நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்மை பார்த்து கேட்கின்ற மூத்த தலைமுறைக்கும் எமக்கு போராட்டம் பற்றி முகநூலில் தான் தெரியும் என்று சொல்லுகின்ற இளைய தலைமுறைக்கும் இடைப்பட்டவர்கள் நாம். சிறு வயதில் நாம் சாப்பிட மறுக்கும் போது அல்லது ஏதாவது குழப்படி செய்யும் போது வீட்டின் பெரியவர்கள் “அந்தா பூச்சாண்டி” அல்லது “பொக்கான்” என்று சொல்லி பயமுறுத்தும் போது வாயைப்பிளந்து கண்ணை உருட்டி வாய்க்குள் வைத்தது எதுவாகினும் விழுங்கிய கடைசி தலைமுறை நாம் தான். இப்போதெல்லாம் தொலைபேசியில் காட்டூன் இருந்தாலே போதும் இளையவர்கள் சாப்பிட்டு விடுகின்றார்கள். தவறு செய்தால் சாமி  தண்டிப்பார் என்பதற்கும் கோயில் வாசல் , தேவாலய வாசலில் நின்று செல்பி எடுக்கும் தலைமுறைக்கும் இடையானவர்கள் நாம். இவைகளைத்தான் நானறிந்த போராட்டத்துடன் இணைத்து பார்க்க தலைப்படுகின்றேன்.  

போராட்டம் என்பது ஏறத்தாழ இன்று 47 வருடங்களை கடக்கின்றது. நான் சொல்வது ஆயுதப்போராட்டத்தையும் உள்ளடக்கிய உரிமைப்போராட்டம். வீட்டிலேயே அரசியல் இருந்ததால் போராட்டங்களின் வடிவங்களும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களும் ஓரளவு தெரியும்

கடவுள் இருக்கின்றாரா இல்லையா? இந்தக்கேள்வியை நீங்கள் எப்போதாவது உங்களுள் கேட்டுப்பார்த்ததுண்டா? நான் பல முறை கேட்டுப்பார்த்திருக்கின்றேன். திறமையிருந்தும் தமிழ் என்பதால் மட்டும் ஒதுக்கப்படும் போது…… என்னருகில் இருந்த பெண் குழந்தை பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட போது…… திடீரென கேட்ட சத்தத்திற்கு எட்டிப்பார்த்த நண்பன் இன்று வரை விசாரணையின்றி இருக்கும் போது….. ஊரிலுள்ள காவாளிகள் பெண்களுடன் சேட்டைவிட்டும் அவன் சமூகத்தில் கொண்டாடப்படும் போது….. காசினால் தான் செய்ய அநீதிகளை ஒருவன் மறைக்கும் போது அதற்கு ஏனையவர்களும் ஒத்தூதும் போது… இன்னும் இன்னும் நான் கையறு நிலையில் இருந்த போது என்னுள் கேட்டுப்பார்த்திருக்கின்றேன். 

ஏன் கடவுள் இருக்கின்றாரா என கேட்டுப்பார்த்திருக்கின்றேன்?  என்னால் என் சக மனிதர்களையே திருத்த முடிந்திருக்கவில்லை, என்னால் எவ்வளவு போராடியும் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. என்னால் போராட்டத்தின் போது என் குடும்பத்தை காக்க முடியவில்லை. என்னால் வெளிப்படையாக கத்த முடியவில்லை. 

கடவுள் ஏன் வேறுபடுகின்றான்? கடவுளைக்கண்டால் மனிதனுக்கு பயமிருந்திருக்கின்றது… கடவுளிடம் மனிதனை தண்டிக்கும் ஆயுதம் இருந்திருக்கின்றது. கடவுளிடம் மனிதனின் கசவாரப்புத்தியை கேள்வி கேட்டு தீர்ப்புகொடுக்கும் சக்தி இருந்திருக்கின்றது.

.கடவுள் எப்படி தண்டித்தார்? உலகிற்கு வந்திருக்கின்றாரா? நானறிந்த நூல்கள் கடவுள் மனிதருடன் வாழ்ந்த காலத்தை பற்றி சொல்லியிருக்கின்றன. 
பிறகு? .....பிறகு தன் சார்பாக சிலரை அனுப்பி வைத்திருக்கின்றார். அவர்கள் தட்டிக்கேட்டார்கள். அவர்கள் தண்டித்தார்கள், அவர்கள் போரிட்டார்கள், அவர்கள் தரம்கெட்டவர்களை அழிக்கவும் அந்த விளிம்புநிலையினரது உரிமைகளை மீட்கவும் ஆயுதமேந்தினார்கள். மனசாட்சிக்கும் மனிதர்களின் கண்ணீருக்கும் பயப்படாதவர்கள் கையிலிருந்த ஆயுதங்களுக்கு அடிபணிந்தார்கள்!

2010 இல் வெளிவந்ததொரு படம் “மந்திரப்புன்னகை” இந்தப்பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் அறிவுமதி. நீண்ட காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கியிருந்த அறிவுமதி மீண்டும் பிறப்பெடுத்தது இப்படப் பாடலின் மூலமாகத்தான். இது கண்ணன் பாட்டு வகையென்றாலும் முன்னெழுத்தை மட்டும் “அ” என்ற உயிரெழுத்தாக மாற்றிப்பாருங்கள். அது கண்ணன் அல்ல “அண்ணன்” பாடல்! இதனை பாடகி சுதா ரகுநாதன் பாடியிருக்கின்றார். வித்யாசாகர் இசையமைப்பில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தின் இந்த பாடலில் “க” என்பது உயிர் “அ” ஆக மாறும் போது கருத்தே மாறிப்போயிருக்கும். 

கண்ணா….! கண்ணா….!

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

(என்ன குறையோ..)

நன்றும் வரலாம் தீதும் வரலாம்

நண்பன் போலே கண்ணன் வருவான்

வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான்

கண்ணில் மழைத் துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்த கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே!

(என்ன குறையோ…)

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் வரலாம்
உறவைப் போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழிகேட்டு பறவை வாடலாம்
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையால் உலகினை அணைப்பான்

அந்த கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா மனமே!

பாடலிணைப்பு - https://www.youtube.com/watch?v=gPXdcBlVSeE&list=OLAK5uy_nk0Uinm6Yj9I20VGOlmtrR8YcYDhE3lOE&index=3 

 

 

No comments:

Post a Comment

பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை