலுள்ள “சர்வதேச ரிதியான உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கை நெறிகள் பற்றிய லக்ஷ்மன் கதிர்காமர்” செயலகத்தில் விசாரணைகளை மேற்கொண்டது. யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி ,முல்லைத்தீவு, மட்டக்களப்பு, புத்தளம், மன்னார், வெலிஓய, காலி, மாத்தறை, கண்டி, அம்பாறை ஆகிய இடங்களில் பகிரங்க விசாரணைகள் இடம்பெற்றன.
இவ்விசாரணைகளின் போது பொதுமக்கள் பலர் பங்கு பற்றியதுடன் அழைப்பாணை மூலம் சாட்சிக்காரர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

  •  2010 செப்டெம்பர் மாதம் இடைக்கால பரிந்துரைகள் உள்ளடக்கிய அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
  • பின்னர் 2011 நவம்பர் மாதம் ஆணைக்குழுவின் இறுதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
  •  2011 டிசம்பர் 17 ஆம் திகதி சபை முதல்வர் திரு.நிமல் சிரிபால டி சில்வா இவ்வறிக்கையை சபா பீடத்தில் சமர்ப்பித்தார்.
  • 2012 பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை ஜெனீவாவில் நடைபெற்ற 19 ஆவது அமர்வில் ஐக்கிய அமெரிக்கா இலங்கை பற்றிய தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்தது. டுடுசுஊ ஆணைக்குழுவினை அமுல்படுத்துமாறும் கோரப்பட்டது.
  • 2010 முதல் 2011 நவம்பர் வரை சாட்சிகளை விசாரணை செய்து ஆணைக்குழு அறிக்கையுடன் 285 பரிந்துரைகளை முன்வைத்தது.

இப்பரிந்துரைகளில்
  • சிவிலியன்களின் பாதுகாப்பு
  • சட்டவிரோத ஆயுதக்குழுக்களை தடைசெய்தல்
  • காணாமற்போதல் .கடத்தப்படுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்தல்
  • முறையான விசாரணைகளை மேற்கொண்டு சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்டவர்களுக்கான சட்டதீர்வுகளை மேற்கொள்ளுதல் 
  • வடக்கு கிழக்கு மாகாணங்களின் இராணுவ மயப்படுத்தலை நீக்கி காணிப்பிணக்குகளை தீர்த்தல்
  • கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் தகவல்களை பெறும் சுதந்திரத்தையும் உறுதிசெய்தல். 
  • பெண்கள், சிறுவர்கள் விசேட தேவையுள்ளோருக்கான பாதுகாப்பு
  • பாதிக்கப்பட்டோருக்கான நஷ்டஈடு
  • தேசிய இனங்களுக்கிடையில் நட்புறவையும் நல்லிணக்கத்தினையும் மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள்
  • 13வது திருத்தச்சட்டத்தை அமுலாக்கி அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை உருவாக்கி அரசியல் தீர்வொன்றை எட்டுதல்
  • மும்மொழிக்கொள்கை அமுலாக்கம்
  • மோதல் பிரதேசங்களுக்கு அண்மையில் வாழும் சிங்கள முஸ்லீம் மற்றும் மலையக தமிழர்கள் உட்பட சகல மக்களினதும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள்
  • புலம் பெயர்ந்தோருக்கான தேசிய ஐக்கியத்திற்கான ஒத்துழைப்புக்களை அமுலாக்கல்

போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கூறிய விடயங்களில் "பெண்கள் பற்றியதான பரிந்துரைகள்" தொடர்பில் பேசுவதே என் உரையின் கருப்பொருள்





285 பரிந்துரைகளில்...............
  1. 9.86 -அரசாங்கத்தகவல் மூலங்களின் படி 59,000 இற்கும் அதிகமான பெண்கள் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களின; நல்வாழ்வினை உறுதிப்படுத்துவதும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மிக முக்கியமாகும்.
  2. 9.87 - அநேகமான பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர். அல்லது அவர்கள் இருக்கும் இடம் தெரியாதிருக்கின்றனர். சிலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மன வேதனைகள் இருக்கத்தக்கதாக மேற்படி குடும்பங்களின் சிறுவர்களையும் முதியோர்களையும் பராமரிக்கவேண்டியது இப்பெண்களின் பொறுப்பாகும். எனவே அவர்களுக்கான ஒரு ஜீவனோபாய மார்க்கத்தையும் வருமானம் ஈட்டித் தரும் முறையையும் அமுல்படுத்த வேண்டும்.
  3. 9.88 - இந்தப் பணியில் உதவியளிப்பதற்கு சர்வதேச சமூகங்களும் சர்வதேச ஸ்தாபனங்களும் சிவில் அமைப்புக்களும் தமது அறிவையும் வழங்கலையும் வழங்கும் வகையில் அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும். உள்@ராட்சி நிறுவனங்கள், அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் என்போர் பாதிக்கப்பட்டோரின் மனநலம் கருதி நடவடிக்கைகளையும் தீர்வுகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  4. 9.89 - மோதலின் நீடித்த யுத்தம் காரணமாகவும் குடும்பத்தின் ஆண்களை இழந்த காரணத்தினாலும் கல்வி தொடர முடியாது பல பெண்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு முறைசார் அல்லது முறைசாரா கல்வி வசதிகளை ஏற்படுத்தியும் தொழில்பயிற்சி அல்லது வாழ்வாதார முறை என்பவற்றை தயாரிக்கவும் உதவ வேண்டும்.
  5. 9.90 - இப்பெண்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வகையிலும் தமது மனித கௌரவம் பாதுகாக்கக் கூடிய வகையிலும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நல்லிணக்கத்திற்கான முன் நிபந்தனையாக இத்தகைய சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஆணைக்குழு கருதுகிறது.
  6. 9.91 - காணாமற் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், எதேச்சதிகாரமாக நீண்டகாலம் தடுத்து வைத்தல், காணாமற் போகச் செய்தல் என்பன பெண்களை நேரடியாகப் பாதிக்கும் விடயங்களாகும். மேற்படி பாதிப்புக்கு உள்ளானவர் தமது கணவராகவோ தந்தையாகவோ மகன்மாராகவோ சகோதரர்களாகவோ இருக்கலாம். தமது அன்புக்குரியவர்கள் இருக்கும் இடம் அறியாவிட்டால் உண்மையையும் சட்ட ரீதியான பாதுகாப்பையும் பெறும் உரிமை அவர்களது ஜனநாயக உரிமையாகும். நல்லிணக்க முயற்சிக்கு இது முன் நிபந்தனையாகும்.  
  7. 9.92 - இப்பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளைக் காண்பதாயின் நிறுவனங்களுக்கிடையிலான முயற்சிகளும் ஒருங்கிணைந்த முயற்சியினால் மட்டுமே அதை எதிர்கொள்ள முடியும் என ஆணைக்குழு கருதுகிறது. மேற்குறிப்பிட்ட பாதிப்புக்குள்ளான அனைவர் பற்றிய தீர்வுகளைக் காண்பதற்கும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் ஒரு செயலணி தாமதமின்றி ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும்.
ஆகிய 7 பரிந்துரைகள் மட்டும் விளிம்புப்பால் நிலையினரான பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பரிந்துரைகளில் 9.91 பரிந்துரைக்கமைய தனது கணவன் காணாமல் போனது தொடர்பான விடயம் குறித்து பெண்ணொருவரினால் அளிக்கப்பட்ட சாட்சியப்பகிர்வு பற்றியதொரு விடயத்தை உங்கள் முன்வைக்க விரும்புகின்றேன்.

சம்பவம் பற்றிய விளக்கம்

அரச படைகள் மற்றும் விடுதலைப்புலிகளிடையேயான கடந்தகால மோதல்கள் காரணமாக பொது மக்களின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் மீறப்பட்டிருக்கின்றன எனும் விடயம்  நாட்டின் பலபாகங்களிலும் இருந்து, ஜனாதிபதியினால் நியமிக்கப்ட்டிருந்த கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் பெருமளவில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இதில் சரணடைதல் அல்லது கைது மூலம் அரசாங்க அதிகாரிகளால் கட்டுக்காவலுக்கு எடுக்கப்பட்ட நபர் ஒருவரின் பாதுகாப்பு மற்றும் பத்திரதன்மை என்பன அரசாங்கத்தின்  பொறுப்புக்கூறலாக இருக்க வேண்டும் என ஆணைக்குழு வலுவாக தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் நாட்டின் ஜனாதிபிதியினால் நியமிக்கப்பட்டிருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் மன்னார் மாவட்டத்தில் கடந்த 2011, ஜனவரி 8ம்,9ம் திகதிகளில் இடம்பெற்றிருந்தது.இதன் போது மதத்தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் தமது சாட்சியங்களை பதிந்திருக்கின்றனர். இவற்றில் அதிகமானவையாக கடத்தல், காணாமல் போதல் மற்றும் சரணடைந்த நிலையில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் பதியப்பட்டிருந்தன.
மன்னார் மாவட்டத்தில் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் சாட்சியப்பதிவுகள் மடு உதவி அரசாங்க அதிபர் பணிமணையில் இடம்பெற்றிருந்தது இதன்போது பெரிய பண்டிவிரிச்சான் கத்தோலிக் தேவாலயத்தின் அப்போதைய அருட்தந்தையாக பணியாற்றிய முரளி உட்பட பலர் சாட்சியங்களை அளித்திருந்தனர். இதன் போது முல்லைத்தீவில், “அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் ஊடாக இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தளபதிகள் எங்கே?” என ஆணைக்குழு முன்னிலையில் ஜானின் மனைவி கேள்வி எழுப்பியிருந்தமை சி.ஆர்.டீ. சில்வா தலைமையிலான ஆணைக்குழுவினரையும், அங்கு குழுமியிருந்தவர்களின் புருவங்களையும் ஒரு கனம் மேல் எழுப்பியிருந்தது. 

மூன்று பிள்ளைகளின் தயாhரான மிலோனியா ராயப்பு (ஜான் மனைவி)  ஆணைக்குழு முன் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த  சாட்சியமானது:

“45 வயதான அந்தோனி ராயப்பு (ஜான்) என்ற தமது கணவர் தமிழீழ  விடுதலைப்புலிகளின்   மன்னார் மாவட்ட தளபதியாக ஜான் என்னும் பெயரில் கடமையாற்றி வந்ததாகவும் இவர் ஏனைய விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களுடன்  இராணுவத்தினரிடம் சரணடைந்திருக்கின்ற போதும் அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தொடர்பில் எது வித தகவல்களும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். மேலும்
தமது கணவன் உள்ளிட்ட விடுதலைப்பபுலிகளின் சிரேஸ்ட தலைவர்களான  வேலவன், ரூபன், இளம்பரிதி, பாபு, குமரன், மற்றும் கருவண்ணன் ஆகியோர் கத்தோலிக்க குருவான அருட்தந்தை  பிரான்சிஸ் ஜோசப் ஊடாக முல்லைத்தீவில் வைத்து படைத்தரப்பினரிடம் சரணடைந்ததாக அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். 

மிலோனியா ராயப்புவின சாட்சியத்தின் படி அருட்தந்தை உட்பட இவர்கள் அனைவரும் தம் முன்னிலையில் வைத்து பேரூந்து ஒன்றில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், எனினும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எதுவும் தெரியாதிருக்கின்றது. எனவே அருட்தந்தையுடன் சேர்த்து அழைத்துச்செல்லப்பட்டவர்களது  நிலவரம் என்ன என்பதை வெளிப்படுத்துமாறு ஆணைக்குழு முன் மிலோனியா ராயப்பு கேட்டிருந்;தமை குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய விடயமாக அருட்தந்தையுடனான இந்த குழுவினர் பேருந்தில் ஏற்றப்பட்டு  அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாகவும் இந்த சம்பவம் 2009 ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி காலை  8 மணி அளவில் இடம்பெற்றதாகவும் அவர் ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிட்டிருந்தார். 

ஆணைக்குழுவின் முன்னிலையில் தொடர்ந்து சாட்சியமளித்த மிலோனியா ராயப்பு 16.05.2009 அன்று முள்ளிவாய்க்காலிலிருந்து முல்லைத்தீவுக்கு தனது மூன்று பிள்ளைகளுடன் தான் இடம்பெயர்ந்ததாகவும் அதனைத் தொடர்ந்து  17.05.2009 ஆம் திகதி தனது கணவரும் தம்முடன் வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த சுற்று வட்டத்தில் தங்கியிருந்தவர்களிடம் ஒலி பெருக்கி மூலமாக விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களை சரணடையுமாறு கேட்டு கொண்டதற்கமையவே தமது கணவர் உட்பட சிரேஸ்ட தளபதிகள் சுமார் 40 பேரளவில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் ஊடாக இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றனர் எனவும் அவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்திருந்தார்.

மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் குறித்த தினம் (09.01.2011) இடம் பெற்றிருந்த ஆணைக்குழுவின் சாட்சிய பதிவு நிகழ்வுகளின் போது மன்னார் மாவட் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், மடு உதவி அரசாங்க அதிபர், பத்திரிகையாளர்கள், அவதானிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 
 
இச்சம்பவம் தொடர்பாக மேற்குறிப்பிட்ட விசாரணைகள் இடம்பெற்று இன்று வரையில் எவ்வித தகவல்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரணடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவுக்காரர்களுக்கு அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பதையும் அவ்வாறு சரணடைந்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும் உரிமை இருக்கின்றது. என்பதையும் ஆணைக்குழு திடமாக தெவித்திருக்கின்றது. அதேவேளை இவற்றை செய்ய முடிந்தால் இப்பிரச்சிணைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் எனவும், நல்லிணக்கப்பாடு ஒரு நடை முறையாகும் என்றும் ஆணித்தரமாக தெரிவித்திருக்கின்றது.
நிலைமை இவ்வாரிருக்க, பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் கத்தோலிக் குருவானவர் ஊடாக சரனடைந்ததற்கு நேரில் கண்கண்ட சாட்சியங்கள் இருக்கத்தக்கதாக தமது கட்டுக்காவலுக்குள் எடுத்தவர்கள் எவ்வித தயக்கமுமின்றி அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை என்றும், அதிலும் குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் (கோத்தபாய ராஜபக்ஷ) ‘இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் எவரும் கானாமல் போகவில்லை’ என தெரிவித்திருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயம்

சரணடைந்தவர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் பிரச்சினைகள் எந்தவொரு நல்லிணக்க நடவடிக்கையின் போதும் பாரதூரமான தடையாகும் எனவும் இத்தகைய சம்பவங்கள் பற்றி முன்னைய ஆணைக்குழுக்கள் பல தீர்வுகளை முன்வைத்த போதிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அவற்றை செயற்படுத்தாத காரணத்தினால் அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் ஒவ்வொன்றும் விமர்சனங்களுக்கும,; சந்தேகத்திற்கும் ஆளாகியுள்ளன. அதனால் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவும் இச்சந்தேகத்திலிருந்து மீள முடியாது. என்பதை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த குறித் ஆணைக்குழுவே வெளிப்படையாக தெரிவித்pருக்கின்றமை கோடிட்டு காட்டப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. இது தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்கையின் 9.91 தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றது. 

LLRC யின் பெண்களுக்கான பரிந்துரைகளில் ஒன்றான 9.88 இல் “உள்ளுராட்சி நிறுவனங்கள், அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் என்போர் பாதிக்கப்பட்டோரின் மனநலம் கருதி நடவடிக்கைகளையும் தீர்வுகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தளவில் இன்னும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகிறது. இவ்வாறு பாதிப்படைந்த பெண்களின் மன அழுத்தங்கள் பற்றியும் அது தொடர்பில் மந்த நிலையிலுள்ள நடவடிக்கைகள் குறித்துத் உளவியல் வைத்தியர். எஸ்.சிவதாஸ் இன் கருத்துக்கள்….




LLRC இன் சாட்சியமளிப்புகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கான பயனுறுதிமிக்க நடவடிக்கைகள் இவ் ஆணைக்குழுவிற்கு இருக்கவில்லை. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பிற்கான உத்ரவாதம் வழங்கப்படாத நிலைமையே காணப்படுகிறது. இதற்கு சிறந்ததொரு உதாரணம் பாலியல் தொந்தரவுகள் மற்றும் சித்ரவதைகளுக்குட்பட்ட மட்டக்களப்பு பிரதேச பெண்ணொருவர் சாட்சியப்பதிவின் பின்னர் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

மேலும் பால்நிலை சம்மந்தமான சிக்கல்களைப் பற்றியதான விசாரணைகளில் பெண்களின் இயலாமையை மதிப்பீடு செய்வது தொடர்பில் ஆணைக்குழு தோல்வி கண்டுள்ளது. ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது பெண்களுக்கு பாரிய தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. அது மாத்திரமன்றி LLRC ஆணைக்குழு பெண்களின் சாட்சியப்பகிர்வுகளை பொறுத்தமட்டில் அவர்களுக்கு அகௌரவத்தினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சாட்சியமளிக்கும் நிகழ்வில் கூட பெண்கள் தம் உணர்வுகளை வெளிக்காட்ட முற்பட்டு கதறியழுத வேளை கண்டிக்கப்பட்டதுடன் இவர்களது சாட்சியங்களை எழுத்துமூலமானதாக சாட்சியமளிக்கும் படி கட்டளையிடப்பட்டமையும் மேற்கோள் காட்டப்படத்தக்கதான விடயங்களாகும்.

LLRC இன் பரிந்துரைகளான 9.92  இற்கமைய கணவன்மார் காணாமல் போய் அவர்களை இழந்து குடும்பத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ள பெண்கள் தொடர்பாகவும் அவர்களுக்கான நிவாரண வழங்கள் தொடர்பாகவும் எமது தொலைக்காட்சி நிறுவனத்தினால் தயாரிக்கபட்ட ஆவணப்படம் அடுத்து…..


 

இன்று ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி கொண்டிருக்கும் விளிம்புநிலை சமூக சக்திகளில் முக்கிய சக்தியான பெண்கள் காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக இலங்கைப் பெண்களின் உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசியல் எந்தளவிற்கான பங்கு வழங்கப்பட்டுள்ளது என்பதற்காகவே “LLRC பரிந்துரைகளில் பெண்கள்” என்ற விடயத்தினை ஆராய்ந்திருந்தேன்.
LLRC பரிந்துரைகளில் பெண்களுக்கான பரிந்துரைகளின் விகிதம் குறைவாகவே காணப்படுகிறது. 285 பரிந்துரைகளுள் 7 பரிந்துரைகளே பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 7 பரிந்துரைகளுள் மட்டுமே உள்ளடக்கப்பட்டு விட்ட பெண்களுக்கான உரிமைகளானது சரியானதும் சட்டரீதியானதுமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அன்றில் கற்றுக்கொண்ட பாடங்கள் கற்றது என்ற செயற்பாட்டுடன் மட்டுமே நின்று விடுவதுடன் சித்தியடையாத பாடங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்பதிலும் நல்லிணக்கம் என்பதும் தொலைபுள்ளியாகி விடும் என்பதிலும் ஐயமில்லை.

எந்தவொரு போரிலும் முதல் நிலையில் பாதிக்கப்படுபவளும் பெண்: இரண்டாம் நிலையில் பாதிப்படைபவளும் பெண்!


முதல் பிரசவத்திற்கு காத்திருக்கும் தாயின் தவிப்புடன் காத்திருந்து உரைப் பிரசவத்தினை 41 வது இலக்கிய சந்திப்பில் நடத்தி விட்டதில் மிகவும் மகிழ்ச்சி. இதில் பங்குபற்றும் முன்னும் சரி பின்னரும் சரி இது தொடர்பிலான விமர்சனங்கள் வழமை போன்றே ஏராளம். “ போடவுள்ள முள்ளை பொறுக்கித் தின்னவுள்ள நாய்கள்” என்பதில் தொடங்கி “எமது எதிர்ப்பை காட்டவுள்ளதால் தயவுசெய்து பங்குபற்றாதீர்கள்” என்பது வரை பல ஏளனங்கள், அன்பு வேண்டுகோள்கள்.

நாணயத்தின் மறுபக்கமாக உங்கள் எதிர்ப்புகளில் சில நியாயங்கள், தார்மீகக் கோபங்கள் இருக்ககூடும். ஆனால் என்னளவில் கூறுவதாயின் எனக்குக் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாக விளிப்புபால் நிலையினரது அரசியல் உரிமைகள் தொடர்பிலான விடயங்களை முன்வைத்து விட்டேன்.

 “எல்லோரும் வாய்ப்பினை பயன்படுத்துகின்றோம் என்று தான் கூறுகின்றீர்கள். ஆனால் என்ன தான் கிழித்து விட்டீர்கள்?” என நீங்கள் கேட்க நினைக்கலாம் அல்லது கிடைத்த தளத்தினை பயன்படுத்திவிட்டு அதை நியாயப்படுத்துகின்றேன் என்று நீங்கள் கூறலாம். பெரியளவில் எதையும் வெளிப்படையாக சாதிக்கவில்லை என்றாலும் நிகழ்வின் பின்னர் என்னுடன் கலந்தரையாடிய பலர் கூறிய, கேட்ட விடயங்கள் நிச்சயம் இப்பரிந்துரைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

போகமுன் எதிர்த்தவர்கள் நான் அரசாங்கத்தினை ஆதரிப்பதாகவும் என் உரையை கேட்டவர்கள் நான் அரசாங்கத்தின் மேல் பழி போட்டு விட்டதாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறியிருந்தனர். விமர்சனங்கள் அவரவர் பார்வையினைப் பொறுத்தது. எல்லோரையும் யாராலும் எப்போதும் திருப்திபடுத்திட முடியாது.

திருப்திபடுத்துவதை விட தீர்வுகள் முக்கியம். விமர்சனங்களை விடவும் விடிவுகள் முக்கியம். எது எவ்வாறாயினும் என்றும் ஓர் ஊடகவியலாளராக, பெண்ணியவாதியாக என் பணி தொடரும்.



 

Tuesday, July 9, 2013

அழகோ அழகு...

“ஒரு ஆணோட கம்பீரத்தினை அவன் கடின வேலை செய்யும் போதும் பெண்ணோட அழகை காணவேண்டுமாயின் காலையில் அவள் விழித்தவுடன் பார்க்க வேண்டும்” என்பார்கள். இவ்விரு சந்தர்ப்பங்களின் போதும் தான் இவர்களது சுயரூபத்தினை அறியலாம் என்பதால் தான் இவ்வாக்கியம் உருவாயிருக்க வேண்டும். நல்ல நேரம் இதை சொன்னவர் இப்போது இல்லை. இருந்திருந்தால் கணணியிலேயே இருக்கும் ஆண்களையும் இரவு படுக்கும் முன் பூசிய நைட் கிறீம் உடன் காலையில் எழுந்து வரும் பெண்களையும் பார்த்து ஏமாந்திருப்பார். (இரண்டாவது சிட்டுவேசன்ல பயந்தும் கத்தியிருப்பார்)

இது ஒரு பக்கமிருக்க நாம் பெண்களை அல்லது ஆண்களை சைட் அடிக்கும் போது பெண்ணாயின் உடற்கட்டமைப்புகளையும்….(இன்னும் இருக்கும் எனக்கு தெரியாதுங்க) ஆணாயின் அவனுடைய உயரம், சொட்டைத்தலையா?, நிறமென்ன? (நான் பெண்ணென்பதால் இது எனக்கு நல்லாவே தெரியும்) என்றெல்லாம் பார்ப்போம். இது பொதுவாக ஒருவரை பார்க்கும் போது எதிர்பாலினர் கவனிக்கும் விடயங்கள்.



ஆனால் பாருங்கோ பாரதி சொல்லியிருக்கான் பெண்ணுக்கு அழகு “வீரம்” தானாம். அதாவது ஒரு பெண்ணுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய அளவு வீரம் இருக்க வேண்டும். உடனே பருவப் பெண்கள் விடலைகளைத் தாக்க காலின் செருப்புகளையும் மணமாகிய தாய்க்குலங்கள் அகப்பை, உலக்கை போன்றவற்றினையும் தூக்கிவிடாதீர்கள். அதற்காக துரத்துவர்களுக்கு முன்னால் ஓடிக்கொண்டும் இருக்காதீர்கள். அடுத்தவர்கள் குட்டும் போதும் குனியாதீர்கள்.






என் ஊடக அனுபவத்தில் பலவிதமான பெண்களை பார்த்திருக்கின்றேன். அவர்களை மூவகை படுத்தலாம்.
  1. பாரதியின் புதுமைப் பெண்கள்
  2. பெண்ணியம் பேசிக்கொண்டு சமையலறையை கூட எட்டிப் பார்க்காதவர்கள்  
  3. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்று வாழும் பெண்கள்.

இந்த மூன்றாம் வகை பெண்களுள் ஒருவரை அண்மையில் என் வாழ்வில் சந்தித்திருந்தேன். இந்த பெண்ணுடைய எழுத்துக்களை வாசித்தீர்கள் என்றால் ஏதோ கையில் துப்பாக்கியுடன் பிழை செய்யும் ஒவ்வொரு ஆணையும் என்கவுண்டர் செய்வது போல் “செருப்பால் அடிக்க வேண்டும் அந்த நாயை….” என்று எழுதவார். ஆனால் இவருடைய காதலன் பல பெண்களுடைய வாழ்வில் விளையாடுவது அறிந்து பாதிக்கப்பட்ட பெண் நியாயம் கேட்ட போது “நீங்கள் என் சகோதரி போல அவருக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்….” என்று கூறியுள்ளார். ஆகமொத்தத்தில் அடுத்த வீட்டு ஆணின் கொலரை பிடிக்க தைரியமுண்டு நம் வாழ்வு என்று வரும் போது கேள்வி கேட்டால் தன் வாழ்வு கேள்விக்குறியாகி விடும் என்ற சுயநலம் தடுத்துவிடுகிறது. காதலன் என்றாலும் கணவனே என்றாலும் காமுகன் என்றால் அவனை களையெடுக்கத் தான் வேண்டும்.

இரண்டாம் வகையினர் இருக்கிறார்களே இவர்கள் போன்றவர்களால் தான் நாகரீகம் என்ற பெயரில் “தாய்மை, பெண்மை” என்பவை தொலைந்து கொண்டு வருகின்றன. சட்டங்கள் பேசுவதிலும் குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் வாயைத் திறந்தால் மூடமாட்டார்கள். “சமவுரிமை”  என்ற பெயரில் “குடும்பம்” என்ற கோயிலை சரித்து வருபவர்கள். சமையல் தெரியாது, சின்ன பொத்தான் கூட தைக்கத் தெரியாது இந்தத் தையல்கள் தானா நாட்டின் சட்டங்களை சமைத்து உரிமையைத் தைக்கப் போகின்றார்கள்? அரைகுறை ஆடைகளுடன் போகும் நமக்கு “சேலை” பற்றி பேச என்ன தைரியமிருக்கிறது? நீ நல்ல மகளாய், சகோதரியாய், மாணவியாய், காதலியாய், தாரமாய், தாயாய் வாழ வேண்டும். அந்த கவிதை வாழ்வில் காணும் குறை வரிகளை திருத்தும் போது தான் கவியும் நல்லாயிருக்கும் கருத்துள்ளதாகவும் இருக்கும் பெண்ணே!

முதலாம் வகையினர் வேண்டும் என்று தான் புரட்சிக் கவிஞர் பாரதி கனவு கண்டான். குடும்பத்தை ஒரு கையிலும் சமூகத்தை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு நடக்கின்ற பெண்ணைத்தான் தேடினான். இவ்வகைப் பெண்களை தான் “சிங்கப்பெண்” என்பார்கள். (உதாரணத்திற்கு கண்ணை மூடி அருந்ததி அனுஷ்காவை நினைத்துக்கொள்ளுங்கள் தைரியத்திற்காக மட்டும்….) இவர்கள் தான் நாட்டின் கண்ணென போற்றப்பட வேண்டியவர்கள் . இவர்களுக்குத் தான் முன்னிரு வகையினரை விடவும் பிரச்சினைகள் தோன்றிய வண்ணமிருக்கும். ஆனாலும் சமாளித்துப் போவதில் தான் இவ்வகைப் பெண்களுடைய வெற்றியே உள்ளது.

ஒரு பெண் எந்தளவிற்கு மென்மையாக இருக்கின்றாளோ அதேயளவு தைரியமும் இருக்க வேண்டும். காரணம் நம்மைச் சுற்றி
  • வேஷம் போட்டு பிறர் மனை கவர நினைக்கும் இராவணன்கள் இருக்கிறார்கள்
  • சேலையுரிய காத்திருக்கும் துச்சாதனன்கள் இருக்கின்றார்கள்.
  • திட்டம் தீட்டும் கூனிகள் இருக்கிறார்கள். (பெண் வில்லிகளுக்கு உதாரணம்)
பெண்ணே!! உனக்குத் தேவை வேல்விழிகள் அழகிற்காக மட்டுமின்றி கயவர்களை குத்தவதற்கு…. நெருப்பாயிரு கண்டவரும் உன்னை அண்டிட துணியார்…. பெண்ணுக்கு அழகு தைரியம் தான்!!!

மதுரையை எரித்த கண்ணகிக்குத் தான் சிலையுண்டு.. தீக்குளித்த சீதைக்கல்ல என்பதை மனதில் இருத்துங்கள். தாங்கும் பூமாதேவியை விடவும் கனல் கக்கும் காளிக்குத் தான் பக்தர்கள் அதிகம். நதியும் நீ தான் அதுவே சேர்ந்து கடலாகி கொந்தளித்தால் சுனாமியும் நீதான்!!!! 


 பெண்ணே ரோஜாவாகவிரு மென்மையுடனும் கூடவே முள்ளுடனும்!!!

(இதற்காக வாள் பயிற்சியெல்லாம் எடுத்து மேக்கப்பெல்லாம் கலைந்து பேய் மாதிரி இருக்க தேவையில்லைங்க… கண்ணைப் பார்த்து கேள்வி கேட்டாலே போதும் பாதிப்பேர் பயந்தோடி விடுவார்கள்.)



Thursday, July 4, 2013

படைப்பு

காட்டுச் சிங்கம் ஒன்று தன் குட்டிக்கு நகரத்தினை சுற்றிக்காட்ட புறப்பட்டு நகரக்குள் நுழைந்ததாம். ஓவ்வொன்றாக அதற்குக் காட்டி விளக்கம் கொடுத்துக்கொண்டு வந்ததாம். புத்திசாலியான குட்டிச்சிங்கமும் வினாக்களை எழுப்பி தன் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொண்டு வந்ததாம்.

இவ்வாறு உலா வரும் போது பூங்காவொன்றில் சிலையொன்றை குட்டிச் சிங்கம் கண்டதாம். “சிங்கமொன்றின் வயிற்றுப்பகுதியை மனிதனொருவன் ஈட்டியால் குத்திக் கிழிப்பதாகவும் அவன் காலொன்று தலையைத்திருப்பி கடிக்க முயல்கின்ற சிங்கத்தின் பிடிறிப்பகுதியில் அழுத்துவது” போன்றும் அமைந்திருந்ததாம். 

