பசி
அடுப்பின் சாம்பலில்
இன்றைய நாளைத் தேடி
ஒரு தாய் கைகளால் அலசுகிறாள்.....
அரிசி தீர்ந்த வீட்டில்
கனவுகள் மட்டும்
இன்னும் கொதிக்கின்றன.
பசியை
குழந்தைகள் அழுகையால் சொல்கின்றனர்,
பெரியவர்கள்
மௌனத்தால் மறைக்கிறார்கள்.
வயிற்றுக்குள் விழும் வெற்றிடம்
சாப்பாட்டின் இல்லாமை அல்ல— அது
மனித மதிப்பின் இடைவெளி.
விழாக்கால விளக்குகளுக்கு நடுவே
ஒரு தட்டு எப்போதும் காலியாகத்தான் இருக்கிறது,
அதில் - நீதியையே பரிமாற வேண்டும்
ஒரு நாள்..............
பிரிவு
பிரிவு
வாசல் மூடப்பட்ட சத்தமல்ல —
உள்ளே எதிரொலி மட்டும்
தங்கிப் போவதற்கு....
நாம் பகிர்ந்த
சிறிய சிரிப்புகள்
இப்போது பெரிய மௌனங்களாகி
அறைகளை நிரப்புகின்றன.
உன் பெயர்
என் நாள்காட்டியில் இல்லை,
ஆனால் - என் நினைவுகளில்
இன்னும் தேதி மாறவில்லை.
காலம்
எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறது.....
(உன்னை ) இழந்ததை
எப்படி இழக்காமல் இருக்கலாம் -
என்கின்ற ஒன்றைத் தவிர....
(இன்றைய பேரூந்து கிறுக்கல்கள் 05.01.2026)
No comments:
Post a Comment