Monday, August 5, 2013

அன்பென்றால் உங்கள் பார்வையில் என்னங்க?

கண்ணாடியை பாவிக்கும் போது கவனமாக கையாள வேண்டும் தவறுதலாக விழுந்துவிட்டால் சுக்குநூறாகிவிடும்…. சிலவேளை அதன் பெறுமதி கருதி நாம் சிதறிய துண்டுகளை ஒட்டிக்கொள்வோம். ஆனால் என்ன தான் சொல்லுங்க அதனை பழைய மாதிரியே கையாள முடியாது… வேணுமென்றால் காட்சிப்பொருளாக வைத்துக்கொள்ளலாம்.. கண்ணாடியில் சிறு கீறலோ வெடிப்போ ஏற்பட்டு விட்டால் அவை என்றோ ஒரு நாள் விரிசல்களாக மாறிவிட கூடும்…. அது போல் என்னளவில் நான் எப்போதும் அன்பு என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடுவதுண்டு…. எவ்வளவு நெருக்கமாக நாம் அடுத்தவர்களுடன் பழகினாலும் சிறு மனவருத்தங்கள் அல்லது சிறு சொற்களே உறவுகளுக்கிடையில் பிளவுகளை உருவாக்கக்கூடும். இப்பிளவுகள் உடனடியாக தரையில் விழந்த கண்ணாடியாக சிதற வேண்டும் என்பது கட்டாயமல்ல.. இன்று சிறிதாக தெரியும் விடயங்கள் நாளை உறவுகளுக்கிடையில் பெரியதொரு பகைமையை நிச்சயம் ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகமொத்தத்தில்
“Handle with Care” என்பதாக உறவுகள் அமைய வேண்டும் என்பது என் கருத்து. 
இதுதொடர்பில் என் கருத்துடன் மட்டும் நிற்காமல் “அன்பென்றால் உங்கள் பார்வையில் என்னங்க? உங்களுடன் பழகுபவர்கள் அல்லது நீங்கள் பழகுபவர்களை வைத்து அன்பென்றதை எதற்கு ஒப்பிடுவீர்கள்?” என்று என் நண்பர்கள் சிலர்….. விடுதித்தோழிகள்…. அலுவலக சகபாடிகளிடம் கேட்டவேளை அவர்கள் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்கள்…….

தாயிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் சிசுவாக நாம் நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம். தாய்-சிசு உறவானது அங்கக ரீதியானதொரு பிணைப்பாகும். அதில் தொடர்புபடுத்துதல் என்பது அறவே இல்லை. குழந்தையானது தாயின் அங்கம் அல்லது நீட்சி போன்றது. மேலும் அது தாயின் சுய-அன்பு எனும் வளையத்தனுள் பாதுகாக்கப்படுகிறது. பிறகு தந்தை மற்றும் பிற குடும்ப அங்கத்தினர் அக்குழந்தைக்கு அறிமுகமாகிறார்கள். ஆனால் உறவில் எதுவும் அடிப்படையில் மாறுவதில்லை. வெறுமனே சுய-அன்பு வளையம் மட்டும் குடும்ப அங்கத்தினர்களை உள்ளடக்கும் வகையில் சற்று விரிவாக்கப்படுகிறது. குடும்பம் என்பது எப்போதும் ஒரு இனக்குழுவின் பகுதியாக விளங்குவதால் சுய அன்பின் வளையம் மேலும் விரிக்கப்பட்டு ஒருவரது இனத்தார் சாதி-சனத்தார் ஆகியோரையும் உள்ளடக்குவதாகிறது.

உண்மை என்றால் என்ன என்பதற்கு வார்த்தைகளால் விளக்கம் கொடுக்க முடியாதது போலவே அன்புக்கும் விளக்கம் கொடுக்க முடியாது. உண்மைக்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் அதன் உண்மைத்தன்மையை விளக்கமுடியாதது போலவே அன்புக்கும் விளக்கம் கொடுப்பதாகும். அன்பு என்பது உள்ளுணர்வு. அது என்ன என்பது அவரவரது அனுபவம் மட்டுமே. நாம் ஒரு இனிப்பு பண்டத்தைச் சாப்பிடும் போது அதன் உண்மையான அனுபவம் அல்லது உணர்வு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருப்பதைப் போன்றதுதான் அன்பும். ஆனால் இனிப்பு இனிக்கும் என்கிறோம்.இனிப்பு என்றால் என்ன?’ எனக் கேட்டால் இப்போது இனிப்புக்கு விளக்கம் கொடுப்பது சிரமாகிவிட்டதல்லவா? அவ்வாறு தான் அன்பு என்றால் என்ன என்பதும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றைப் பயன்படுத்துவது வழக்கம். உதாரணமாக உண்மை என்றால் என்ன என்பதைப் புரிய வைப்பதற்கு பொய் அல்லாதது என்று கூறுவதுண்டு. இந்த விளக்கமும் கூட அடித்தளம் அற்றது. ஏனெனில் பொய் என்றால் என்ன என்று கேட்டால் நிலையற்றது, மறைத்தல், மாற்றிக் கூறுதல், ஏமாற்றுதல் என அடிக்கிக் கொண்டு செல்கிறோம். முடிவுக்குக் கொண்டுவரமுடியாத விளக்கங்கள்.

