Wednesday, January 21, 2026

மனசாட்சி


Vintage Lady Justice Oil ' Poster, picture, metal print, paint by Muntwalt  | Displate 

கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை மட்டும் விளங்கப்படுத்த வேண்டும், பாடத்தில் சந்தேகமிருந்தால் விரிவுரையாளருக்கான அறைக்கு வந்து தான் விளக்கம் கேட்க வேண்டும் என பல வழமையான “வேண்டும்” என்னுடைய கற்பித்தல் அகராதியிலில்லை. ஒரு மாணவியாக மேற்குறித்த “வேண்டும்” களை கடந்தவள் என்ற வகையில் எனக்கு இவற்றில் உடன்பாடில்லை. எமது ஆசிய நாடுகளில் ஒரு பிள்ளை வீட்டை விட்டு 4 அல்லது 5 வயதில் கற்றலுக்காக அடுத்த வட்டத்தினுள் நுழைகின்றது. பதின்மவயது வரை ஆசான்கள் தான் இவர்களது பண்புகளை, கற்றலின் கொள்ளளவினை தீர்மானிக்கின்றார்கள். அதன் பின்னர் தொழிற்பயிற்சி அல்லது பல்கலைக்கழகத்தில் நுழையும் போது விரிவுரையாளர்கள் இவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார்கள். ஆனால் எல்லா ஆசான்களும் மாணவர்களை வழிநடத்துகின்றார்களா என்றால் அது கேள்விக்குறியானதே. என்னைப்பொறுத்தளவில் பாடங்களை கற்பித்தலை விடவும் முக்கியமானது மாணவர்களுக்கான ஆளுமை விருத்தியும் வழிநடத்தலும் என்பேன். இதனை நான் வளவாளராக பயணிக்கும் அல்லது விரிவுரையாற்றும் தரப்பினரிடையேயும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். என் மாணவர்களிடம் தோழியாக இருக்கவே நான் விரும்புவதுண்டு. 


இதனால் தானோ என்னவோ என் மாணவர்கள் தங்களுடைய அந்தரங்கங்கள், தனிப்பட்ட விடயங்களை கூட என்னிடம் பகிர்வதுண்டு. வகுப்பில் நுழைந்தவுடன் பாடம் எடுப்பதை விடவும் பதினைந்து நிமிடங்களாவது அன்று மனதில் எமக்கு தோன்றிய விடயங்களை நாம் பகிர்ந்துகொள்வதுண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற உளவியல் அழுத்தங்கள் மற்றும் இதன் போதான உடல் நோவினை கூட என் மாணவிகளின் முகத்தினை பார்த்து ஓரளவாவது விளங்கிக்கொள்ள என்னால் முடிவதுண்டு. இதனை தாண்டி தனிப்பட்ட விடயம் சார் பிரச்சினை என்றாலும் கூட அவர்கள் முகமே காட்டிக்கொடுத்துவிடும். ஏதாவது பேச வேண்டுமாயின் என் மாணவர்களும் தயங்காமல் என்னிடம் பேசுவார்கள், விரிவுரையாளர்களுக்கான அறை தாண்டி நூலகத்தில், தோட்டத்தில் அமர்ந்து கூட நாம் பேசிக்கொள்வதுண்டு, இதற்கு எம்மிடையான குறைந்தளவு வயது வித்தியாசமும் காரணமாயிருக்கலாம். என் சக விரிவுரையாளர்கள் கூட சில நேரங்களில் நான் மாணவர்களுக்கு அதிக இடம் கொடுப்பதாக பேசிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் மரியாதைக்குறை ஏற்டும் என்பதும் மாணவர்கள் எம்மை மதிப்பது குறைந்துவிடும் என்பதும் அவர்கள் வாதம். ஆனால் வெளிநாடுகளில் மாணவர்கள் ஆசானை பெயர் சொல்லி கூப்பிடுவது போன்று நாமும் ஆரம்பித்தால் நல்லது என்பதே என்னுடைய கருத்து.

இவை ஒரு புறமிருக்க கடந்த மாதத்திலிருந்து நான் கற்பதற்காக நாடு கடந்து வந்துவிட்டேன். எனினும் இணையவழி மூலம் விரிவுரையாற்றி வருகின்றேன். என்ன தான் பேசினாலும் நேரில் என் மாணவர்களுடன் பேசுவதையும் அவர்களை அவதானிப்பதையும் இணையவழி மூலம் நடைமுறைப்படுத்த முடிவதில்லை. நான் அங்கு விரிவுரையாற்றி வந்த காலப்பகுதியில் என் மாணவியொருத்தி நல்ல கெட்டிக்காரி, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள் திடீரென சில நாட்களாக யோசனையுடன் இருப்பதை அவதானிக்க முடிந்தது. தனியாக சந்தித்து பேசிய போது தான் ஒருவரை நேசிப்பதாகவும் அவரும் தன்னுடைய செய்கையில் தன்னை நேசிப்பதை வெளிப்படுத்துவதாகவும் ஆனால் இருவரும் நேரிடையாக சொல்லிக்கொள்ளவில்லை எனவும் இது தனக்குள் ஒருவித பதற்றத்தினை ஏற்படுத்துவதாகவும் பகிர்ந்துகொண்டாள். நேசிப்பென்பது தடால் என்று போய் ஐ லவ் யூ என்று சொல்லிவிடும் விடயமல்ல. இருவரும் முதலில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுங்கள். அந்தப்புரிதல் ஆழந்த அன்பை, முதிர்ச்சியை இருவருக்குள்ளும் தோற்றுவிக்கும். அது ஒரு கணத்தில் தன்னை பரிமாறிக்கொள்ளும் என்றெல்லாம் பேசி ஒருவிதமாக அவளை தேற்றியிருந்தேன். அதன் பின்னர் நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பரீட்சை, என்னுடைய தனிப்பட்ட விடயங்கள், பயணங்கள் என இரு மாதங்களாக அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. ஆனூல் முகநூலில் “மிஸ் நீங்க சொன்னது சரி. நான் இப்போது படிப்பில் மட்டும் கவனஞ்செலுத்துகின்றேன்…” என்று கடந்த பிறந்த நாளின் போது என்னை வாழ்த்திய பின் அனுப்பியிருந்தாள். இன்று அதிகாலையில் எழுப்பி தொலைபேசியினைப் பார்த்தால் அவளிடமிருந்து பல அழைப்புக்கள், ….. என்று குறுஞ்செய்தி வேறு.  இலங்கைக்கும் நான் தங்கியுள்ள நாட்டிற்கும் நேர வித்தியாசமுண்டு. நான் அழைப்புக்களை பார்த்த போது அங்கு இரவாயிருக்கும். பரவாயில்லை என்று எடுத்துப்பார்த்தால் அழைப்பு எடுக்கப்பட்டாலும் அந்தப்பக்கம் விம்மல் சத்தம். நானும் சில நிமிடங்கள் பேசாமலிந்த பின்னர் என்னவென்று வினவினால்…….. 

“மிஸ் நான் உங்களிடம் சொன்னேனே அவர் என்னைப் பற்றி ஒருவரிடம் தவறாக கதைத்துள்ளார்….. எனக்கு அவமானமாகவும் கவலையாகவுமிருக்கு….”


ஏன் அவருக்கு உங்களை பிடிக்கவில்லையா……? 

“ தெரியாது.. ஆனால் அவர் செய்தவை நடந்துகொண்டவை அப்படித்தான் இருந்தது…. திடீரென என்னை பொதுவில் அவமானப்படுத்த அல்லது நான் ஏதாவது சொன்னால் மட்டந்தட்டி பேச ஆரம்பித்தார். ஒருவேளை நான் விருப்பத்தினை வெளிப்படையாக சொல்லவில்லை என்பதால் தான் புரிதல் இன்றி அல்லது இயலாமையில் பொறுமையின்றி கதைக்கின்றார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என் நண்பியிடம் தான் என்னை விரும்பவில்லை என்றும் நான் தான் அவர் பின்னால் விருப்பம் கேட்டுத் திரிந்ததாகவும் அவர் என்னிடம் இல்லை என்று சொன்னதாகவும் சொல்லியிருக்கின்றார். எனக்கு அவமானமாக இருக்கு…….”


இடையில் இருப்பவர்கள் கதைப்பது இருக்கட்டும் நீங்க இது பற்றி அவரிடம் பேசலையா….?


வட்ஸ்அப்பில் வொயிஸ் போட்ட நான் மிஸ், பார்த்திருக்கின்றார் என்று காட்டுகின்றது…ஆனால் அவர் பதில் போடல….   

இதே மாதிரியொரு சந்தர்ப்பம் என்னையும் கடந்திருக்கின்றது. இங்கு வட்ஸ்அப் அங்கு மின்னஞ்சல். வுpத்தியாசம் அவ்வளவே. வுலியெல்லாம் ஒன்று தான்…. ஆனால் இதற்காக மனவருத்தப்பட்டு, அழுது சற்று நாள் கழித்து யோசித்துப்பாருங்கள்… ஒருவருடன் வாழ்தல் என்பது சில நாட்களான விடயமல்ல. இன்றைய நாட்களில் சமூக ஊடக ஆதிக்கம் மற்றும் மனிதத்தொடர்புகள் மலிந்துபோய் விட்டன. உறவுகளுக்கிடையான நேர்மை தன்மை குறைந்துவிட்டது.


1.    முதலாவது நாம் ஒருவரை நேசித்தால் அவரை மட்டந்தட்டுவது, அவமானப்படுத்துவது , கோபப்பட்டு கத்துவது எல்லாம் எதனால்…? நீங்கள் அந்த உறவிற்கு நேர்மையில்லாவிட்டால் தான் இந்த இயல்புகள் உங்களை ஆக்கிரமிக்கும். கோபம் என்பது ஆண்மையல்ல. அது அதைரியத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் உச்சம்.  
2.    நாம் ஒருவரை நேசிக்க முன் அல்லது உறவுநிலைக்கு தேர்ந்தெடுக்க முன் ஆழமாக யோசிக்க வேண்டும். நம் வார்த்தைகளாலோ செய்கைகளாலோ ஒருவருக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பின்னர் அதை பூசிமெழுகுவது ஈனசெயல்.
3.    நம்பிக்கையை ஏற்படுத்தும் அதேவேளை திறந்த உரையாடல்களை மேற்கொள்வது, ஒருவேளை உங்களுக்கு கடந்தகால முரண்கள் இருப்பின் அதனை துணையாக வர இருப்பவரிடம் பகிர்வதே நாகரீகம். மற்றும் படி நுனிநாக்கு ஆங்கிலமும் உடுத்துகின்ற உடைகளும் அல்ல
4.    நமக்கு சரியென்று சொன்னால் புகழ்வதற்கும் இல்லை என்றால் அவமானப்படுத்துவதற்கும் அன்பு என்பது வியாபாரமல்ல. நம்மைவிட்டு பிரிந்தாலும் நம்மால் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் ஒதுங்குவதே மனிதம். 
5.    தவறான புரிதல், இடையில் நிற்பவர்களால் சொல்லப்படும் விடயங்கள் உங்களை ஏதோவொரு கணத்தில் உங்களை நேசிப்பவரைப்பற்றி பிழையாக பேச தூண்டிவிட்டது என வைத்துக்கொண்டாலும் ஒருவர் தன்னுடைய வலியை கண்ணீருடன் சொல்லும் போது உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தவில்லையா? குறைந்தபட்சம் என்னை மன்னித்தவிடு என்று சொல்வதில் நீங்கள் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. 
6.    ஒருவiர் அதுவும் நம்மை நேசித்தவர்களை (நீங்கள் நேசிக்கவில்லை என்றாலும்) காயப்படுத்தி விட்டோம் என்று தெரிந்தும் உலகத்திற்கும் சமூக ஊடகங்களிலும் நடிக்கின்றீர்கள் என்றால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளலாம். நீங்கள் மகாநடிகர். நீங்கள் இன்று செய்திருப்பது முதல் தடவையாக இருக்காது. பழக்கப்பட்டவர்களால் மட்டுமே அடுத்தவர் வலியை இலகுவாக கடக்க முடியும். 
7.    நீங்கள் அடுத்தவர் கௌரவத்தினை குறைக்கும் போதும் அவர்கள் மீதும் கறைபூசும் போதும் இதனை நினைவில் வையுங்கள். இன்று நீங்கள் வென்று விட்டதாக தோன்றலாம் அல்லது நீங்கள் விம்பத்தினை உருவாக்கலாம். பிழையே செய்யாத நல்லவனாக நடிக்கலாம். ஆனால் காலம் சிறந்த நீதிபதி. அதன் கணக்கு என்றும் தப்புவதில்லை. நீங்கள் யாரை காயப்படுத்தினீர்களோ அவர்கள் வாழப்போகும் வாழ்வு உங்களை சுட்டெரிக்கும். நீங்கள் இழந்த வாழ்வை இன்னொருவர் வாழ்ந்துகொண்டிருப்பார். இதை விடவும் தண்டணை உங்களுக்கு ஏது….?
8.    சமூகஊடகமும், அதில் நீங்கள் வாழும் இரட்டை அர்த்த வாழ்வும் அல்ல வாழ்க்கை. ஒருவருடன் கைகோர்த்து நீண்ட பயணம் போவதும் வளமான தலைமுறையை உருவாக்குவதுமே வாழ்க்கை. இன்றைய விம்பங்கள் ஒரு நாள் உடையும், முதுமை உங்களை தழுவும். ஒரு பொழுதில் சாய்ந்திருக்கும் போது நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கும். அதில் ஆனந்தமும் இருக்கும் வருத்தமும் இருக்கும். இந்த இரண்டில் வருத்தம் இருக்குமென்றால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று மட்டுமே அர்த்தம். 

9.ஒருவேளை ஒருவர் உங்களை நேசித்து கேட்டால் கூட ஆம்/ இல்லை என்று சொல்கின்றதை மட்டும் செய்யுங்கள். உங்களை கதாநாயகர்கள் என்று மற்ற ஆண்கள், பெண்கள் என நீங்கள் வழிபவர்களிடம் காட்டிக்கொள்வதற்காக மற்றவர்களை, அவர்களது சுயகௌரவத்தினை காயப்படுத்தாததீர்கள்.  


அன்புத்தோழியே, அதிகம் அழாதே.. கண்ணீர் விலை மதிக்க முடியாததொன்று அதனை உயரிவர்களுக்காக மட்டுமே சிந்த வேண்டும். கண்ணீர் இன்றி ஒரு உண்மைக்காதல் இருப்பதில்லை. ஆனால் அந்தக்கண்ணீரை துடைக்குமளவு கம்பீரமான, முதிர்ச்சியான ஒருவரை நாம் நேசிக்க வேண்டும். முதலில் மூன்றாம் நபரிடம் பேசியிருக்க கூடாது, அல்லது சுட்டிக்காட்டப்பட்டவுடன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் அல்லது இதனை சீர்செய்ய முதிர்ச்சியான நண்பர்கள், உறவுகளை வைத்து உன்னை தொடர்புகொள்ள முயற்சித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத ஒருவரை தேடாதே அன்பே. இன்று நடுவில் விட்டுவிட்டு கறைபூசுபவர்கள் நாளை வாழ்க்கை நடுவிலும் விட்டுவிட்டு ஓடுவார்கள். அழகு, பணம், செல்வாக்கு, படிப்பு இவற்றைவிட பண்பும் மனச்சாட்சியும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு முக்கியம் தோழி. காலத்திடம் விட்டுவிடு. உண்மையில் அன்பிருப்பின் அது நம்மை சேர வழிதேடும். ஒருவேளை நம்மை தேடவில்லை எனில் நம்மை தேடாத அன்பு நமக்கெதற்கு……. ஒருவர் மீதான அன்பிற்காக குடும்பத்தை இழக்கலாம், பதவி, பணம், புகழ் இழக்கலாம் ஆனால் சுயகௌரவத்தினை மட்டும் இழக்கவே கூடாது. 


இதெல்லாம் தாண்டி இந்த உறவை உங்களால் தாண்ட முடியவில்லை என்றால் சற்று பொறுத்திருங்கள்.  இது உண்மையான அன்பு என்றால் அது வழியை கண்டுபிடித்து தானே வந்து சேரும். இது மனதை மட்டும் சாட்சியாக கொண்ட அன்பென்றால்.....
 


Friday, January 16, 2026

குட்டி சைக்கிள்!

   

Happy cute teen girl riding bicycle cartoon vector illustration | Premium  AI-generated vector

நேற்று நண்பர்களுடன் கலந்துரையாடுவதற்கானதொரு சந்தர்ப்பம். பேசிக்கொண்டிருக்குமு; போது எழுத்துப்பிழைகள் விடுவது குறித்து பேச்சு திரும்பியது. இன்று பெரும்பாலும் பலருக்கு எந்தவிடத்தில் ண, ன வரவேண்டும் ல,ழ,ள வரவேண்டும் என்பதெல்லாம் சற்று குழப்பமாகிவிட்டது. சில அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள் கூட எழுத்துப்பிழையின் காரணமாக கருத்துப்பிழையாக எழுதுவதை அவதானிக்க முடிகின்றது என்ற ரீதியில் கருத்துக்கள் பகிரப்பட்டன. எனக்கும் பொதுவாக எழுத்துப்பிழைகள் இருப்பது பிடிப்பதில்லை. இப்படி எழுத்துபிழைகள் விடுதல் நாம் மொழிக்கு செய்கின்ற துரோகம் என்று சிறுவயதிலேயே எனக்குள் தலையில் குட்டி ஏற்றிவிட்டார் என் ஆசான்.  என்னுடைய நண்பர் “ நான் அவதானித்த வரையில் உங்கள் படைப்புக்களில் எழுத்துப்பிழைகளை தேடிப்பார்க்க வேண்டியுள்ளதே. ஏப்படி மீரா உங்களால் முடிகின்றது என்று வினவினார்.. இதற்கு காரணம் ஒரு குட்டி சைக்கிலும் அதன் மீதான மோகமும் தான் என்றேன் நான். எப்படியென்று கேட்கின்றீர்களா….?

எனக்குச் சிறுவயதில் இருந்தே இந்த வாகனங்கள் மீதான மோகம் அதிகம். அதிலும் சைக்கிள் மோட்டார் வண்டி போன்ற இருசக்கர வாகனங்கள் மீது அலாதியானதொரு மோகமுண்டு. இந்த ஆசையில் எண்ணெய் ஊற்றுவது போல் மாமி தன்னுடைய மகனுக்கொரு சைக்கிள் வாங்கிக்கொடுத்திருந்தார். மச்சானுக்கும் எனக்கும் ஐந்து வயது வித்தியாசம். மாமியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து சற்றுத்தொலைவில் தான். மாலையில் அம்மா வேலை விட்டு வந்த பின்னர் அப்போதைய நிலையில் சுற்றியிருந்த பிரச்சினைகளுக்கு நடுவில் நாம் காற்றாட செல்லும் இடம் மாமியின் வீடு தான். அவருக்கும் மூன்று பிள்ளைகள். நாமும் போனால் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் விளையாடிக்கொண்டிருப்பதுண்டு. இந்த சைக்கிள் வாங்கப்பட்டதிலிருந்து மச்சானின் வேலையே நம்மை இருத்திவிட்டு அந்த சைக்கிளை வீட்டு முன்னறையில் அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று ஓடிக்காட்டுவது தான். வாங்கியதை சும்மா ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது. இப்படியப்படி ஓடிக்காட்டும் போது அதை ஓடிப்பார்க்க வேண்டும் என்பது விஸ்வரூபமாகிவிட்டது. அவர்கள் வீட்டிற்கு போய் வரும் வழியெல்லாம் அம்மாவிடம் எனக்கும் சைக்கிள் வாங்கித்தாங்க என்று அழுதுகொண்டுதான் வருவதுண்டு. அம்மா ஒவ்வொரு நாளும் அதற்கொரு சாட்டு வைத்திருப்பார். சின்னப்பிள்ளை தானே கொஞ்சம் வளர்ந்த பிறகு வாங்கித்தாறன் என்பார் ஒரு நாள்........, 5 ஆம் ஆண்டு கொலர்ஷிப் பாஸ் பண்ணினால் வாங்கித்தருவேன் என்பார் மற்றொரு நாள்........, சைக்கிள் ஓடி கீழே விழுந்தால் காயம் வரும் மகள் என்பார் இன்னொரு நாள். இவையெல்லாம் சாட்டுக்கள் என்றும் அப்பா இல்லாத குடும்பத்தில் தலைமைதாங்குகின்ற ஒரு தாயினால் அப்போது அந்த சைக்கிளை வாங்கித்தருமளவு பொருளாதாரம் இருக்கவில்லை என்பது தான் உண்மை என்று நான் உணர்ந்துகொள்ளுமளவு வயதில்லை எனக்கும். 

இப்படியானதொரு நாளில் தான் அவர்கள் வீடு சென்றிருந்த போது வழமை போன்று புளுகு குணத்தில் சைக்கிளிலில் வலம் வர ஆரம்பித்தார் மச்சான். ஒரு தடவை ஓடிப்பார்க்க கேட்டேன். மறுப்பில்லாமல் தந்துவிட்டார். அந்த குட்டி சைக்கிளை ஓடும் பிள்ளைகள் விழாதிருக்க இரு பக்கமும் சில்லுகள் பொருத்தப்பட்டிருந்தன. (உண்மையில் அது இரு சக்கர வாகனமல்ல நான்கு சக்கர வாகனம்). நானும் ஏறி இரண்டு தரம் ஓட ஆரம்பிக்க திடீரென சைக்கிளை தரும் படி மச்சான் கேட்க ஆரம்பித்து விட்டார். அவர் கேட்க நான் இறங்க மாட்டேன் என்று சொல்ல இருவருக்கும் சண்டையாகிவிட்டது. இந்த அடிபுடியில் வீட்டுக்குள் இருந்த மாமி வெளியில் வந்து செய்தது தான் ஹலைட். வந்த வரத்தில் எனக்கு முதுகில் அடித்து சைக்கிளிலிருந்து இறக்கிவிட்டார். அம்மா எப்போதும் சின்ன சின்ன விடயங்களுக்கு அடிப்பதில்லை. அடித்தாலும் காலுக்கு கீழ்தான் வெளுப்பார். அதுவும் பாடசாலை ரிப்போட் வரும் போது தான் நிகழும். எங்கிருந்து தான் நளினி (அம்மா) பிரசன்னமானார் என்று தெரியாது. மாமி என் மேல் கைவைத்த கோபம், தன்னுடைய இயலாமை எல்லாம் சேர்ந்து அருகிலிருந்த பிரம்பால் நன்றாக வெளுத்துவிட்டார். வெளுத்ததும் இல்லாமல் தரதர என்று இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அழுதபடியே தூங்கிவிட்டேன் நான். இதெல்லாம் நடக்கும் போது எனக்கு 9 வயதிருக்கும். அதற்கு பின் நான் அம்மாவிடம் சைக்கிள் கேட்டதில்லை. 

ஆனால் அடித்த இரவு என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியும். நான் உறங்கிய பின் அம்மா பல தடவை என்னுடைய கால் தழும்புகளை தடவிப்பார்த்து அழுதிருப்பார், சகோதரன்கள் அம்மாவை எதிர்த்து பேசியிருக்க மாட்டார்கள். ஆனால் சாப்பாட்டில் காட்டியிருப்பார்கள். அம்மம்மா இப்படியா "மாட்டடிக்கின்ற மாதிரி அடிப்பாய்" என்று அம்மாவை திட்டியிருப்பார்.  ஆனால் எப்படியோ இது நடந்த சில நாட்களில் எனக்கு அம்மா சைக்கிள் வாங்கி தந்துவிட்டார். ஆனால் இந்தப்பிரச்சினையின் தாக்கத்தால் மாமி வீட்டிற்கு போவது தடைப்பட்டுவிட்டது. தான் அடுத்த பிள்ளைகளில் கைவைப்பதில்லை அப்படியிருக்கும் போது தன் பிள்ளையில் மாமி கைவைத்துவிட்ட கோபம் அம்மாவிற்கு….. 

