Wednesday, January 21, 2026

மனசாட்சி


Vintage Lady Justice Oil ' Poster, picture, metal print, paint by Muntwalt  | Displate 

கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை மட்டும் விளங்கப்படுத்த வேண்டும், பாடத்தில் சந்தேகமிருந்தால் விரிவுரையாளருக்கான அறைக்கு வந்து தான் விளக்கம் கேட்க வேண்டும் என பல வழமையான “வேண்டும்” என்னுடைய கற்பித்தல் அகராதியிலில்லை. ஒரு மாணவியாக மேற்குறித்த “வேண்டும்” களை கடந்தவள் என்ற வகையில் எனக்கு இவற்றில் உடன்பாடில்லை. எமது ஆசிய நாடுகளில் ஒரு பிள்ளை வீட்டை விட்டு 4 அல்லது 5 வயதில் கற்றலுக்காக அடுத்த வட்டத்தினுள் நுழைகின்றது. பதின்மவயது வரை ஆசான்கள் தான் இவர்களது பண்புகளை, கற்றலின் கொள்ளளவினை தீர்மானிக்கின்றார்கள். அதன் பின்னர் தொழிற்பயிற்சி அல்லது பல்கலைக்கழகத்தில் நுழையும் போது விரிவுரையாளர்கள் இவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார்கள். ஆனால் எல்லா ஆசான்களும் மாணவர்களை வழிநடத்துகின்றார்களா என்றால் அது கேள்விக்குறியானதே. என்னைப்பொறுத்தளவில் பாடங்களை கற்பித்தலை விடவும் முக்கியமானது மாணவர்களுக்கான ஆளுமை விருத்தியும் வழிநடத்தலும் என்பேன். இதனை நான் வளவாளராக பயணிக்கும் அல்லது விரிவுரையாற்றும் தரப்பினரிடையேயும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். என் மாணவர்களிடம் தோழியாக இருக்கவே நான் விரும்புவதுண்டு. 


இதனால் தானோ என்னவோ என் மாணவர்கள் தங்களுடைய அந்தரங்கங்கள், தனிப்பட்ட விடயங்களை கூட என்னிடம் பகிர்வதுண்டு. வகுப்பில் நுழைந்தவுடன் பாடம் எடுப்பதை விடவும் பதினைந்து நிமிடங்களாவது அன்று மனதில் எமக்கு தோன்றிய விடயங்களை நாம் பகிர்ந்துகொள்வதுண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற உளவியல் அழுத்தங்கள் மற்றும் இதன் போதான உடல் நோவினை கூட என் மாணவிகளின் முகத்தினை பார்த்து ஓரளவாவது விளங்கிக்கொள்ள என்னால் முடிவதுண்டு. இதனை தாண்டி தனிப்பட்ட விடயம் சார் பிரச்சினை என்றாலும் கூட அவர்கள் முகமே காட்டிக்கொடுத்துவிடும். ஏதாவது பேச வேண்டுமாயின் என் மாணவர்களும் தயங்காமல் என்னிடம் பேசுவார்கள், விரிவுரையாளர்களுக்கான அறை தாண்டி நூலகத்தில், தோட்டத்தில் அமர்ந்து கூட நாம் பேசிக்கொள்வதுண்டு, இதற்கு எம்மிடையான குறைந்தளவு வயது வித்தியாசமும் காரணமாயிருக்கலாம். என் சக விரிவுரையாளர்கள் கூட சில நேரங்களில் நான் மாணவர்களுக்கு அதிக இடம் கொடுப்பதாக பேசிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் மரியாதைக்குறை ஏற்டும் என்பதும் மாணவர்கள் எம்மை மதிப்பது குறைந்துவிடும் என்பதும் அவர்கள் வாதம். ஆனால் வெளிநாடுகளில் மாணவர்கள் ஆசானை பெயர் சொல்லி கூப்பிடுவது போன்று நாமும் ஆரம்பித்தால் நல்லது என்பதே என்னுடைய கருத்து.

இவை ஒரு புறமிருக்க கடந்த மாதத்திலிருந்து நான் கற்பதற்காக நாடு கடந்து வந்துவிட்டேன். எனினும் இணையவழி மூலம் விரிவுரையாற்றி வருகின்றேன். என்ன தான் பேசினாலும் நேரில் என் மாணவர்களுடன் பேசுவதையும் அவர்களை அவதானிப்பதையும் இணையவழி மூலம் நடைமுறைப்படுத்த முடிவதில்லை. நான் அங்கு விரிவுரையாற்றி வந்த காலப்பகுதியில் என் மாணவியொருத்தி நல்ல கெட்டிக்காரி, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள் திடீரென சில நாட்களாக யோசனையுடன் இருப்பதை அவதானிக்க முடிந்தது. தனியாக சந்தித்து பேசிய போது தான் ஒருவரை நேசிப்பதாகவும் அவரும் தன்னுடைய செய்கையில் தன்னை நேசிப்பதை வெளிப்படுத்துவதாகவும் ஆனால் இருவரும் நேரிடையாக சொல்லிக்கொள்ளவில்லை எனவும் இது தனக்குள் ஒருவித பதற்றத்தினை ஏற்படுத்துவதாகவும் பகிர்ந்துகொண்டாள். நேசிப்பென்பது தடால் என்று போய் ஐ லவ் யூ என்று சொல்லிவிடும் விடயமல்ல. இருவரும் முதலில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுங்கள். அந்தப்புரிதல் ஆழந்த அன்பை, முதிர்ச்சியை இருவருக்குள்ளும் தோற்றுவிக்கும். அது ஒரு கணத்தில் தன்னை பரிமாறிக்கொள்ளும் என்றெல்லாம் பேசி ஒருவிதமாக அவளை தேற்றியிருந்தேன். அதன் பின்னர் நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பரீட்சை, என்னுடைய தனிப்பட்ட விடயங்கள், பயணங்கள் என இரு மாதங்களாக அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. ஆனூல் முகநூலில் “மிஸ் நீங்க சொன்னது சரி. நான் இப்போது படிப்பில் மட்டும் கவனஞ்செலுத்துகின்றேன்…” என்று கடந்த பிறந்த நாளின் போது என்னை வாழ்த்திய பின் அனுப்பியிருந்தாள். இன்று அதிகாலையில் எழுப்பி தொலைபேசியினைப் பார்த்தால் அவளிடமிருந்து பல அழைப்புக்கள், ….. என்று குறுஞ்செய்தி வேறு.  இலங்கைக்கும் நான் தங்கியுள்ள நாட்டிற்கும் நேர வித்தியாசமுண்டு. நான் அழைப்புக்களை பார்த்த போது அங்கு இரவாயிருக்கும். பரவாயில்லை என்று எடுத்துப்பார்த்தால் அழைப்பு எடுக்கப்பட்டாலும் அந்தப்பக்கம் விம்மல் சத்தம். நானும் சில நிமிடங்கள் பேசாமலிந்த பின்னர் என்னவென்று வினவினால்…….. 

“மிஸ் நான் உங்களிடம் சொன்னேனே அவர் என்னைப் பற்றி ஒருவரிடம் தவறாக கதைத்துள்ளார்….. எனக்கு அவமானமாகவும் கவலையாகவுமிருக்கு….”


ஏன் அவருக்கு உங்களை பிடிக்கவில்லையா……? 

“ தெரியாது.. ஆனால் அவர் செய்தவை நடந்துகொண்டவை அப்படித்தான் இருந்தது…. திடீரென என்னை பொதுவில் அவமானப்படுத்த அல்லது நான் ஏதாவது சொன்னால் மட்டந்தட்டி பேச ஆரம்பித்தார். ஒருவேளை நான் விருப்பத்தினை வெளிப்படையாக சொல்லவில்லை என்பதால் தான் புரிதல் இன்றி அல்லது இயலாமையில் பொறுமையின்றி கதைக்கின்றார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என் நண்பியிடம் தான் என்னை விரும்பவில்லை என்றும் நான் தான் அவர் பின்னால் விருப்பம் கேட்டுத் திரிந்ததாகவும் அவர் என்னிடம் இல்லை என்று சொன்னதாகவும் சொல்லியிருக்கின்றார். எனக்கு அவமானமாக இருக்கு…….”


இடையில் இருப்பவர்கள் கதைப்பது இருக்கட்டும் நீங்க இது பற்றி அவரிடம் பேசலையா….?


வட்ஸ்அப்பில் வொயிஸ் போட்ட நான் மிஸ், பார்த்திருக்கின்றார் என்று காட்டுகின்றது…ஆனால் அவர் பதில் போடல….   

இதே மாதிரியொரு சந்தர்ப்பம் என்னையும் கடந்திருக்கின்றது. இங்கு வட்ஸ்அப் அங்கு மின்னஞ்சல். வுpத்தியாசம் அவ்வளவே. வுலியெல்லாம் ஒன்று தான்…. ஆனால் இதற்காக மனவருத்தப்பட்டு, அழுது சற்று நாள் கழித்து யோசித்துப்பாருங்கள்… ஒருவருடன் வாழ்தல் என்பது சில நாட்களான விடயமல்ல. இன்றைய நாட்களில் சமூக ஊடக ஆதிக்கம் மற்றும் மனிதத்தொடர்புகள் மலிந்துபோய் விட்டன. உறவுகளுக்கிடையான நேர்மை தன்மை குறைந்துவிட்டது.


