மௌன அஞ்சலி
செய்த பின் தான் ஞானம் உதித்தது - கூடவே மனதும் வலித்தது… எனக்குத் தெரியும் உன்னைப் இனிப்பெறுவதென்பது முயற்கொம்பென்று… திட்டமிட்டு செய்யவில்லை திடீரென்று தான் நிகழ்ந்தது… மலரைப் பறித்தாலும் மனம் பதைபதைப்பவள்… - இன்று உன்னை….. மன்னித்துவிடு! என் ஒரு நொடித் தவறு… நொடித்து விட்டது உன் வாழ்வை… என் சமாதானங்கள்…. சமாளிப்புக்கள்… வாதங்கள்…. – உன்னை மீட்டுத் தந்திடுமா….? என் கண நேர அவசரம்…. எத்தனை கனவுகளோ உனக்குள்….? காதலியிருக்கிறாளா…? கறுப்பான உனக்குள்ளும் என்னனென்ன கவலைகளோ…? உன் இறுதி நிமிடங்களில் என்ன நினைத்தாய்...? சாபமிட்டாயா? இல்லை சாதித்த திருப்தியுடன் போய் சேர்ந்தாயா...? என் தவறா…? படைப்பின் புதிரா…? பேனை புள்ளியென்று… தொட்டுவிட்டேன் - சிறு பூச்சி நீ…. செத்துவிட்டாய்… கொலை செய்திட்ட உறுத்தலுடன் மூடுகிறேன் நாட்குறிப்புடன் கூடவே என் விழிகளை….- உன் அகால மரண மௌன அஞ்சலிக்காக…. ( அண்மையில் புத்தகத்தில் இருந்த புள்ளியென்று நினைத்து பூச்சியை நசுக்கிவிட்டேன். அன்று பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது அதன் விளைவே இது ..)