புரியாத பிரியங்கள் பிரியும் போது புரியும்!

நீங்கள் நமக்கு முந்தைய தலைமுறையினருடன் பேசும் போது அந்தக்காலத்தில் அவர்களது அன்பு பரிமாறல்கள் குறித்து கேட்டுப்பார்த்துள்ளீர்களா…. ? நான் என் தாயாரிடம் கேட்ட போது என் அம்மாவிற்கு அப்பா குறித்த நினைவுகளாக இருப்பதில் ஒன்று குறிப்பிட்டதொரு பாடல் என்றார். அடுத்தது சில கடிதங்கள் , வாழ்த்து அட்டைகள் சேர்த்து வைத்திருக்கின்றார். அப்பாவின் கைகுட்டையொன்றிருக்கின்றது.  அவர்கள் அந்தக்காலத்தில் கைத்தொலைபேசி, சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் ஒருவரையொருவர் நேசித்தவர்கள். அந்த நாட்களில் கண்கள் தான் செய்தியனுப்பும் ஊடகம். அதையும் தாண்டி பேசுவதென்றால் கடிதம். இதனால் தவறாது கண்களால் தகவல்களை பரிமாறிக்கொண்டேயிருப்போம் என அம்மா சொல்லிக்கொள்வார். இதை தாண்டி ஊரில் திருவிழாக்கள், விளையாட்டுப்போட்டிகள் நடந்தால் போதுமாம் நாள் முழுக்க கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம். இப்படியானதொரு நாளில் தான் பாடல் கேட்பது ஆரம்பித்திருக்கின்றது. அக்காலகட்டங்களில் இவ்வாறான நிகழ்வில் பாடல்களை ஒலிபரப்புவதற்கென்றே ஓரு குழு பாட்டுப்பெட்டி, மைக்செட்டுடன் வந்துவிடுவார்களாம். பெரும்பாலும் ஆண்கள் தான் அக்குழுவினரிடம் சென்று பணம்செலுத்தி தம்முடைய காதலிகளுக்கு பிடித்த அல்லது அந்நேரத்தில் பிரபல்யமாயிருக்கின்ற காதல் பாடல்களை ஒலிபரப்புசெய்வார்களாம். ஊரே பாடலை கேட்டாலும் அதன் பின்னுள்ள காதல் கதை பற்றி குறிப்பிட்ட பெண்ணுக்கு தெரிந்திருக்குமாம். இப்படியானதொரு நாளில் தான் அப்பாவும் அம்மாவிற்கு பாடல்களை ஒலிபரப்புச்செய்திருக்கின்றார். “காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்…” , “வான் நிலா ….” ஏன்கின்ற இரு பாடல்கள் தம் காதல் கதையின் பசுமையில் எப்பொதும் எஞ்சியிருப்பதாக அம்மா கூறிக்கொள்வதுண்டு.  பதிலுக்கு தான் எம்ரோயிட் செய்த கைக்குட்டை, வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதாக சொல்லுவார். இதனை எம்முடன் பகிரும் போது அம்மாவின் முகத்தில் தெரிகின்ற பெருமை படர்கின்ற செம்மை சொல்லிச்செல்லும் அவர்கள் அன்பை. என்னதான் சொல்லுங்கள் இன்று ஒருவரை தொடர்புகொள்ள ஆயிரம் வழியிருந்தும் இவ்வாறான சின்ன சின்ன பரிமாறல்கள், நினைவுகள் என்பவற்றை தொலைத்துவிட்ட தலைமுறை நாம் தான். 

பொதுவான திருமணம் பேசப்பட்டு அச்சடங்கு நடைபெறும் வரை இணையர்களுக்கு கொடுக்கப்படுகின்ற காலம் இருக்கின்றதே இது அலாதியானது. இருவர் நட்பிலிருந்து பின் காதல் செய்யும் போது ஓரளவாவது ஒரவரையொருவர் புரிந்திருப்பார்கள், அல்லது தெரிந்துவைத்திருப்பார்கள்.  ஆனால் குடும்பங்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் இதற்கான அவகாசம் இருப்பதில்லை. ஆனால் சிலருக்கு படிப்பு, குடும்ப நிலையை முன்னிருந்தி சிலநேரங்களில் இவ்வதிஷ்டம் வாய்ப்பதுண்டு. அப்படிப்பட்ட இருவரின் கதையிது. இனம், சாதி, குடும்ப நிலை, படிப்பு, பதவி என்று நீண்ட வரிசையான விடயங்கள் ஒப்பிட்டு பார்த்து இருவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஜாதகம் பார்த்த சோதிடர் கூட ஆபூர்;வ பொருத்தம் 10 இல் 9 பொருந்துகின்றது என்று சொல்லிவிட்டார். பங்குத்தந்தையும் தேவாலயத்தில் மோதிரம் மாற்றி விட்டு பின்னர் இந்து முறைப்படி தாலி கட்டுங்கள் பிரச்சினையில்லை என்று பச்சைகொடி காட்டிவிட்டார். ஆனால் இந்த 10 இலும் சரி முன்னர் ஆராயப்பட்ட வரிசையிலும் சரி “மனம்” இருந்திருந்ததா என்பது குறித்த கேள்வியை காலம் போக போக தான் ஆராயத்தொடங்கியது.  

சதாசர்வ காலமும் மருத்துவமனையின் (ஒருமையில்லை பன்மை)  சத்திரசிகிச்சை பிரிவில் நோயாளிகளின் மூளையை கிளறிக்கொண்டும், மிஞ்சிய நேரங்களில் பணத்தினை எண்ணிக்கொண்டும் புத்தாண்டில்லை, பொங்கலில்லை, முக்கிய நாட்களில்லை எல்லா நாட்களுமே சத்திரசிகிச்சை மிஞ்சினால் டிவிட்டர் , பிடித்த இடங்களிலிலெல்லாம் சொத்து  வாங்க வேண்டும் என்று வாழ்கின்ற ஆணுக்கும், இசை, வர்ணம், எழுத்து, ஊர் சுற்றல், புத்தகம், சின்ன சின்ன நினைவுகளை கூட சேர்த்து வைக்க நினைக்கின்ற பெண்ணும் பொருந்திப்போகும் என்றா நினைக்கின்றீர்கள்? தன் வருங்கால துணை உலகின் தலைசிறந்த சத்திரசிகிச்சை நிபுணர்கள் வரிசைக்குள் வந்த போது முதல் வாழ்த்தை அனுப்பி சிறு அரிசியில் பெயரை நுணுக்கமாக எழுதி அனுப்பி வைத்த பெண்ணுக்கும் தன் வருங்கால மனைவி முன்னிலை வடிவமைப்பாளராக தெரியப்பட்ட போது ஓரு மாதம் கழித்தும் வாழ்த்தாமல் பிளாட்டின மோதிரம், நூறு ரோஜாக்கள் இணைத்த பூங்கொத்தும் அனுப்பி வைத்த ஆணுக்கும் பௌதீகமான தென் ஈழத்திற்கும் - அமெரிக்காவிற்குமான தூரம் என்றாலும் மனம் அதனையும் தாண்டி பல மைல் தூரத்திலாளனது. 

சிறு குழந்தைகள் என்றாலும் அவர்களை தூக்குவதற்றும் வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுக்கும் நீரிலும் கூட சாதி, மேல்மட்டம் தேடி பிடிக்கும் ஆணுக்கும் பாரதியின் புதுமைப்பெண்ணிற்குமான சிந்தனையின் ஆழம் வேறுபட்டது. மொழியறிவு அற்றவர்கள் முன் கூட தன் பெருமையை காட்ட ஆங்கிலத்தில் பேசும் ஆணுக்கும் தமிழை மூச்சாக சுவாசிக்கும் அந்த பெண்ணுக்குமான பண்பின் நீளம் வேறானது. ஓன்றல்ல இரண்டல்ல 365 ஐ மூன்றால் பெருக்கி வருமளவு நாட்களை புரிதலுக்காக காலம் கொடுத்திருந்தும் தூரம் கடந்து பார்க்கும் போது வருங்கால மனைவி அனைத்;திலும் அந்தஸ்த்து பொருத்தமானவள் என மட்டும் தான் ஆணுக்கு புரிந்திருந்தது. எல்லாமிருந்தும் அன்பிற்கும் பகிர்தலுக்கும் இவ் உறவில் இடமில்லை என்பதும் மட்டும் அந்த பெண்ணுக்கு புரிந்துபோனதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் பாருங்கள் எதுவும் நம் அருகில் இருக்கும் போது நமக்கும் அதன் அருமை புரிவதில்லை தானே! ஒன்றை மட்டும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அன்பை காட்ட ஒருவர் அருகில் இருக்கும் போது, பதிலன்பை காட்டமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் போது நாம் காட்டுகின்ற அலட்சியங்கள் அவர் நம்மை பிரிந்த பின் தான் நடுமண்டையில் குட்டிச்சொல்லும். இது எப்போதும் நேர்மையான நேசித்தலுக்கு உண்டு. 

