அடிவழிச்சப்பம்

The Complete Guide to Sri Lankan Hoppers - Experience Travel Group 
உணவினை பலவிதமாக சாப்பிடலாம் என்பதற்கு அப்பம் நல்லதொரு உதாரணம். பால் விட்டு பாலப்பம், முட்டை போட்டு முட்டப்பம், சக்கரை வைத்து சக்கரையப்பம் எதுவுமே போடாமல் வெறும் அப்பம் என்று முன்னர் பல முறைகளில் அப்பம் சாப்பிட்டிருப்பீர்கள். இப்போது புதிதாகவும் பல வந்துவிட்டன. சொக்கலேட்டை உருக்கி போட்டு சொக்கலேட் அப்பம், இறைச்சி வகைகளை பிய்த்து வெங்காயத்துடன் கலந்து உறைப்பும் போட்டு பிரட்டிய அடப்பத்தினை அப்பம் மேல் போட்டு இறைச்சியப்பம் , மில்க்மெயிட் அப்பம் என்று அப்பமும் காலத்திற்கேற்ப மாறுபட்டும் நவீனமடைந்தும் கொண்டிருக்கின்றது. ஆனால் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் நான்கு அப்பங்களின் வகை தான் எனக்குத் தெரிந்திருந்தது. 

இப்போது அப்பத்திற்கான மா கூட பக்கற்றுக்களில் வந்துவிட்டன. வாங்கி வந்து தண்ணீரில் கலந்து சிறிது நேரம் வைத்தால் நொதித்துவிடும். எடுத்து வாயு அடுப்பில் வைத்து இறக்கினால் போதும். அப்பம் ரெடி ஆனால் சுவைதான் கொஞ்சமுண்டு மதி…. முன்னரெல்லாம் அப்பத்திற்கான பதம் எடுப்பதும் அதனை சுட்டு அடுக்குவதும் வீடுகளில் இடம்பெறுகின்ற பெரிய்ய்ய்யதொரு சம்பவம். இதனால் தான் பெரும்பாலும் வீடுகளில் அப்பம் பெரும் பாலும் சுடப்படாமல் கடைகளில் வாங்கப்படுவதுண்டு. நான் சொல்கின்ற பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் அப்பம் சுடுவதற்கென்றே ஊரில் ஒருசிலர் இருப்பார்கள். அறிந்த வரை பெண்கள் தான். இதனை தம்முடைய சுயதொழிலாகவும் செய்து வந்துள்ளார்கள். 

பச்சரிசியை சில மணிநேரங்கள் நீரில் ஊறவைத்து இளகிய பின் அதனை இடித்து மாவாக்கி அரிந்தெடுப்பார்கள். அரித்த மாவினுள் இளம் தென்னங்கள்ளு ஊற்றி புளிக்க வைப்பார்கள். பெரும்பாலும் இன்று மாலை புளிக்க வைத்தால் காலையில் பதம் சரியாகவிருக்கும். தேங்காய் துருவி முதல் பாலை நல்ல கெட்டியாக எடுத்துக்கொள்வார்கள். இனி விறகடுப்பை பற்றவைத்து அதில் பழக்கப்படுத்திய அப்பச்சட்டியை வைத்து மாவை ஊற்றி சற்று வெந்ததும் நடுவில் கெட்டிப்பாலினை அகப்பையால் ஊற்றி ஒரு நிமிடம் மூடி விடுவார்கள். பின்னர் இறக்கி சீனி தூவி இளம் சூட்டுடன் சாப்பிடலாம். அல்லது பாலினை ஊற்றும் போது சக்கரைத்துண்டுகளையும் போட்டு மூடினால் அதுவும் உருகி சாப்பிட நன்றாகவிருக்கும். அல்லது முட்டப்பம் வேண்டியவர்கள் பாலுக்குப்பதிலாக முட்டையை உடைத்து போட்டு மேலாக சற்று உப்பும் மிளகுத்தூளும் தூவியும் சாப்பிடலாம். அல்லது வெறும் அப்பம் விரும்பிகள் இருந்தால் வெங்காயத்தினை நன்றாக அரிந்து மாசியுடனும் சம்பள் தூளுடனும் போட்டு இடித்து சுர் என்று புளிவிட்டு பிசைந்து எடுத்த கட்டச்சம்பளுடன் சாப்பிடுவார்கள். 

egghopper
முட்டப்பம்

நான் சிறுமியாக இருக்கும் காலத்தில் என்னுடைய வீட்டில் அனைவரும் வேலைக்குச்செல்பவர்கள். எனவே அப்பம் செய்வதற்கான நேரங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை அல்லது மெனக்கெட நேரமிருப்பதில்லை. எனவே அப்பம் என்றால் எனக்கு எதலின் அன்றி தான் ஞாபகத்திற்கு வருவதுண்டு. எம்முடைய வீட்டிலிருந்து இருபது வீடு தள்ளிதான் அவரின் வீடு அமைந்திருந்தது. தினமும் காலையில் அப்பம் சுடுவதும் மாலையில் இடியப்பம் அவித்துக்கொடுப்பதும் தான் அவரது வருமானத்திற்கான வழி. வார நாட்களில் என்னுடைய வீடு அல்லோலகல்லோலப்படுவதால் வார இறுதியில் அதுவும் பெரும்பாலும் சனிக்கிழமை காலையில் எதலின் அன்றியின் அப்பம் தான் எம் காலை உணவு. அவரிடம் போய் அப்பம் வாங்கும் பொறுப்பிற்கு வீட்டால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் நானும் தம்பியும். காலையில் ஆறு மணிக்கு வீட்டில் தரப்படுகின்ற நாட்டுக்கோழி முட்டைகளையும் எடுத்துக்கிளம்பினால் திரும்ப எப்படியும் ஒரு மணி நேரமாவதாகும். நான் எதலின் அன்றி என்றால் எந்தளவிற்கு அப்பம் ஞாபகம் வருகின்றதோ அதேயளவு அவர் அமர்ந்திருக்கும் பாங்கும் அவர் முன்னால் எப்போதும் எரிந்துகொண்டிருக்கின்ற அடுப்பினையும் தவிர்த்து என்னால் அவரை கற்பனை செய்ய முடியாது. காணும் போதெல்லாம் குத்துக்காலிட்டு இடுப்பில் பாவாடை, மேற்சட்டையுடன் தான் அமர்ந்திருப்பார். அவர் எழுப்பி காசினை உயரமான அடுக்கில் இருக்கும் பேணிக்குள் வைப்பதை மட்டும் தான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவர் வேறு வேலைகளை எப்போது செய்வாரோ என்ற கேள்விக்கான பதில் இன்று வரை தெரியாது. 

வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையை விட ஐந்தாறு முட்டைகள் அதிகமாகவே உமியில் வைத்து வீட்டிலுள்ளவர்கள் எம் கையில் தருவார்கள். அத்துடன் எத்ததை பாலப்ப சோடிகள் வேண்டிவர வேண்டும் என்றும் சொல்லப்படும். தமக்கையும் தம்பியும் எம்முடைய குட்டி சைக்கிள்களில் வெளிக்கிடுவது ஏதோ பெரிய எடுவையுடன் தான் ஆரம்பிக்கும். அங்கு போனால் எதலின் அன்றியின் வீட்டில் ஏழுமலைகளை கடப்பது போது இரு தடைகளை தாண்ட வேண்டும். ஒன்று அவர் வீட்டு வாசலில் சர்வகாலமும் யாரையாவது முறைத்தக்கொண்டிருக்கும் அவர்கள் வீட்டு நாய். யாரையும் கடித்ததாக நானறியேன். ஆனால் அது பல்லைக்காட்டுவது ஏதோ கடிக்க வருவது போன்றிருக்கும். யாருக்குத்தெரியும் அதன் சிரிப்பே அப்படித்தானோ தெரியாது. சூ...சூ... என்று எத்தனம் காட்டி இவரை தாண்டிவிட்டால் அடுத்த தடை அவர்களது மகன். அந்த நாட்களில் ஆட்டிசம் குறித்த புரிதல் இல்லை. எனவே அந்த அண்ணாவைப்பார்த்தால் பயங்கர பயம். சிறுவதில் இவரது பெயரைச்சொல்லி பயப்படுத்தி சோறு ஊட்டியதன் பிரதிபலிப்பாகவும் இருக்க கூடும். கதிரையில் சாதுவாக அமர்ந்தபடி இருக்கும் இவர் எம்மை எதுவும் செய்யாவிட்டாலும் அவரைத்தாண்டி முடியும் வரை மனதுள் அப்படியொரு பீதி எமக்கு. பெரும்பாலும் தம்பி வீதியிலேயே நின்று விடுவான். நூன் தான் இந்த வியூகங்களை பிளந்துகொண்டு செல்லும் அபிமன்யு நான் தான். போய் எதிலின் அன்றிக்கும் அப்பச்சட்டியுள்ள அடுப்பிற்கும் அருகில் அமர்ந்து முட்டைகளையும் கொடுத்துவிட்டு கதைத்துக்கொண்டிருப்பது சுவாரஸ்யமான விடயம்.

இந்த அப்பம் செய்பவர்களுக்கு தம் சொத்தில் பங்கு கேட்டால் கூட கோபம் வராது ஆனால் அப்பத்திற்கு பழக்கப்படுத்தப்பட்ட சட்டியை யாராவது தொட்டால் போதும்.  எதிலின் அன்றிக்கும் பல தடவை இவ்வாறு தலைப்கொதி வருவதை பார்த்திருக்கின்றேன். மூன்று சட்டிகள் வைத்திருப்பார். மேலே தணல் வைப்பதற்கென மூன்று மண் சட்டிகள் பிரிம்பாக இருக்கும். சுடான சட்டியில் அப்பக்கலவையை ஊற்றும் போதும் கேட்கும் சுர் என்ற சத்தம் கேட்கும் போதே பசிக்க ஆரம்பித்துவிடும். இனி அவர் அப்பம் சுடும் வரையில் பள்ளிக்கதை கேட்பார், பாட்டுப்பாட சொல்வார். மிக முக்கியமானது ஒரு பாலப்பமும் பாட்டுப்பாடி முடிய தருவார். ஒரு உணவை ஆறவைத்து சாப்பிடும் போது ஒரு சுவை என்றால் இளம் சூட்டில் சாப்பிடுவது ஒருவித சுவை. அதையே சுடச்சுட ஊதிச்சாப்பிடுவது வேற சுவை. இந்த பாலப்பமும் இதில் தான் சேர்த்தி. சுட்டி பாலப்பங்களை நாம் கொண்டுபோன பாத்திரத்தின் அடியில் வாழையிலை பரப்பி சோடி சோடியாக அடுக்குவார். இறுதியாகத்தான் முட்டை அப்பங்கள் சுட ஆரம்பிப்பார். முட்டையப்பங்களுக்கு சோடி எப்போதுவே வெறும் அப்பங்கள் தான். கொண்டு போன நாட்டு முட்டைகளில் இரண்டு அல்லது மூன்று மீதியாக இருக்கும் போது அதுவைர சுட்ட அப்பங்களை தம்பியிடம் கொடுத்து வீட்டுக்கனுப்பி விடுவேன். இதில் ஒரு தந்திரமும் இருந்தது. 

எல்லா அப்பங்களும் சுட்ட பின்னர் இறுதியாக மீந்திருக்கும் கப்பிகள், சக்கரை, பால் அனைத்தையும் கலந்து இறுதியாகவொரு அப்பம் சுடப்படும். சாதாரண அப்பங்களிலும் விட சற்று தடிப்பாகவிருக்கும். இதற்குத்தான் அடிவழிச்சப்பம் என்று பெயர். பெயரிலேயே பொருள் இருக்கின்றது. மீந்த அனைத்தையும் அடிவரை வழித்து சுடப்படும் இறுதி அப்பம். இதற்கான மௌசே வேற… கலவையை ஊற்றியவுடன் அடுப்பை முழுவதும் அனைத்துவிடுவார். மெல்லிய தணலில் தான் வேகும் இந்த அடிவழிச்சப்பம். சற்று நேரமாகும். இறக்கியவுடன் ஒரு துண்டை என்கையில் வாழையிலையில் வைத்து தருவார். மீதியையும் பொட்டலாம கட்டி எனக்கே தந்துவிடுவார். பிட்டுக்கு மண் சுமந்த சிவனார் மாதிரி பாடல்பாடி நெல்லிக்கனி பெற்ற ஒளவையார் மாதிரி நான் எதலின் அன்றியிடம்  பாட்டுப்பாடி பெறுவது இது தான் 

கடைசியாக சுட்ட இரண்டு மூன்று முட்டையப்பங்களுடன் இதனையும் வைத்து குட்டிச்சைக்கிளில் வீடு திரும்பிய பின் ஆரம்பிக்கும் என் கனகாட்டங்கள். வீட்டுக்குள் வந்து கதவை சாத்துகின்றேனோ இல்லையோ யாருக்கு வேணும் இந்த அப்பம் என்று கூவுவதில் தொடங்கும் என் அழிச்சாட்டியம். இனி இதனை வைத்து பேரம் பேசி, ஆறவைத்து இறுதியில் எல்லோருக்கும் சிறு சிறு துண்டுகள் கொடுத்து சாப்பிடுவதில் இருக்கின்ற சந்தோசம் வேறெதிலும் இருக்காது. எப்படியும் எதிலின் அன்றியிடம் போய் வருகின்ற இடைவெளியில் வீட்டில் கட்டசம்பள் இடிக்கப்பட்டிருக்கும். முதல் நாள் மீந்த குழம்பு இருந்தால் அதனையும் பொறுபொறுக்க சூடாக்கி அப்பத்துடன் தொட்டுச்சாப்பிட்டால் அன்றைய நாள் நிறைந்துவிடும். என்னவொரு பிரச்சினையென்றால் அப்பம் சாப்பிட்டால் நல்லா நித்திரை தூங்கும் என்பது தானது. 

இப்போதெல்லாம் அரை மணியில் அப்பம் செய்திட முடியும், நாட்டு முட்டைக்குப்பதிலாக லெகோன் முட்டை வந்துவிட்டது. என்ன தான் சொன்னாலும் அந்தக்காலத்தில் உணவில் சத்துக்கள் இருந்தன உணவு நிறைவாகவிருந்தது. ஒவ்வொரு உணவிற்குப்பின்னும் நினைவுகள் இருந்தன... அன்பான நபர்கள் இருந்திருக்கின்றார்கள். இன்று எல்லாமே கலப்படமாகிவிட்டது உணவு மட்டுமல்ல அன்பும் கூட 




Comments