விடுமா அந்த சிங்கக்குட்டி?... “அப்பா அப்பா ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் இந்த சிலையை? நம் இனம் தானே காட்டின் ராஜா… காட்டு விலங்குகள் முதல் காட்டுக்கு வரும் மனிதர்கள் வரை நமது கர்ச்சிப்பை (ஹலோ மூஞ்சு துடைக்கும் துணியில்ல சிங்கத்தின் சவுண்டு)  கேட்டாலே ஓடி விடுகிறார்கள் அல்லது கூட்டாக வந்து பல பொறிகளை பாவித்து பிடிக்கிறார்கள். அப்படியிருக்க இந்த சிலையில் மட்டும் ஏன் தனித்து நின்று எம்மினத்தவனை கொல்லுவது போன்று சிலை வடித்திருக்கிறார்கள்” என்று கேட்டதாம்.

தன் குட்டியை அர்த்தத்துடன் திரும்பிப் பார்த்த அப்பா சிங்கம் சற்றே சிரித்துக்கொண்டே (சிங்கம் கதைக்கும் போது சிரிக்காதா?) சொன்னதாம் “மகனே இதை மனிதன் செய்ததால் தன் இனத்தவன் நம்மினத்தவனை கொல்வது போன்று சிலை வடித்திருக்கின்றான். இதே சிலையை நமக்குச் செய்யத் தெரிந்திருந்தால் அவனை நம்மினத்து சிங்கம் ஒன்று கடித்துக்குதறுவது போன்று வடித்திருப்போம். அது தான் யதார்த்தம். நம்மைப் பற்றி நாமே பெருமைப்பட்டுக்கொள்வது தான் மனதின் இயல்பு” என்று நீண்ட விளக்கமொன்றினை அளித்ததாம்.

மீண்டும் அந்த வாலு (அதான் குட்டிச் சிங்கம்) கேட்டதாம்.... “அப்பா  அப்படியென்றால் உண்மை நிலையை காட்டுவதில்லையா… நாளைய தலைமுறை இதை பார்க்கும் போது கேவலமாக நினைக்கமாட்டார்களா எம்மினத்தவர்களின் வீரத்தினை…?” என்று…

அதற்கு அப்பா சிங்கம் “அன்னம் போன்று இருக்க வேண்டும் மகனே.. நல்லதை மட்டும் எடுக்க வேண்டும்! மாடு போல் இருக்க வேண்டும்… படித்தவற்றினை அசை போடுவதில்! (ஒரே அனிமல்சா இருக்கில்ல…ம்ம்ம்ம்ம்.. சிங்கம் அதன் லாங்குவேஜ்ஜில் தான் பேசுமுங்க..) படைப்புக்களை இரசிக்கலாம் ஆனால் படைப்புக்களை மட்டுமே சரித்திரமென்றிட முடியாது. நீயும் இச்சிலையை, அதில் அவன் கலையை இரசி! ஆனால் இது தான் உண்மை என்று தீர்மானித்திடாதே! என்று கூறியதாம். குட்டிச்சிங்கமும் அதானே பார்த்தேன் என்று பிடறி முடியை சிலிர்த்துக்கொண்டதாம்.

இது ஒரு உருவகக்கதையாக இருக்கலாம். ஆனால் இக்கதையின் கருவென்னவோ உண்மையானதொன்று.

சில மனிதர்கள் இப்படித்தான் தம் படைப்புக்களில் ஒழுக்கங்கள் பற்றி பிதற்றிக்கொண்டிருப்பார்கள் ஆனால் நிஜத்தில் ஒழுக்கம் கெட்டவர்களாக இருப்பார்கள். பெண்ணியம் பற்றி, தாய்மை பற்றி பேசுவார்கள் ஆனால் இரசியமாக பல பெண்களின் வாழ்வில் விளையாடுவார்கள்.. இதுவே பெண்கள் என்றால் மேடையில் பேசும் பெண்ணியத்தினை தம் வீட்டு அடுப்படியில் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை பார்க்கும் போது “சிகரெட் பெட்டி” இன் ஞாபகம் தான் எனக்கு வரும். (உடனே இந்த பொண்ணு சிகரெட் குடிக்கிறதோ என்று வழமை போன்று சிந்திக்க நினைத்தால் மண்டையில் குட்டு போட வேண்டும்) அந்த பெட்டியில் பார்த்தீர்கள் என்றால் சிகரெட்டின் தீமை பற்றி வெளி மட்டையிலேயே அச்சிடப்பட்டிருக்கும். உள்ளுக்குள் சிகரெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

எப்போதும் நாம் நாமாக வாழ வேண்டுமுங்க… இந்த பில்டப்புகள் நமக்கெதற்கு? போக்கிரியாக இருக்கின்றோமென்றால் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ண என்ன தகுதியிருக்கிறது? அடுத்தவரை விமர்சிக்க என்ன உரிமையிருக்கிறது..? மானங்கெட்டு இரட்டை வாழ்வு வாழ்வதை விட உடையில்லாமல் திரியலாம்…..






Wednesday, July 3, 2013

அப்பாவின் இளவரசி!

குடும்பம் என்பது ஓர் பல்கலைக்கழகம் என்பார்கள். ஆனால் என்னளவில் கூறுவேன் அது ஓர் அழகிய குருவிக்கூடு போன்றதென்று.. அதிலும் ஓர் பெண்ணுக்கு இரு கூடுகள் உண்டு. பிறந்த வீடு மற்றது புகுந்த வீடு. புகுந்த வீட்டில் அதிஷ்டத்தினை பொறுத்து மகாராணியாக இருக்கலாம் ஆனால் நிச்சயம் பிறந்த வீட்டில் ஒவ்வொரு பெண்ணும் இளவரசி. அதிலும் அப்பாக்களுக்கு தங்கள் பெண் ஒவ்வொருவரும் குட்டி இளவரசி தான்.


தன் மனைவி கருத்தரித்தவுடன் மகிழும் ஒவ்வொரு ஆணும் பிறந்திருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவார்களாம். அன்று கையிலேந்தி தங்கள் பெண் குழந்தையில் நெற்றியிலிடும் முத்தம் ஒவ்வொரு தந்தையும் தங்கள் பெண் இளவரசிகளுக்கு வைக்கின்ற குட்டி கீரிடம்…. கூடவே அப்பாக்களுக்கு பொறுப்புகளும் அதிகரிக்கும் நாள்.

ஒருவேளை தமிழ்க்கலாச்சாரத்தில் வரதட்சணை பிரச்சினை இருப்பதால் ஒரு சிலர் பெண் குழந்தைகளை பாரமாக கருதக்கூடும். இது சமூகம் அவர்களுக்கு கொடுக்கின்ற ஒரு விதமான அழுத்தமும் கூட.. ஆயினும் பெண் குழந்தைகளை விரும்பாத, அவர்களது சிறு அசைவுகளைக் கூட குறித்து வைக்காத தந்தையர்கள் மிகமிக குறைவு.

கையில் தூக்கிய தங்கள் வீட்டு தேவதைகளை இன்னொருவனுக்கு கரம்பிடித்து கொடுக்கும் வரை தந்தையர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறைகள் இருக்கின்றதே வார்த்தைகளில் அதை சொல்லிவிட முடியாதுங்க… ஒரு கதைக்கு வேணுமின்றால் ஆண் குழந்தைகளை தங்கள் பெயர் சொல்லப் பிறந்தவர்கள் என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்டாலும் அப்பாக்களின் பார்வை மட்டும் என்னவோ பெண் குழந்தைகளை விசேடமாக தொடர்வது மறுக்க முடியாத உண்மைங்க.. எந்தவொரு தந்தைக்கும் தம் பெண் குழந்தைகள் தொடர்பில் சில விடயங்களில் மாறுபட்ட கருத்து கிடையாதுங்க
  • தன் பெண் தான் உலக அழகி (சப்ப பிகர் என்றாலும்)
  • அவளைக் கடக்கின்ற எந்த ஆணும் அவளைத் தான் சைட் அடிக்கின்றான் (இவனுகளால் நாம அப்பாவிடம் வாங்கிற அடி…..)
  • தான் தன் பொண்ணை கண்டிக்கலாம், தண்டிக்கலாம் ஆனால் மனைவி கடிந்து கொண்டால் பொறுக்காது
  • வீட்டில் சண்டை வந்தால் 1 வீதமாவது பொண்ணுக்கு சார்பாக தானிருக்கும்
  • வைபவங்களுக்கு என்ன பொருள் எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் பெண்ணுக்கு ஒரு ரூபாவாவது அதிகமாயிருக்கும்.
(இன்னும் பல இரகசியங்கள் இருக்கிறது… பையன்கள் கடுப்பாகிக் கொண்டிருப்பதால் விட்டுவிடுகிறேன்….)

பருவத்தினை எட்டி நிற்கும் போது தாய்மார் உரிய வயதில் திருமணம் செய்து வைக்க வரன் தேடுவார்கள். கூடவே தந்தையர்களை பார்த்து “இந்த மனிசனுக்கு அக்கறையில்லை” என்றும் திட்டுவார்கள். அப்படியெல்லாம் இல்லைங்க… “நம்ம பொண்ணை இன்னொருவனுக்கு மணமுடித்து கொடுத்து விட்டால் தம் உரிமை, தன் மீது பெண் வைத்துள்ள அன்பு பங்கிடப்பட்டுவிடும்” என்கிற கவலை தான் காரணம் என்பது தான் உண்மை.

எனக்கும் அப்படியொரு அனுபவமுண்டு. வீட்டில் வரன் பேசி புகைப்படத்தினை காட்டியிருந்தார்கள். பார்த்து விட்டு அப்பாவிடம் “உங்களுக்கு பிடித்திருக்கின்றதா அப்பா? திருமணம் ஆனால் வெளிநாடு போய்விடுவேனே… உங்கள் சம்மதம் தான் என் சம்மதம்…..” என்று சொன்னேன் பாருங்க.. என்ன சுட்டுச்சோ இல்லையோ விட்டுத்தூர போய்விடுவேன் என்பது நிச்சயம் மனதை தொட்டிருக்கும். அடுத்த நிமிடமே படிப்பு முடிந்த பின் பார்ப்போம் என்று சொல்லிவிட்டார். (எனக்குப் பிடிக்கனும் முதல்ல ஆனாலும் அப்பாக்கு ஐஸ் வைக்க குடுத்த பில்டப்!) அம்மா தான் கடுப்பாகி கத்தினார். (ஹஹஹ… ஆனாலும் தப்பிட்டேனில்ல)
இன்னொரு விடயம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால் அம்மாவிடம் கெஞ்சுவதை விட நான் அப்பாவை கொஞ்சிதான் சாதிப்பதுண்டு. அது தான் இலகுவான குறுக்கு வழி…

என்ன தான் சொல்லுங்க இந்த அம்மாக்களுக்கு தங்கள் ஆண் பிள்ளைகளிடம் தான் அன்பதிகம். அது போல் தாங்க அப்பாக்களுக்கு பெண் பிள்ளைகள் மீது! உளவியல் ரீதியாகவும் இந்த எதிர்ப்பால் கவர்ச்சிகள் பற்றி பல கருத்துக்கள் உண்டு. இவ்வாறான எதிர்ப்பால் கவர்ச்சி இல்லாவிடின் அது “முரண்பாட்டு மனநிலை” எனவும் கொள்ளப்படுகின்றது. (இது தாங்க அண்ணாமாருக்கு தம்பிகளை விடவும் தங்கைகளில் பாசம் அதிகமாயிருக்க காரணம்)

சடங்குகளில் கூட சில பாரம்பரியங்கள் உண்டு. கிறிஸ்தவ சமய திருமணத்தில் பெண்களை தேவாலயத்திற்கு தந்தை தான் கைப்பிடித்து அழைத்து வந்து பீடமருகில் நிறுத்தவார். அதேபோல் இந்து முறைப்படியும் பெண்ணை தந்தை தான் தாரைவார்த்துக் கொடுப்பார்.



உண்மையில் ஒரு பெண்னோட முதல் காதல் தன் தந்தையில் தாங்க.. அம்மா எவ்வளவு தான் தொண்டை கிழிய கத்தினாலும் அப்பாவின் ஒரு சொல்லுக்கு அடிபணிவோம் பாருங்க அது தாங்க பெண்ணுக்கும் அப்பாவுக்குமான காதல்….. தினம் அம்மா சமைத்து தருவதை விட அப்பா செய்து தந்த கறியின் சுவை நாவில் தங்கியிருக்கும் அது தான் அந்த காதல்….. அம்மா அடித்த ஆயிரம் அடிகள் வலித்திருக்காது அப்பா எப்போதோ தந்த கன்னத்து அறை வலிக்கும் பாருங்க அது தான் பெண்ணுக்கும் அப்பாவுக்குமான காதல். ஆனாலும் அந்த கன்னத்து அறை ஒரு சுகமான வலியாகத் தான் மனதில் தங்கியிருக்கும்.