நிழலின் அருமை வெயிலில் தானே தெரிவதுண்டு! இவ்வளவு காலமும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இன்று அந்த பெண்ணின் முகநூலில் பழைய படங்களை எல்லாம் இரசித்து “சிவப்பு இதயம்” ஐ தட்டிவிடுகின்றார், தன்னுடன் இருந்த நாட்களில் “படம் வரைவதை விட வேறு உருப்படியானதை பாரும், எனக்கு இந்த ஓவியங்கள் புரிவதில்லை" என தூக்கியெறிந்து பேசிய அதே ஆண் தான் அந்த பெண் நடாத்துகின்ற ஓவிய கண்காட்சிகளின் போது பூங்கொத்துக்களை அனுப்பி வைக்கின்றார். ஆங்கிலத்தில் பேசு, எழுது .. தமிழ் சோறு போடாது என்று சொன்னவர் தமிழில் கவிதையாக அந்தப்பெண்ணுக்காக எழுதித்தள்ளுகின்றார். இதுவென்ன சத்தம், பாம்புக்கு மகுடி போல என்று தூக்கிவீசிய அந்த பெண் இசைத்த வீணை பாடல்களை இன்று தேடி தன்னுடைய அழைப்போசையாக வைத்திருக்கின்றார். இன்னும் ஒருபடி மேலே போய் டிவிட்டரில் “கண்ணம்மா” என்று பதிலளிக்கின்றார். அந்தப்பெண் தேடியலைந்து வாங்கி கழுத்துப்பகுதில் எம்ரோயிட் செய்தனுப்பிய உடைகளை பிறகு போடுகின்றேன் என்று அலட்சியப்படுத்தியவர் இன்று தினமும் போட்டு இன்ஸ்ராவில் பதிவிடுகின்றார்.எத்தனை நாள் அந்தப்பெண் ஒன்றாக சாப்பிடுவதற்கும், தான் சமைத்த உணவை பற்றி பேசமாட்டாரா என்றும் தவித்திருந்தது, அழுதிருந்தது. இப்போது பல முறை ஒன்றாக போவோமா என்று கெஞ்சிக்கொண்டிருக்கின்றார். பூரணை நாளுக்கு கூட 12 மணிக்கு அந்தப்பெண்ணுக்கு குறுஞ்செய்தியனுப்புகின்றார். புரியாத பிரியங்கள் பிரியும் போது புரியும் என்பார்கள் அவருக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.

முன்னரெல்லாம் நூறு குறுஞ்செய்திகள் அனுப்பி பதிலுக்கு காத்திருந்து அந்தப்பெண் அழுதிருக்கின்றாள். முதலாக வாழ்த்திவிட்டு கைத்தொலைபேசி சத்தமிடும் போதெல்லாம் ஓடிப்போய் பார்த்துமிருக்கின்றாள். ஒரு நாளில் இருக்கின்ற 1440 நிமிடத்தில் ஒரு நிமிடம் பேசலாமே என்று கெஞ்சியிருக்கின்றாள். இன்று இதெல்லாம் கடந்துவிட்டது. நேசிப்பென்பது மண் மீதும் இருக்கலாம் தான். 

நீங்கள் உங்கள் இணையரோடு அல்லது வருங்கால துணையோடு நடக்கும் போது சற்று வந்த பாதையை திரும்பி பாருங்கள். ஆங்காங்கே சில பூக்கள், முட்கள், சின்ன சந்தோசங்கள், நினைவுகள் இருந்தால் நீங்கள் வாழ்ந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதுவே கார்ப்பேட் வீதியும், சொகுசு வீடுகளும், பிராடோவும் மட்டும் தான் தெரிகின்றது என்றால் கடந்திருக்கின்றீர்கள் என்றே அர்த்தம். வாழ்தலுக்கும் கடத்தலுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. வாழக்கற்றுக்கொள்ளுங்கள்!

அல்பா ஆண்களுக்குத்தான் வாழ்க்கையமைக்க அசாதாரண பெண் மனைவியாக வேண்டும்! அசாதாரண பெண்களுக்கு சாதாரணமானவனின் குட்டி இதயம் போதும் வாழ்வதற்கு. கைகோர்த்து நடப்பதில் உள்ள சுகம் விரலில் அணிகின்ற வைரமோதிரத்தினை விட அலாதியானது. ஸ்கோப்பியனிலும் பிராடோவிலும் ஓரடி தள்ளியிருந்து பயணிப்பதை விட மோட்டார்பைக்கிள் அருகருகே இதயத்துடிப்பு உணர பயணிப்பது கனதியானது!

இருக்கும் போது பிடித்தவற்றினை கொடுக்காது இறந்த பின் மாலயம் செய்வதில் என்ன பயன்? நம்மவர்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்காத நாம் இன்று LinkedIn இல் வந்து அடிக்கடி பார்த்து என்ன பயன்? பிரியங்களை பிரியங்களால் நிரப்ப பாருங்கள். சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கின்றது! 

பிற்குறிப்பு 01: ஏற்கனவே பல கவிஞர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இம்சையே போதுமானது. இன்னுமொரு கவிஞர் வேறு இப்போது தான் உருவாகிக்கொண்டிருக்கின்றார். பரவாயில்லை கவிதைத்தொகுப்பை வெளியிட்டால் புதிய நூலகத்தில் வைத்திட முடியும்! 

 பிற்குறிப்பு 02: இந்த AI காலத்திலிருந்தாவது இனி வரும் சோதிடர்கள் 11ஆவது பொருத்தமாக "மனதை"வைக்க யோசிக்கலாம். காலம் மாறிவிட்டது தானே 

No comments:

Post a Comment

பதிவுகள்

புரியாத பிரியங்கள் பிரியும் போது புரியும்!

நீங்கள் நமக்கு முந்தைய தலைமுறையினருடன் பேசும் போது அந்தக்காலத்தில் அவர்களது அன்பு பரிமாறல்கள் குறித்து கேட்டுப்பார்த்துள்ளீர்களா…. ? நான் என...

அதிகம் பார்க்கப்பட்டவை