அன்பு ஒரு ஒருவழிப்பாதை. அன்பைக் கொடுக்க மட்டும்தான் முடியும். அன்பைப் பெறமுடியாது. அன்பைப் பெறுவதாக நாம் உணரும்போதும் அது கொடுப்பதாக மட்டுமே அமையும். அன்பு என்பது எமது உள்ளுணர்வாக இருப்பதால் அதற்கு எதிரானதும் ஒரு உணர்வுதான். எது அன்பைக் கொடுப்பதற்கு தடையாக இருக்குமோ அது அன்புக்கு எதிரானது.

நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் என்பவற்றையும் நாம் அன்பின் வடிவங்களாக அறியப்படுத்தப் பட்டிருக்கிறோம். நாம் என்ன வடிவத்தைக் கொடுத்தாலும் அன்பு ஒன்றுதான். அது ஒரு முழுமை. அன்புக்கு வடிவம் கொடுப்பதனாலேயே நாம் அன்புக்கு எதிரானது என்றவுடன் வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என பலவற்றைக் கருதிக்கொள்கிறோம். அதாவது இவ்வாறன உணர்வுகள் அன்புக்குத் தடையாக அமையும் எனக் கருதுகிறோம். இப்போது ஒரு விடையத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என நாம் குறிப்பிடுபவையும் ஒரு முழுமைக்கு நாம் கொடுக்கும் வடிவங்கள் தான் என்பதே. இந்த முழுமை அன்புக்கு எதிரானதாக செயற்படும் முழுமை. அந்த முழுமைதான் 'பயம்'. அதாவது அன்பு எனும் முழுமை ஒன்று, பயம் எனும் முழுமை இன்னொன்று. இங்கே முழுமை என்பதன் பொருள் ஒரே நேரத்தில் இரண்டில் ஒன்று தான் இயங்கும் என்பதே. அன்பு இயங்கினால் பயம் இயங்காது, பயம் இயங்கினால் அன்பு இயங்காது. இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு அற்புதமான விடயம் என்னவெனில், எமது ஒவ்வொரு நகர்வும் அன்பினால் நகர்த்தப்படுகின்றதா அல்லது பயத்தினால் நகர்த்தப்படுகின்றதா என்பதை மிக இலகுவாக நாம் இனம் கண்டுகொள்ள முடியும் என்பதுதான். - வி.எஸ்

அன்பென்பது செல்வம் போன்றது. நாம் நேர்மையான வழியில் சேமித்தால் அச்செல்வம் நிலைப்பதனைப் போன்று நல்வழில் தேடிய உறவுகள் என்றும் நிலைக்கும். குறுக்குவழியில் சேர்த்த பணம் குறுகிய காலத்துள் அழிந்துவிடுவதைப் போன்று நேர்மையற்ற உறவுகளும் அர்த்தமற்ற அன்புகளும் விரைவிலேயே நம்மை விட்டுப்போய்விடும் - பிரியா

சில வேளை சமையலில் வாசனைக்காக பயன்படுத்தும் கறிவேப்பிலையை தூக்கியெறிந்து விட்டு உணவு ண்பதுண்டு. இன்னும் சிலர் கறிவேப்பிலையின் மருத்துவக்குணம் அறிந்து அதனை உணவில் இணைத்துக்கொள்வதுமுண்டு. இதேபோன்றே சிலர் தம்மை அன்பு செய்பவர்களது உறவை தேவையான வேளை பயன்படுத்திவிட்டு தமது தேவைகளை நிறைவேற்றிய பின் தூக்கியெறிந்துவிடுவதுண்டு. சிலர் தொடர்ந்தும் உறவுகளது முக்கியத்துவம் உணர்ந்து உறவுமுறைகளை பேணுவதுண்டு. ஆகவே என்னளவில் அன்பை கறிவேப்பிலைக்கு ஒப்பிவேன். - பிறின்சியா

நீங்கள் என்ன நினைக்கிறீங்க..?

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை