இன்று தொழில்முயற்சியாமை குறித்து என்னை நேர்காணல் செய்த ஊடகவியலாளர் ஒளி-ஒலி பதிவின் பின் கருவிகளை அணைத்துவிட்டு நட்பு முறையில் என்னிடம் இரு கேள்விகளை முன்வைத்திருந்தார்.
முதலாவது வினா: ஓர் ஊடகவியலாளராக இருக்கும் நீங்கள் தொழில்முயற்சி என்று வரும் போது யாரையாவது சாரவேண்டியிருக்காதா அல்லது உங்கள் குடும்ப அரசியல் அதில் பக்கசார்பினை தோற்றுவிப்பதில்லையா?
பதில் : உலகத்தில் நூலளவாவது தனிப்பட்ட பக்கசார்பின்றி யாரும் இருந்திட முடியாது என்பது என் உறுதியான வாதம். ஆனால் இந்த பக்கசார்பு மனித தன்மையற்றதானதாக அல்லது பணம் சார்ந்து இருக்கும் போது அல்லது ஏதாவதொன்றினை பெறுவதற்காக அறத்தினை அடகுவைக்கும் போது தான் குற்றமாகின்றது. நன்மைக்கு சொல்லிடும் பொய்கள் போன்று ஒரு மனிதனை வாழ வைக்க, நீதியை நிலைநாட்ட. உரிமைகளை வென்றெடுக்க பக்கசார்பாகின்றோம் என்றால் அதில் தப்பேயில்லை. ஆனால் பிழையென்று வரும் போது அது என் பிள்ளையாகவேயிருந்தாலும் தீர்ப்பளிக்கும் உறுதி இருந்தால் போதுமானது தானே….
இரண்டாவது வினா: உங்கள் துணைவருக்கு அரசியல் புலம் இருக்குமா? அது உங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா?
பதில் 02: எந்த உறவிலும் நடுவில் ஒரு கோடு போட்டு இருப்பது மிகவும் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஏதோ கணிதத்துறையில் இருப்பதால் கோடு பற்றி பேசுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. ஆனால் நான் இப்படி யோசிக்கின்றேன்.
நெருங்கிய உறவுநிலையில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட விடயங்கள் , விருப்பங்கள், இலக்குகள் உண்டு. இந்த விடயங்கள் மதிக்கப்படும் போது அல்லது காயப்படுத்தப்படாமல் இருக்கும் வரை மட்டும் தான் உறவுநிலை நிலைக்கும். அல்லது முரண்களை தோற்றுவிக்கும், திருமணம் என்றால் விவாகரத்தில் முடியும், அல்லது மிக முக்கியமானதொன்று என்னவென்றால் உறவுநிலையில் உள்ளவர்கள் நடிக்கவோ, பொய் சொல்லவோ ஆரம்பிப்பார்கள். இவ்வாறான பொய்யானதொரு கானல் நீர் போன்றதொரு உறவில் பொய் வாழ்க்கை வாழ்வதை விடவும் நடுவில் கோடு போட்டு அந்தப்பக்கம் நீ இந்தப்பக்கம் நான். எமது எல்லைகள் இது என்று வாழ்வது எவ்வளவோ நிம்மதியானது. இது நட்புக்கும் பொருந்தும், காதலுக்கும் பொருந்தும் தம்பதிகளுக்கும் பொருந்தும் குடும்பத்தின் எந்த நிலைகளுக்கும் பொருந்தும். ஆனால் நடுவில் கோடு இருப்பதால் யாருக்கும் தெரியாமல் பல்வேறு உறவு நிலைகளில் இருக்கலாம் என எண்ணுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஒருவரை பிடிக்கவில்லையா அவரது முகத்திற்கு நேரே உன்னை பிடிக்கவில்லை என்று சொல்வது மிக நல்லதொரு விடயம். முடிந்தால் இதையே பக்குவமாக அவரவர் மனநிலையை உடைக்காத முறையில் நீங்கள் செய்வீர்கள் என்றால் நீங்கள் தான் குறைந்த பட்சமாவது மனிததன்மை உடையவர்கள். நமக்கென ஒருவர் இருக்கும் போது இரகசியமான பல்வேறு தொடர்புகளை பேணுவது அல்லது யாருக்கும் தெரியாது தானே என்று முரணான உறவுகளில் சிக்கிக்கொள்வது போன்ற இழிவுநிலையை விட நடுவில் கோடு போட்டு வாழ்வது மேல். இது உறவுகளுக்கிடையானதை பற்றியது.
இதுவே அரசியல் விருப்பு அல்லது பக்கசார்பிற்கும் பொருந்தும். நாம் ஒருவரை நேசிக்கும் போது அல்லது துணையாக தேர்வுசெய்யும் போது அவரது குடும்பம், பண்பு, படிப்பு, பண்பு என ஆராயலாம் ஆனால் அரசியல் என்பது மாறுபாடடையும் ஒரு விடயம். ஆனால் அந்த அரசியல் , அவர் சாரும் கட்சி அறம் சார் போராட்ட வழி சமைக்கின்றது என்றால் நல்லது தானே!. என் துணை அப்படியிருப்பது எனக்கும் பெருமையே.
மற்றும்படி என் துணை அரசியலின்றி இருப்பதும் அல்லது ஈடுபாடின்றி இருப்பதற்கும் சாத்தியமில்லை. அவரவர் விருப்பு அவரவருக்கு. சமூக ஊடகத்திலேயே என் நண்பர்கள் பட்டியலில் அல்லது நான் பின்தொடரும் பட்டியலில் என் துணையை வைத்திருக்க நான் விரும்புவதில்லை. அன்பில் மட்டுமே ஓர் ஆணிடம் சரணடைய முடியும். அரசியலில் அல்ல. காதலையும் அரசியலையும் கலந்திட விருப்பமில்லை. நடுவில் கோடு போட்டுவிட்டால் சரி தானே!

No comments:
Post a Comment