1.    முதலாவது நாம் ஒருவரை நேசித்தால் அவரை மட்டந்தட்டுவது, அவமானப்படுத்துவது , கோபப்பட்டு கத்துவது எல்லாம் எதனால்…? நீங்கள் அந்த உறவிற்கு நேர்மையில்லாவிட்டால் தான் இந்த இயல்புகள் உங்களை ஆக்கிரமிக்கும். கோபம் என்பது ஆண்மையல்ல. அது அதைரியத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் உச்சம்.  
2.    நாம் ஒருவரை நேசிக்க முன் அல்லது உறவுநிலைக்கு தேர்ந்தெடுக்க முன் ஆழமாக யோசிக்க வேண்டும். நம் வார்த்தைகளாலோ செய்கைகளாலோ ஒருவருக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பின்னர் அதை பூசிமெழுகுவது ஈனசெயல்.
3.    நம்பிக்கையை ஏற்படுத்தும் அதேவேளை திறந்த உரையாடல்களை மேற்கொள்வது, ஒருவேளை உங்களுக்கு கடந்தகால முரண்கள் இருப்பின் அதனை துணையாக வர இருப்பவரிடம் பகிர்வதே நாகரீகம். மற்றும் படி நுனிநாக்கு ஆங்கிலமும் உடுத்துகின்ற உடைகளும் அல்ல
4.    நமக்கு சரியென்று சொன்னால் புகழ்வதற்கும் இல்லை என்றால் அவமானப்படுத்துவதற்கும் அன்பு என்பது வியாபாரமல்ல. நம்மைவிட்டு பிரிந்தாலும் நம்மால் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் ஒதுங்குவதே மனிதம். 
5.    தவறான புரிதல், இடையில் நிற்பவர்களால் சொல்லப்படும் விடயங்கள் உங்களை ஏதோவொரு கணத்தில் உங்களை நேசிப்பவரைப்பற்றி பிழையாக பேச தூண்டிவிட்டது என வைத்துக்கொண்டாலும் ஒருவர் தன்னுடைய வலியை கண்ணீருடன் சொல்லும் போது உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தவில்லையா? குறைந்தபட்சம் என்னை மன்னித்தவிடு என்று சொல்வதில் நீங்கள் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. 
6.    ஒருவiர் அதுவும் நம்மை நேசித்தவர்களை (நீங்கள் நேசிக்கவில்லை என்றாலும்) காயப்படுத்தி விட்டோம் என்று தெரிந்தும் உலகத்திற்கும் சமூக ஊடகங்களிலும் நடிக்கின்றீர்கள் என்றால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளலாம். நீங்கள் மகாநடிகர். நீங்கள் இன்று செய்திருப்பது முதல் தடவையாக இருக்காது. பழக்கப்பட்டவர்களால் மட்டுமே அடுத்தவர் வலியை இலகுவாக கடக்க முடியும். 
7.    நீங்கள் அடுத்தவர் கௌரவத்தினை குறைக்கும் போதும் அவர்கள் மீதும் கறைபூசும் போதும் இதனை நினைவில் வையுங்கள். இன்று நீங்கள் வென்று விட்டதாக தோன்றலாம் அல்லது நீங்கள் விம்பத்தினை உருவாக்கலாம். பிழையே செய்யாத நல்லவனாக நடிக்கலாம். ஆனால் காலம் சிறந்த நீதிபதி. அதன் கணக்கு என்றும் தப்புவதில்லை. நீங்கள் யாரை காயப்படுத்தினீர்களோ அவர்கள் வாழப்போகும் வாழ்வு உங்களை சுட்டெரிக்கும். நீங்கள் இழந்த வாழ்வை இன்னொருவர் வாழ்ந்துகொண்டிருப்பார். இதை விடவும் தண்டணை உங்களுக்கு ஏது….?
8.    சமூகஊடகமும், அதில் நீங்கள் வாழும் இரட்டை அர்த்த வாழ்வும் அல்ல வாழ்க்கை. ஒருவருடன் கைகோர்த்து நீண்ட பயணம் போவதும் வளமான தலைமுறையை உருவாக்குவதுமே வாழ்க்கை. இன்றைய விம்பங்கள் ஒரு நாள் உடையும், முதுமை உங்களை தழுவும். ஒரு பொழுதில் சாய்ந்திருக்கும் போது நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கும். அதில் ஆனந்தமும் இருக்கும் வருத்தமும் இருக்கும். இந்த இரண்டில் வருத்தம் இருக்குமென்றால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று மட்டுமே அர்த்தம். 

9.ஒருவேளை ஒருவர் உங்களை நேசித்து கேட்டால் கூட ஆம்/ இல்லை என்று சொல்கின்றதை மட்டும் செய்யுங்கள். உங்களை கதாநாயகர்கள் என்று மற்ற ஆண்கள், பெண்கள் என நீங்கள் வழிபவர்களிடம் காட்டிக்கொள்வதற்காக மற்றவர்களை, அவர்களது சுயகௌரவத்தினை காயப்படுத்தாததீர்கள்.  


அன்புத்தோழியே, அதிகம் அழாதே.. கண்ணீர் விலை மதிக்க முடியாததொன்று அதனை உயரிவர்களுக்காக மட்டுமே சிந்த வேண்டும். கண்ணீர் இன்றி ஒரு உண்மைக்காதல் இருப்பதில்லை. ஆனால் அந்தக்கண்ணீரை துடைக்குமளவு கம்பீரமான, முதிர்ச்சியான ஒருவரை நாம் நேசிக்க வேண்டும். முதலில் மூன்றாம் நபரிடம் பேசியிருக்க கூடாது, அல்லது சுட்டிக்காட்டப்பட்டவுடன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் அல்லது இதனை சீர்செய்ய முதிர்ச்சியான நண்பர்கள், உறவுகளை வைத்து உன்னை தொடர்புகொள்ள முயற்சித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத ஒருவரை தேடாதே அன்பே. இன்று நடுவில் விட்டுவிட்டு கறைபூசுபவர்கள் நாளை வாழ்க்கை நடுவிலும் விட்டுவிட்டு ஓடுவார்கள். அழகு, பணம், செல்வாக்கு, படிப்பு இவற்றைவிட பண்பும் மனச்சாட்சியும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு முக்கியம் தோழி. காலத்திடம் விட்டுவிடு. உண்மையில் அன்பிருப்பின் அது நம்மை சேர வழிதேடும். ஒருவேளை நம்மை தேடவில்லை எனில் நம்மை தேடாத அன்பு நமக்கெதற்கு……. ஒருவர் மீதான அன்பிற்காக குடும்பத்தை இழக்கலாம், பதவி, பணம், புகழ் இழக்கலாம் ஆனால் சுயகௌரவத்தினை மட்டும் இழக்கவே கூடாது. 


இதெல்லாம் தாண்டி இந்த உறவை உங்களால் தாண்ட முடியவில்லை என்றால் சற்று பொறுத்திருங்கள்.  இது உண்மையான அன்பு என்றால் அது வழியை கண்டுபிடித்து தானே வந்து சேரும். இது மனதை மட்டும் சாட்சியாக கொண்ட அன்பென்றால்.....
 


Friday, January 16, 2026

குட்டி சைக்கிள்!

   

Happy cute teen girl riding bicycle cartoon vector illustration | Premium  AI-generated vector

நேற்று நண்பர்களுடன் கலந்துரையாடுவதற்கானதொரு சந்தர்ப்பம். பேசிக்கொண்டிருக்குமு; போது எழுத்துப்பிழைகள் விடுவது குறித்து பேச்சு திரும்பியது. இன்று பெரும்பாலும் பலருக்கு எந்தவிடத்தில் ண, ன வரவேண்டும் ல,ழ,ள வரவேண்டும் என்பதெல்லாம் சற்று குழப்பமாகிவிட்டது. சில அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள் கூட எழுத்துப்பிழையின் காரணமாக கருத்துப்பிழையாக எழுதுவதை அவதானிக்க முடிகின்றது என்ற ரீதியில் கருத்துக்கள் பகிரப்பட்டன. எனக்கும் பொதுவாக எழுத்துப்பிழைகள் இருப்பது பிடிப்பதில்லை. இப்படி எழுத்துபிழைகள் விடுதல் நாம் மொழிக்கு செய்கின்ற துரோகம் என்று சிறுவயதிலேயே எனக்குள் தலையில் குட்டி ஏற்றிவிட்டார் என் ஆசான்.  என்னுடைய நண்பர் “ நான் அவதானித்த வரையில் உங்கள் படைப்புக்களில் எழுத்துப்பிழைகளை தேடிப்பார்க்க வேண்டியுள்ளதே. ஏப்படி மீரா உங்களால் முடிகின்றது என்று வினவினார்.. இதற்கு காரணம் ஒரு குட்டி சைக்கிலும் அதன் மீதான மோகமும் தான் என்றேன் நான். எப்படியென்று கேட்கின்றீர்களா….?

எனக்குச் சிறுவயதில் இருந்தே இந்த வாகனங்கள் மீதான மோகம் அதிகம். அதிலும் சைக்கிள் மோட்டார் வண்டி போன்ற இருசக்கர வாகனங்கள் மீது அலாதியானதொரு மோகமுண்டு. இந்த ஆசையில் எண்ணெய் ஊற்றுவது போல் மாமி தன்னுடைய மகனுக்கொரு சைக்கிள் வாங்கிக்கொடுத்திருந்தார். மச்சானுக்கும் எனக்கும் ஐந்து வயது வித்தியாசம். மாமியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து சற்றுத்தொலைவில் தான். மாலையில் அம்மா வேலை விட்டு வந்த பின்னர் அப்போதைய நிலையில் சுற்றியிருந்த பிரச்சினைகளுக்கு நடுவில் நாம் காற்றாட செல்லும் இடம் மாமியின் வீடு தான். அவருக்கும் மூன்று பிள்ளைகள். நாமும் போனால் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் விளையாடிக்கொண்டிருப்பதுண்டு. இந்த சைக்கிள் வாங்கப்பட்டதிலிருந்து மச்சானின் வேலையே நம்மை இருத்திவிட்டு அந்த சைக்கிளை வீட்டு முன்னறையில் அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று ஓடிக்காட்டுவது தான். வாங்கியதை சும்மா ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது. இப்படியப்படி ஓடிக்காட்டும் போது அதை ஓடிப்பார்க்க வேண்டும் என்பது விஸ்வரூபமாகிவிட்டது. அவர்கள் வீட்டிற்கு போய் வரும் வழியெல்லாம் அம்மாவிடம் எனக்கும் சைக்கிள் வாங்கித்தாங்க என்று அழுதுகொண்டுதான் வருவதுண்டு. அம்மா ஒவ்வொரு நாளும் அதற்கொரு சாட்டு வைத்திருப்பார். சின்னப்பிள்ளை தானே கொஞ்சம் வளர்ந்த பிறகு வாங்கித்தாறன் என்பார் ஒரு நாள்........, 5 ஆம் ஆண்டு கொலர்ஷிப் பாஸ் பண்ணினால் வாங்கித்தருவேன் என்பார் மற்றொரு நாள்........, சைக்கிள் ஓடி கீழே விழுந்தால் காயம் வரும் மகள் என்பார் இன்னொரு நாள். இவையெல்லாம் சாட்டுக்கள் என்றும் அப்பா இல்லாத குடும்பத்தில் தலைமைதாங்குகின்ற ஒரு தாயினால் அப்போது அந்த சைக்கிளை வாங்கித்தருமளவு பொருளாதாரம் இருக்கவில்லை என்பது தான் உண்மை என்று நான் உணர்ந்துகொள்ளுமளவு வயதில்லை எனக்கும். 

இப்படியானதொரு நாளில் தான் அவர்கள் வீடு சென்றிருந்த போது வழமை போன்று புளுகு குணத்தில் சைக்கிளிலில் வலம் வர ஆரம்பித்தார் மச்சான். ஒரு தடவை ஓடிப்பார்க்க கேட்டேன். மறுப்பில்லாமல் தந்துவிட்டார். அந்த குட்டி சைக்கிளை ஓடும் பிள்ளைகள் விழாதிருக்க இரு பக்கமும் சில்லுகள் பொருத்தப்பட்டிருந்தன. (உண்மையில் அது இரு சக்கர வாகனமல்ல நான்கு சக்கர வாகனம்). நானும் ஏறி இரண்டு தரம் ஓட ஆரம்பிக்க திடீரென சைக்கிளை தரும் படி மச்சான் கேட்க ஆரம்பித்து விட்டார். அவர் கேட்க நான் இறங்க மாட்டேன் என்று சொல்ல இருவருக்கும் சண்டையாகிவிட்டது. இந்த அடிபுடியில் வீட்டுக்குள் இருந்த மாமி வெளியில் வந்து செய்தது தான் ஹலைட். வந்த வரத்தில் எனக்கு முதுகில் அடித்து சைக்கிளிலிருந்து இறக்கிவிட்டார். அம்மா எப்போதும் சின்ன சின்ன விடயங்களுக்கு அடிப்பதில்லை. அடித்தாலும் காலுக்கு கீழ்தான் வெளுப்பார். அதுவும் பாடசாலை ரிப்போட் வரும் போது தான் நிகழும். எங்கிருந்து தான் நளினி (அம்மா) பிரசன்னமானார் என்று தெரியாது. மாமி என் மேல் கைவைத்த கோபம், தன்னுடைய இயலாமை எல்லாம் சேர்ந்து அருகிலிருந்த பிரம்பால் நன்றாக வெளுத்துவிட்டார். வெளுத்ததும் இல்லாமல் தரதர என்று இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அழுதபடியே தூங்கிவிட்டேன் நான். இதெல்லாம் நடக்கும் போது எனக்கு 9 வயதிருக்கும். அதற்கு பின் நான் அம்மாவிடம் சைக்கிள் கேட்டதில்லை. 

ஆனால் அடித்த இரவு என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியும். நான் உறங்கிய பின் அம்மா பல தடவை என்னுடைய கால் தழும்புகளை தடவிப்பார்த்து அழுதிருப்பார், சகோதரன்கள் அம்மாவை எதிர்த்து பேசியிருக்க மாட்டார்கள். ஆனால் சாப்பாட்டில் காட்டியிருப்பார்கள். அம்மம்மா இப்படியா "மாட்டடிக்கின்ற மாதிரி அடிப்பாய்" என்று அம்மாவை திட்டியிருப்பார்.  ஆனால் எப்படியோ இது நடந்த சில நாட்களில் எனக்கு அம்மா சைக்கிள் வாங்கி தந்துவிட்டார். ஆனால் இந்தப்பிரச்சினையின் தாக்கத்தால் மாமி வீட்டிற்கு போவது தடைப்பட்டுவிட்டது. தான் அடுத்த பிள்ளைகளில் கைவைப்பதில்லை அப்படியிருக்கும் போது தன் பிள்ளையில் மாமி கைவைத்துவிட்ட கோபம் அம்மாவிற்கு….. 

இவ்வளவு அமளிதுமளியின் பின் தான் சைக்கிளும் வந்தது. அதற்கிருந்த மரியாதையே தனி. யாரும் அதை தொடக்கூடாது. அதில் பாபி ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டி அதுவொரு இந்திரலோக வாகனம் போன்று மரியாதையாக தான் வைக்கப்பட்டிருந்தது. இதில் குஞ்சமாக அண்ணா செய்து தந்த காற்றாடி  செருகப்பட்டிருந்தது முன்பக்கம். சைக்கிள் ஓடும் போது அது வேறு சுழலும். ஆனால் சைக்கிள் வந்த பிறகு தான் அடுத்த பிரச்சினையும் வந்தது. சைக்கிளை எவ்வளவு நாள் தான் வீட்டுக்குள் ஓடுவது? நாலு வாகனங்களுக்கு நடுவில் வீதியில் ஓட வேண்டாமா..? அது தானே சைக்கிள் வாங்கினதுக்கும் அதனை ஓடும் எனக்கும் மரியாதை… இப்படியான நேரத்தில் தான் சாரங்கபாணி வாத்தியார் என் வாழ்க்கையில் என்டர் ஆகினவர். 

சாரங்கபாணி வாத்தியார் (அவருக்கு மாஸ்டர் என்ற ஆங்கில வார்த்தை பிடிக்காது) அதீத தமிழ் பற்றாளர், தமிழ் புலவர்…. அவரது அன்றாட வாழ்க்கையும் இயற்கையோடு அமைந்ததொன்று. இவர் மட்டக்களப்பின் பாடசாலையொன்றில் அதிபராகவிருந்தவர். இவர் அதிபராகவிருந்த காலத்தில் என்னுடைய அம்மம்மாவும் அதிபராக பணியாற்றியதில் எம்முடைய குடும்பத்தினருக்கு அவரை நன்கு தெரியும்.  சைக்கிள் வாங்கிய இக்காலப்பகுதியில் தான் எமது வீட்டிற்கு இருபது வீடுகள் அளவில் சற்றுத்தள்ளி வாடகை வீட்டிற்கு இவர் வந்திருந்தார். முதன் முறை வீட்டிற்கு அவரது மனைவியுடன் வந்த போது நான் வீணை வாசித்துக்கொண்டிருந்தேன். (மாலையில் சாமி விளக்கேற்றி வீணை வாசிப்பது இன்று வரையானதொரு பழக்கம்) அப்போது தான் சாரங்கபாணி வாத்தியார் பிள்ளைக்கு நல்ல உச்சரிப்பு ஏன் தழிழை கற்க என்னிடம் அனுப்ப கூடாது என்று தூண்டலை போட்டுவிட்டு போய்விட்டார். அம்மா என்னிடம் கேட்கும் போது நான் சைக்கிளில் போவதென்றால் தான் போவேன் என்று சொல்லிவிட்டேன். அம்மாவின் தமிழ் பற்றும் என் சைக்கிளை றோட்டில் ஓடும் ஆசையும் சங்கமித்தது இப்படி தான். ஆனால் இந்த 20 வீட்டை கடந்து போவதற்கு எனக்கு வீட்டிலிருந்த அக்கா அல்லது அம்மம்மா காவல் வருவார்கள். அவர்கள் நடக்கும் போது அவர்களை முந்திப்போய் திரும்ப திருப்பிக்கொண்டு வந்து மீண்டும் போய் என்று நான் பல தடவை ஓடி முடிப்பதுண்டு. எப்படியே இப்படி ஆரம்பித்தது தான் தமிழ் கற்றல். 


சாரங்கபாணி வாத்தியார் எப்போதும் சுத்த தமிழில் எந்த மொழி கலப்படமும் இல்லாமல் தான் பேசுவார். லகரம் , ணகரம் எல்லாம் அவர் வாயில் தாண்டவமாடும். ஓவ்வொரு நாளும் போனவுடன் வணக்கம் சொல்லி ஒரு திருக்குறளை பாவோதல் செய்ய வேண்டும். கருத்தும் சொல்ல வேண்டும். அவரது வீடு முழுவதும் நிறைய புத்தங்கள் வாரியாக பிரிக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். அந்த தட்டில் 5 வது புத்தகம் தான் மகாவம்சம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு போய் எடுக்கலாம். அவ்வளவு நேர்த்தி. செம்பில் தான் நீர் தருவார். “தண்ணீர்” என்று கேட்க கூடாது. “தண்” என்பது குளிர். தண்ணீர் என்றால் குளிர் நீரை குறிக்கும். குடிக்க நீர் தான் கேட்க வேண்டும் என்பார். அவ்வளவு மொழிச்சுத்தம் கொண்ட மனிதர். எழுதும் போது எழுத்துப்பிழை விட்டால் அழித்து எழுத விடமாட்டார். மீண்டும் எழுத வைப்பார். இப்போது கூட எனக்கு இந்தப்பழக்கம் உண்டு. அழிக்காமல் வெட்டிவிட்டு மீண்டும் எழுதுவேன். இது அப்போது விழுந்த அடிப்படை தான். பிழை விட்டால் தலையில் நானே குட்ட வேண்டும். என்ன சீழ்தலைசாத்தனார் போன்று கையில் எழுத்தாணி இருந்திருக்கவில்லை இல்லாவிடில் என் தலையில் பல புண்கள் உண்டாகியிருக்கும். ஒன்றரை மணிநேர வகுப்பின் இறுதியில் இதிகாச கதைகளை சொல்லி முடிப்பார். அவர் ஒரு நல்ல கதைசொல்லியும் கூட. 

வீதியில் சைக்கிள் ஓட வேண்டும் என்பது இறுதியில் தமிழை கற்றுத்தேர்வதில் வந்து நின்றது. என்னை சித்தவைத்தியம் படிக்க வைக்க வேண்டும் என்பதிலும் வாத்தியார் குறியாயிருந்தார். சித்தர் புத்தகங்களை என்னிடம் தந்து வாசிக்க வைப்பார். ஏறத்தாழ ஏழு வருடங்கள் அவரிடம் கற்றிருக்கின்றேன். உயர்தரத்தில் நான் கணிதத்துறையை தேர்ந்ததில் அவருக்கு அவ்வளவு விருப்பமில்லை. அவரிடம் ஆசீர் பெற போன போது சரி "கணிதத்திலும் தழிழைக்காண்" என்று தான் வாழ்த்தினார். இன்று எனக்கு தெரிந்திருக்கின்ற கைமருத்துவம், மூலிகையறிவு, கட்டக்கலையில் வாஸ்து குறித்த கற்றல் எல்லாமே அவர் போட்ட அத்திவாரம் தான். பல எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தகங்களை எழுத்துப்பிழை, கருத்துப்பிழை பார்க்க அனுப்பிவைப்பார்கள். நான் சரிபார்த்த பின்னர் பல புத்தகங்கள் அச்சாகியிருக்கின்றன. இவையனைத்தின் பெருமையும் அவரையே சாரும். இன்று அவர் உயிருடன் இல்லை. ஆனாலும் என்னைச் சேர்கின்ற அனைத்து பெருமைகளிலும் என் தமிழ் ஆசான் வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றார். சிலருக்கு சாவென்பதேயில்லை… அதில் இவரும் ஒருவர். 

இப்போது புரிகிறதா என்னுடைய குட்டி சைக்கிள் எங்கு என்னை இழுத்துப்போனதென்று… (இந்த குட்டி சைக்கிள் இன்று எவ்வாறு என்பீல்ட் இல் வந்து நிற்கின்றதென்பது வேறு கதை…) நமக்கு பிடித்தவர்கள் விடுகின்ற தமிழ்ப்பிழைகளை அவர்களிடம் சொல்லி திருத்திப்பாருங்கள்.... இதுவும் காதல் என்பார்கள் ... இல்லை இது தான் அவர் மீதானதும் தமிழ் மீதானதுமான காதல் என்பேன் நான்...... 







Wednesday, January 7, 2026

ஓ.... 2026


 புதுவருடம் பல புதிய அனுபவங்களுடன் ஆரம்பித்துள்ளது…

 



01.    நீதிமன்றம் உள்ளும் புறமும்

எல்லாவிடங்களுக்கும் பயணிக்க வேண்டும் அனுபவம் பெற வேண்டும் என்ற என்னுடைய கொள்கை இறைவனுக்கும் தெரிந்துவிட்டது போல சம்பந்தமில்லாத விடயத்தில் நானும் கோர்க்கப்பட்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியாகிவிட்டது. வீட்டிற்கு இது குறித்த பதிவுத்தபால் வந்த போது வீட்டாக்களுக்கும் பதட்டமாகி அவர்களது பதற்றம் என்னையும் தொற்றி அது ஒருவித பயம் கலந்த பதற்றத்தினை என்னுள் விதைத்துவிட்டது. எத்தனை படம் பார்த்திருப்போம் எத்தனை சட்டத்தரணிகள் கைகாலை அசைத்து பொயின்ட்டை பிடித்து குற்றவாளியை வாங்கு வாங்கு என்று வாங்கியிருப்பார்கள். சட்டத்தரணிகள் என்று நினைத்து கண்ணை கொஞ்சம் மூடினாலும் சிவாஜி, விஜய், நம்மட ஆள் சூர்யா என்று எத்தனை லோயர்கள்……  சரி இவர்கள் மாதிரி இல்லாட்டியும் வீட்டாக்கள் தேடிப்பிடித்த சட்டத்தரணியுடன் பேசி சகலதையும் சொல்லி …(வைத்தியரிமும் சட்டத்தரணியிடமும் பொய் சொல்லக்கூடாதாம்) தயாராகியாயிட்டு. நாளை வழக்கு என்றால் இன்றே எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அன்றிரவு நித்திரையும் இல்லை. காலையில் போட்ட கோப்பியை குடிப்பது கூட மறந்துவிட்டது. மனதுள் அவ்வளவு பதட்டம் இருந்தாலும் அவ்வளவு நாளும் காட்டி வந்த கெத்து லைட்டா என்னை விட்டு போறமாதிரி வேற இருந்தது. நான் இருந்த நிலையை பார்த்து ஏதாவது சாப்பிட்டு போ அல்லது நீதிமன்றத்தில் மயங்கிவிட்டால் என்று நச்சரிப்பு வேறு.. ஒரு மாதிரி சாப்பிட்டு தண்ணி குடித்து நெஞ்சைப்பிடித்த படி போனால் நடுப்பகுதியில் போய் அமரும் படி என்னுடைய சட்டத்தரணியும் சொல்லி விட்டார். நேரம் 9 மணி உள்ளே போய் பார்த்தால் ஏகப்பட்ட சனம். ஒரு பக்கம் ஆண்கள் மறு பக்கம் பெண்கள். போய் அமர்ந்தால் அவர்கள் ஏதோ வெளிநாட்டால் வந்து நடுவில் குந்தின மாதிரி என்னிடம் நூறு கேள்விகள் கேட்கிறார்கள். பதட்டத்தினை மறைத்து எப்போ ஆரம்பிக்கும் என்று காத்திருந்தால் 10 மணிக்கு திடீரென உரத்த குரலில் அறிவிப்பு. சற்று நேரம் கழித்து நீதிபதி உள்ளே வர அனைவரும் எழுந்துநின்று அவர் அமர்ந்த பின் அமர ஒரு சின்ன சத்தம் கூட இல்லை. 

முன்னாலிருப்பவர் வழக்கெண் மற்றும் பெயர்களை உரத்த குரலில் சொல்ல சட்டத்தரணிகள் அங்கு போகின்றார்கள் மெல்லிய குரலில் பேசுகின்றார்கள். கூப்பிட்ட வழக்காளியும் பிரதிவாதியும் எழுந்து அருகில் போகுமுன்னரே அடுத்த வழக்கிற்கான திகதி நீதிபதியால் வழங்கப்படுகின்றது. எழுந்து போனவர்கள் அப்படியே வெளியே போகின்றார்கள். என்னுடைய பெயரும் வாசிக்கப்பட்டு கிட்ட போகுமுன்னரே எல்லாம் சொல்லி முடிந்தாயிட்டு. அப்பாடா என்றிருந்தது. ஆனால் ஒரு கேள்வி இந்த படத்தில் காட்டுவது போல் நம்முடைய சட்டத்தரணிகள் குரலெழுப்பி, பொயிண்ட்ஸ் கண்டுபிடித்து கிழிகிழி என்று கிழித்து தொங்கவிடுவதெல்லாம் பொய்யாடா….. எத்தனை சினிமா எத்தனை வழக்கு எம்மை கதிரை நுனியில் அமர்ந்து பார்க்க வைத்திருக்கும். சட்டத்தரணி, எதிர்கட்சி வக்கீல், கள்ள பொலீஸ், நடுவில் அடிபட்டு தப்பிவந்து வாயால் இரத்தம் ஒழுக சாட்சி சொல்லும் ஹீரோ…………. சை சப்பென்றாகிவிட்டது எனக்கு…இனி எத்தனை வழக்கிற்கு கூப்பிட்டாலும் சங்கத்தின் சார்பில் ஆஜராக நான் தயார். 

02.    நடிப்பு…

இம்முறை இந்தியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற திரைப்பட விழாவில் என்னுடைய இரு ஆவணப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதற்காக இங்கு நின்றுகொண்டிருக்கின்றேன். மன்னிக்கவும் இதை தட்டச்சு செய்யும் போது காவா சாய் குடித்துக்கொண்டிருக்கின்றேன். கடையில் இல்லை நண்பனின் கைகளால் தயாரிக்கப்பட்டது. இவ் ஆவணப்படம் மற்றும் இது பெற்றுள்ள விருதுகள் குறித்து பத்திரிகை நிரூபர் என்னிடம் பல கேள்விகளை அடுக்கியிருந்தார். அதில் இரு வினாக்களும் பதில்களும்…..

நீங்கள் ஏன் ஆவணப்படங்களில் மட்டும் கவனஞ்செலுத்துகின்றீர்கள்? திரைப்படத்தில் ஆர்வமில்லையா?
இல்லை குறுந்திரைப்படங்கள் சில இயக்கியுள்ளேன். ஆனால் பிறரை நடிக்க வைப்பதில் எனக்கு பிடித்தம் இல்லை. தனிப்பட்ட முறையிலும் எழுத்திலும் கருத்திலும் என்னால் நடிக்க முடிவதில்லை. உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்தல், தரவுகளை சேகரித்தல் எனக்கு பிடித்துள்ளது. அதிலும் எனக்கு மருத்துவம் சார் ஆவணப்படங்கள் இயக்குவதில் தான் ஆர்வம். இதற்காக நிறைய மனிதர்களை சந்திக்கின்றேன். அவர்களுடன் பேசுகின்றேன். அவர்கள் மொழியிலேயே கலைப்படைப்பை நெறியாள்கை செய்கின்றேன்……கலையென்பது பிடித்ததை செய்வது தானே… அதை செய்கின்றேன். 

உங்கள் நாட்டில் இடம்பெறுகின்ற விழாக்களில் உங்கள் திரைப்படங்களை காணவில்லையே….?
முதலில் சில படங்களை அனுப்பியிருந்தேன். என்னுடைய படம் தெரிவுசெய்யப்பட வேண்டுமாயின் பலரிடம் சிரித்து பேசவேண்டியிருந்தது…. அங்கிருப்பவர்கள் அல்லது தெரிவு குழுவில் இருப்பவர்களின் இரட்டை அர்த்த பேச்சுகளை சகிக்க வேண்டியிருந்தது. எனக்கு இதில் உடன்பாடில்லை. என்னுடைய திறமை தான் மதிக்கப்பட வேண்டுமேயன்றி என்னுடைய மனம், முகம் அல்ல. படைப்பென்பது படைத்தவனுக்காக மதிக்கப்பட கூடாது. அல்லது தன்னுடைய படைப்பு மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக படைப்பாளி முகங்காட்டக்கூடாது. ஒரு காதல் எப்படி இனம், மதம், பணம், சாதி சக்கட்டு பாராமல் எம்மை கடக்குமோ அப்படி கலையும் படைத்தவனுக்காகவன்றி பிடித்துப்போக வேண்டும். ஒருவேளை என்னுடைய துணைவரே கூட தேர்வுக்குழுவில் இருந்தாலும் எனக்காகவோ எம்முடைய காதலுக்காவோ அன்றி  கருத்தியல் , காட்சியமைப்பு, கலைக்காக தான் என்னுடைய படைப்பு தேர்வுசெய்யப்பட வேண்டும் என விரும்புகின்றேன். எந்த விழா என்றாலும் நேர்மையாக தேர்வுகள் இடம்பெறுகின்றதென்றால் என்னுடைய படைப்பு அனுப்பிவைக்கப்படும். முகப்பூச்சு விருதுகள் எனக்கு வேண்டாம்.  என் மானம் சுயகௌரவம் விற்று தான் என் படைப்புக்களை காட்சிப்படுத்தவேண்டும் என்பதில்லை. 

3. குடையில்லா பொழுதில் கொட்டித்தீர்க்கும் மழை….


சும்மாயிருக்கும் போது எதுவும் நடக்காது அதேவேளை வாய்ப்புக்கள் வந்தால் குடையில்லாத நேரத்து மழை மாதிரி கொட்டித்தீர்த்து விடுகின்றன. ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பிற்காக வாய்ப்புக்கிடைத்து தயாராகிக்கொண்டிருக்கும் போது அடுத்தடுத்து நிறைய வாய்ப்புக்கள் என் அறைக்கதவினை தட்டோ தட்டென்று கட்டுகின்றன. திரைப்படத்துறை சார் பயிற்சியினை பெறுவதற்கு உலகலாவியரீதியில் 20 பேரில் ஒருவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளேன். இதற்கு 03 மாதகாலம் தேவை. அடுத்தது கடந்த ஆண்டு கட்டடத்துறை சார் விருதும் உலகின் முதல் 100 வடிவமைப்பாளரில் ஒருவர் என்ற பெருமையும் விருதும் இத்தாலியில் இடம்பெற்ற விருதுவிழாவில் கிடைத்திருந்தது. இதன் போது பல்வேறுப்பட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். எம்முடனும் கலந்துரையாடியிருந்தனர். புத்தாண்டு அன்று அதிகாலையில் ஓர் இனிய மின்னஞ்சல். குறிப்பிட்ட நிறுவனம் அடுத்த 03 ஆண்டுகளில் ஐந்து திட்டங்களை வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கவுள்ளதாம். அதற்கான வடிவமைப்புக்குழுவில் இணைந்துகொள்வதற்கான அழைப்பு அது. கூடவே இதில் ஈடுபடும் போது குடும்பத்தவர்களுடன் (துணைவர் மற்றும் குழந்தைகள் மட்டும் - அட ஒரு வருடத்திற்கு முன்னர் சொல்லியிருந்தால் ரெடியாகிருக்கலாம்..) பயணிப்பதற்கான பயண செலவு மற்றும் தங்கியிருப்பதற்கான பொறுப்பு அனைத்தும் அவர்களே முன்னெடுக்கின்றார்களாம். 

இப்படியே ஊர் உலகம் சுற்றினால் வீட்டில் இருப்பது எப்போது… குடும்பம், குழந்தை எப்போது என நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் வீட்டாக்கள்…. முடிவெடுக்க முடியாமல் ஒதுங்குவதா அல்லது நனைந்துவிடுவதா என்று தடுமாறிக்கொண்டிருக்கின்றேன் நான்... 

 4. வெள்ளை முக கற்பிதங்கள்

அண்மையில் பழைய மாணவர் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அங்கு போனால் எல்லாம் புதுமுகங்கள். அட நம்முடன் 12, 13 வருடங்கள் படித்தவர்கள் எங்கே என்று தேடினால்…. பெரும்பாலானோரை மதிக்கவே முடியவில்லை. எல்லாம் வைட்னிங் கிறீம் உபயம்…. அட கடவுளே வெள்ளை முகங்கள் தான் அழகு என்ற கற்பிதங்கள் எப்போது தான் இவர்களை விட்டுப்போகுமோ…. ஏன் இப்படி இரசாயனங்களை போட்டு இயற்கையழகை கெடுக்கின்றீர்கள் என்று பகிடியாக கேட்டால் “நீ வெள்ளையாக இருப்பதால் இப்படி பேசுகின்றாய்..” என்று மறுமொழி கிடைக்கின்றது. நான் கருப்பாயிருந்தாலும் இப்படித்தான் பேசியிருப்பேன். நிறத்தில் முகத்தில் என்ன இருக்கின்றது. பொதுவாக இந்த அழகுபடுத்தல்கள் எல்லாம் பெரும்பாலும் இன கவர்ச்சியக்கானவை தானே. என்னைப்பொறுத்தளவில் நான் ஓர் ஆணை என்னுடைய படிப்பு, திறமையால் குணத்தால் தான் கவரநினைப்பதுண்டு. அதேபோன்று ஓர் ஆண் என்னை கவரவேண்டுமென்றாலும் இவை தான் என்னை ஈர்க்கும். முற்போக்கு சிந்தனையும், முதிர்ச்சியும் ஆளுமையும் தான் தேவையேயன்றி வெளிப்பூச்சுகள் அல்ல… இதை சொல்லப்போனால் என்னை வித்தியாசமாக பார்க்கின்றார்கள்… அப்படியென்றால் இவரை பிடிக்குமா அவரைப்பிடிக்குமா என்று அவர்கள் எதையெல்லாம் இழிவென நினைக்கின்றார்களோ அதனை முன்னிருத்தி ஆண்களை சுட்டி என்னிடம் கேட்கின்றார்கள். இவ்வாறானவர்களிடம் சில விடயங்களை பேசாமல் கடப்பதே மேல்…..

"உன் கையிலா கடிகாரம்.......?
கடிகாரத்தின் கையில் நீ ....." - காசி ஆனந்தன்












Monday, January 5, 2026

பேரூந்து கிறுக்கல்கள்.......

வறுமை | vimalam 

 

பசி

அடுப்பின் சாம்பலில்
இன்றைய நாளைத் தேடி
ஒரு தாய் கைகளால் அலசுகிறாள்.....

அரிசி தீர்ந்த வீட்டில்
கனவுகள் மட்டும்
இன்னும் கொதிக்கின்றன.

பசியை
குழந்தைகள் அழுகையால் சொல்கின்றனர்,
பெரியவர்கள்
மௌனத்தால் மறைக்கிறார்கள்.

வயிற்றுக்குள் விழும் வெற்றிடம்
சாப்பாட்டின் இல்லாமை அல்ல— அது
மனித மதிப்பின் இடைவெளி.

விழாக்கால விளக்குகளுக்கு நடுவே
ஒரு தட்டு எப்போதும் காலியாகத்தான் இருக்கிறது,
அதில் - நீதியையே பரிமாற வேண்டும்
ஒரு நாள்..............

 

Sketch Of Eyes • 600+ reels on Instagram 

பிரிவு

பிரிவு
வாசல் மூடப்பட்ட சத்தமல்ல —
உள்ளே எதிரொலி மட்டும்
தங்கிப் போவதற்கு....

நாம் பகிர்ந்த
சிறிய சிரிப்புகள்
இப்போது பெரிய மௌனங்களாகி
அறைகளை நிரப்புகின்றன.

உன் பெயர்
என் நாள்காட்டியில் இல்லை,
ஆனால் - என் நினைவுகளில்
இன்னும் தேதி மாறவில்லை.

காலம்
எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறது.....
(உன்னை ) இழந்ததை
எப்படி இழக்காமல் இருக்கலாம்  -

என்கின்ற ஒன்றைத் தவிர....


(இன்றைய பேரூந்து கிறுக்கல்கள் 05.01.2026)

 

Wednesday, December 31, 2025

(நான் ) மலர்கள் கேட்டேன்


அணையப்போற விளக்கு சுடர் விட்டெரியும் என்றொரு சொலவடை எங்கட ஊர்களிலுண்டு. இது சரி தான் போல… நேரம் நெருங்க நெருங்க வேலைகள் என் ஒவ்வொரு மணித்துளிகளையும் ஆக்கிரமிப்பதை உணர முடிகின்றது. நேரம் நகர்கின்றதே தவிர வேலைகள் முடிந்த பாடில்லை. இன்றுடன் வருடமும் முடியப்போகின்றது. இன்னும் சில மணித்துளிகள் தான் மீதமுண்டு. இதன் பதற்றம் என்னுள் இருந்தாலும் அடுத்த வருடத்தில் எனக்கென காலம் பல அன்பளிப்புகளை கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது என்பதனை மட்டும் எனக்குள் உணரமுடிகின்றது. கூடவே அதற்கேற்ப நடக்கின்றவையெல்லாம் இந்த எதிர்கால நன்மைகளுக்கே என்பதை முன்கூட்டிய நிகழ்வுகளும் தெரிவிக்கின்றன. 

கடந்த வருடம் நான் எடுத்துக்கொண்ட தீர்மானங்களில் ஒன்று இவ்வருடத்தில் சிறுவர்கள் குறித்து ஏதாவதொரு முன்னெடுப்பினை மேற்கொள்ள வேண்டும் என்பது. குறிப்பாக வீதியோரங்களில் கையேந்தி நிற்கின்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றினை திறக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய நிறுவனங்களில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகள், அடுத்த கட்டம் நோக்கிய நகர்த்தலுக்கான வேலைப்பளுக்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் வாழ்க்கைசார் விடயத்தில் எடுத்த தீர்மானம் அதையொட்டிய குடும்ப அழுத்தங்கள் , மன உடைவுகள் மற்றும் இவ்வருடம் எனக்கிடம்பெற்ற சத்திரசிகிச்சை , அதனால் பாழாகிப்போன மூன்று மாதகாலங்கள் என தீர்மானத்தினை நோக்கி என்னால் ஓரடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. இது பெரும் உறுத்தலாகவே என்னை தொடர்ந்திருந்தது. 

தித்வா புயல் நம்முடைய நாட்டை புரட்டிப்போட்டதை குறித்து எமக்கு நன்றாகவே தெரியும். இதுவொரு கவலைக்குறிய விடயம் என்றாலும் எல்லாவற்றிக்கும் பின்னர் சில நல்ல விடயங்கள் உண்டு என்பதனை இதிலிருந்தும் நான் உணர தலைப்படுகின்றேன். வருடக்கடைசியில் இடம்பெற்ற இந்த அனர்த்தம் என்னுடைய நோக்கத்திற்கு எவ்வாறு வழிகோலியுள்ளது என்று பாருங்கள்……. 

நோபாளத்தினை சேர்ந்தவர்  Dr. Navneet Bitchcha  நாம் இருவரும் Internews இனால் முன்னெடுக்கப்பட்ட சுகாதார அறிக்கையிடல் நிகழ்வில் பங்கேற்றிருந்தோம். அப்போது கொவிட் காலம்.  Dr. Navneet Bitchcha  கொவிட் தடுப்பூசி தொடர்பில் ஆராய்வுகளை நிகழ்த்திக்கொண்டிருந்தவர். நாம் இருவரும் இணைந்து இது குறித்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தோம். நான் பயணித்த நாடுகளில் நேபாள், சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளுக்கு பல தடவைகள் பயணித்துள்ளேன். 2022 இற்கு பின்னர் நேபாள் சென்ற போதெல்லாம் …. சந்திக்கவும் பழகவும் நிறைய வாய்ப்புக்கள் கிடைத்திருந்தன. நேபாளின் பல பகுதிகளுக்கு ஒன்றாக பயணித்திருக்கின்றோம். பல ஆய்வுகளை தொடர்ந்துகொண்டுமிருக்கின்றோம். சாதாரண நட்பினைத்தாண்டியும் நல்லதொரு உறவு எம்மிடையே உண்டு. தன்னுடைய குடும்பத்தினரிடம் கூட என்னை அறிமுகப்படுத்தியிருந்தார். நேபாளத்தில் இடம்பெறுகின்ற கலாசார விழாவில் குடும்பத்திற்கு வருகின்ற மருமக்களுக்கு பரிசளிப்பதுண்டாம். … அம்மாவும் எனக்கு சிகப்பு புடவை பரிசளித்திருந்தார். ஏன் எனக்கு இதனை தந்தார் என்று கேட்டால் மளுப்புகின்ற நண்பர் இவர். அந்த நிதானம் , முதிர்ச்சி, பண்பு, வெளிப்படுதன்மை என்பன எனக்கு அவரிடம் மிகப்பிடித்தவை.

புயலடித்து தொடர்புகள் அறுந்திருந்த நேரத்தில் பல நூறு முறை எனக்கு அழைப்பெடுத்தும் கிடைக்காததால் கடும் பாதிப்புக்குள்ளாகி விட்டார் இந்த ஆள். அப்போது ஜேர்மனியில் ஆய்வுகூட வேலையில் இருந்தவர் உடனடியாக இலங்கைக்கு வந்தது உண்மையில் Sweet Surprise வந்ததுமில்லாமல் எனக்கு அழைப்பெடுத்து சுகம் விசாரிக்கும் போது கூட இலங்கையில் நிற்பதை சொல்லாமல் எங்கள் நண்பர்களின் உதவியுடன் ஊருக்கு தேடியும் வந்துவிட்டார். இந்த நாட்களில் உருவானது தான் எம்முடைய திட்டம். அதாவது பாதிப்புற்ற குழந்தைகளுக்கான உளவியல் ஆற்றுப்படுத்துகையினை முன்னெடுத்தல். 

இந்த அடிப்படையில் கடந்த இரு வார திட்டமிடலில் இதனை இலங்கையிலும், இந்தியாவிலும் நேபாளிலும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் Dr. Navneet Bitchcha  இற்கு இரு வாரங்கள் தான் வீசா கிடைந்திருந்தமையினால் மீண்டும் ஜேர்மன் திரும்பிவிட்டார். எனினும் இருவருக்குமான இலக்கிற்கான பயணத்தினை நான் தொடர்ந்திருந்தேன். கடந்த சில நாட்கள் மலையகத்தின் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணித்து 500 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான உளவியல் ஆற்றுப்படுத்துகையினை மேற்கொண்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு இந்தியாவிலும் நேபாளத்திலும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் , வறுமையினால், வன்முறையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆற்றுப்படுத்துகை செய்யவுள்ளோம். நான் மலர்கள் கேட்டேன் இறைவன் வனமே தந்து விட்டான். 

2026 இல் நடைமுறைப்படுத்தவென நான் இம்முறை பெரிதான தீர்மானங்களை எடுக்கவில்லை. தற்போது முன்னெடுத்து வருகின்ற கட்டடம், வியாபாரம் மற்றும் தனியார் நிறுவனங்களையும் அதன் செயற்பாடுகளையும் விருத்திசெய்வதில் தான் இம்முறை கவனஞ்செலுத்த நினைக்கின்றேன். அத்துடன் தனிப்பட்ட வாழ்க்கைசார் முடிவுகள் சிலவும் தற்துணிவுடன் எடுக்க தீர்மானித்துள்ளேன். அநேகமாக அடுத்த வருடம் நான் இலங்கையில் நிற்கும் நாட்கள் மிகக்குறைவாகவே இருக்கும். அத்துடன் எதிர்வரும் நாட்களில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கின்றது. அதற்காக பெட்டியுடன் தயாராகிக்கொண்டிருக்கின்றேன். கூடவே பல தனிப்பட்ட தீர்மானங்களுடனும். 

இரண்டு நேர்காணல் , மூன்று நிகழ்வுகளை நிகழ்த்திவிட்டாலே தாம் தான் ஜாம்பவான்கள் என்று பீத்திக்கொள்பவர்கள் மத்தியில் உலகலாவிய ரீதியில் பல ஆய்வுகளையும் முன்னெடுப்புக்களையும் நிகழ்த்திவிட்டு மௌனமாக கடக்கின்ற என் நண்பன் குறித்து அறிய வேண்டும் என்றால்  Dr.Navneet Bichha என்று இணையத்தில் தேடிப்பாருங்கள்.
 

பிறக்கவுள்ள புதுவருடம் அனைவருக்கும் அர்த்தமுள்ளதாகவும் உங்களால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்

                    Welcome 2026 Images - Free Download on Freepik

 


Monday, December 22, 2025

அனைத்து Toxic ஆண்களுக்குமானது........

 

நீண்ட வேலைப்பளு நிறைந்த நாட்களின் பின்னர் திரைப்படம் பார்ப்பதற்கு இன்றைய நாளை திட்டமிட்டு ஒதுக்கியிருந்தேன். இதற்காக இரு படங்களையும் மனதினுள் நினைத்திருந்தேன். ஒன்று 12 வருடங்களுக்கு முன் வெளிவந்தது மற்றது அண்மையில் வெளிவந்தது.  

சில திரைப்படங்கள் எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுப்பதில்லை. அல்லது ஏதோவொரு வகையில் நமக்கும் அந்த திரைப்பட பாத்திரங்களுக்குமிடையில் இருக்கின்ற உணர்வுநிலை தொடர்பு திரும்பத்திரும் பார்க்கத் தூண்டுவதுண்டு. அப்படி ஐந்தாவது தடவையாக நான் பார்க்கின்ற திரைப்படம்  Queen ஹிந்தித்திரைப்படம். இன்னும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் ஆங்கில உபதலைப்புகளுடன் இணையத்தில் உள்ளது. 20014 இல் வெளிவந்த இந்த திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பஹ்ல் , இசை அமித் திரிவேதி. மொத்தமே மூன்று பாடல்கள். கதையும் பொருந்துகின்ற பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ள இசைக்கருவிகளும் இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பிளஸ். கங்கணா ரணாவத் இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரமான ராணி மெஹ்ரா இல் நடித்துள்ளார். இதை விட வாழ்ந்துள்ளார் என்பது மிகப்பொருத்தமானது. 

ராணியின் திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்வில் தான் திரைப்படம் ஆரம்பமாகின்றது. கலகலப்பான சூழ்நிலையில் ஆரம்பித்தாலும் அடுத்த சில நிமிடங்களில் ராணிக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட விஜயின் அழைப்பின் பெயரில் அவரைச்சந்திக்கும் ராணியிடம் திருமணத்தினை நிறுத்தும் படி விஜய் கோரிக்கை விடுப்பதுடன் ஆரம்பித்த கலகலப்பு சூழல் மாறிவிடுகின்றது. சரியான காரணமின்றி தடுமாற்றத்துடன் விஜயினால் திருமணம் நிறுத்தப்படுவதுடன் முன்கதைச்சுருக்கத்துடன் தொடர்கின்றது கதை. ராணி- விஜய் இருவரது தந்தையர்களும் நண்பர்கள். ராணியின் குடும்பத்தினரால் நடாத்தப்படுகின்ற கடைக்கு வருகின்ற விஜய் ராணியை முதல் பார்வையில் பிடித்துப்போய் பின்தொடர ஆரம்பிக்கின்றார். ஹோம்சயன்ஸ் படிக்கின்ற ராணியை தொடர்ந்தும் வற்புறுத்தி காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதன் பின்னர் விஜய் படிப்பதற்கு வெளிநாடு சென்று விடுகின்றார். அவர் நாடு திரும்பும் போது ஏற்கனவே இரு குடும்பத்தினரும் பேசியற்கமைய திருமணத்திற்கான ஆயத்தங்கள் இடம்பெறுகின்றன. இதன் போது தான் வலுவான காரணமின்றி திருமணம் விஜயினால் நிறுத்தப்பட்டு விடுகின்றது. திருமணம் நிறுத்தப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள்கின்ற ராணி ஏற்கனவே திருமணத்தின் பின்னர் தேனிலவிற்காக செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பாரிஸ்ற்கு தனியாக பயணப்படுகின்றாள். அங்கு பல்வேறுப்பட்ட நபர்கள், நண்பர்கள் என புதியதொரு சூழலிற்குள் காலச்சூழலில் இழுத்துசெல்லப்படுகின்றாள். 

தனியாக கனத்த மனதுடன் பயணிக்கின்ற ராணியின் செயற்பாடுகள், உடையமைப்பு , சிந்தனைகள் எல்லாம் மாற்றமடைகின்றது. இதனை அவதானிக்கின்ற விஜய் மீண்டும் தன்னுடனான உறவுநிலையை புதுப்பித்துக்கொள்ள முற்படுவதும் அதற்கு ராணியின் பதில் எவ்வாறமைகின்றது என்பதும் மீதிக்கதை. இத்திரைப்படம் வெளிவந்த காலப்பகுதியில் பல்வேறுப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், பெண்கள் தம்முடைய சூழலிலிருந்து மீண்டெழுவதற்கான உத்வேகம் தருகின்றதொரு திரைப்படமாகவும் இது பேசப்பட்டது. அனாவசிய கதாபாத்திரங்கள் இல்லை. அனாவசியமான காட்சியமைப்புக்கள், கதை வசனங்கள் இல்லை.

“ஒரு பெண் காதல் அல்லது திருமணம் நிச்சயிக்கப்பட்ட சூழலில் இருந்து விலகும் போது தன்னுடைய சுயகௌரவத்தினை, சுயமரியாதையினை எவ்வாறு மீட்டெடுக்கலாம் அல்லது இத்தகையதொரு உடைவிலிருந்து மீண்டெலலாம் என்பதையும், இத்தகைய உடைவுகள் ஒரு பெண்ணுக்கு நிகழும் போது சமூக கண்ணோட்டம் எவ்வாறிருக்கின்றது" என்பதையும் மிகவும் அழகாக பேசுகின்றது இத்திரைப்படம்.” 

 

அடுத்த திரைப்படம் கடந்த 7 ஆம் திகதி வெளிவந்த “The Girl Friend”. இதற்கான எழுத்து - இயக்கம் ரகுல் ரவீந்திரன். இசையமைப்பு ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் பிரசாந் விகாரி. “நீயே… நீயே ஒளி…” பாடல் அருமை. ஒளிப்பதிவு கிரிஷ்ணன் மற்றும் சோட்டா. காட்சியமைப்புக்கள் அருமை. இத்திரைக்கதையின் முக்கிய பாத்திரமான பூமா(தேவி) பாத்திரத்தினை ரஷ்மிக்கா நடிப்பாளுகை செய்திருந்தார். 

தாயின்றி தந்தையிடம் வளருகின்ற பூமா பட்டப்பின் படிப்பிற்காக பல்கலைக்கழகத்திற்கு வருகின்றார். இரவில் நண்பியுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஏற்படுகின்ற விபத்தின் போது தன்னுடைய பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற விக்கியை சந்திக்கின்றார். “தன்னுடைய தாய்” போன்று பூமா இருப்பதாக நினைக்கின்ற விக்கி பூமாவைத் தொடர்ச்சியாக வற்புறுத்தி காதலிக்க ஆரம்பிக்கின்றார்கள். தன்னுடைய அறையினை துப்பரவு செய்வது முதல் தனக்கு உணவை ஊட்டிவிடுவது வரை பூமாவை தன்வசப்படுத்திக்கொள்கின்றார் விக்கி. அதேவேளை விக்கியை துர்க்கா எனும் பெண்ணும் விரும்புகின்றாள். தானே வலிய வந்து விக்கியிடம் தன்னுடைய விருப்பங்களையும் சொல்கின்றாள். ஆனால் விக்கி துர்க்காவை நிராகரித்து விடுகின்றான். இரு வருடங்களாக தொடர்கின்ற இவர்களது காதல் பூமாவின் தந்தைக்கு தெரிய வருகின்றது. இதனால் விக்கிக்கும் அவருக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடும் இதன் நீட்சியாக பல்கலைக்கழகத்தினை விட்டு வரும்படி தன்னுடைய மகளை எச்சரிக்கின்றார். இதற்கிடையில் முரண்பாடு ஏற்பட்டவுடன் அவசரமாக திருணத்தினை நடத்துவதற்கு விக்கி முயல்கின்றான். 

இருவருக்குமிடையில் தவிக்கின்ற பூமா தன்னுடைய படிப்பை முடிப்பதற்கும் இதற்கு தடையாகவுள்ள காதலை விட்டுவிடுவதற்கும் தயாராகி அதனை விக்கியிடம் சொல்கின்றாள். இதனால் தன்னுடைய ஈகோ அடிபட்டுவிட்டதால் எப்படி விக்கி பூமாவை அவதூறு செய்து பழிவாங்குகின்றான் என்பதும் அதற்கு பூமாவின் பதிலடி என்ன என்பதும் மீதிக்கதை. 

ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கவும் திருமணத்திற்கு தெரிவு செய்வதற்கும் பின்னாலுள்ள ஆணாதிக்க அரசியலை நுண்ணியமாக பேசுகின்றது இத்திரைப்படம். அதிலும் விக்கி தன்னுடைய தாயை தன் காதலியான பூமாக்கு அறிமுகம் செய்கின்ற காட்சி அலாதியானது. இன்னும் இப்படியான பெண்கள் நம்முடைய வீடுகளில் அடுப்படியைத் துடைத்துக்கொண்டுதானிருக்கின்றார்கள் என்பது கசப்பானதொரு உண்மை தான். 

