வணக்கம் நண்பர் ஒருவர் ஏன் நீங்கள் பொறியியல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில்லை என கேட்டிருந்தார். எழுதிக்கொண்டிருக்கின்றேன் நண்பரே கட்டட அழகியல் மற்றும் அதில் உள்ள உளரீதியான தாக்கங்கள், இயற்கை சார் பிரச்சினைகள் என்பன குறித்து ஆங்கிலத்தில் எழுதி வருகின்றேன். எனக்கு ஆங்கில … இல்லை. எனவே தான் என்னுடைய ஆங்கில மற்றும் சிங்கள கட்டுரைகளை இதில் பதிவிடுவதில்லை. இனிமேல் இது குறித்து கவனஞ்செலுத்துகின்றேன். அதில் முதல் படியாக நேற்று ஆங்கில கட்டுரையொன்றினை பதிவிட்டுள்ளேன்.
இன்று பொறியியல் என்பது என்னுடைய வாழ்வியலின் பெரும் பகுதியாகிவிட்டது. ஆனால் இத்துறைக்கு நான் வந்தமையே ஒருவித விபத்து தான். நான் உயர்தரத்தில் சட்டதுறையில் செல்வதற்கான பாதையை அல்லது கலை குறித்த பாதையை தெரிவுசெய்ய நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய தாயார் என்னை மருத்துவம் சார் துறையில் ஈடுபட ஆலோசனை கூறினார். ஆனால் எனக்கு இரத்தத்தினை கண்டால் போதும் மயங்கிவிடும் பழக்கம் உண்டு. எமது கல்வி முறைமையில் தரம் ஒன்பதில் படிக்கும் போது தவளையை அறுத்து பார்க்கும் பாடசெய்முறை விஞ்ஞானத்தில் உண்டு. அன்று அந்த தவளையை ரெஜிபோம் துண்டில் மல்லாக்கப்படுத்தி நான்கு கால்களுக்கும் குண்டூசி குத்தி அது துடிக்கும் போது வயிற்றில் பிளேட்டால் அறுத்த நேரம் நான் வகுப்பில் மயங்கி விழுந்ததை இன்றும் என் நண்பர்கள் நினைவுகூர்ந்து என்னை பகிடிசெய்வதுண்டு. இப்படி மனித இரத்தம் என்றாலும் சரி விலங்கு இரத்தம் என்றாலும் சரி பார்த்தால் போதும் எனக்கு தலைசுற்றல் ஆரம்பித்துவிடும். ஏன்னுடைய மாதவிடாய் இரத்தம் மட்டும் பார்த்தால் மயக்கம் வருவதில்லை. இதனை ஹீமோபோபியா (Hemophilia / Haemophobia) என்று அழைக்கின்றார்கள். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ள நான் எவ்வாறு மருத்துவம் படித்து நோயாளர்களை பார்ப்பது. இது எனக்குள் கணிதத்துறையை தெரிவுசெய்ய தூண்டியது. அதனைத்தொடர்ந்து பொறியியல்துறையை தெரிவுசெய்தேன். அதிலும் எனக்கு வரைதல், உருவாக்குதல் திறன்களில் ஈடுபாடு இருந்தமையினால் பொறியியலிலும் கட்டடப்பொறியியலினை தேர்ந்தெடுத்தேன். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ஏன் இதனை தெரிவுசெய்தேன் என விதி என்னை தலையில் குட்டிக்கேட்டது என்னுடைய விரிவுரையாளர் வடிவில்.
முதல் நாள் வகுப்பறையில் நுழைந்தாயிற்கு. வழமை போன்று பெண்கள் தானே முன்வரிசையில் இருப்பது. அவ்வாறே நானும் முதல் வரிசையில் போய் அமர்ந்துவிட்டேன் . ஆனால் நேரமாகியதே தவிர வேறு பெண்பிள்ளைகள் என்னருகில் வந்து அமரவில்லை. பின்னாலுள்ள வரிசைகளில் ஆண் மாணவர்கள் நிமிடத்திற்கு நிமிடம் நிரம்பிக்கொண்டிருந்தார்கள். வயிற்றில் இனந்தெரியாத உணர்வு உருவாக ஆரம்பித்தது. திடீரென நான்கு விரிவுரையாளர்கள் வகுப்பினுள் நுழைந்தார்கள். அதிலும் பெண்களைக் காணவில்லை. அவர்களை அறிமுகப்படுத்திய பின்னர் எம்மை நாம் அறிமுகப்படுத்தினோம். அப்போதும் என்னுள் யாராவது வந்தமர்வார்கள் எனும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இறுதி வரிசையும் முடிந்துவிட்டது இன்னொரு பெண் வரவில்லை. மீண்டும் எமது விரிவுரையாளர் மொஹான் அவர்கள் என்னை நோக்கி முன்னுக்கு வருமாறு கூறினார். மனதுள் யேசு முதல் பிள்ளையார் வரை மன்றாடியபடி தான் என்னுடைய இருக்கைக்கும் முன்மேடைக்கான சில மீற்றர்கள் தூரத்தினை கடந்தேன்.
"வழமையாக பெண்கள் இதற்கு வருவதில்லை. காடு, மலையெல்லாம் போகவேண்டி வரும். உயரங்களுக்கு ஏறவேண்டி வரும். வெய்யிலில் நிற்கவேண்டியிருக்கும். இரவிலும் சைட்டில் நிற்கவேண்டி வரும். உங்களுக்கு இது பொருந்துமா? இது பெண்களுக்குறிய பகுதியில்லை. ஏன் வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார். தட்டுத்தடுமாறி இறந்தகாலம் நிகழ்காலம் எல்லாம் கலந்து பிழையான சொற்றொடரில் “எனக்கு பிடித்திருக்கின்றது. நான் சமாளிப்பேன்| என்று கூறியவுடன் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது. அந்த நேரம் பார்த்து வயதான பெண்ணொருவர் உள்நுழைந்தார். தன்னை விரிவுரையாளர் என அறிமுகம் செய்தார். அந்த நிமிடம் அவர் தான் என்னுடைய ஏஞ்சல். வுpரைவாக நடந்து என்னுடைய இருக்கைக்குத் திரும்பிவிட்டேன். ஏப்படா முடியும் என்றிருந்து விடுதி திரும்பியது அம்மாவிற்கு அழைப்பெடுத்து அழ ஆரம்பித்தேன்.
“எப்பவும் வரம்புகளை உடைக்க வேண்டும் என்பீர்களே மகள் இப்ப என்ன பயம்? இரவில் பெண்ணும் வேலைக்கு போகலாம், காடு மலைக்கும் போகலாம். மனதில் கம்பீரமும் துணிவும் இருந்தால் போதும் ராஜாத்தி (அம்மா என்னை பெரும்பாலும் இவ்வாறு தான் அழைப்பார்). பகலில் போனால் மட்டும் பெண்ணுக்கு பாதுகாப்பிருக்கின்றதா?. வீட்டிலும் சிலநேரம் பாதுகாப்பு இருப்பதில்லை. உங்களால் முடியும். போய் குளித்து சாப்பிட்டுவிட்டு படிக்க தொடங்குங்கள்” என்று அம்மா சொன்ன வரிகள் இன்றும் நினைவிலிருக்கின்றது.
இப்படித்தான் ஆரம்பித்தது என்னுடைய பயணம். ஆனால் அந்த முதல் அனுபவத்திற்கு பின்னர் எனக்கும் மொஹான் சேருக்குமிடையில் ஒருவித இடைவெளி ஏற்பட்டுவிட்டது. எப்போதும் என்னில் பிழை பிடிப்பார். சிறுசிறு தவறுகளுக்கும் எல்லோர் முன்னிலையிலும் திட்டுவார். ஏதாவது சந்தேகம் கேட்கப் போனாலும் ஏதாவது நக்கலாக கதைப்பார். விடுதி வந்தால் அம்மாவிடம் சொல்லி அழுவேன். அம்மா எப்போதும் யாரையும் இலகுவில் பிழையாக பேசமாட்டார். நீங்கள் நன்றாக அவதானிக்கவில்லை, இன்னும் படித்திருக்கலாம் என்று என்னை நோக்கியே தன் விரல்களை நீட்டுவார்.

எனக்கு தமிழிலக்கியத்தில் ஈடுபாடுண்டு. அதில் வரும் துரோணர் தான் இங்கு என் கதையில் மொஹான் சேர் என்று எனக்குப்புரிய ஆரம்பித்தது. அவர் தான் என்னுடைய குரு. அவர் வாயால் ஏதாவதொரு நாள் வாழ்த்து வாங்கவேண்டும் என்பதற்காகவே தேடித்தேடி படிப்பேன். சுக மாணவன்கள் எம்மிடையான முறுகல்களைப் பார்த்து “ஆ உன்னோட டார்லிங் வருதுடி…” என்றும் பழிப்பதுண்டு. நான் ஏகைலைவனின் பெண் வேர்ஷன். கட்டை விரலை கேட்டாலும் கொடுக்கத் தயாராகவிருந்தேன். எங்கள் முரண்கள் இறுதியாண்டில் தந்தை- மகள் உறவாக பரிணமித்திருந்தது. அவருடைய மகன் எங்களுக்கு சுப்பர் சீனியர். அவரை எனக்கு அறிமுகம் செய்து உதவிகளை பெற்றுத்தந்தார். மேலும் பொறியியல் சார் வாய்ப்புக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் அவர் தான். நிறைய பொறியியல் கழகங்களில் உறுப்புரிமை பெறச்செய்தது முதல் என்னுடைய துறைசார் கண்டுபிடிப்பினை வெளிநாட்டிற்கு சென்று அங்கு அறிமுகஞ்செய்ய வைத்தவரும் அவர் தான். ஒருமுறை வீதியில் கண்டு தன்னுடைய மனைவி மகளுக்கும் அறிமுகம் செய்தார். பின்னர் அவர் அழைத்ததற்கிணங்க அவருடைய மகளின் திருமணத்திறகு அண்ணாவுடன் சென்றிருந்தேன்;. அவர் என்னை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ததெல்லாம் பெருமையான தருணங்கள். இன்றும் என்னுடைய முகநூலில் இருக்கின்றார். என்னுடைய வடிவமைப்புக்கள், உருவாக்கல் திறனை வைத்து என்னை பிரம்மா என்று தான் அழைப்பார். சில நேரங்களில் "லேடி பிரம்மா". அவரைப் பின்பற்றி கட்டடப்பொறியியல் நண்பர்களும் அவ்வாறே பெரும்பாலும் அழைப்பதுண்டு. என்னுடைய பின்னல் கூந்தல் ஹெல்மட் போடுவதற்காக உச்சிக்கொண்டையாக மாறியதும் “பிரம்மா” அடைமொழிக்கு பொருந்திப் போய்விட்டது.
எனக்கு இன்னுமொரு உளவியல் பிரச்சினை இருந்தது. அதாவது உயரங்களைப் பார்த்தால் பதற்றமாகிவிடுவதுண்டு. இதற்கு Acrophobia" (அக்ரோபோபியா) என்று பெயர். என்னுடைய பல்கலைப்படிப்பு முடிந்த பின்னர் களப்பயிற்சியின் போதும் உதவிபொறியியலாளராக பணியாற்றும் போதும் இது பெரியதொரு சவாலாக இருந்தது. யாராவது என்னுடைய கையைப்பிடித்திருக்க வேண்டும். அப்போது தான் என் பதற்றம் போகும். யாருடைய கையைப்பிடிப்பது, சைட்டில் பலர் வேலைபார்ப்பதுண்டு. பொறியியலார்கள் முதல் கூலியாட்கள் வரை இருப்பர். நான் சகபொறியியலாளரின் கையைப்பிடித்துக்கொண்டு மேலேறினால் அவர்களது பார்வை எவ்வாறிருக்கும்? ஆனாலும் நாம் ஏதாவதொன்றினை தகர்த்து வெளிவர முயலும் போது பிரபஞ்சம் யாரையாவது அனுப்பி வைக்கும். எனக்கும் அவ்வாறு ஒருவரை அனுப்பி வைத்தது. என்னுடைய நல்ல நண்பர் அவர். மோதலில் ஆரம்பித்த உறவு. பின்னர் அது நல்லதொரு உறவாகிப்போனது. மேலேறும் போது இசையைக் கேட்டுக்கொண்டு ஏறுங்கள். மேலேறிய பின்னர் விளிம்பில் நின்று கீழே பார்க்காதீர்கள் என என்னை தொலைபேசியில் வழிநடத்துவார். இன்றும் என் நண்பனை நினைவுகூறுகின்றேன்.
சரி சைட்டுக்கு வந்த பின்னாவது பெண் துணை கிடைக்கும் என்ற பார்த்தால் நான் மட்டும் தான் பெண். பொதுவாக கட்டடப்பொறியியலினை பெண்கள் தெரிவது ஒப்பீட்டளவில் குறைவு. ஆப்படியே தெரிந்தாலும் அரசாங்க திணைக்களங்களில் உள்ளக வேலைகளில் அமர்ந்துவிடுவர். சைட் வாழ்க்கை என்பது ஒரு வகையில் மிலிட்டரி வாழ்க்கை. 7 -11 வேலை. பேரும்பாலான என் நாட்கள் காலை 4.30 ஆரம்பித்துவிடும். சைட்டில் பொறியியலாளர்களுக்கான அலுவலக அறையில் ஒரே பெண் என்பதால் சுத்தப்படுத்தல், பணிப்பெண் இல்லாதவிடத்து டீ, கோப்பி போடுதல் எல்லாம் என் தலையில் தான். பொங்கல் வந்தால் சைட் வாசலில் கோலமிடுவதும் நான் தான். ஆடிக்கூழ் காய்ச்சுவது, சோளன், கடலை, கச்சான் அவிப்பது எல்லாம் என் பொறுப்புத்தான். படிக்கும் போது போன Surveying Camp, மாதவிடாய் நாட்களை கடப்பது, சைட்டில் நடக்கும் அலப்பறைகள், ஹெல்மட் சண்டைகள், பாதுகாப்பு பிரச்சினைகள், உடைக்கலாசாரம், ஒரு பெண் பொறியியலாளரான என்னுடைய குணவியல்புகள், இணையர் தேர்வு, குழந்தை தொழிலாளிகள் பிரச்சினை, போதைப்பொருள் பாவனைகள் என எழுத பல விடயங்கள் உள்ளன.
மூன்று வருடங்கள் உதவிப்பொறியியலாளராக பணியாற்றிய பின்னர் கட்டுமான நிறுவனமொன்றினை ஆரம்பித்து நடாத்தி வருகின்றோம். இதனை ஆரம்பித்த போதும் பின்னர் பிளவுபட்ட போதுமான விடயங்கள் நிறையவுண்டு. எனக்கு சவாலாகவிருந்த உளரீதியான இரு பிரச்சினைகளை வெற்றிகொள்ள இந்த துறைதான் எனக்கு உதவியிருக்கின்றது. இந்த துறை வெறும் கல், மண், கம்பி மட்டும் சம்மந்தப்பட்டதல்ல. மனித மனத்துடன் நெருக்கமானது என தான் நான் இதனை பார்க்கின்றேன். இலங்கையில் கட்டடநிர்மாண நிறுவனம் ஆரம்பித்த பெண் என்ற பெருமையும் விருதும் இரு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. தற்போது நான்கு மாவட்டங்களில் கிளைகள் உண்டு. தொடர்ந்தும் வியாபிக்கும் எண்ணமுண்டு. கடல் கடந்து சேவை வழங்கும் வாய்ப்பும் நெருங்கிவருகின்றது. தற்போது கடலான இத்துறையில் தேடித்தேடி படித்துக்கொண்டே இருக்கின்றேன். போதுமா என்னுடைய அறிமுகம்.?
இனிமேல் இத்துறை குறித்த அனுபவங்களையும் சம்பவங்களையும் சந்திக்கும் மனிதர்களையும் பற்றி எழுதுகின்றேன். உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அனுப்பினால் என்னுடைய ஆக்கங்களின் இணைப்புக்களை அனுப்பி வைக்கின்றேன். தூண்டி எனை துலங்க வைத்தமைக்கு நன்றி