இவ்வளவு அமளிதுமளியின் பின் தான் சைக்கிளும் வந்தது. அதற்கிருந்த மரியாதையே தனி. யாரும் அதை தொடக்கூடாது. அதில் பாபி ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டி அதுவொரு இந்திரலோக வாகனம் போன்று மரியாதையாக தான் வைக்கப்பட்டிருந்தது. இதில் குஞ்சமாக அண்ணா செய்து தந்த காற்றாடி  செருகப்பட்டிருந்தது முன்பக்கம். சைக்கிள் ஓடும் போது அது வேறு சுழலும். ஆனால் சைக்கிள் வந்த பிறகு தான் அடுத்த பிரச்சினையும் வந்தது. சைக்கிளை எவ்வளவு நாள் தான் வீட்டுக்குள் ஓடுவது? நாலு வாகனங்களுக்கு நடுவில் வீதியில் ஓட வேண்டாமா..? அது தானே சைக்கிள் வாங்கினதுக்கும் அதனை ஓடும் எனக்கும் மரியாதை… இப்படியான நேரத்தில் தான் சாரங்கபாணி வாத்தியார் என் வாழ்க்கையில் என்டர் ஆகினவர். 

சாரங்கபாணி வாத்தியார் (அவருக்கு மாஸ்டர் என்ற ஆங்கில வார்த்தை பிடிக்காது) அதீத தமிழ் பற்றாளர், தமிழ் புலவர்…. அவரது அன்றாட வாழ்க்கையும் இயற்கையோடு அமைந்ததொன்று. இவர் மட்டக்களப்பின் பாடசாலையொன்றில் அதிபராகவிருந்தவர். இவர் அதிபராகவிருந்த காலத்தில் என்னுடைய அம்மம்மாவும் அதிபராக பணியாற்றியதில் எம்முடைய குடும்பத்தினருக்கு அவரை நன்கு தெரியும்.  சைக்கிள் வாங்கிய இக்காலப்பகுதியில் தான் எமது வீட்டிற்கு இருபது வீடுகள் அளவில் சற்றுத்தள்ளி வாடகை வீட்டிற்கு இவர் வந்திருந்தார். முதன் முறை வீட்டிற்கு அவரது மனைவியுடன் வந்த போது நான் வீணை வாசித்துக்கொண்டிருந்தேன். (மாலையில் சாமி விளக்கேற்றி வீணை வாசிப்பது இன்று வரையானதொரு பழக்கம்) அப்போது தான் சாரங்கபாணி வாத்தியார் பிள்ளைக்கு நல்ல உச்சரிப்பு ஏன் தழிழை கற்க என்னிடம் அனுப்ப கூடாது என்று தூண்டலை போட்டுவிட்டு போய்விட்டார். அம்மா என்னிடம் கேட்கும் போது நான் சைக்கிளில் போவதென்றால் தான் போவேன் என்று சொல்லிவிட்டேன். அம்மாவின் தமிழ் பற்றும் என் சைக்கிளை றோட்டில் ஓடும் ஆசையும் சங்கமித்தது இப்படி தான். ஆனால் இந்த 20 வீட்டை கடந்து போவதற்கு எனக்கு வீட்டிலிருந்த அக்கா அல்லது அம்மம்மா காவல் வருவார்கள். அவர்கள் நடக்கும் போது அவர்களை முந்திப்போய் திரும்ப திருப்பிக்கொண்டு வந்து மீண்டும் போய் என்று நான் பல தடவை ஓடி முடிப்பதுண்டு. எப்படியே இப்படி ஆரம்பித்தது தான் தமிழ் கற்றல். 


சாரங்கபாணி வாத்தியார் எப்போதும் சுத்த தமிழில் எந்த மொழி கலப்படமும் இல்லாமல் தான் பேசுவார். லகரம் , ணகரம் எல்லாம் அவர் வாயில் தாண்டவமாடும். ஓவ்வொரு நாளும் போனவுடன் வணக்கம் சொல்லி ஒரு திருக்குறளை பாவோதல் செய்ய வேண்டும். கருத்தும் சொல்ல வேண்டும். அவரது வீடு முழுவதும் நிறைய புத்தங்கள் வாரியாக பிரிக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். அந்த தட்டில் 5 வது புத்தகம் தான் மகாவம்சம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு போய் எடுக்கலாம். அவ்வளவு நேர்த்தி. செம்பில் தான் நீர் தருவார். “தண்ணீர்” என்று கேட்க கூடாது. “தண்” என்பது குளிர். தண்ணீர் என்றால் குளிர் நீரை குறிக்கும். குடிக்க நீர் தான் கேட்க வேண்டும் என்பார். அவ்வளவு மொழிச்சுத்தம் கொண்ட மனிதர். எழுதும் போது எழுத்துப்பிழை விட்டால் அழித்து எழுத விடமாட்டார். மீண்டும் எழுத வைப்பார். இப்போது கூட எனக்கு இந்தப்பழக்கம் உண்டு. அழிக்காமல் வெட்டிவிட்டு மீண்டும் எழுதுவேன். இது அப்போது விழுந்த அடிப்படை தான். பிழை விட்டால் தலையில் நானே குட்ட வேண்டும். என்ன சீழ்தலைசாத்தனார் போன்று கையில் எழுத்தாணி இருந்திருக்கவில்லை இல்லாவிடில் என் தலையில் பல புண்கள் உண்டாகியிருக்கும். ஒன்றரை மணிநேர வகுப்பின் இறுதியில் இதிகாச கதைகளை சொல்லி முடிப்பார். அவர் ஒரு நல்ல கதைசொல்லியும் கூட. 

வீதியில் சைக்கிள் ஓட வேண்டும் என்பது இறுதியில் தமிழை கற்றுத்தேர்வதில் வந்து நின்றது. என்னை சித்தவைத்தியம் படிக்க வைக்க வேண்டும் என்பதிலும் வாத்தியார் குறியாயிருந்தார். சித்தர் புத்தகங்களை என்னிடம் தந்து வாசிக்க வைப்பார். ஏறத்தாழ ஏழு வருடங்கள் அவரிடம் கற்றிருக்கின்றேன். உயர்தரத்தில் நான் கணிதத்துறையை தேர்ந்ததில் அவருக்கு அவ்வளவு விருப்பமில்லை. அவரிடம் ஆசீர் பெற போன போது சரி "கணிதத்திலும் தழிழைக்காண்" என்று தான் வாழ்த்தினார். இன்று எனக்கு தெரிந்திருக்கின்ற கைமருத்துவம், மூலிகையறிவு, கட்டக்கலையில் வாஸ்து குறித்த கற்றல் எல்லாமே அவர் போட்ட அத்திவாரம் தான். பல எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தகங்களை எழுத்துப்பிழை, கருத்துப்பிழை பார்க்க அனுப்பிவைப்பார்கள். நான் சரிபார்த்த பின்னர் பல புத்தகங்கள் அச்சாகியிருக்கின்றன. இவையனைத்தின் பெருமையும் அவரையே சாரும். இன்று அவர் உயிருடன் இல்லை. ஆனாலும் என்னைச் சேர்கின்ற அனைத்து பெருமைகளிலும் என் தமிழ் ஆசான் வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றார். சிலருக்கு சாவென்பதேயில்லை… அதில் இவரும் ஒருவர். 

இப்போது புரிகிறதா என்னுடைய குட்டி சைக்கிள் எங்கு என்னை இழுத்துப்போனதென்று… (இந்த குட்டி சைக்கிள் இன்று எவ்வாறு என்பீல்ட் இல் வந்து நிற்கின்றதென்பது வேறு கதை…) நமக்கு பிடித்தவர்கள் விடுகின்ற தமிழ்ப்பிழைகளை அவர்களிடம் சொல்லி திருத்திப்பாருங்கள்.... இதுவும் காதல் என்பார்கள் ... இல்லை இது தான் அவர் மீதானதும் தமிழ் மீதானதுமான காதல் என்பேன் நான்...... 







Wednesday, January 7, 2026

ஓ.... 2026


 புதுவருடம் பல புதிய அனுபவங்களுடன் ஆரம்பித்துள்ளது…

 



01.    நீதிமன்றம் உள்ளும் புறமும்

எல்லாவிடங்களுக்கும் பயணிக்க வேண்டும் அனுபவம் பெற வேண்டும் என்ற என்னுடைய கொள்கை இறைவனுக்கும் தெரிந்துவிட்டது போல சம்பந்தமில்லாத விடயத்தில் நானும் கோர்க்கப்பட்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியாகிவிட்டது. வீட்டிற்கு இது குறித்த பதிவுத்தபால் வந்த போது வீட்டாக்களுக்கும் பதட்டமாகி அவர்களது பதற்றம் என்னையும் தொற்றி அது ஒருவித பயம் கலந்த பதற்றத்தினை என்னுள் விதைத்துவிட்டது. எத்தனை படம் பார்த்திருப்போம் எத்தனை சட்டத்தரணிகள் கைகாலை அசைத்து பொயின்ட்டை பிடித்து குற்றவாளியை வாங்கு வாங்கு என்று வாங்கியிருப்பார்கள். சட்டத்தரணிகள் என்று நினைத்து கண்ணை கொஞ்சம் மூடினாலும் சிவாஜி, விஜய், நம்மட ஆள் சூர்யா என்று எத்தனை லோயர்கள்……  சரி இவர்கள் மாதிரி இல்லாட்டியும் வீட்டாக்கள் தேடிப்பிடித்த சட்டத்தரணியுடன் பேசி சகலதையும் சொல்லி …(வைத்தியரிமும் சட்டத்தரணியிடமும் பொய் சொல்லக்கூடாதாம்) தயாராகியாயிட்டு. நாளை வழக்கு என்றால் இன்றே எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அன்றிரவு நித்திரையும் இல்லை. காலையில் போட்ட கோப்பியை குடிப்பது கூட மறந்துவிட்டது. மனதுள் அவ்வளவு பதட்டம் இருந்தாலும் அவ்வளவு நாளும் காட்டி வந்த கெத்து லைட்டா என்னை விட்டு போறமாதிரி வேற இருந்தது. நான் இருந்த நிலையை பார்த்து ஏதாவது சாப்பிட்டு போ அல்லது நீதிமன்றத்தில் மயங்கிவிட்டால் என்று நச்சரிப்பு வேறு.. ஒரு மாதிரி சாப்பிட்டு தண்ணி குடித்து நெஞ்சைப்பிடித்த படி போனால் நடுப்பகுதியில் போய் அமரும் படி என்னுடைய சட்டத்தரணியும் சொல்லி விட்டார். நேரம் 9 மணி உள்ளே போய் பார்த்தால் ஏகப்பட்ட சனம். ஒரு பக்கம் ஆண்கள் மறு பக்கம் பெண்கள். போய் அமர்ந்தால் அவர்கள் ஏதோ வெளிநாட்டால் வந்து நடுவில் குந்தின மாதிரி என்னிடம் நூறு கேள்விகள் கேட்கிறார்கள். பதட்டத்தினை மறைத்து எப்போ ஆரம்பிக்கும் என்று காத்திருந்தால் 10 மணிக்கு திடீரென உரத்த குரலில் அறிவிப்பு. சற்று நேரம் கழித்து நீதிபதி உள்ளே வர அனைவரும் எழுந்துநின்று அவர் அமர்ந்த பின் அமர ஒரு சின்ன சத்தம் கூட இல்லை. 

முன்னாலிருப்பவர் வழக்கெண் மற்றும் பெயர்களை உரத்த குரலில் சொல்ல சட்டத்தரணிகள் அங்கு போகின்றார்கள் மெல்லிய குரலில் பேசுகின்றார்கள். கூப்பிட்ட வழக்காளியும் பிரதிவாதியும் எழுந்து அருகில் போகுமுன்னரே அடுத்த வழக்கிற்கான திகதி நீதிபதியால் வழங்கப்படுகின்றது. எழுந்து போனவர்கள் அப்படியே வெளியே போகின்றார்கள். என்னுடைய பெயரும் வாசிக்கப்பட்டு கிட்ட போகுமுன்னரே எல்லாம் சொல்லி முடிந்தாயிட்டு. அப்பாடா என்றிருந்தது. ஆனால் ஒரு கேள்வி இந்த படத்தில் காட்டுவது போல் நம்முடைய சட்டத்தரணிகள் குரலெழுப்பி, பொயிண்ட்ஸ் கண்டுபிடித்து கிழிகிழி என்று கிழித்து தொங்கவிடுவதெல்லாம் பொய்யாடா….. எத்தனை சினிமா எத்தனை வழக்கு எம்மை கதிரை நுனியில் அமர்ந்து பார்க்க வைத்திருக்கும். சட்டத்தரணி, எதிர்கட்சி வக்கீல், கள்ள பொலீஸ், நடுவில் அடிபட்டு தப்பிவந்து வாயால் இரத்தம் ஒழுக சாட்சி சொல்லும் ஹீரோ…………. சை சப்பென்றாகிவிட்டது எனக்கு…இனி எத்தனை வழக்கிற்கு கூப்பிட்டாலும் சங்கத்தின் சார்பில் ஆஜராக நான் தயார். 

02.    நடிப்பு…

இம்முறை இந்தியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற திரைப்பட விழாவில் என்னுடைய இரு ஆவணப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதற்காக இங்கு நின்றுகொண்டிருக்கின்றேன். மன்னிக்கவும் இதை தட்டச்சு செய்யும் போது காவா சாய் குடித்துக்கொண்டிருக்கின்றேன். கடையில் இல்லை நண்பனின் கைகளால் தயாரிக்கப்பட்டது. இவ் ஆவணப்படம் மற்றும் இது பெற்றுள்ள விருதுகள் குறித்து பத்திரிகை நிரூபர் என்னிடம் பல கேள்விகளை அடுக்கியிருந்தார். அதில் இரு வினாக்களும் பதில்களும்…..

நீங்கள் ஏன் ஆவணப்படங்களில் மட்டும் கவனஞ்செலுத்துகின்றீர்கள்? திரைப்படத்தில் ஆர்வமில்லையா?
இல்லை குறுந்திரைப்படங்கள் சில இயக்கியுள்ளேன். ஆனால் பிறரை நடிக்க வைப்பதில் எனக்கு பிடித்தம் இல்லை. தனிப்பட்ட முறையிலும் எழுத்திலும் கருத்திலும் என்னால் நடிக்க முடிவதில்லை. உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்தல், தரவுகளை சேகரித்தல் எனக்கு பிடித்துள்ளது. அதிலும் எனக்கு மருத்துவம் சார் ஆவணப்படங்கள் இயக்குவதில் தான் ஆர்வம். இதற்காக நிறைய மனிதர்களை சந்திக்கின்றேன். அவர்களுடன் பேசுகின்றேன். அவர்கள் மொழியிலேயே கலைப்படைப்பை நெறியாள்கை செய்கின்றேன்……கலையென்பது பிடித்ததை செய்வது தானே… அதை செய்கின்றேன். 

உங்கள் நாட்டில் இடம்பெறுகின்ற விழாக்களில் உங்கள் திரைப்படங்களை காணவில்லையே….?
முதலில் சில படங்களை அனுப்பியிருந்தேன். என்னுடைய படம் தெரிவுசெய்யப்பட வேண்டுமாயின் பலரிடம் சிரித்து பேசவேண்டியிருந்தது…. அங்கிருப்பவர்கள் அல்லது தெரிவு குழுவில் இருப்பவர்களின் இரட்டை அர்த்த பேச்சுகளை சகிக்க வேண்டியிருந்தது. எனக்கு இதில் உடன்பாடில்லை. என்னுடைய திறமை தான் மதிக்கப்பட வேண்டுமேயன்றி என்னுடைய மனம், முகம் அல்ல. படைப்பென்பது படைத்தவனுக்காக மதிக்கப்பட கூடாது. அல்லது தன்னுடைய படைப்பு மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக படைப்பாளி முகங்காட்டக்கூடாது. ஒரு காதல் எப்படி இனம், மதம், பணம், சாதி சக்கட்டு பாராமல் எம்மை கடக்குமோ அப்படி கலையும் படைத்தவனுக்காகவன்றி பிடித்துப்போக வேண்டும். ஒருவேளை என்னுடைய துணைவரே கூட தேர்வுக்குழுவில் இருந்தாலும் எனக்காகவோ எம்முடைய காதலுக்காவோ அன்றி  கருத்தியல் , காட்சியமைப்பு, கலைக்காக தான் என்னுடைய படைப்பு தேர்வுசெய்யப்பட வேண்டும் என விரும்புகின்றேன். எந்த விழா என்றாலும் நேர்மையாக தேர்வுகள் இடம்பெறுகின்றதென்றால் என்னுடைய படைப்பு அனுப்பிவைக்கப்படும். முகப்பூச்சு விருதுகள் எனக்கு வேண்டாம்.  என் மானம் சுயகௌரவம் விற்று தான் என் படைப்புக்களை காட்சிப்படுத்தவேண்டும் என்பதில்லை. 

3. குடையில்லா பொழுதில் கொட்டித்தீர்க்கும் மழை….


சும்மாயிருக்கும் போது எதுவும் நடக்காது அதேவேளை வாய்ப்புக்கள் வந்தால் குடையில்லாத நேரத்து மழை மாதிரி கொட்டித்தீர்த்து விடுகின்றன. ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பிற்காக வாய்ப்புக்கிடைத்து தயாராகிக்கொண்டிருக்கும் போது அடுத்தடுத்து நிறைய வாய்ப்புக்கள் என் அறைக்கதவினை தட்டோ தட்டென்று கட்டுகின்றன. திரைப்படத்துறை சார் பயிற்சியினை பெறுவதற்கு உலகலாவியரீதியில் 20 பேரில் ஒருவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளேன். இதற்கு 03 மாதகாலம் தேவை. அடுத்தது கடந்த ஆண்டு கட்டடத்துறை சார் விருதும் உலகின் முதல் 100 வடிவமைப்பாளரில் ஒருவர் என்ற பெருமையும் விருதும் இத்தாலியில் இடம்பெற்ற விருதுவிழாவில் கிடைத்திருந்தது. இதன் போது பல்வேறுப்பட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். எம்முடனும் கலந்துரையாடியிருந்தனர். புத்தாண்டு அன்று அதிகாலையில் ஓர் இனிய மின்னஞ்சல். குறிப்பிட்ட நிறுவனம் அடுத்த 03 ஆண்டுகளில் ஐந்து திட்டங்களை வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கவுள்ளதாம். அதற்கான வடிவமைப்புக்குழுவில் இணைந்துகொள்வதற்கான அழைப்பு அது. கூடவே இதில் ஈடுபடும் போது குடும்பத்தவர்களுடன் (துணைவர் மற்றும் குழந்தைகள் மட்டும் - அட ஒரு வருடத்திற்கு முன்னர் சொல்லியிருந்தால் ரெடியாகிருக்கலாம்..) பயணிப்பதற்கான பயண செலவு மற்றும் தங்கியிருப்பதற்கான பொறுப்பு அனைத்தும் அவர்களே முன்னெடுக்கின்றார்களாம். 

இப்படியே ஊர் உலகம் சுற்றினால் வீட்டில் இருப்பது எப்போது… குடும்பம், குழந்தை எப்போது என நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் வீட்டாக்கள்…. முடிவெடுக்க முடியாமல் ஒதுங்குவதா அல்லது நனைந்துவிடுவதா என்று தடுமாறிக்கொண்டிருக்கின்றேன் நான்... 

 4. வெள்ளை முக கற்பிதங்கள்

அண்மையில் பழைய மாணவர் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அங்கு போனால் எல்லாம் புதுமுகங்கள். அட நம்முடன் 12, 13 வருடங்கள் படித்தவர்கள் எங்கே என்று தேடினால்…. பெரும்பாலானோரை மதிக்கவே முடியவில்லை. எல்லாம் வைட்னிங் கிறீம் உபயம்…. அட கடவுளே வெள்ளை முகங்கள் தான் அழகு என்ற கற்பிதங்கள் எப்போது தான் இவர்களை விட்டுப்போகுமோ…. ஏன் இப்படி இரசாயனங்களை போட்டு இயற்கையழகை கெடுக்கின்றீர்கள் என்று பகிடியாக கேட்டால் “நீ வெள்ளையாக இருப்பதால் இப்படி பேசுகின்றாய்..” என்று மறுமொழி கிடைக்கின்றது. நான் கருப்பாயிருந்தாலும் இப்படித்தான் பேசியிருப்பேன். நிறத்தில் முகத்தில் என்ன இருக்கின்றது. பொதுவாக இந்த அழகுபடுத்தல்கள் எல்லாம் பெரும்பாலும் இன கவர்ச்சியக்கானவை தானே. என்னைப்பொறுத்தளவில் நான் ஓர் ஆணை என்னுடைய படிப்பு, திறமையால் குணத்தால் தான் கவரநினைப்பதுண்டு. அதேபோன்று ஓர் ஆண் என்னை கவரவேண்டுமென்றாலும் இவை தான் என்னை ஈர்க்கும். முற்போக்கு சிந்தனையும், முதிர்ச்சியும் ஆளுமையும் தான் தேவையேயன்றி வெளிப்பூச்சுகள் அல்ல… இதை சொல்லப்போனால் என்னை வித்தியாசமாக பார்க்கின்றார்கள்… அப்படியென்றால் இவரை பிடிக்குமா அவரைப்பிடிக்குமா என்று அவர்கள் எதையெல்லாம் இழிவென நினைக்கின்றார்களோ அதனை முன்னிருத்தி ஆண்களை சுட்டி என்னிடம் கேட்கின்றார்கள். இவ்வாறானவர்களிடம் சில விடயங்களை பேசாமல் கடப்பதே மேல்…..

"உன் கையிலா கடிகாரம்.......?
கடிகாரத்தின் கையில் நீ ....." - காசி ஆனந்தன்












Monday, January 5, 2026

பேரூந்து கிறுக்கல்கள்.......

வறுமை | vimalam 

 

பசி

அடுப்பின் சாம்பலில்
இன்றைய நாளைத் தேடி
ஒரு தாய் கைகளால் அலசுகிறாள்.....

அரிசி தீர்ந்த வீட்டில்
கனவுகள் மட்டும்
இன்னும் கொதிக்கின்றன.

பசியை
குழந்தைகள் அழுகையால் சொல்கின்றனர்,
பெரியவர்கள்
மௌனத்தால் மறைக்கிறார்கள்.

வயிற்றுக்குள் விழும் வெற்றிடம்
சாப்பாட்டின் இல்லாமை அல்ல— அது
மனித மதிப்பின் இடைவெளி.

விழாக்கால விளக்குகளுக்கு நடுவே
ஒரு தட்டு எப்போதும் காலியாகத்தான் இருக்கிறது,
அதில் - நீதியையே பரிமாற வேண்டும்
ஒரு நாள்..............

 

Sketch Of Eyes • 600+ reels on Instagram 

பிரிவு

பிரிவு
வாசல் மூடப்பட்ட சத்தமல்ல —
உள்ளே எதிரொலி மட்டும்
தங்கிப் போவதற்கு....

நாம் பகிர்ந்த
சிறிய சிரிப்புகள்
இப்போது பெரிய மௌனங்களாகி
அறைகளை நிரப்புகின்றன.

உன் பெயர்
என் நாள்காட்டியில் இல்லை,
ஆனால் - என் நினைவுகளில்
இன்னும் தேதி மாறவில்லை.

காலம்
எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறது.....
(உன்னை ) இழந்ததை
எப்படி இழக்காமல் இருக்கலாம்  -

என்கின்ற ஒன்றைத் தவிர....


(இன்றைய பேரூந்து கிறுக்கல்கள் 05.01.2026)

 

மனசாட்சி

  கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை ம...