அப்பாவிடம் சலுகைகள் பெறும் போதோ
அம்மாவின் சமையலை ருசிக்கும் போதோ
அண்ணாவை வீணாக கோபப்படுத்தும் போதோ
தம்பியிடம் செல்லமாக சண்டையிடும் போதோ – நான்
நினைத்ததில்லை இவைகளை இழப்பேனென்று......
நண்பிகளுடனான அரட்டையின் போதோ
உறவினர்களுடனான கிண்டல்களின் போதோ
அயலவர்களுடனான பகிர்தல்களின் போதோ – நான்
நினைத்ததில்லை இவைகளை இழப்பேனென்று......
அதிகாலை குட்டித் தூக்கம்
அம்மாவின் சூடான கோப்பி
என் கூண்டுக்கிளிகள்
செல்ல நாய்க்குட்டி
தினமும் நான் எண்ணுகின்ற தோட்டத்துப் பூக்கள்
மொட்டைமாடி ஊஞ்சலாட்டம்
ராஜேஷ்குமாரின் துப்பறியும் நாவல்கள்; - என
நீளும் எனது விருப்பப் பட்டியல்களை – நான்
நினைத்ததில்லை இழப்பேனென்று...
என் குடும்பத்தவர்களின் அன்புத் தொல்லைகளையும்
செல்லக்கிண்டல்களையும்
பாசக்கடிகளையும் - ஏன்
என் சின்ன சின்ன ஆசைகளையும் கூட
சுமையாக நினைத்த நாட்களுண்டு
இன்று தனிமையான - என்
விடுதி வாழ்க்கையில் - இந்த
சுகமான சுமைகள் மீண்டும் வராதா?
என ஏங்குகின்றேன்
இப்போது தான் புரிகிறது...
புரியாத பிரியம்
பிரியும் போது புரியும் என்று
மீராபாரதி
No comments:
Post a Comment