இதில் விக்கி பூமாவை காதலிப்பதை அறிந்து பூமா மீது எரிச்சல்படுகின்ற துர்க்காவும் பூமாவும் நண்பர்களாக மாறுகின்றதொரு தருணம் அழகாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான நடிகை என வர்ணிக்கப்படும் ரஷ்மிக்கா இத்திரைப்படத்தின் பூமா பாத்திரத்தில் தன்னுடைய இன்னுமொரு பரிமாணத்தினை வெளிக்காட்டுகின்றார். இதில் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் கூட அர்த்தங்களுடன் தான் கொடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. அதுவொரு இடத்திலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 


இத்திரைப்படத்தினை பார்க்கும் போது என்னுடைய பல்கலைக்கழக நாட்கள் ஞாபத்திற்கு வந்துபோனது. இதில் சித்தரிக்கப்பட்டுள்ளதை போன்று எப்போதும் அப்பாவியான, புத்திசாலியான பெண்களை அதிக ஆண்கள் துரத்தி திரிவதற்கும் வலுக்கட்டாயப்படுத்தி காதலிக்கவோ அல்லது திருமணத்திற்கு நிச்சயிக்கவோ முயல்கின்றதன் பின்னான ஆண் அரசியலை நானும் மீட்டிப்பார்க்கின்றேன். பல்கலைக்கழக நாட்களில் விடுதியில் தங்கியிருந்த போது முகநூல் பாஸ்வேட் கேட்டு விடுதியில் இருந்ததொரு அக்காவை அடித்த அந்த ஆணை நினைத்துப்பார்க்கின்றேன். தம்முடைய காதலை சொல்லும் போது நீ என்னுடைய அம்மா மாதிரியிருக்கின்றாய் என்று சொன்ன ஆண்களை நினைத்துப்;பார்க்கின்றேன். பரதநாட்டிய அரகேற்றத்தில் பார்த்த மாத்திரத்திலேயே அந்தப்பெண்ணை விரும்பி “நீ பல ஆண்களுக்கு ஒற்றைப்பெண், வீட்டை நன்றாக பார்த்துக்கொள்வாய், மென்மையாய் இருப்பாய்” என்று நிச்சயம் செய்துகொண்ட ஆணை கடந்திருக்கின்றேன். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணானவள் பொறியியலாளர் என்றால் அது தொடர்பில் மட்டும் பணியாற்றினால் போதும் திரைப்படத்துறை எதற்கு? விவசாயம் எதற்கு? ஓவியம் எதற்கு? என்று தினமும் காயப்படுத்துகின்றதொரு ஆணுடன் பயணித்திருக்கின்றேன். சம்பந்தமேயில்லாமல் பொதுவெளியில் ஒரு பெண்ணை மட்டந்தட்டி, அடுத்தவர்களிடம் “என்னிடம் விருப்பம் கேட்டு நான் இல்லை என்று சொன்னேன்” என இன்னொரு பெண்ணிடம் நள்ளிரவில் அந்தப்பெண்ணை பற்றி முதுகுப்பின் பேசுகின்ற ஒருவரால் உடைந்திருக்கின்றேன். 


இறுதியாக மேடையில் நின்று பூமா பேசும் போது “எனக்கென்று ஒருவன் கிடைப்பான்டா, உன்னை மாதிரியில்ல ரொம்ப முதிர்ச்சியானவனா, டீசன்ட்டானவனா ஒருவன் கிடைப்பான்டா…..” என்று உரத்த குரலில் சொல்கின்ற வரிகள் மேற்சொன்னா அனைத்து  Toxic ஆண்களுக்குமானது. 

The Girl friend பெண்கள் பார்க்கவேண்டியதல்ல ஒவ்வொரு வயது வந்த ஆணும் பார்க்க வேண்டிய படம். 








Saturday, December 20, 2025

வினாக்களுக்கான பதில்கள்

Valentine Heart Arrow Images – Browse 157,241 Stock Photos, Vectors, and  Video | Adobe Stock 

வினா 06: 
மீரா டார்லிங் உனக்குப் பிடித்த விடயங்கள் 10 ஐ எனக்காக பட்டியலிட முடியுமா? நான் என்ன செய்தால் என்னை திரும்பிப்பார்ப்பாய்? திரும்பத்திரும்ப பார்க்க நான் என்ன செய்ய வேண்டும்.? 

 
பதில் : அதெற்கென்ன இதோ அந்த பட்டியல்……..
1.    காட்டூன்  மற்றும் க்ரைம் திரைப்படங்கள் பார்ப்பது
2.    புத்தகங்கள் வாசிப்பது
3.    குழந்தைகள் மற்றும் குட்டி நாய்கள் 
4.    மழையில் நனைவது, அதற்காக வீட்டில் திட்டு வாங்குவது
5.    குடும்பத்தினருக்காக சமைப்பது, அவர்கள் சாப்பிடுவதற்கு பரிமாறுவது
6.    கடற்கரையில் காலார நடப்பது 
7.    முழு நாளும் இசை கேட்பது
8.    குளிக்கும் போது சத்தமாக பாடல் பாடுவது
9.    ஓவியக் கண்காட்சிகளுக்குப் போய் மணிக்கணக்கில் ஓவியநுட்பங்களை இரசிப்பது
10.    பேரூந்து ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிப்பது

10 மட்டும் தான் கேட்டிருப்பதால் இத்தோடு நிறுத்தி விடுகின்றேன். உண்மையில் 1000 பிடித்தவைகள் உண்டு. 

நான் திரும்பிப்பர்க்கனும் என்றால் என்னை பின்னால் இருந்து கூப்பிட வேண்டும். :P நான் திரும்பத்திரும்ப உங்களை பார்க்க வேண்டும் என்றால் கறுப்பு அல்லது கருநீல நிறத்தில் டீசேட் அணிந்து ST Dupont Paris Saint Germain for Men or Amouage Opus V for Men இந்த இரண்டு Perfume இல் ஒன்றை பாவியுங்கள்  போதும்……. But எனக்கு நீங்கள் ஒருமையில் அழைப்பது மட்டும் பிடிக்கவில்லை. 

வினா 07: உங்களை எப்படி அன்பாக அழைப்பது பிடிக்கும்? உங்களவர் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

 
பதில்: “கண்ணம்மா” என விளிப்பது மிகவும் பிடிக்கும். அம்மா என்னை பெரும்பாலும் “ராஜாத்தி” என்று அழைப்பார் அது மிகப்பிடிக்கும். மற்றும் படி என்னுடைய க்ரஸ்கள் லட்டு, ஹனி, டார்லிங், டியர், செல்லம் என்று அழைக்கின்றார்கள். இவைகளும் பிடிக்கும். என்னை மீரா என்றழைப்பது அனைத்தையும் விட மிக பிடிக்கும். என்னுடைய வாழ்க்கையில் ஒருவர் என்னை “கேஷாயினி” என்று முழுபப்பெயர் சொல்லி அழைப்பதுண்டு. மின்னஞ்சலில் கூட ஆங்கிலத்தில் ஒரு எழுத்து கூட விடாமல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இது மிகமிக பிடித்திருந்தது கடந்த ஆவணி மாதம் வரை.


என்னவன் பற்றி சொல்வதென்றால்…………….? ம்ம்ம்ம்……. எனக்கு பெரிதாக ஒருவரின் உருவம் அல்லது அவரது இயக்கதிறன் சார் எதிர்பார்ப்பில்லை.  மற்றப்பெண்களைப் போல் தலையில் முடியில்லை, கருப்பு அல்லது முகவெட்டில்லை என்றெல்லாம் ஒருவரை அவரது வெளித்தோற்றம் கொண்டு நேசிக்கவோ அல்லது நிராகரிக்கவோ நான் தயாரில்லை. ஆனால் ஒழுக்கம் , உணர்வுகள் சார் எதிர்பார்ப்புக்கள் நிறையவே உண்டு. முக்கியமாக மண் பற்று உள்ளவராக, உரிமைகளுக்கும் விளிம்புநிலையினருக்காகவும் குரல் கொடுப்பவராயிருக்க வேண்டும். பெண்களை மதிப்பவராகவும் பெண்கள் அவரை மதிப்பவராகவும் இருக்க வேண்டும். 
 

மெல்லுணர்வு என்று பார்க்கும் போது கடல், நிலவு, இசை, ஓவியங்களை இரசிப்பவன், பயணங்களை விரும்புபவன், முரட்டுத்தனங்களுடன் பாசமாயிருப்பவன், என் குடும்பத்திற்கு இன்னுமொரு மகனாயிருப்பவன்….. முக்கியமாக என்னுடைய கிறுக்கல்களை இரசிப்பவன். தவறுகளை சுட்டி காட்டுபவன்.  நிறைய குட்டி குட்டி சண்டைகள் போடுபவன். என்னைச் செதுக்குபவன்...... யாராவது பெண்கள் அவனது பதிவுகள் அல்லது புகைப்படத்திற்கு hearten போட்டு அதற்காக நான் சண்டை போட்டால் பொறுத்துக்கொள்பவன். 

பிற்குறிப்பு : தொடுக்கப்படுகின்ற பெரும்பாலான கேள்விகள் என்னுடைய சுயம் பற்றியதாக இருக்கின்றதை பார்க்கும் போது யாரோ ஒருவர் தான் பல்வேறு மின்னஞ்சல்களிலிருந்து கேள்விகளை கேட்கின்றீர்களோ என்றிருக்கின்றது

 




மனசாட்சி

  கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை ம...