அம்மா என்னைப் பார்க்க வேண்டும் என்று கெஞ்சினாலும் போக மனம் இடந்தராது. ஆனால் அப்பா “மகள் வரவில்லையா?” என்று அம்மாவிடம் கேட்டதாக அறிந்தவுடன் வீடு செல்ல கலண்டரருகில் நின்று நாட்களை எண்ணிப்பார்க்கின்றேனே அது தான் எனக்கு என் அப்பா மீதுள்ள காதல்….


 என்னையும் ஒருவரிடம் கைபிடித்து கொடுக்க போகும் போது என் அப்பாவின் கண்கள் கலங்குமே அது தாங்க எனக்கும் என் அப்பாவிற்குமான காதலின் உச்சமான கவிதை!



நாளை எனக்கு ஒரு பெண் பிறந்து அதை என்னவன் கொஞ்சும் போது எனக்கும் என் அப்பாவிற்குமான அன்பை மனம் மீட்டிப்பார்க்கும் பாருங்க அதுவும் அழகியதொரு கவிதை..!!! அர்த்தமானதும் கூட!!! 







பெண்ணின் முதல் காதலன் அவளின் தந்தை -  அப்பாவின் தேவதை அவரின் பெண்

Monday, July 1, 2013

நாய் வால்.....


முன்னர் சில ஆங்கிலேய பாதிரியார்கள் மதமாற்றம் செய்து வந்த காலத்தில் அவர்கள் சரியான மறையறிவை வழங்காது மேலோட்டமாக மதமாற்றம் செய்வதாக புகார் எழுந்தது. இப்புகார் உண்மையில்லை என்று ஒரு பாதிரியார் சாதித்துக்கொண்டிருந்தார். ஒரு தடவை இதை நிரூபித்துக் காட்டுவதாக சவால் விட்டு கூட்டத்திலிருந்த செவ்விந்தியன் ஒருவனை அழைத்தார்.

பாதிரி : நற்கருணை அருட்சாதனம் உனக்கு ஆத்ம திருப்தியளித்ததா?

செவ்விந்தியன் : நிச்சயமாக ஆனா பாதிரியாரே வைனுக்குப் பதிலாக பிராந்தி தந்திருந்தால் இன்னும் நன்றாகவிருந்திருக்கும்...

இது அண்மையில் நான் வாசித்த சிறு கதைங்க…. இப்படித் தாங்க சில பேர் இருக்கிறாங்க… ஏதோ அவர்கள் திருந்த வேண்டும் என்று நினைத்து நாம் சொன்னால் அல்லது அறிவுரை கூறினால் நம்மை கேலிப் பொருளாக்கி விடுவார்கள் சில வேளை அவர்கள் ஹீரோ ஆகிடுவார்கள். உண்மையில் இவர்களைத் திருத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்துவதை விட கடினமானது.

ஒருவகையில் பார்க்கப் போனால் இவர்களை திருத்தித்தான் நமக்கென்ன ஆகப்போகிறது என்று கூட தோன்றும்…. இன்னும் சிலர் இருக்கிறார்கள் தமது குற்றங்களை மறைக்க அடுத்தவர்களை குறை கூறுவார்கள். (சோடித்ததாகவும் இருக்கும்)

என் அனுபவத்திலும் அவ்வாறான ஒரு “நிமிர்த்த முடியாத (நாய்) வாலை” பார்த்திருக்கின்றேன். அவர் சமூகத்தின் உயர் பதவியிலிருப்பவர் (படித்ததால் மட்டும் போதாது) ஒரு பெண்ணை காதலித்திருக்கின்றார். கூடவே பல பெண்களை பக்கவாட்டிலும்…. காதலித்து திருமணம் செய்யவுள்ளவள் பொறுப்பாளா? இல்லை அவள் குடும்பம் தான் பொறுக்குமா? வேறொரு நல்லவனை திருமணம் செய்து அவள் போய்விட்டாள்.


ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? வீட்டில் திருமண பேச்சு போய்க்கொண்டிருக்கும் போதே இன்னும் பெண்களை விட்டபாடில்லை…. ஓவ்வொருவரிடமும் “முன்னையவள் தன் சாதியைத் தான் பார்த்து தன்னைவிட உயர்சாதியான வேறொருவரை திருமணம் செய்துவிட்டாள்” என்று கதையளந்து கொண்டு ஒவ்வொரு பெண்களின் மனதிலும் இடம்பிடிக்க அலைவது தொடர்ந்திருக்கிறது. இவர் அதிஸ்டம் (???) ஒரு பணக்கார பெண் வலையில் சிக்கியிருக்கின்றாள். இவரது பில்டப்புக்கள் கொஞ்சம் ஓவரா போய்க்கொண்டிருக்கும் போது இவரது செட்டப்புக்களும் அவளுக்கு தெரிய வந்துவிட்டது….அவள் மற்றவள் போல் சும்மாவிருக்கவில்லை. கிழிகிழியென்று கிழித்து மனித உரிமைகள் வரை சென்றிருக்கின்றாள். காலில் விழாக் குறையாக மன்னிப்பு கேட்க… அவளும் எச்சரித்து விட்டிருக்கின்றாள். இவர் சிக்கினாலும் சிரித்துக்கொண்டே “அவள் என் பின்னால் திரிந்தாள்” என்று கூறிக்கொண்டு மறுபடியும் தெருவில் அலைந்து கொண்டிருக்கின்றாராம்.

இதில் பாருங்கோ
•    நிலவைப் பார்த்து நாய் குரைத்ததை போன்று அந்தப் பெண்ணுக்கு இவரால் எந்த களங்கமும் வரப்போவதில்லை…..
•    எப்படியும் இழந்த பெண்களை போன்றதான நல்வாழ்க்கை கிடைக்கப்போவதுமில்லை
•    இருக்கின்ற பல்லையெல்லாம் வெளியில் காட்டிக்கொண்டு திரிந்தாலும் ஒவ்வொரு நொடியும் பயந்து கொண்டும், மனதளவில் அவமானப்பட்டுக் கொண்டும் வாழ்வதை விட துன்பம் வேறேதுமில்லை.

ஆனாலும் அந்த பொண்ணு மாதிரி தட்டிக் கேட்க நினைக்கிறவங்களுக்கும் கொஞ்சம் சொல்லனும்
பெரியார் சொல்லிருக்கார் மானமுள்ளவனுடன் தான் போராடனுமாம்"

பிற்குறிப்பு - “பன்றிக்கு இசை சொல்லிக்கொடுக்காதே. நீயும் காலத்தை விரயமாக்குகிறாய், பன்றிக்கும் எரிச்சல் மூட்டுகிறாய்…”



அதிகம் வாசிக்கபட்டவை