அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……07

 

 Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention  

Feb 12th - Hug Day:  Emotional closeness and Reassurance 

Feb 13th - Kiss Day: Expression of affection 

“முத்தம்” என்றவுடன் நம் மனதில் முதலில் தோன்றுவது “வயது வந்தவர்களுக்கு மட்டும்..” காட்சிகளாகத்தானிருக்கும். அன்பை வெளிப்படுத்துகின்ற வார்த்தை, செயல், பரிசுகள் போன்று தான் முத்தமும் ஒருவகை வெளிப்பாடு. 

ஆனால் முத்தத்தில் அர்த்தங்கள் மட்டும் வேறுபடுகின்றது. நெற்றியில், கன்னத்தில், கைகளில், கழுத்தில், உதட்டில், மார்பில், பாதத்தில் …என்று நீளுகின்ற முத்தமிடும் இடங்களைப் பொறுத்து அர்த்தங்களும், உணர்வுகளும் மாறுபடுகின்றன. எல்லோராலும் முத்தங்களை எல்லாவிடங்களிலும் தந்திட முடிவதில்லை. இதற்கான முற்றுமுழுதான உரிமை வாழ்க்கைத்துணைக்கு மட்டுமே உண்டு. நெற்றியில் இடப்படுகின்ற முத்தங்களுக்கான விலையே தனி. ஆனால் எல்லா முத்தங்களும் காமத்தில் சேர்த்தியில்லை. 

 அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….

பக்கம்: 1594

இனிய நாட்குறிப்பே….
ஒவ்வொருவருக்கும் தன்னுடையவர்களை ஏதாவதொரு இடத்திற்கு கூட்டிப்போகவேண்டும் எனும் விருப்பம் இருப்பதுண்டு எனக்கும் தான்…. இந்த வடிவமைப்பு விடயங்கள் ஈடுபடத்தொடங்கியதிலிருந்தே… ஆனால் அப்படி கூட்டிப்போகும் இடம் ஆடம்பரமானதாகவோ, செலவீனம் நிறைந்ததாகவோ இருப்பதை விட நினைவுகள் நிறைந்ததாக, நம்முடைய கலாசாரத்தினை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும் எனும் கனவு எனக்குள் இருந்திருந்தது. இந்த நாளினை மிகவும் முக்கிய நாளாக சேமித்து வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இதற்காக எத்தனை ஆயத்தங்கள்…. ஆட்பரிப்புக்கள்…. ஆர்ப்பாட்டங்கள்! 

நாற்சார் வீடுகள் #யாழ்ப்பாண நகரத்தின் வண்ணார்பண்ணைப் பகுதியில் ஒரு  காலத்தில் ஏராளமான நாற்சார் வீடுகள் இருந்தன. 1960- 1970களில் சிவன் ...எமக்கொரு வீடு இருக்கின்றது. நான்கு தலைமுறைகள் வாழ்ந்த இடம். புதிதாக மாற்றியமைக்க வீட்டாக்கள் முற்பட்ட போதும் பிடிவாதம் பிடித்து தடுத்தவள் நான் தான். அழகான நாற்சதுர வீடது. அவர் இங்கு வருகிறார் என்றறிந்து அங்கு கூட்டிப்போக வேண்டும் என்று திட்டமிட்டு, சுத்தப்படுத்தி, நவீனங்கள் தொடாத வரையில் பழமையானவற்றினால் அலங்காரம் செய்து என ஏகப்பட்ட மெனக்கெடல்கள். அவர் இங்கு வந்தவுடனேயே அவர் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுத்தாயிற்று.

இன்று முழுநிலவு நாள். எங்கள் வீட்டின் உட்புறத்திலிருந்தே நிலவைப்பார்க்கலாம். மாலையிலேயே விளக்குகள் ஏற்றி… சாம்பிராணி போட்டு…. கவளச்சோறு தயார் செய்து…அவரும் குடும்பத்தினரும் வரும் போது மாலை 7 மணி. உள் வரும் போதே செருப்புடன் வந்துவிட்டார். எரிச்சலாகிவிட்டது. வந்ததுமே இது தானா “நீங்கள் சொன்ன வீடு. அராதப்பழசாயிருக்குதே… “ என்று ஆரம்பித்துவிட்டார். வீட்டுக்குள் இத்தனை மரமா… பாம்பு முட்டை போட்டிருந்து குட்டிகள் வரப்போகுது… என்று கருத்து வேறு. முதலில் இவை கிண்டல் என்று தான் நினைத்திருந்தேன். நேரமாகத்தான் புரிந்தது இவர் இரசனை. சாப்பிடும் போதும் “இது என்ன கைபோட்டு பிசைந்து தருவது…” என்று அதற்கு வேறு ..... 

எல்லாம் முடித்து அனுப்பிவிட்டு அமர்ந்தபடி யோசித்துப்பார்த்தேன். நாம் இருவரும் எதிர் துருவங்கள் எல்லாவற்றிலும் ஆடம்பரத்தினையும், பணத்தினாலும் எடை போடுகின்ற ஒருவரும் எளிமையையும் சின்னச்சின்ன விசயங்களையும் இரசிக்கும் ஒருவரும் இணைந்து பயணிப்பென்பது சாத்தியமாகுமா…? அப்படியே இணைந்தாலும் நீடிக்குமா? தலைமுறையாக வாழ்ந்த இடத்தில் குடும்பமாக சேர்ந்து இருக்கும் பொழுதுகளை விட வேறெந்த இடத்தில் நிம்மதியும் காதலும் இருக்கப்போகின்றது? 

உன்னை நான் இங்கு கூப்பிட்டதும், இவ்வளவு ஆயத்தங்களும் இந்த நிமிடங்களை சேமித்து வைக்கத்தான் என்றும் கவளச்சோறு என்பது கைபோட்டு பிசைந்த உணவு மட்டுமல்ல. அதில் உப்பு, புளி, காரத்துடன் நிறைந்த அன்பும், கவளத்தினை உருட்டி நம்மவர்கள் கையில் வைக்கும் போது அதில் அக்கறையும் இருப்பதை எப்படி அன்பே நான் உனக்கு புரியவைப்பது....? இப்போதெல்லாம் உன்னோடு இசைந்து வாழ்வது எப்படியென்று யோசிப்பதே என் பொழுதுகளை பெரும்பாலும் ஆக்கிரமித்துவிடுகின்றது. இந்த ஆற்றாமை என்னுள் பல நேரங்களில் கோபமாகவும் உருக்கொள்கின்றது. திருமணம் எனும் பந்தத்துள் இணைந்து நாம் முட்டிக்கொள்வதை விட இப்பவே நல்ல நண்பர்களாக பிரிந்தால் என்ன என்று அடிக்கடி யோசிக்கின்றேன் நான். 

வீட்டின் நடுவிலுள்ள திறந்தவெளி தாழ்வாரத்தினால் வெயில் வரும் மழை வரும் என்கிறாய், வந்தால் தான் என்ன? எல்லாம் அழகில் தானே சேர்த்தி!
 

பக்கம்: 1614

 வணக்கம் நாட்குறிப்பே,
ஒரு மனிதனுக்கு வருகின்ற உச்சபட்ச கோபம் எப்படியிருக்கும் தெரியுமா? இத்தனை வருடங்களில் எனக்குள் கோபம் உச்சஸ்தாயியில் இருந்த நாள் இன்று. அதிகாலையிலேயே என் இன்றைய நாளின் உணர்வுகள் மாறிவிட்டன. காலையில் வழமை போன்று காலையில் மின்னஞ்சலை தட்டினால் அவரிடமிருந்து மின்னஞ்சல்கள். வீடொன்றின் ஏகப்பட்ட புகைப்படங்கள் கூடவே “நமக்காக வாங்க தீர்மானித்த வீட்டின் படங்கள்” என்று குறிப்பு வேறு. “நமக்காக” என்பது என்னையும் சேர்த்தல்லவா? வாழ்தல் என்பது தனிப்பட்டொருவருக்கானதல்லவே. “வீடு” என்பது வாழ்தலுக்காக சேர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது. ஏதோவொரு நாட்டின் நகரத்தில் ஆடம்பரமாக உள்ளது என வாங்க தீர்மானித்தால் போதுமா? 

முதன் முதல் கோபமாக நான் கத்திய நாள் இன்று. இது தான் என் எல்லை. கத்திய பின் மீண்டும் அழைப்பெடுத்து நம் நிச்சயார்த்தத்தினை நிறுத்தலாம் என்கின்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறிவிட்டேன். மீண்டும் மாலையில் மின்னஞ்சல் வந்திருந்தது. “அப்படியென்றால் வைத்தியசாலை கட்டுவது என்னாகும்” என்றிருந்தது. ஆக இவ்வளவிற்கும் பின்னும் பணம், பதவி தான் என்பதும் இவையெல்லாம் எனக்காக என் சகோதரன்கள் கொடுக்கும் விலை என்கின்ற உண்மையும் என் தலையில் குட்டிச்சொல்கின்றது. 

இவ்வளவிற்கு பின்னாவது “மன்னித்துவிடு” என்றோ… “இனிமேல் சேர்ந்து தீர்மானிப்போம்” என்றோ கூறியிருக்கலாம். என் கோபமும் தணிந்திருக்கும். ஆனால் மனங்களை புரிந்துகொள்ள முடிந்திருந்தால் ஏன் இவ்வளவு தூரம் நமக்குள் வந்திருக்கும்? ஒரு ஆண் என்னை என் எழுத்திற்காக நேசிக்கலாம், என் நேர்மைக்காக நேசிக்கலாம், படிப்புக்காக நேசிக்கலாம் அல்லது என் ஆளுமைக்காக நேசிக்கலாம். என்னுடன் நெருங்கி பழகுபவர்களுக்கு கூட நான் என்னை பற்றி வெளிக்காட்டியதில்லை ஏனென்றால் நான் யாரென்று அறியாமலேயே இயல்பான அன்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் வெறும் பணத்திற்காக, என் பதவிகளுக்காக என்னை நேசிக்கின்றார் என்பது எவ்வளவு கேவலமான விடயம் தெரியுமா?

காலையிலிருந்தே அம்மா பல முறை கேட்டுவிட்டார் ஏன் முகம் சரியில்லை என்று. எனக்கும் பதில் சொல்லத்தெரியவில்லை. வாழ்வின் மிகப்பெரியதொரு முடிவை நான் எடுத்திருக்கின்றேன் என்று எப்படிச்சொல்வது? அண்ணாவின் இழப்பிற்குப் பின் அம்மாவிற்கு எதுவும் சொல்லி மேலும் காயப்படுத்தக்கூடாது என நினைக்கின்றேன். ஆனால் என்னால் முமூடி அணிய முடியவில்லை. இதனாலேயே என் அறைக்குள் ஒளிந்துகொள்கின்றேன் நான். நான் வாழ்நாளெல்லாம் ஒளிந்திட முடியாது உண்மைகளை எதிர்கொண்டாகத்தானே வேண்டும். ஆனால் அவர் கேட்ட பின் தான் யோசித்துப்பார்க்கின்றேன்…. கட்டாயம் வைத்திய நிபுணர் ஒருவர் தான் வைத்தியசாலை கட்ட என் சகோதரன்களுடன் கைகோர்க்க வேண்டுமா? அவர்களுக்கு “வைத்திய நிபுணர்” என்பதை விட சகோதரியின் வருங்கால “துணைவர்" என்பது தான் முக்கியமாயிருந்திருக்கும். துணைவர் யாராயிருந்தால் என்ன? என்ன பதவியிலிருந்தால் என்ன? என் வருங்கால துணைவர் வைத்தியசாலை கட்ட முதலீடு செய்வார். இதில் மாற்றமில்லை. ஆனால் நிச்சயம் வைத்தியராகத்தானிருக்க வேண்டுமென்பதில்லை.  
 

பக்கம்: 1615

 வணக்கம் டைரி, 
இன்று காலையிலிருந்து மனம் கொஞ்சம் தெளிவாயிருக்கின்றது. அதேவேளை பதற்றமாகவும் இருக்கின்றது. நேற்று என்ன யோசித்தேனோ அதனை அவருக்கு அனுப்பிவிட்டேன். இனி எனக்கு அவருடன் பேச எதும் எஞ்சியிருப்பதாக தெரியவில்லை. சேர்ந்திருந்த காலத்தில் ஏதாவது பரிமாறல்கள் இருந்தால் தானே அதனை இன்று இழந்ததாக யோசிப்பதற்கு? முதல் வேலையாக மின்னஞ்சல் அனுப்பிய பின் "இனிமேல் வீட்டாக்களுடன் பேசவும்” என குறுஞ்செய்தியனுப்பிவிட்டு அவர் இலக்கத்தை Block செய்துவிட்டேன். ஆனால் எங்கேயாவது போய் வந்தால் நன்றாகவிருக்கும் என தோன்றுகின்றது. பாசிக்குடாவில் இரு நாட்கள் பயிற்சி இடம்பெறவுள்ளதாக மின்னஞ்சல் கிடைத்துள்ளது. சம்மதித்துவிட்டேன். இந்த இரு நாட்கள் தனியாக இருந்து யோசிக்கலாம்….. இந்த இடைவெளி எனக்கு தேவையாகவிருக்கின்றது. 

பக்கம்: 1618

இனிய நாட்குறிப்பே,
அம்மா திட்ட திட்ட கொழும்பிலிருந்து வந்த கையோடு இன்று இந்த பயிற்சிக்கு வந்துவிட்டேன். மனம், உடல் இரண்டுமே சோர்வாயிருக்கின்றது. ஆனால் இன்று மாலையில் இரண்டு மணி நேரங்கள் பயிற்சி இருக்கின்றது என்றார்கள். தந்த கோப்பி உண்மையில் அபாரம். என்னை சோர்விலிருந்து மீட்க வந்த தேவதை! 

பயிற்சியறைக்குள் வந்த பின்னர் தான் வளவாளரை பார்த்தேன்… முன்னரே தெரிந்திருந்தால் ஓட்டமெடுத்திருப்பேன். இப்பவும் ஓடத்தான் முயற்சித்தேன். ஆனால் இருட்டிவிட்டது. இங்கிருந்து போக முடியாது அது ஒழுங்கமைப்பாளர்களுக்கு தலைவலியுமாகிவிடும். இப்படியொரு சந்திப்பை இத்தனை வருடங்களின் பின் நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் நான் உடைந்திருக்கும் இந்த தருணத்தில்…. கடவுள் எப்பவுமே இரு வலிகளை ஒன்றாகத்தான் தந்துவிடுகின்றான். எப்பவோ முடிந்தது முடிந்ததாகவே இருக்க கூடாதா…..

பக்கம்: 1619

 வணக்கம் நாட்குறிப்பே, 
இன்றைய நாளில் என்ன உணர்வில் நான் இருக்கின்றேன் என்பது எனக்கே புரியவில்லை. வளவாளராக நிற்பவர் சொல்லும் எதுவே எனக்கு ஏறவில்லை. நிமிர்ந்து பார்க்கவும் அறம் தடுக்கின்றது. குனிந்த படி கவனிப்பதாக பாவனை செய்துகொண்டு என் குறிப்பேட்டின் தாளிலெல்லாம் கிறுக்கித் தள்ளுகின்றேன் நான். 

ஆனால் விரிவுரையின் போது அவர் அடிக்கடி இருமுவது எனக்கு புரிகின்றது. இருந்த அழுத்தத்தில் வழமையாக கொண்டு வரும் எதுவும் இன்று என் பையில் இல்லை. மதிய உணவுவேளையில் என் வைத்திய நண்பனை வற்புறுத்தி மருந்துகளை வரவழைத்துவிட்டேன். "உனக்கு வருத்தத்தினை காணவில்லை. எதற்காக இவ்வளவு தூரம் வரவழைத்தாய்" என்று தந்துவிட்டு போகும் போது திட்டிவிட்டுத்தான் போனான்யாருக்குமே தெரியாது. மதிய உணவின் பின்னரான விரிவுரையின் போது அவர் இருமும் சத்தம் தலைகுனிந்து கிறுக்கிக்கொண்டிருக்கும் எனக்கு கேட்டது. நிமிர்ந்து விற்றமின் அல்லது விக்ஸ் தரவா என்று கேட்டேன். இரண்டும் தந்தால் நல்லது என்றார். அருகில் வந்து கையை நீட்டியபோது இரண்டையும் கொடுத்தேன்.

இரவுணவின் போது இருவரும் எதிர்எதிரே தான் அமர்ந்திருந்தோம். நான் தான் அதிகம் பார்த்துக்கொண்டிருந்தேன். சில நேரங்களில் அவர் திரும்பும் போது என்னை கவனித்ததாகபடுகின்றது. ஆனால் இது என் கள்ள மனதினாலுமாயிருக்கும். 

உணவின் பின்னர் எல்லோரும் நீச்சல் தடாகம் அருகில் அமர்ந்து பாட்டுக்குப்பாட்டு பாடிக்கொண்டிருந்தோம். திடீரென என்னருகில் தான் வந்தமர்ந்தார். இது எதேச்சையானது தான். ஒவ்வொருவரும் தமக்குப்பிடித்த பாடலை கூற ஒருவர் பாடிக்காட்டிக்கொண்டிருந்தார். இவர் “சுடுகாட்டு” பாடல் பாடும் படி கேட்டார். இதென்ன இரசனை? எல்லாம் நல்லாத்தானே போகின்றது.. ஏன் இந்தப்பாடலை விரும்பி கேட்குமளவு சோகம்….? "இதை ஆராயாதே…. உன் வேலையைப்பார் என்றும் இது முடிந்து போனவிடயம் விட்டுவிடு"  என்றும் மூளை சொல்கின்றது. மனதிற்கு தான் அது புரியவில்லை.  
 

பக்கம்: 1620

 நாட்குறிப்பே,
இன்று மதியத்துடன் பயிற்சி முடிந்துவிட்டது. இன்று நாம் இருவருமே கறுப்பில் தான் உடையணிந்திருக்கின்றோம். நிகழ்வின் இறுதியில் வளவாளரின் இலக்கம் வாங்க எல்லோரும் முண்டியடிக்கின்றார்கள். நான் மட்டும் வாங்கவில்லை. அருகிலிருந்த தோழி நீங்கள் வாங்கவில்லையா என்று கேட்டார். என்னத்திற்கு தேவையில்லை என்றுவிட்டேன். ஆனால் பொய் என்னிடம் ஏற்கனவே உள்ளது. இந்த இலக்கத்தினை எடுத்த அன்று பேசியிருந்தால் இருவர் வாழ்க்கையும் மாறியிருக்க கூடும். விதி யாரைத்தான் விட்
து

வெளியேறும் போதும் சில தடவைகள் திரும்பிப்பார்த்தேன். அவரின் முகத்தில் பல வருடங்கள் முன் நான் பார்த்த பழைய களையில்லை. ஏதோவொரு பிரச்சினை இருக்கின்றது. ஒருவேளை இது களைப்பால் கூட வந்திருக்கலாம். அந்த இடத்தினை விட்டு வெளியேறும் போது மனம் வலிக்காமலில்லை. நான்கு நாளைக்கு முன்னர் நான் பெரிய முடிவொன்றினை எடுத்த போது கூட ஏற்படாத வலியிது. 

வீடு வந்தாகிட்டு. யாருடைய பேச்சிலும் பார்வையிலும் மாற்றமில்லை. அப்படியென்றால் இன்னும் இந்த விடயம் வீட்டவர்களுக்கு தெரியவில்லை. பொறுத்துப்பார்க்க நினைத்துவிட்டேன்.  

எனக்கு பயமான விடயங்களில் ஒன்று கதவை மூடி இருட்டில் தூங்குவது. சிறுவயதில் ஒரு சம்பவத்தினால் ஏற்பட்ட பாதிப்பு இது. வழமையாக புத்தகம் வாசித்தபடி தூங்கிவிட்டால் அண்ணாக்கள் என் அறையை கடக்கும் போது கண்டால் சத்தமின்றி போர்வையை மூடி விளக்கணைத்துவிட்டு போவதுண்டு. ஆனால் குட்டியண்ணா அப்படியல்ல….. பொதுவில் ரிமோட் சண்டை தொடக்கம் பாரிய யுத்தங்கள் வரை எமக்குள் நடப்பதுண்டு. கடும் கொதியன், சண்டியன். ஆனால் இப்படி என் அறையைத் தாண்டும் போது நான் தூங்கியிருந்தால் நெற்றியில் அல்லது என் புறங்கையில் முத்தமிட்ட பின் தான் போவார். இந்த முத்தங்களுக்காகவே தூங்குவதாக நடித்து முத்தம் தந்து போன பின் விளக்கை மீண்டும் போட்ட நாட்களுண்டு. 

இன்றும் அவசரமாக உன்னில் கிறுக்கிவிட்டு தூங்குவதாக நடிக்கப்போகின்றேன். இன்று நான் இருக்கும் மனநிலையில் இந்த முத்தங்கள் எனக்குத்தேவைப்படுகின்றன. முத்தங்கள் எல்லாமே காமத்தில் சேர்த்தியில்லை தானே…. பல நேரங்களில் அதுவொரு பாதுகாப்பு உணர்விற்கான அச்சாரங்கள்!    
 
 

No comments:

Post a Comment

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை